under review

முருகு சுப்ரமணியன்

From Tamil Wiki
Revision as of 18:26, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:இதழாளர்கள் சேர்க்கப்பட்டது)
முருகு சுப்ரமணியம்

முருகு சுப்ரமணியன் (அக்டோபர் 5,1924 - ஏப்ரல் 10, 1984 ) இதழாளர். பாரதிதாசன் பரம்பரை கவிஞர்களை வெளியிட்ட 'பொன்னி' இதழின் ஆசிரியர். மலேசியாவில் தமிழ்நேசன் இதழிலும் சிங்கப்பூரில் தமிழ் முரசு இதழிலும் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

முருகு சுப்பிரமணியன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோனாப்பட்டு என்னும் ஊரில் வாழ்ந்த நகரத்தார் சமூகத்தவரான முருகப்பச் செட்டியார், சிவகாமி ஆச்சிக்கு அக்டோபர் 5, 1924-ல் பிறந்தார். திருச்சிராப்பள்ளி அர்ச். சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் 1939-ஆம் ஆண்டு ஐந்தாம் படிவம் படித்துக் கொண்டிருந்தபோது அவர் தமிழாசிரியர் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடமிருந்து தமிழார்வத்தை அடைந்தார். 1942-ல் முருகு சுப்ரமணியம் முதலாண்டு பல்கலைக்கழக வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டார்

இலக்கியப்பணி

முருகு சுப்ரமணியம் படிப்பு முடியும் முன்னரே 'இளந்தமிழன்' என்னும் மாதம்இருமுறை இதழைத் தொடங்கினார். கையெழுத்துப்படியாக இந்த ஏடு ஏறத்தாழ மூன்றாண்டுகள் வெளி வந்தது. இளந்தமிழன் ஆசிரியர் முருகு என பெயர் குறிப்பிடப்பட்டிருதது. அதுமுதல் முருகு சுப்பிரமணியன் என அழைக்கப்பட்டார்.

அமைப்புப்பணியும், அரசியலும்

1941-ல் பாரதிதாசன் செட்டி நாட்டுப் பகுதியில் சொற்பொழிவுகள் செய்தபடி சுற்றுப்பயணம் செய்தார். அதனால் கவரப்பட்ட அப்பகுதி இளைஞர்கள் அவரை சிலமாதம் அங்கு தங்க வைத்து உரைகள் ஆற்றவைக்க முயன்றனர். அதன்பொருட்டு அவர்கள் ஓர் அமைப்பை உருவாக்க முடிவு செய்தனர். 'இளந்தமிழன்' என்ற கையெழுத்து இதழை நடத்திவந்த முருகு சுப்ரமணியம் அப்போது 'தமிழ் இளைஞர் கழகம்' என்ற அமைப்பை நடத்தி வந்தார். அவருடைய ஊரான கோனாப்பட்டில் 'முத்தமிழ் நிலையம்' அமைப்பை உருவாக்கினர். 1943-ல் அந்த அமைப்பு சென்னையை மையமாக்கி நடைபெற்றது. சுரதா அதில் தொடர்பு கொண்டிருந்தார். முத்தமிழ் இயக்கம் திராவிட இயக்க அரசியலை பிரச்சாரம் செய்யும் கூட்டங்களை ஒருங்கிணைத்த்து.

இதழியல்

1944-1945-ஆம் ஆண்டுகளில் காரைக்குடியில் வெளி வந்த 'குமரன்' என்னும் வார இதழில் முருகு சுப்ரமணியம் துணையாசிரியராகவும் நிர்வாகியாகவும் பணிபுரிந்தார். குமரன் இதழாசிரியர் சொ.முருகப்பா அவர்களிடம் இதழியலைக் கற்றார். 1947-ல் பொங்கல் நாளையொட்டி பொன்னி என்னும் இதழைத் தொடங்கினார். பாரதிதாசன் பரம்பரை என கவிதைகளை வெளியிட்ட பொன்னி அதன்பொருட்டு வரலாற்றில் இடம்பெற்றது. 1953-ஆம் ஆண்டு பொன்னி நின்றது. நாரா நாச்சியப்பன், மு.அண்ணாமலை இருவரும் பொன்னி இதழை நடத்துவதில் உதவி செய்தனர். அரு.பெரியண்ணன் அதன் பதிப்பாசிரியராக இருந்தார்.

1953-ஆம் ஆண்டு முருகு சுப்ரமணியம் மலேசியா சென்றார். 'தமிழ்நேசன்' இதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார். 1954-ல் சிங்கப்பூர் சென்று 'தமிழ்முரசு' என்னும் நாளிதழில் துணையாசிரியரானார். மலேசியாவில் வெளிவந்த 'தமிழ்நேசன்' இதழின் தலைமையாசிரியர் பொறுப்பை 1962 முதல் ஏற்றார்.

பாரதிதாசனிடம் செல்வாக்கு

முருகு சுப்ரமணியம் பாரதிதாசனின் பார்வையில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியவர் என்று நாரா நாச்சியப்பன் தன்னுடைய 'தேடிவந்த குயில்' என்னும் நூலில் குறிப்பிடுகிறார். "முருகு சுப்பிரமணியன் பாரதிதாசனின் விசிறி. ஆனால் தனித்தமிழ் பரப்புவதில் உறுதியான நோக்கம் உடையவர்: அவர் இளைஞர். பாரதிதாசனோ பெருங் கவிஞர். இருந்தா லும் அவர்கள் இருவரும் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்வதற்கு வயது தடையாக இருக்கவில்லை. முருகு சுப்பிரமணியன் தனித் தமிழை வற்புறுத்திப் பேசுவார். பாவேந்தர் அதற்கு மறுப்புரை வழங்குவார்.

முருகு சுப்பிரமணியன், மறைமலையடிகளாரின் நூல்களைப் படித்துப் பார்க்குமாறு பாவேந்தரை வற்புறுத்துவார். தம்மிடமிருந்த நூல்களையும்-அவற்றின் பகுதிகளையும் படித்துக் காட்டுவார். பாவேந்தரோ தனித்தமிழ் நடை முறையில் கையாள இயலாது என்று அடித்துச் சொல்வார். சில தனித்தமிழ்ச் சொல்லாக்கங்களைக் கிண்டலும் செய்வார். பாவேந்தர் தொடர்ந்து மறைமலையாரின் நூல்களைப் படித்தார்.

மறைமலையடிகளாரின் சமயக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத பாவேந்தர், மொழிக் கொள்கையை முழுவதுமாக ஏற்றுக் கொண்டார். இனித் தனித் தமிழிலேயே நூல்கள் எழுதுவது என்று உறுதி பூண்டார். உறுதி ஏற்ற பிறகு வெளிவந்த அவருடைய நூல்கள் முழுவதுமே. உரை நடை, பாட்டு எல்லாமே-தனித்தமிழ் நூல்களாக வெளி வந்தன. ஒரு நூலைத் தனித்தமிழ்த் தந்தையான மறைமலை யடிகளாருக்கே 'திருமுன் படையல்' ஆக்கினார். பாரதியாரைத் தன் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட பாவேந்நர் பிறகு பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண் டார்".

மலேசிய இலக்கியத்தில் பங்களிப்பு

தமிழ் நேசன் பவுன் பரிசு பெற்றவர்களோடு முருகு சுப்பிரமணியன்

முருகு சுப்பிரமணியம் 1953ல் மலாயா வந்தார். ஜூலை 13, 1953ல் தமிழ் நேசன் நாளிதழில் துணையாசிரியர் பதவியில் அமர்ந்தார். திராவிட பாரம்பரியத்தில் வந்ததால் அவருக்குத் தமிழ் நேசன் ஒத்துப்போகவில்லை. நவம்பர் 1954ல் தமிழ் முரசு நாளிதழில் துணை ஆசிரியராக வேலைக்கு இணைந்தார். அப்பத்திரிகையில் வெண்பா போட்டி, கவிதைப் பக்கம், எழுத்தாளர் அறிமுகம் போன்றவற்றை உருவாக்கி கவனம் பெற்றார். 1957, 1958 ஆகிய ஆண்டுகளில் அவர் முன்னின்று தயாரித்த தமிழ் முரசு ஆண்டு மலரின் தரத்தால் கோ. சாரங்கபாணியின் அன்பை பெற்றார். 1974ல் கோ. சாரங்கபாணி மரணமடைந்த பின்னர் தமிழ் முரசு வீழ்ச்சி கண்டது. அப்போது மீண்டும் எழுச்சிப் பெற்ற தமிழ் நேசனின் முருகு சுப்பிரமணியம் இணைந்தார், ஆகஸ்டு 20, 1976ல் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் நேசனை விட்டு நீங்கினார்.

பவுன் பரிசு திட்டம்

1972-இல் முருகு சுப்ரமணியம் ஆசிரியராகப் பொறுப்பேற்று தமிழ் நேசனில் நடத்திய ‘பவுன் பரிசு திட்டம்’ மலேசிய எழுத்தாளர்களுக்கு உந்துதல் கொடுத்ததோடு மலேசியாவில் தமிழ் இலக்கியம் செழித்திருப்பதற்கான வழி வகையையும் செய்துள்ளது. எம்.ஏ. இளஞ்செல்வன், அரு.சு.ஜீவானந்தன், ரெ. கார்த்திகேசு, பாவை, சா.அ.அன்பானந்தன், சாமி மூர்த்தி என மலேசியாவின் தலைச்சிறந்த எழுத்தாளர்கள் பலரை வார்த்தெடுத்த பெருமையும் இத்திட்டத்திற்கு உண்டு.

மலேசிய இளம் எழுத்தாளர்கள்

மலேசியாவில் இளம் எழுத்தாளர்கள் உருவாக முருகு சுப்பிரமணியம் முனைப்பாகச் செயல்பட்டார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு கட்டுரைகள் எழுதினார், மார்ச் 27, 1977, அவர் சுயமாகத் தொடங்கிய 'புதிய சமுதாயம்' இதழில் இளைஞர்கள் எழுத வாய்ப்புக்கொடுத்தார்.

மறைவு

முருகு சுப்ரமணியம் ஏப்ரல் 10, 1984-ல் இயற்கை எய்தினார்.

நினைவுகள்

முருகு சுப்ரமணியம் நினைவாக மலேசிய எழுத்தாளர் சங்கம் விருதுகள் வழங்கி வந்தது

பங்களிப்பு

முருகு சுப்ரமணியம் பொன்னி இதழின் ஆசிரியராகவும், பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களை வெளியிட்டவராகவும் அறியப்படுகிறார். மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் திராவிட இயக்கக் கருத்துக்களை இலக்கியக் களத்தில் நிலைநிறுத்தியவர்

உசாத்துணை


✅Finalised Page