under review

ராணி திலக்

From Tamil Wiki
Revision as of 20:26, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:சிறுகதையாசிரியர்கள் சேர்க்கப்பட்டது)
ராணி திலக் (நன்றி: இந்து தமிழ்திசை)
ராணி திலக்

ராணி திலக் (ஆர்.தாமோதரன்; பிறப்பு : ஜனவரி 15,1972) தமிழ்க்கவிஞர், கவிதை விமரிசகர், சிறுகதை எழுத்தாளர். 1997 முதல் தமிழ் சிறுபத்திரிகை சூழலில் இயங்கி வருபவர்.

பிறப்பு, கல்வி

ஆர். தாமோதரன் ஜனவரி 15,1971-ல் பிறந்தார். தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

படைப்புகள்

ராணி திலக் 1997-ல் தொடங்கி 2005 வரை எட்டுவருட காலத்தில் எழுதிய கவிதைகளின் தொகுப்பான 'நாகதிசை' 2005-ல் வெளியாகியது. அச்சுமொழிக் கவிதைகளில் தொடங்கி உரைநடைக் கவிதைகளில் தனக்கான கவிதை நடையைக் கண்டுகொண்டார்.

இதுவரை ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. அவரது கவிதை விமரிசனக் கட்டுரைகளின் தொகுப்பு 'சப்தரேகை' என்னும் நூலாக வெளிவந்துள்ளது. 'ஸங்கரகாந்த்', 'தனுஷ்' ஆகிய புனைபெயர்களில் சில சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

இலக்கியத் தொகுப்புகள்

மணிக்கொடி கால எழுத்தாளர்களான கரிச்சான் குஞ்சு மற்றும் 'கொனஷ்டை' ஆகியோரின் சிறுகதைகளை தொகுத்துள்ளார். தற்போது மேலும் சில மணிக்கொடிகால எழுத்தாளர்களின் படைப்புகளை தொகுக்கும் பணியில் உள்ளார்.

ராணி திலக் தஞ்சையின் சில மறக்கப்பட்ட நிகழ்த்துகலைவாணர்களைத் தேடிச்சென்ற அனுபவங்களை ஜெயமோகனின் கோரிக்கையின் பேரில் கட்டுரைகளாக எழுதினார். [1]

மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவும், அவர்களின் படைப்பாற்றலைக் கண்டறிந்து வெளிப்படுத்தவும், ‘இளம் வாசகர் வட்டம்’ என்ற செயல்பாட்டை 2021ம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை கொண்டுவந்தது. கும்பகோணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் அதற்கான முன்னோடிய முயற்சியாக ராணி திலக் முன்னெடுத்த இளம் வாசகர் வட்டம், ‘25 கதைகள்’ என்ற தலைப்பில் மாணவர்கள் எழுதிய கதைகள் அடங்கிய மின்னூலை வெளியிட்டிருக்கிறது[2].

இலக்கிய இடம்

நகுலன், சுகுமாரன், மோகனரங்கன் போன்ற கவிஞர்களின் தொடர்ச்சியாக வடிவநேர்த்தி கொண்ட கவிதைகளை எழுதுபவர் ராணி திலக். அவருடைய கவிதைகளில் தமிழ் மரபின் தொடர்ச்சி வெளிப்படுகிறது.

"ராணிதிலக் தன் கவிதைகளின் சோதனை முயற்சிகளின் வழியாக ஒரு தெளிந்த நிலத்தின் பால் வந்து சேர்ந்திருக்கிறார். இந்த நிதானம் மிக்க ஒரு மொழிக்கு அவர் வந்துள்ளதை ”பிளக் பிளக் பிளக்”, கராதே, 27 கவிதைத் தொகுப்புகளை வாசிக்கும் போது தெரிகிறது. சலிப்பில்லாமல் திரும்பத் திரும்ப வாசிக்கக்கோரும் கவிதைகளாக அவை உள்ளன. அவ்வாறான மறுவாசிப்பிலும் சோர்வைத் தராத கவிதைகளாகவும் நிற்கின்றன. குருவிடமிருந்து விலகி நடந்த ஒரு சீடன் தன்னளவில் அடைந்த பெரும்பாதையைப் போல, அடைந்த ஞானத்தை போன்ற தெளிவான கவிதைகள் இவை." என்று கண்டராதித்தன் குறிப்பிடுகிறார்.

"புனைவம்சத்தையே முதன்மை விருப்பமாகக் கொண்டு படைக்கப்படும் படைப்புகளுக்கே உரிய வெற்றிதோல்விகள் ராணிதிலக்கின் கவிதைகளிலும் காணப்படுகின்றன. புனைவம்சம் புகையின் கோடுகளாகப் பிரிந்து பிறகு ஏதோ ஒரு தற்செயலின் விளைவாக ஒருங்கிணைந்து ஒரு சித்திரமாக மாறும்போது மட்டுமே கவிதைகள் உவகை தருவதாக உள்ளன. ஒன்றிணையாத தருணங்களில் அவை வெற்றியடையாத முயற்சிகளாக நின்றுவிடுகின்றன" என்று பாவண்ணன் குறிப்பிடுகிறார்.

நூல்கள் பட்டியல்

  • கராதே
  • பிளக் பிளக் பிளக்
  • 27 கவிதைகள்,
  • நாகதிசை
  • சொற்கள்
  • விதி என்பது இவைதான்
  • நான் ஆத்மாநாம் பேசுகிறேன்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page