first review completed

பெ.நா. அப்புசாமி ஐயர்

From Tamil Wiki
vijayabharatham.org

பெ. நா. அப்புசாமி ஐயர் (டிசம்பர் 31,1891-மே 16,1986) அறிவியல் தமிழ் மற்றும் கலைச்சொல்லாக்கத்தின் முன்னொடி; மொழிபெயர்ப்பாளர்; வழக்கறிஞர். அறிவியலை தமிழ் வழி பரப்பவும், அறிவியல் துறையில் தமிழை வளர்க்கவும் எழுபதாண்டுகளுக்கு மேல் உழைத்தவர். மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளும், அறிவியல் சிறுவர் இலக்கிய நூல்களும் பாடநூல்களும் எழுதினார்.

பிறப்பு, கல்வி

பெ. நா. அப்புசாமி ஐயர் நெல்லை மாவட்டத்தில் உள்ள பெருங்குளத்தில் பெருங்குளம் நாராயண் ஐயர்-அம்மணியம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். 1908-ல் இந்து உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். சென்னை மாநிலக்கல்லூரியில் பி.ஏ பட்டமும் சென்னை சட்டக்கல்லூரியில் பி.எல் பட்டமும் பெற்றார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளில் புலமை பெற்றார். சிறு வயதிலிருந்தே வாசிப்பில் நாட்டம் கொண்டிருந்தார்.

தனி வாழ்க்கை

சுப்புலட்சுமி அம்மையாரை மணம் செய்து கொண்டார். பிள்ளைகள் யக்ஞ நாராயணன், லக்ஷ்மி நாராயணன் மகள் அம்மணி சுப்பிரமணியம்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீட்டு நிலை (Appelate side) வழக்கறிஞராக 50 ஆண்டுகள் பணியாற்றினார்.

சிறந்த தமிழறிஞரும் தமிழ் நேசன் பத்திரிகையின் ஆசிரியருமான அ. மாதவையா இவரது சித்தப்பா. மாதவையா ஒரு கட்டுரை எழுதும்படி கூறியபோது, பள்ளியில் தமிழை முறையாகப் படிக்கவில்லை என்று தயங்கினார். மாதவையாவின் ஊக்கத்தினால் எழுதத் துவங்கினார்.

'கலைமகள்’ இதழில் பல கட்டுரைகள் எழுதினார். கல்லூரியில் படிக்கும்போதே உ.வே.சா வுடன் தொடர்பில் இருந்தார். கா. சுப்பிரமணிய பிள்ளை, எஸ்.வையாபுரிப் பிள்ளை, கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, டி.கே.சி. கல்கி, எஸ். வையாபுரிப் பிள்ளை, டி.எல்.வெங்கட்ராமய்யர், வாசன், ஏ.என்.சிவராமன் உள்ளிட்ட தமிழறிஞர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் கூடும் இடமாக இவரது இல்லம் இருந்தது

எழுத்துப் பணி

பெ.நா.அப்புசாமியின் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்
காஸ்மிக் கதிர்கள் பற்றிய கட்டுரையிலிருந்து..
சித்திர விஞ்ஞானப் பாடம்-நூலிலிருந்து
அறிவியல் இலக்கியம்

பெ.நா. அப்புசாமியின் முதல் அறிவியல் கட்டுரை 'பிரபஞ்சத்தில் மனிதன் தனித்திருக்கிறானா?’.அக்கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். அறிவியல் சிறுவர் இலக்கியத்திலும் சிறப்பு கவனம் செலுத்தி, பல சிறுவர் நூல்களை எழுதினார். 1917 முதல் 1986 வரை பெ.நா. அப்புசாமி எழுதியுள்ள கட்டுரைகள் 5000-க்கும் மேலாக இருக்குமெனக் குறிப்பிடப்படுகிறது. இவற்றுள் 3000-க்கும் மேற்பட்டவை அறிவியல் கட்டுரைகள். இவரது அறிவியல் கட்டுரைகள் தமிழர் நேசன், தினமணி, இளம் விஞ்ஞானி, தியாக பூமி, கலைக்கதிர், கலைமகள், செந்தமிழ், ஆனந்த விகடன் முதலான பல இதழ்களில் வெளிவந்துள்ளன. சூரியனைப்பற்றிய கட்டுரைகளும், 'ரேடார் அறிவிக்கும் நட்சத்திரங்கள்' , 'துணைக்கோள்களும் செய்திப்போக்குவரத்தும்', 'ராமன் விளைவு'போன்ற கட்டுரைகளில் அறிவியல் உண்மைகளை மிக எளிய நடையில் எழுதினார். பள்ளிப் பாடத்திட்டத்திற்காக 'நவீன சித்திர விஞ்ஞானம் ' என்ற பெயரில் தொடர் நூல்களை ஜே.பி. மாணிக்கத்துடன் இணைந்து எழுதினார். பேனா’ என்ற புனைபெயரில் பல நூல்களை எழுதினார்.

மொழியாக்கப் பணிகள்

1979 முதல் 1983 வரை தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது 120 சங்கக் கவிதைகளையும் பாரதியார் கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். அனைத்து மொழிகளின் சிறந்த நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று விரும்பினார். மொழிமாற்றம் குறித்து பல வரையறைகளை வகுத்தார். அறிவியல், வரலாறு முதலான துறைகளில் ஏராளமான நூல்கள், கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்தார். பல இசை விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

வானொலி நிலைம்

பெ.நா. அப்புசாமி சென்னை வானொலி நிலையத்திலும் Voice of America வானொலி மூலமாகவும் 150 சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இவற்றுள் ஒரு சில சொற்பொழிவுகள் சில இதழ்களிலும் வெளியிடப்பட்டன . சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தின் பகுதி நேர ஆலோசகராகப் பணியாற்றி.னார்.

பிற பங்களிப்புகள்

பெ.நா. அப்புசாமி ஐவர் அடங்கிய இந்திய அரசியல் சட்ட மொழிபெயர்ப்புக் குழுவில் இடம்பெற்றிருந்தார். தமிழக அரசு நியமித்த அறிவியற் கலைச் சொற்குழுவிலும் , சட்டக் கலைச் சொற்கள் குழுவிலும் , சென்னைப் பல்கலைக்கழக ஆய்வுக் கமிட்டியிலும் (Board of Studies ) தொல்லியல் கழகம் மற்றும் சமஸ்கிருத அகாதெமியிலும் உறுப்பினராகப் பணியாற்றினார். சென்னைப் பல்கலைக் கழகச் சட்டவியல் துறையில் தேர்வாளராகப் பங்காற்றினார். மர்ரே ராஜம் பல தமிழ் இலக்கிய நூல்களைத் தொகுப்பாகப் பதிப்பித்தபோது அவருடன் இணைந்து செயல்பட்டார்

இலக்கிய இடம்

பெ.நா. அப்புசாமியின் அறிவியல் கண்ணோட்டமும் அணுகுமுறைகளும் இருபதாம் நூற்றாண்டின் முதல் அரை நூற்றாண்டில் நிலவிவந்த சமூக அரசியல் சூழ்நிலைகளுடன் ஒப்பிடும்போது தனித்தன்மையும் சிறப்பும் வாய்ந்தனவாக உள்ளன. அறிவியலை தமிழ் வழி பரப்புதல், அறிவியல் துறையில் தமிழை வளர்த்தல் என இரு நோக்கங்களைக் கொண்டு செயல்பட்டார். மக்கள் அறிவியலைக் கற்று, அறிவியல் மனநிலையைப் பெற்று அதற்கு இணங்க நடந்துவந்தால் அவர்கள் பகுத்தறியும் பண்பைப் பெறுவார்கள், நாடும் வளர்ச்சியுறும்-என்ற இந்த நோக்கமே அவரை அறிவியல் தமிழின் பக்கம் ஆற்றுப்படுத்தியது. இவருடைய அறிவியல் கட்டுரைகள் அனைத்துமே ஒரு சராசரி மனிதன் அறிவியலைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எளிய தமிழ் நடையில் உள்ளன.

அப்புசாமியின் எளிய மொழி நடைக்கு அவரது கலைச் சொல்லாக்கமும் ஒரு காரணம். முடிந்தவரை மக்களின் பேச்சு வழக்கில் இருந்த சொற்களையும் எளிய கலைச் சொற்களையுமே பயன்படுத்தினார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழில் வடசொற்களைக் கலந்து எழுதும் வழக்கம் இருந்தது. அப்புசாமியின் நடையிலும் தொடக்கத்தில் இப்போக்கே காணப்படுகிறது. காலப்போக்கில் நடையில் மாற்றம் ஏற்பட்டுத் தரம் வாய்ந்த அறிவியல் தமிழ்ச் சொற்களுடன் இயல்பான எளிய இனிய தமிழில் அறிவியலை ஆக்கும் முயற்சியில் அவர் பெருவெற்றி பெற்றுள்ளார். இவரது அறிவியல் கலைச்சொல்லாக்க முனைப்பு குறிப்பிடத்தக்கது. அணுப்பிளவு, துணைக்கோள், மின்னணு, புத்தமைப்பு, நுண்ணோக்கி, கதிரியக்கம் உள்ளிட்ட ஏராளமான அறிவியல் சொற்களைத் தமிழில் உருவாக்கினார். எளிய நடையில் தமிழ்க் கலைச் சொற்களைப் பயன்படுத்தி ஏராளமான அறிவியல் கட்டுரைகளை எழுதினார்.

சித்திர விஞ்ஞானப் பாடம்-நூலிலிருந்து

படைப்புகள்

  • அற்புத உலகம்
  • மின்சாரத்தின் விந்தை
  • வானொலியும் ஒலிபரப்பும்
  • அணுவின் கதை
  • ரயிலின் கதை
  • பூமியின் உள்ளே
  • இந்திய விஞ்ஞானிகள்
  • எக்ஸ்கதிர்கள்
  • சர்வதேச விஞ்ஞானிகள்
  • மூன்று சக்தி ஊற்றுக்கள்
  • வாயுமண்டலத்தில் உள்ள வாயுக்கள்
  • அற்புதச் சிறு பூச்சிகள்
  • அணு முதல் ரேடார் வரை
  • பயணம் அன்றும் இன்றும்
  • பயணத்தின் கதை
  • வானத்தைப் பார்ப்போம்
  • சித்திரக் கதைப்பாட்டு 6 புத்தகங்கள்
  • சித்திரக் கதைத்தொடர் 6 புத்தகங்கள

மொழிபெயர்ப்புகள்

  • விஞ்ஞானமும் விவேகமும் (Science & Common Science)
  • அணுசக்தியின் எதிர்காலம் (Our Nuclear Future)
  • அணுயுகம் (Report on the Atom)
  • அணு முதல்பாடம் (Atomic Primer)
  • விஞ்ஞான மேதைகள் (Giants of Science Vol.I, II)
  • சுதந்திரத் தியாகிகள் (Crusaders for Freedom)
  • காலயந்திரம் (Time Machine)
  • இன்றைய விஞ்ஞானமும் நீங்களும் (Todays Science and You)
  • இந்தியாவில் கல்வித்துறைச் சீரமைப்பு (Educational Reconstruction in India)
  • ராக்கெட்டும் துணைக்கோள்களும் (Rockets and Satellites)
  • ஏரோப்ளேன் (Aeroplane)
  • டெலிபோனும் தந்தியும் (Telephone & Telegraph)
  • விண்வெளிப் பயணம் (Space Travel)

விருதுகள், சிறப்புகள்

எழுத்தாளர் சங்கம், குழந்தை எழுத்தாளர் சங்கம் ஆகிய இரண்டு அமைப்புகளும் இவருக்குக் கேடயம் வழங்கிச் சிறப்பித்தன.

தமிழ்ப் பேரவைச் செம்மல்-மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

அப்புசாமி அறிவியல் தமிழ் விருது

அப்புசாமி அறிவியல் தமிழ் விருது ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தால்( SRM University) தமிழில் எழுதப்பட்ட சிறந்த அறிவியல் நூலுக்காக அளிக்கப்படும் விருது. 1,50,000 ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுப் பத்திரமும் அளிக்கப்படுகின்றன.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.