under review

மோகனாங்கி

From Tamil Wiki
மோகனாங்கி

மோகனாங்கி (1895) தமிழின் தொடக்க கால நாவல்களில் ஒன்று. தி.த.சரவணமுத்துப் பிள்ளை எழுதியது. உண்மை வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்டது இந்நாவல். தமிழில் எழுதப்பட்ட முதல் வரலாற்று நாவல் என இதை இலக்கிய விமர்சகர்கள் கூறுவதுண்டு. தி.த.சரவணமுத்துப் பிள்ளை இலங்கையைச் சேர்ந்தவர். மோகனாங்கி தஞ்சை நாயக்கர் வரலாற்றுப்பின்னணியில் அமைந்த நாவல்

எழுத்து, பிரசுரம்

தி. த. சரவணமுத்துப் பிள்ளையால் 1890-ல் எழுதப்பட்ட இந்நாவல் 1895-ல் வெளியிடப்பட்டது. சரவணமுத்துப்பிள்ளை தமிழநாட்டில் சென்னை மாநிலக்கல்லூரியில் அன்றிருந்த கீழைத்தேச சுவடிகள் காப்பகத்தில் ஆவணப்பதிவாளராக பணியாற்றினார். அப்போது பழைய ஆவணங்களை படிக்கையில் இக்கதையை கண்டெடுத்து உண்மைச்செய்திகளுடன் நாவலாக ஆக்கினார்.சென்னை இந்து யூனியன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியானது இந்த நூல்.

மோகனாங்கியின் சுருக்கப்பட்ட இரண்டாம் பதிப்பான 'சொக்கநாயக்கர்’ நூலை தி.த.சரவணமுத்துப் பிள்ளையின் மறைவின் பின்னர் அவரது மூத்த சகோதரர் தி.த.கனகசுந்தரம் பிள்ளை பதிப்பித்தார்.இந்தச் சுருக்கப் பதிப்பை, சென்னை எம். ஆதி அன்ட் கம்பனியார் பிரசுரித்தனர்.இந்தச் சுருக்கப் பதிப்பில் தலைப்பு 'சொக்கநாத நாயக்கர்’ என்று கனகசுந்தரம் பிள்ளையால் மாற்றப்பட்டது.

மறு பதிப்பு

நெடுங்காலம் மறக்கப்பட்டிருந்த மோகனாங்கி நாவலை மீண்டும் கவனப்படுத்தியவர் ஈழத்து எழுத்தாளரான சில்லையூர் செல்வராசன். பின்னர் சிட்டி-சிவபாதசுந்தரம் அவர்கள் எழுதிய தமிழ் நாவல் நூலில் இந்நாவலின் இடத்தை நிறுவினர்.

மோகனாங்கி 2018-ல் திருகோணமலை இந்துக்கல்லூரி சம்பந்தன் மண்டபத்தில் 123 ஆண்டுகளின் பின்னால் முனைவர் க.சரவணபவன், ச.சத்யதேவன், மு.மயூரன் ஆகியோரை இணைப்பதிப்பாசிரியாராக் கொண்டு திருகோணமலை வெளியீட்டாளர்களால் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது

கதைச்சுருக்கம்

மோகனாங்கி மறுபிரசுரம் இலங்கை

பதினேழாம்நூற்றாண்டின் இடைக்காலத்தில் திருச்சியில் இருந்து ஆட்சி செய்தவர் சொக்கநாத நாயக்கர். தஞ்சையை ஆட்சி செய்தவர் விஜயராகவ நாயக்கர். விஜயராகவ நாயக்கரின் மகள் மோகனாங்கி. அவள் மேல் காதல்கொண்ட சொக்கநாத நாயக்கர் மாறுவேடத்தில் சென்று மோகனாங்கியிடம் காதலுறவு கொள்கிறார். முறைப்படி பெண்கேட்டு தூதனுப்புகிறார். ஆனால் விஜயராகவ நாயக்கரின் இரண்டாவது மனைவியின் தம்பி அழகிரி நாயக்கர் அவளை மணந்து அரசை கைப்பற்ற எண்ணுகிறார். சொக்கநாத நாயக்கரின் சமஸ்தான புரோகிதர் ஒருவரின் உதவியுடன் தூதுசென்ற அமைச்சரை அவமானப்படுத்தி திருப்பி அனுப்புகிறார். சொக்கநாத நாயக்கர் தஞ்சை மேல் படையெடுக்கிறார். அந்தப்போரில் தஞ்சை வீழ்கிறது. விஜயராகவ நாயக்கர் களத்தில் கொல்லப்படுகிறார். அரண்மனை தகர்க்கப்பட பெண்கள் தீப்பாய்ந்து மறைகின்றனர்.

விஜயராகவ நாயக்கரிடம் மோகனாங்கி தனக்கும் சொக்கநாத நாயக்கருமான உறவை எடுத்துச்சொல்லி ஏற்கனவே களவுமணம் நிகழ்ந்துவிட்டதை கூறியபின்னரும் அவர் ஏற்கவில்லை. ஆகவே அவள் ரகசியமாக வெளியேறிவிட்டிருந்தாள். தஞ்சை வீழ்ந்தபின் அவள் சொக்கநாத நாயக்கரை மணந்து திருச்சியில் அரசியாக ஆகிறாள்.

வரலாற்றுப் பின்புலம்

இந்தக்கதையில் உள்ள நிகழ்வுகள் வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டவை. மோகனாங்கிதான் பின்னர் ராணி மங்கம்மாள் ஆனாள் என்று ஆய்வாளர் சே.ப. நரசிம்மலு நாயுடு சொல்கிறார். ஆனால் அது சரியான செய்தி அல்ல. சொக்கநாத நாயக்கர் பொ.யு. 1659 முதல் 1682 வரை திருச்சியை தலைநகராகக்கொண்டு மதுரை நாயக்கர் நாட்டை ஆட்சி செய்தவர். விஜயராகவ நாயக்கர் பொ.யு. 1633 முதல் 1673 வரை தஞ்சையை ஆட்சி செய்தவர். இந்தப்போர் 1673-ல் நடைபெற்றது.

விஜயராகவ நாயக்கர் 32-க்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை எழுதி மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் அரங்கேற்றினார். பாகவதமேளா என்ற நாட்டிய நாடக மரபில் பிரகலாத நாடகம் இவர் எழுதியது எனப்படுகிறது. இந்நாவலில் அழகிரி என்று சொல்லப்படுபவர் உண்மையில் சொக்கநாத நாயக்கரின் சிற்றன்னை மகன். விஜயராகவ நாயக்கருக்குப்பின் அவரே தஞ்சைக்கு சிற்றரசர் ஆக சொக்கநாதரால் நியமிக்கப்பட்டார். சரவணமுத்துப்பிள்ளை இப்பெயரை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்.

நடை

இந்நாவல் வரலாற்று நாவலானாலும் வழக்குத்தமிழில் உரையாடல்கள் அமைந்துள்ளன "என்னப்பா ராமசாமி, தஞ்சாவூரில் விசேஷமென்ன?" "என்ன, அப்படி விசேஷமொன்றுமில்லை" என்பது போன்ற மொழிநடை உள்ளது. "இவ்விதமாக ஓரிரவு திருச்சினாப்பள்ளியிலே ஒரு வீட்டில் வெளித்திண்ணையிலிருந்து இருவர் பேசிக்கொண்டிருந்தனர். முதலிலே பேசினவர் ஏறக்குறைய முப்பத்தைந்து நாற்பது வயதுள்ளவர்" என விவரணை செல்கிறது.

ஆய்வுகள்

மோகனாங்கியின் கதைக்களமான சொக்கநாத நாயக்கரின் வரலாற்றைச் சமகால கிறித்தவ மதப்பணியாளர்களின் குறிப்புகளிலிருந்து தொகுத்து அவை மோகனாங்கி நாவலுடன் ஒத்துப்போவதை குறிப்பிட்டு மோகனாங்கி வரலாற்று நிகழ்வுகளையும் பாத்திரங்களையும் உள்ளடக்கி எழுதப்பட்டது என்பதை ஆய்வாளர் சுகந்தி கிருஷ்ணமாச்சாரி சுட்டிக்காட்டியுள்ளார்

‘தட்சிண இந்திய சரித்திரம்’ எழுதிய சே.ப. நரசிம்மலு நாயுடு தஞ்சை நாயக்கர் வரலாறு எழுதும்போது சரவணமுத்துப் பிள்ளையின் மோகனாங்கி நாவலைத் தமது வரலாற்றுக்கு ஆதாரமாக எடுத்துக்கொண்டுள்ளதாக முருகேசு ரவீந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘The First Six Novels in Tamil’ என்று கட்டுரையை 1986 இல் எழுதிய கமில் சுவலபில் தொடக்க கால தமிழ் நாவல்கள் பற்றி ஆராய்ந்த தமிழறிஞர்கள் விட்டுள்ள இடைவெளிகளும் விடுபடல்களும் தம் போன்ற மேலைநாட்டு ஆய்வாளர்களையும் தவறாகச் செல்வதற்கு வழிவகுத்தது என்பதைச் சுட்டிக்காட்டி மோகனாங்கி நாவலின் இடத்தை நிறுவியுள்ளார்.

விவாதம்

தமிழின் முதல் சரித்திரநாவல் எது என்னும் விவாதம் அறிஞர் நடுவே உள்ளது. சித்தி லெப்பை மரைக்காயரின் அசன்பே சரித்திரம் முதல் சரித்திரநாவலாகச் சுட்டிக்காட்டப்பட்டாலும் அது தழுவல் என்பதனால் ஆய்வாளர்களால் தவிர்க்கப்படுகிறது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக இஸ்லாமியத் தமிழ்த் துறைத் தலைவர் பீ. மு. அஜ்மல்கான் (தமிழகத்தில் முஸ்லிம்கள் 1984) கீழக்கரை தைக்கா ஸுஹைபு ஆலிம் ஆகியோர் மாப்பிள்ளை ஆலிம் எழுதிய ‘தமிரப் பட்டணம்’ என்னும் நாவல்தான் தமிழின் முதல் சரித்திர நாவல் என்று வாதிடுகிறார்கள். இந்நாவல் அரபு லிபியில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது. (பார்க்க அரபுத்தமிழ் ) ஆகவே பலர் கவனத்துக்கு வரவில்லை.

இலக்கிய இடம்

சிட்டி-சிவபாத சுந்தரம் காலக்கணிப்பின்படி தமிழ் நாவல்களின் வரிசையில் மோகனாங்கி ராஜம் அய்யரின் கமலாம்பாள் சரித்திரத்துக்கு முந்தையது. தமிழ்நாவல்களின் காலவரிசைப்படி அவற்றை அட்டவணையிட்ட தொடக்ககால ஆய்வாளர்கள் இந்நாவலை வரலாற்று ஆவணமாக கருதிவிட்டனர், நாவல் என கொள்ளவில்லை. ஆகவே கமலாம்பாள் சரித்திரம் மூன்றாவது நாவலாக கருதப்படுகிறது. பிரதாப முதலியார் சரித்திரம் (1879), அசன்பே சரித்திரம் (1885), சுகுணசுந்தரி (1887), பிரேமகலாவத்யம் (1893), மோகனாங்கி (1895), கமலாம்பாள் சரித்திரம் (1896), பத்மாவதி சரித்திரம் (1898) என வகைப்படுத்துவதே சரி என சிட்டி சிவபாதசுந்தரம் சொல்கிறார்கள். இந்நாவல் பெரும்பாலான ஆரம்பகால இலக்கிய வரலாற்றாசிரியர்களின் கண்களுக்குப் படவே இல்லை.

மோகனாங்கிக்கு முன்பு வெளிவந்த அசன்பே சரித்திரம், சுகுணசுந்தரி ஆகியவை வரலாற்றை வெறுமே அரசகுடியினரின் பின்னணி என்னும் அளவிலேயே எடுத்துக்கொண்டார்கள். வரலாற்றுச் செய்திகளை புனைவாக ஆக்கிய முதல் நாவல் மோகனாங்கிதான்.'தமிழிலக்கிய வரலாற்றிலும் எழுத்துலகிலும் தி.த.சரவணமுத்துப்பிள்ளை அசாதாரணமான ஓர் அடியெடுத்து வைத்ததுடன் ஒரு புதிய போக்கையும் உருவாக்கியுள்ளார்’ என்று கமில் சுவலபிள் (Kamil Zvelebil) The First Six Novels in Tamil என்னும் கட்டுரையில் சொல்கிறார். பின்னாளில் கல்கி முன்னுதாரணமாகக் கொண்டது மோகனாங்கி நாவலையே.

உசாத்துணை


✅Finalised Page