under review

மா. இராசமாணிக்கனார்

From Tamil Wiki
Revision as of 19:26, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:வரலாற்றாய்வாளர்கள் சேர்க்கப்பட்டது)
மா. இராசமாணிக்கனார் நன்றி விக்கிபீடியா

மா. இராசமாணிக்கனார் (மார்ச் 12, 1907 - மே 26, 1967). தமிழ் வரலாற்று ஆய்வாளர். இலக்கிய தரவுகளைக் கொண்டுவரலாற்றாய்வை நிகழ்த்துவதில் முன்னோடி. சைவ சமய ஆய்வாளர்.

பிறப்பு, கல்வி

மா. இராசமாணிக்கனார் மார்ச் 12, 1907 அன்று பிறந்தார். தந்தை மாணிக்கம், அன்னை தாயாரம்மாள். இவர்களுக்கு பிறந்த எழு குழந்தைகளுள் மா. இராசமாணிக்கனாரும் அவரின் அண்ணன் இராமகிருஷ்ணன் இருவர் மட்டுமே எஞ்சியவர்கள். இவரின் தந்தை நில அளவையாளராக இருந்து பின்னர் வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்றார். தந்தையின் அரசுப் பணி காரணமாக ஆந்திரா மாநில சித்தூரிலும், கர்னூலிலும் இருந்த போது மா. இராசமாணிக்கனார் தெலுங்கு மொழியில் கல்வி பயின்றார். பின் 1916-ல் நான்காம் வகுப்பு படிக்கும் போது தமிழகத்திற்கு திரும்பி நிலக்கோட்டையில் தமிழ் கல்வி கற்க ஆரம்பித்தார். 1917-ல் திண்டுக்கலில் 5-ஆம் வகுப்பு படிக்கும் போது தந்தையை இழந்தார். அதனால் சிறிது காலம் அவரின் படிப்பு தடைப்பட்டது. 1920-வது வருடம் அண்ணன் இராமகிருஷ்ணனுடன் இருந்தபோது நன்னிலத்தில் 5-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1921 முதல் 1927-ஆம் ஆண்டுபள்ளி இறுதிவகுப்புதேர்ச்சி பெறுவதுவரை தஞ்சாவூர் தூய பீட்டர்ஸ் பள்ளியில் பயின்றார்.

தனிவாழ்க்கை

இராசமாணிக்கனார் செப்டம்பர் 9, 1930 அன்று துரைசாமி, ஜெயலட்சுமியின் மகள் கண்ணம்மாளை மணந்தார். அவர்களுக்கு எட்டு பிள்ளைகள் பிறந்தனர். புகழ்பெற்ற கல்வெட்டு ஆய்வாளரும் வரலாற்றாய்வாளருமான இரா. கலைக்கோவன் இராசமாணிக்கனாரின் மகன். இதழியல் வரலாற்றாய்வாளர் மா.ரா. அரசு இராசமாணிக்கனாரின் இன்னொரு மகன்.

1927-ஆம் ஆண்டு ஒரத்தநாடு போர்டு பள்ளியில் எழுத்தராகபணியில் சேர்ந்தார். 1928-ஆம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டை தியாகராயர் நடுநிலைப்பள்ளியில் தமிழாசிரியராக சேர்ந்தார். 1936-ஆம் ஆண்டு முத்தியால்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக இருந்தார். 1947 முதல் 1953 வரை சென்னை விவேகானந்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் 1953-ல் தமிழ்த்துறை தலைவராக பணியேற்றார். பின் 1959-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் துணைப்பேராசிரியராகப் பணியேற்றார்.

இலக்கிய வாழ்க்கை

இராசமாணிக்கனார்

மா. இராசமாணிக்கனார் அண்ணன் இராமகிருஷ்ணனுடன் நன்னிலத்தில் இருந்த போது மெளனசாமி மடத்தில் இருந்த துறவியிடம் சித்தர் பாடல்கள் மற்றும் அருட்பாட்கள் கற்றார். தஞ்சையிலிருந்த போது தஞ்சை தூய பீட்டர் பள்ளி தலைமையாசிரியரின் உதவியுடன் தஞ்சை பள்ளி பேராசிரியர்கள் கரந்தை அ. வேங்கடாசலம் பிள்ளை, கரந்தை தமிழ் சங்கத்தினர்களான வே. உமாமகேசுவரன், ந.மு. வேங்கடசாமி நாட்டார், உ.வே. சாமிநாதையர், இரா. இராகவையங்கார் போன்ற தமிழறிஞர்களிடம் பாடம் கேட்டார்.

1930-ஆம் ஆண்டு தன் முதல் நூலான 'நாற்பெரும் வள்ளல்கள்'-யை வெளியிட்டார். 'தமிழர் நல்வாழ்க்கைக் கழகத்தார்' வேண்டுகோளுக்கு இணங்க 'தமிழர் திருமண நூல்' இயற்றினார். மொஹெஞ்சதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம், பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு போன்ற நூல்கள் அவருக்கு வரலாற்றாய்வாளர் என்ற இடத்தை அளித்தன. சைவ சமயம் சார்ந்து 'சைவ சமய வளர்ச்சி' ,'சேக்கிழார்' ,'பெரியபுராணம் ஆராய்ச்சி' ஆகிய நூல்களை எழுதினார். 1966-ஆம் ஆண்டு மலேசிய நாட்டு கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று 'சங்க காலத் தமிழர் சமுதாய வாழ்க்கையின் சில பகுதிகள்' என்னும் ஆய்வு கட்டுரை வழங்கினார். அதே ஆண்டு 'இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரை நடை வளர்ச்சி' என்ற தலைப்பில் சென்னை பல்கலைக்கழக்கத்தில் 'கல்கி நினைவுச் சொற்பொழிவு' நிகழ்த்தினார். அவர் இறந்த பின் 'பத்துப்பாட்டு ஆராய்ச்சி' என்னும் நூல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பாக வெளியிடப்பெற்றது.

பங்களிப்பு

மா. இராசமாணிக்கனாரின் பங்களிப்பு மூன்று களங்களில் மதிப்பிடத்தக்கது.

இலக்கிய ஆய்வு

ஐந்தாண்டுகள் ஆய்வு செய்து’பத்துப்பாட்டு ஆராய்ச்சி’ என்னும் நூலை விரிவாக எழுதினார். இந்நூல் வழியாக சங்க கால வாழ்கையைப் பதிவு செய்ய முற்பட்டார். 'பத்துப்பாட்டின்' தகவல்களை கொண்டு பிற்காலக் கல்வெட்டுச்செய்திகளுடன் இணைத்து ஆய்வு செய்திருக்கிறார். தமிழ் இலக்கிய வரலாறு, கம்பர் யார்? திருவள்ளுவரின் காலம் என்ன?, இலக்கிய அமுதம், இலக்கிய அறிமுகம், என்று இலக்கியம் சார்ந்து அறிமுக ஆய்வுக்குரிய நூல்களை எழுதினார். 'இருபதாம் நூற்றாண்டு உரைநடை வளர்ச்சி' இவருடைய இன்னொரு குறிப்பிடத்தக்க நூலாகும்.

சைவ சமய ஆய்வு

இராசமாணிக்கனார் சைவ சமயத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் நிறைய நூல்களை எழுதினார். சைவ சமய வளர்ச்சி, பெரிய புராணம், சேக்கிழார், ஆகிய நூல்களை சைவ சமயம் சார்ந்து எழுதியுள்ளார். சைவ சமயம் பற்றி புறவயமாக எழுதப்பட்ட வரலாற்று ஆய்வுகளில் இராசமாணிக்கனார் எழுதியவை முன்னோடி முயற்சிகள். அவை உரிய முறையில் பின்னர் முன்னெடுக்கப்படவில்லை. மதம்சார்ந்த அகவயப்பார்வைகளே பின்னர் ஏராளமாக உருவாயின.

வரலாற்றாய்வு

இராசமாணிக்கனாருக்கு தமிழ் வரலாற்றாய்வில் குறிப்பிடத்தக்க இடமுண்டு. வரலாற்றாய்வில் இவருடைய பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு, மற்றும் தமிழில் சிந்துவெளி நாகரீகம் பற்றி எழுதிய மொஹஞ்சதாரோ அல்லது சிந்துவெளி நாகரீகம் ஆகிய நூல்கள் முதன்மை கட்ட ஆய்வுக்கு உதவியாக இருப்பவை. ஆராய்ச்சி கட்டுரைகள் என்னும் நூலில் கல்வெட்டுகள், அரசர்களின் மெய்கீர்த்திகள் அடங்கிய தகவல்களை ஆண்டு குறிப்போடு பதிப்பித்திருக்கிறார்.

இலக்கிய இடம்

மா.இராசமாணிக்கனார் வரலாறு

மா. இராசமாணிக்கனாரின் முக்கியமான பங்களிப்பு பல்லவ வரலாறு, சோழர் வரலாறு நூல்களை பொதுவாசகர்களுக்காக எளிய தமிழில் எழுதி வெளியிட்டது. சிந்து சமவெளி நாகரீகம் பற்றி தமிழில் விரிவாக எழுதியுள்ளார்.

இராசமாணிக்கனார் புறவயமான வரலாற்றாய்வில் நம்பிக்கை கொண்டவர். அவர் ஆய்வு செய்த காலத்தில் இந்திய கல்வெட்டு ஆய்வுத்துறை கல்வெட்டுகளின் படிவங்களை சில தொகுதிகள் மட்டுமே வெளியிட்டு இருந்தது. அவற்றை மட்டும் கொண்டு ஆய்விற்கு எடுத்துக்கொள்ளாமல் கோயில்களுக்கு சென்று நேரடியாக கல்வெட்டுகள் படித்து ஆய்வை செய்துள்ளார். அதற்காக அவர் கோயிலுக்கு சென்று ஆய்வு செய்த நாட்களையும் குறிப்பிட்டுள்ளர்.

மா. இராசமாணிக்கனார் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் கல்லூரி பாடத்திற்கு, மாணவர்களுக்கான தமிழ் பாட நூல்களை உருவாக்கியவர்களில் ஒருவர்.

மறைவு

மா. இராசமாணிக்கனார் மே 26, 1967 அன்று சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பொறுப்பில் இருந்தபோது மாரடைப்பினால் மரணமடைந்தார்.

வாழ்க்கை வரலாறுகள்,நினைவுகள்

  • இந்திய இலக்கிய சிற்பிகள் - மா. இராசமாணிக்கனார்' - இரா. கலைக்கோவன், சாகித்ய அகாடமி வெளியீடு.
  • மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் - இராசமாணிக்கனார் நினைவாக அமைக்கப்பட்டுள்ள வரலாற்றாய்வுக்கழகம். அவர் மகன் இரா. கலைக்கோவன் நடத்துவது.
நாட்டுடைமை

மா. இராசமாணிக்கனாரின் படைப்புகளை 2007-ல் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது.

விருதுகள், பட்டங்கள்

  • 1935 - வித்துவான் பட்டம்
  • 1939 - பி.ஓ.எஸ் பட்டம்
  • 1944 - எல்.டி. பட்டம்
  • 1945 - 'பெரியபுராண ஆராய்ச்சி' என்னும் தலைப்பில் ஆய்வு செய்து எம்.ஓ.எல் பட்டம் பெற்றார்
  • 1951 - 'சைவ சமய வளர்ச்சி' என்னும் தலைப்பில் டாக்டர் பட்டத்திற்கு ஆய்வு செய்துபட்டம் பெற்றார்
சைவ மடங்கள் வழங்கிய பட்டங்கள்
  • 1951- சமயத்துறை பணிகளுக்காக திருவாடுதுறை ஆதீனம் 'சைவ வரலாற்று ஆராய்ச்சி பேரறிஞர்' பட்டம்
  • 1955 - மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனத்தார் 'ஆராய்ச்சி கலைஞர்' பட்டம்
  • 1959 - சைவ சித்தாந்த சமாஜம் 'சைவநெறி காவலர் பட்டம்
  • 1963 - தருமை ஆதீனம் ' சைவ இலக்கியப் பேரறிஞர்' பட்டமளித்து பொற்பதக்கமும் பொன்னாடையும் வழங்கியது

நூல்கள்

மா. இராசமாணிக்கனாரின் சில முக்கிய நூல்கள்

தமிழ்
  • பல்லவர் வரலாறு - 1944
  • சோழர் வரலாறு - 1947
  • தமிழர் திருமண நூல் - 1939
  • மொஹெஞ்சொதாரோ அல்லது சிந்துவெளி நாகரீகம் - 1941
  • சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) - 1945
  • ஆராய்ச்சி கட்டுரைகள் - 1947
  • பெரியபுராண ஆராய்ச்சி - 1948
  • சைவ சமய வளர்ச்சி - 1958
  • இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ர்ச்சி - 1978
  • சைவசமயம் (1955) (இணையநூலகம்)
ஆங்கில நூல்
  • The Development of Saivism in South India - 1964

இராசமாணிக்கனாரின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை


✅Finalised Page