being created

முதலாழ்வார்கள்

From Tamil Wiki
Revision as of 01:36, 11 August 2022 by Tamizhkalai (talk | contribs)
terttnpsc.com

திருமாலைத் தமிழ்ச் செய்யுள்களால் பாடிய பன்னிரண்டு வைணவ அடியார்கள் ஆழ்வார்கள் என அழைக்கப்படுகின்றனர். பன்னிருவரில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் காலத்தால் மற்ற ஆழ்வார்களுக்கு முந்தையவர்கள் என்பதால் முதலாழ்வார்கள் என அழைக்கப்படுகிறார்கள். திருக்கோவலூரில் ஓர் வீட்டின் இடைகழியில் இவர்களின் சந்திப்பில் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிறந்தது.

  • பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முறையே அடுத்தடுத்த மூன்று நாட்களில் அவதரித்தார்கள்.
  • இவர்கள் மூவருமே அயோனிஜர்கள் – அதாவது தாயின் கருவிலிருந்து பிறவாதவர்கள். இவர்கள் எம்பெருமானின் தெய்வீகக்  கருணையால் பூவிலிருந்து தோன்றினர் எனக் கருதப்படுகின்றனர். தங்களை வளர்த்தோரால் கண்டெடுக்கப் பட்டவர்கள்.
  • இவர்கள் பிறந்ததிலிருந்தே எம்பெருமான் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள். இறையனுபவத்தில் திளைத்திருந்தவர்கள்.
  • வாழ்வின் ஒரு தருணத்தில் சந்தித்துக் கொண்ட இவர்கள் மூவரும், அப்போதிலிருந்து ஒன்றாகவே இருந்து, பற்பல திவ்ய தேசங்களுக்கு பயணிக்கவும் செய்தனர். இவர்கள் “ஓடித் திரியும் யோகிகள்“ – அதாவது எப்போதும் யாத்திரை செய்பவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

மூவரின் பிறப்பு

முதலாழ்வார் மூவரும் சித்தாத்திரி வருடம் ஐப்பசி மாதம் அடுத்தடுத்த தினங்களில் பிறந்ததாகக் கூறப்படுகிறது. மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தின மாலை இதைக் குறிப்பிடுகிறது. மூவருமே தம் பெற்றோரால் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள். அயோநிஜர்கள் (கருவறையிலிருந்து பிறக்காதவர்கள்) என அழைக்கப்பட்டவர்கள்.

ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம்” இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்
பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே தோன்று சிறப்பால்!

பொய்கையாழ்வார் திருமாலின் திருக்கரத்தில் உள்ள சங்கின் அம்சமாக ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில், பொற்றாமரை மலரில் அவதரித்தார்.

மறு நாள் அவிட்ட நட்சத்திரத்தில் திருமாலின் கதாயுதத்தின் அம்சமாக மாமல்லபுரத்தில் நீலோற்பல மலரில் (குருக்கத்தி மலரில்) பூதத்தாழ்வார் அவதரித்தார்.

அதற்கும் அடுத்த நாள் சதய நட்சத்திரத்தில் பெருமாளின் வாளின் அம்சமாய் மயிலாப்பூரில் உள்ள கிணற்றில் செவ்வல்லி மலரில் பேயாழ்வார் அவதரித்தார்

திருக்கோயிலூரில் சந்திப்பு

pinterest.com thanks: Golla Srinivasalu

திருக்கோயிலூரில் முதலாழ்வார்கள் மூவரும் சந்தித்ததும் திவ்யப் பிரபந்தம் பிறந்த தொன்மக் கதை இவ்வாறு கூறப்படுகிறது : திருக்கோவிலூருக்கு வந்தடைந்த பொய்கையாழ்வார் மழைக்கு ஒதுங்குவதற்காக ஓர் வீட்டின் (மிருகண்டு முனிவரின் ஆசிரமம் என்றும் சொல்லப்படுகிறது) இடைகழியில் தங்கி இருந்தார். பூதத்தாழ்வாரும் அங்கு ஒதுங்க இடம் தேடி வந்தார். “ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம் ” என்று இருவரும் அங்கிருந்தனர். பிறகு பேயாழ்வாரும் அதே சமயம் அங்கு இடம் தேடி வந்தார். “ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம்.மூவர் நிற்கலாம்” என்று மூவரும் நின்று கொண்டிருந்தனர். மூவரும் பெருமானின் அருமை பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அதைக் கேட்பதற்குப் பெருமாளும் அங்கே வந்து விட்டார். நெருக்கடியில், இருளில் தங்களை அவ்வண்ணம் நெருக்கும் நன்காம் நபர் யார் என்று தெரியவில்லை. மூவரும் இருளில் நின்ற வண்ணம் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்தி கொண்டனர். முதலில் பொய்கை ஆழ்வார் பஞ்சராத்திரதில் இருந்து " பகவச் ஏச  பூதோஹம்  அநந்யார்ஹொ சிதஹ் பரஹ" ( உலகியல் வாழ்க்கையில் இருந்து மாறுபட்டவன். நான் அந்த பரம புருஷனின் அடியவன்) என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார்).

பின் பூதத்தாழ்வார் நாரதீய புராணத்தில் இருந்து "தாஸோ  ஹம்  வாசுதேவச்ய  சர்வலோக மஹாத்மநஹ"-(நான் மூவுலகுக்கும் அதிபதியான  அந்த பகவான் வாசுதேவரின்  அடியவன்) எனத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார்.

பின் பேயாழ்வார் ராமாயணத்தில் இருந்து எடுத்து காட்டி தன்னை அறிமுக படுத்தி கொண்டார் "தாஸொஹம் கௌஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஸ்த கர்மநஹ " (நான் கோசலை நாட்டு மன்னனான ராமச்சந்திரனின் அடியவன் .)

பிறகு ஆழ்வார்கள் மூவரும் இறைவனின் கருணையைப் பற்றிப் பேசி கொண்டிருந்தனர்.

அப்போது பெருமாளும் தன் பக்தர்களுக்கு அருள் புரிய அவர் மூவர் இடையே தானும் தோன்றினான். மூவர் நிற்கும் இடத்தில் மற்றொருவரும் வந்ததால் நெருக்கம் ஏற்பட்டத்தை உணர்ந்த ஆழ்வார்கள் காரணம் அரியாது திகைத்தனர். உடனே விளக்கேற்றி பார்க்க வேண்டும் என்று எண்ணி, விளக்கோ எண்ணெயோ இல்லாமையால் முதல் இரு ஆழ்வார்களும் அன்பினாலும் ஞான வைராக்கியத்தினால்  தாங்கள் புனைந்த பாடலால் விளக்கேற்றினர். பொய்கையாழ்வார்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக செய்ய
சுடரொளியான் அடிக்கே சூட்டினேன் சொன்ன மாலை
இடராழி நீங்குகவே என்று ---- [திவ்ய பிரபந்தம்  முதல் திருவந்தாதி ]

பொருள்: உலகையே விளக்காகவும், கடலையே எண்ணையாகவும், சூரியனை நெருப்பாகவும் ஏற்றினேன்

என்று தொடங்கி அந்தாதியாக நூறு பாடல்களால் திருமாலின் பெருமையைப் பாடினார்.

பூதத்தாழ்வார்

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா - நன்புருகி
ஞான சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்  ---[திவ்ய பிரபந்தம் இரண்டாம்  திருவந்தாதி ]

பொருள்: இறைவன் மீதுள்ள அன்பையே விளக்காகவும், உருக்கத்தை எண்ணையாகவும் அவன் மீது உள்ள சிந்தனையை திரியாகவும் வைத்து ஞான விளக்கு ஏற்றினேன்

என்று தொடங்கி அந்தாதியாக 100 பாடல்களைப் பாடினார்.

பேயாழ்வார் முதல் இரு ஆழ்வார்களின் பாடல்களால் தோன்றிய விளக்கின் ஒளியில் உலகளந்த பெருமாளைக் கண்டு, தான் கண்ட காட்சியைப் பின்வரும் பாடலாகப் பாடி100 பாடல்களிலான அந்தாதியை நிறைவு செய்தார்.

திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும்  கண்டேன் - செருகிளரும்  
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைகண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று --

பொருள்: கடல் வண்ணனாகிய பெருமாளிடத்தில் பெரிய பிராட்டியைக் கண்டேன். அழகிய திருமேனியையம், சூரியன் போன்ற அழகிய ஒளியையும், யுத்த பூமியிலே சீறி எழுகின்ற சுதர்சன சக்கரத்தையும், பாஞ்சஜன்யமாகிய சங்கையும் கண்டேன்.

இவ்வாறு நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிறந்தது. இந்நிகழ்வை வேதாந்த தேசிகரின் தேசிகப் பிரபந்தம்

பாட்டுக்கு உரிய பழையவர் மூவரைப் பண்டு ஒருகால்
மாட்டுக்கு அருள் தரும் மாயன் மலிந்து வருத்துதலால்
நாட்டுக்கு இருள்செக நான்மறை அந்தி நடை விளங்க
வீட்டுக்கு இடைகழிக்கே வெளிகாட்டும் அம்மெய்விளக்கே

என்று குறிப்பிடுகிறது. பொய்கையாழ்வாரும் இந்நிகழ்வை

நீயும் திருமகளும் நின்றாயால்,*  குன்றுஎடுத்துப்-
பாயும்*  பனிமறுத்த பண்பாளா,* – வாசல்-
கடைகழியா உள்புகா*  காமர்பூங் கோவல்*
இடைகழியே பற்றி இனி

என்று குறிப்பிடுகிறார்.

முதலாழ்வார்களின் காலம்

உசாத்துணை

இடைகழியில் சந்தித்த இனியவர்கள்-குங்குமம் இதழ்

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்-சுஜாதா








🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.