under review

மாலன்

From Tamil Wiki
மாலன் (நன்றி: malan.co.in)

மாலன்(மாலன் நாராயணன்) (பிறப்பு: செப்டம்பர் 16, 1950) எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், இதழாசிரியர், ஊடகவியலாளர். நவீன இலக்கியத்தை ஊடகவியல், பத்திரிக்கைகள் வழியாக பரவலாக கொண்டு சேர்த்தவர்களில் முக்கியமான ஆளுமை.

வாழ்க்கைக் குறிப்பு

மாலனின் இயற்பெயர் மாலன் நாராயணன். மாலன் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் வி.எஸ்.வி. மணி, லலிதா இணையருக்கு செப்டம்பர் 16, 1950-ல் பிறந்தார். அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். 1990-களில் அங்கு மாணவராக இருந்தபோதும் மின்இதழ்களுக்கான முன் மாதிரியை வடிவமைத்தார். அங்கு 'Academic Excellence in Advanced Editing' என்ற விருதைப் பெற்றார்.

தனி வாழ்க்கை

மாலன் சரஸ்வதியைத் திருமணம் செய்து கொண்டார். மகன் சுகன்.

மாலன் மைக்ரோசாஃப்டின் எம்.எஸ்.ஆபீஸ் பொதி தமிழ்ப்படுத்தப்பட்டபோது அதைச் சரிபார்த்து ஒப்புதல் அளித்ததோடு அவர்களுக்காக கணிச்சொல் அகராதி ஒன்றினையும் தொகுத்தளித்தார்.

அமைப்புப் பணிகள்

  • சாகித்ய அகாதெமியின் பொதுக் குழு, லலித்கலா அகாதெமி ஆகியவற்றின் பொதுக் குழு உறுப்பினர்.
  • ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளையின் உறுப்பினர்.
  • சாகித்ய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சிங்கப்பூர் அரசு நிறுவனமான சிங்கப்பூர் தேசியக் கலைமன்றம் ஆதரவில் நடைபெறும் எழுத்தாளர் வார நிகழ்ச்சிக்கும், தேசிய நூலக வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்ச்சிக்கும் அழைக்கப்பட்டார்.
  • நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் செனட் உறுப்பினராக ஆளுநர்கள் சென்னா ரெட்டி, சுர்ஜித்சிங் பர்னாலா ஆகியோரால் நியமிக்கப்பட்டார்.
  • சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் இதழியல் பாடத்திட்டங்களை வகுக்கும் குழுவில் பங்களித்தார். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஆலோசகராகவும் பங்களித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின்(முதுநிலை) பாடத்திட்டக் குழு உறுப்பினர்.

ஊடகவியல்

1991-ன் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான போது அவற்றை உடனுக்குடன் தூர்தர்ஷனுக்காக நேரலையில் வழங்கியவர் மூவரில் மாலன் ஒருவர். கருத்துக் கணிப்புகள், செய்தியின் பின்னணித் தகவல்கள், விவாதங்கள், முக்கிய நிகழ்வுகளை நேரலையில் வழங்குதல் போன்றவற்றைத் தமிழ்த் தொலைக்காட்சிகளில் அறிமுகப்படுத்தினார். சன் தொலைக்காட்சியில் 870 நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். சிஙகப்பூரின் வசந்தம், மலேசியாவின் வான்வில், இலங்கையின் மகாராஜா, இங்கிலாந்தின் ஐபிசி, ஆஸ்திரேலியாவின் ஏபிசி, சீனாவின் சி.ஆர்.என் ஆகிய ஒலிபரபப்பு நிறுவனங்கள் இவரின் பேட்டிகளை ஒலிபரப்பின. பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய், குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் ஆகியோரது அயலகப் பயணங்களில், இந்திய அரசின் அழைப்பின் பேரில் அவர்களது ஊடகக் குழு உறுப்பினராகப் பங்கேற்றார். பிபிசியின் தமிழ்ச் சேவைப் பிரிவான தமிழோசையில் பத்து ஆண்களுக்கு மேலாக மாதந்தோறும் செய்தி விமர்சனங்களை அளித்தார்.

சீனத்தில் உள்ள Boao forum என்ற அமைப்பு நடத்திய ’Round Table of Media Leaders of Asia’ என்ற நிகழ்வுக்குத் தொடர்ந்து மூன்றாண்டுகள்(2014,2015,2016) அழைக்கப்பட்டார். இந்தியா–பாகிஸ்தான் இடையே நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பேனோஸ்(Panos) என்ற சர்வதேச அமைப்பால் கூட்டப்பட்ட இந்திய-பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் உரையாடலில் பங்கேற்க அழைக்கப்பட்டார். பிரிட்டிஷ் கவுன்சில் ஏற்பாடு செய்த ’Conference on Media, Public Interest and Issues of Regulation: Indo-UK Perspectives’ என்ற மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்பட்டார். ’Global Knowledge Foundation’ என்ற அமைப்பினால் நேபாலில் நடைபெற்ற ஊடகக் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டார். ’South Asia Broadcasting in the satellite age, organized by British Council’ என்ற பொருளில் பிரிட்டிஷ் கவுன்சில் நடத்திய கருத்தரங்கில் ஓர் அமர்விற்குத் தலைமை ஏற்றார். ஹங்கர் புரோஜக்ட் என்ற சர்வதேச நிறுவனத்தின் தேசிய ஊடக ஆலோசகராகப் பணியாற்றினார்.

இதழியல்

மாலன் 'அறிவுக்கதிர்' என்னும் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். புதிய தலைமுறை இதழின் ஆசிரியராக இருந்தார். இந்தியா டுடே(தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதிய தலைமுறை(2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். தி. ஜானகிராமன் கணையாழி ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டபோது அவரது அழைப்பை ஏற்று கணையாழி ஆசிரியர் குழுவில் சிறிது காலம் பங்களித்தார்.

திசைகள்

மாலன் ஜனவரி 1981-யல் ’திசைகள்’ இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அச்சில் வார இதழாகத் தொடங்கி 2003-ல் இணையத்தில் மின் மாத இதழாக வந்தது. 2003-ல் தமிழில் முதன் முதலில் யூனிகோடில் அமைந்த மின்னிதழ்.

அக்ஷர

'அக்ஷர' என்ற 24 மொழிகளில் வெளியாகும் இணைய இதழை நடத்தி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

எழுத்து இதழில் எழுதிய கவிதைகள் மூலம் தன் பதினாறாவது வயதில் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். 1970-1985 ஆண்டுகளில் இலக்கியச் சிற்றிதழ்களில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதினார். கண்ணதாசன், தீபம், கணையாழி, கசடதபற போன்ற இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும், ஆனந்த விகடன், கல்கி, தினமணி கதிர் போன்ற வெகுஜன இதழகளில் எழுதினார். கல்கி இதழில் 'தோழி' என்ற தொடர்கதை எழுதினார்.

இந்தியாவில் அவசர நிலைக்கு எதிராக மாலன் எழுதிய கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, டஃப்ட் பல்கலைக் கழக அமெரிக்கப் பேராசிரியர் ஆலிவர் பெரி தொகுத்த ஒரு நூலில்(Voices of Emergency) இடம் பெற்றுள்ளது. இவரது சிறுகதைகள் சீனம், மலாய், பிரன்ச் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. சிங்கப்பூரின் தமிழ் முரசில் நான்காண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வாரம் தோறும் எழுதினார்.

மாலனின் கதைகள் ஆங்கிலம், பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா, டெக்கான் ஹெரால்ட், இந்தியா டுடே(மலையாளம்), மாத்ருபூமி (மலையாளம்), விபுலா(இந்தி) ஆகிய இதழ்களில் வெளியாகின. கல்கத்தாவில் உள்ள எழுத்தாளர்கள் பயிலரங்கு(Writers Workshop) தனது ஆங்கிலத் தொகுப்பில் இவரது கதைகளை வெளியிட்டது. சைரஸ் மிஸ்ட்ரி எழுதிய ’Chronicles of a corpse bearer' என்னும் ஆங்கில நாவலை ’ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்தார். தி.ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை தொகுப்பாசிரியராக சாகித்ய அகாடமி வெளியீடாகக் கொணர்ந்தார்.

விருதுகள்

  • 2021-ல் தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது ’ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ நூலுக்காக கிடைத்தது.
  • 1997--ம் ஆண்டின் சிறந்த நூல் (மாறுதல் வரும்-சிறுகதைத் தொகுப்பு) பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம்
  • பாரதிய பாஷா விருது- கல்கத்தா(2017)
  • வாழ்நாள் சாதனையாளர் விருது – தட்சிணபாரத் இந்தி பிரசார சபா, சென்னை
  • தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (2019)
  • கம்பன் விருது- கம்பன் கழகம், சென்னை
  • கண்ணதாசன் விருது- கண்ணதாசன் கழகம். கோவை
  • சிங்கப்பூர் தேசிய நூலகம் வழங்கிய லீ காங் சியான் புலமைப் பரிசில் (Lee Kong Chian Fellow- National Library Board, Singapore)
  • Academic Excellence in Advanced Editing - University of Florida, USA

இலக்கிய இடம்

மாலன் நவீன இலக்கியத்தை ஊடகவியல், பத்திரிக்கைகள் வழியாக பரவலாக கொண்டு சேர்த்தவர்களில் முக்கியமான ஆளுமை.

சிறப்புகள்

மாலனின் சிறுகதைகள் மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் சமகால இலக்கியத்திற்கான நூலாக ஐந்தாண்டுகளுக்கும் மேலாக முதுநிலை மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவரது படைப்புக்கள் குறித்து தமிழ்நாட்டில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டனர்

நூல்கள் பட்டியல்

கவிதை
  • மனம் எனும் வனம்
  • புனைவற்ற புனைவு
  • உயிரே உயிரே
நாவல்
  • நந்தலாலா
  • வழிதவறிய வண்ணத்துப்பூச்சிகள் (1980)
  • ஜனகனமண
  • எம்.எஸ்.
சிறுகதைகள்
  • மாலன் சிறுகதைகள் (கவிதா வெளியீடு)
  • மாலன் முத்துக்கள் பத்து (அம்ருதா பதிப்பகம்)
கட்டுரைகள்
  • நேற்றின் நிழல்
  • என் ஜன்னலுக்கு வெளியே (இரு பாகங்கள்)
  • காலத்தின் குரல்
  • கடைசி பக்கம்
  • சொல்லாத சொல்
  • இலக்கிய ஆய்வு
  • புரட்சிக்காரர்கள் நடுவே
  • கயல் பருகிய கடல்
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் இடம்பெற்ற தொகுப்புகள்
  • One Sky – National Library Board. Singapore
  • Modern Tamil Stories –Writers Workshop. Calcutta
  • Unwinding and other Contemporary Stories –Emerald Publishers
  • Greatest Tamil Stories Ever Told – Aleph Book Company
  • மொழிபெயர்க்கப்பட்ட கவிதை வெளியான நூல்
  • Voices of Emergency –Anthology of Protest Poetry
ஆங்கிலக் கட்டுரை வெளியான தொகுப்பு
  • Chapters on Asia –National Library Board, Singapore

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page