under review

மூதுரை

From Tamil Wiki

மூதுரை, ஔவையார் எழுதிய அற நூல்களுள் ஒன்று. பழைமையான கருத்துக்களைக் கொண்ட நூல். மூத்த உரை என்று பெயர் பொருள்படும் படி ‘மூதுரை’ என்று அழைக்கப்பட்டது. இதன் காலம் 12-ம் நூற்றாண்டு. வாக்குண்டாம் எனும் மற்றொரு பெயரும் இந்த நூலுக்கு உண்டு.

தோற்றம்

12-ம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் வாழ்ந்த ஔவையாரால் பாடப்பட்ட நீதி இலக்கிய நூல் மூதுரை. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி ஆகியன ஔவையாரால் பாடப்பட்ட பிற நூல்கள்.

நூல் அமைப்பு

மூதுரை பழமையான அறக்கருத்துகளைக் கொண்ட நூல். அதனால் மூதுரை எனப் பெயர் பெற்றது. வாக்குண்டாம் எனும் மற்றொரு பெயரும் இந்த நூலுக்கு உண்டு. இந்நூலின் கடவுள் வாழ்த்துப்பாடல் ‘வாக்குண்டாம்’ என்று தொடங்குவதால் அப்பயெர் பெற்றது. மூதுரையில் முப்பது பாடல்கள் உள்ளன. இவை தனித்தனிக் கருத்துகளைக் கூறுகின்றன. வெண்பா யாப்பில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளடக்கம்

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலரா
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதந்
தப்பாமற் சார்வார் தமக்கு.

என்பது மூதுரையின் கடவுள் வாழ்த்து.

கல்வியின் சிறப்பு, கல்வி அறிவின்மையின் இழிவு, சான்றோர் பெருமை, உதவும் மனப்பான்மையின் உயர்வு, செல்வத்தின் நிலை, நன்றியின் உயர்வு, போன்ற செய்திகள் மூதுரையில் இடம்பெற்றுள்ளன.

பாடல் நடை

நன்றியின் பெருமை

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்

மேன்மக்களின் பெருமை

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்

கற்றாரின் சிறப்பு

நல்தா மரைக் கயத்தில் நல்அன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்

கல்லாதவரின் நிலை

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் தானும்தன்
பொல்லாச் சிறகைவிரித்து ஆடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி

அறிவு, செல்வம், குணங்களின் தன்மை

நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம்

உதவிகளின் தன்மை

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்

உசாத்துணை


✅Finalised Page