under review

பெர்சே பேரணிகள்

From Tamil Wiki
Revision as of 14:52, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed non-breaking space character)
பெர்சே: மலேசிய தேர்தல் சீர்திருத்தத்திற்கான கூட்டு நடவடிக்கைக் குழு

பெர்சே (BERSIH) (The Coalition for Clean and Fair Elections) என்பது மலேசிய தேர்தல் சீர்திருத்தத்திற்கான கூட்டு நடவடிக்கைக் குழு ஆகும். இக்குழு பல களச் செயல்பாட்டார்களின் இணைவில் 2006-ஆம்ஆண்டு தொடங்கி செயல்படுகின்றது. மலேசியாவில் தேர்தல் நடைமுறையில் முழுமையான சீர்திருத்தத்திற்கு அழுத்தம் கொடுப்பதே இக்குழுவின் நோக்கம் ஆகும். பெர்சே என்பதற்கு மலாய் மொழியில் 'தூய்மை' எனப் பொருள்.

நோக்கம்

மலேசிய நாடு சுதந்திரம் பெற்றது முதல் நாட்டில் நடந்து முடிந்த 11 பொதுத் தேர்தல்களில் ஒரே கூட்டணிகட்சி தொடர்ந்து வெற்றி பெறுவதால், அரசாங்கம் ஒரு தரப்பு அதிகார மையமாக செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பதினோறு தேர்தல்களில் ஒரே கூட்டணிகட்சி வெற்றிபெற முடிவதற்கு நடைமுறையில் இருக்கும் தேர்தல் வழிமுறைகள் ஒரு கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆகவே மலேசிய நாட்டின் தேர்தல் வழிமுறைகளில் சீரிய மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்ற அழுத்தம் கொடுப்பதை 'பெர்சே' குழு போராட்ட முழக்கமாக கொண்டிருந்தது.

தொடக்கம்

பெர்சே அதிகாரப்பூர்வமாக நவம்பர் 23, 2006 அன்று மலேசிய பாராளுமன்ற கட்டிடத்தின் முகப்பில் தொடங்கப்பட்டது. இதில் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிசா, சிவராசா ராசய்யா, லிம் குவான் எங், திரேசா கோக், எஸ். அருட்செல்வன், சையட் ஷாரிர், மரியா சின், யாப் சுவீ செங் போன்றவர்கள் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களும் அரசு சாரா இயக்க தலைவர்களும் கலந்துகொண்டனர்.

பெர்சே 1

Malaysia bersih 2007 532.jpg

நவம்பர் 10, 2007-ல், 'பெர்சே' ஒரு பேரணியைக் கோலாலம்பூரின் டாத்தாரான் மெர்டெக்கா எனும் ‘விடுதலை சதுக்கத்தில்’ நடத்தியது. இதற்கு அம்பிகா சீனிவாசன் தலைமை தாங்கினார். விடுதலை சதுக்கத்திலிருந்து அரண்மையில் பேரரசரைச் சந்தித்து, நடந்து முடிந்த 11-வது தேர்ந்தல் தூய்மையற்றதாகவும் 'பாரிசான் நேஷனல்' கட்சிக்குச் சார்பானதாகவும் உள்ளதை ஒட்டிய மகஜரை ஒப்படைக்க இப்பேரணி கூட்டப்பட்டது. 'மஞ்சள் அலை' என்ற முழக்கத்தை இப்பேரணி குழு பயன்படுத்தியதால் ​​பங்கேற்ற அனைவரும் மஞ்சள் சட்டை அணிந்திருந்தனர்.

இந்தப் பேரணியில் அண்டிரூ கோ (Andrew Khoo), கா. ஆறுமுகம், பாருக் மூசா (Farouk Musa), மரியா சின் (Maria Chin), ஹாரிஸ் இப்ராஹிம் (Haris Ibrahim), வோங் சின் ஹுவாட் (Wong Chin Huat), லியாவ் கோ ஃபா (Liau Koh Fah) ரிச்சர்ட் இயோ (Richard Y W Yeoh), சாயிட் காமாருடின் (Zaid Kamaruddin), தோ கின் வூன் (Toh Kin Woon), யோ யங் போ (Yeoh Yang Poh) போன்றவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். மலேசியாவின் புகழ்பெற்ற மலாய் தேசிய இலக்கியவாதிகளில் ஒருவரான சமாட் சாயிட் அவர்களும் இந்தப் பேரணியில் பங்கு பெற்றார். பத்தாயிரம் பேர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்பட்ட இப்பேரணியில் இனம், சமயம், மொழி பேதம் எதையும் பார்க்காமல் 100,000 மலேசியர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆதரவுகளைத் தெரிவித்தனர்.

பெர்சே 1 பேரணி மகஜரில் இருந்த நான்கு முக்கிய பரிந்துரைகள்
  • வாக்காளர் பட்டியலை மீளாய்வு செய்து இறந்தவர்களையும் செல்லாத தரவுகளையும் நீக்குதல்;
  • இரட்டை வாக்களிப்பதைத் தடுக்க அழியா மை இடுமாறு செய்தல்;
  • நாட்டின் முதன்மையானவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள மற்ற வாக்காளர்களைத் தவிர தபால் மூல வாக்களிப்பு முறையை ஒழித்தல்;
  • தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் நியாயமான ஊடக வாய்ப்பளித்தல். இதன் மூலம் அனைத்து அரசியல் கட்சிகளும் மலேசியர்களுக்கு தங்கள் கொள்கைகள் மற்றும் அறிக்கைகளை விளக்க முடியும்.

காவல் துறை இப்பேரணிக்கு அனுமதி தர மறுத்தது. அனுமதி வழங்கப்படாத நிலையிலும் இப்பேரணி நடைபெற்றதால் இது சட்ட விரோதப் பேரணி என வகைப்படுத்தப்பட்டது. எனவே இதில் கலந்து கொண்டவர்களை, மலேசியக் காவல் துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி விரட்டி அடித்தனர். சிலர் கைது செய்யப்பட்டனர்.

இறுதியாக, மன்னர் வேறு மாநிலத்தில் இருந்த நிலையில் அந்த மகஜர் அரண்மனை பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது.

பெர்சே 2

Bersih 2.jpg

பெர்சே 2 பேரணி ஜூலை 9, 2011-ல் நடைபெற்றது.

பெர்சே 2-ன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 19,2011 அன்று கோலாலம்பூரில் உள்ள சிலாங்கூர் சீன மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பல எதிர்க்கட்சி தலைவர்களோடு தேசிய இலக்கியவாதியான டத்தோ ஏ. சமாட் சைட் அவர்களும் கலந்துகொண்டார். இந்தப் பேரணி நடத்தப்படக்கூடாது என பல்வேறு அரசு சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதன் விளைவாக ஜூலை 5, 2011-ல் மன்னரை சந்திக்க பெர்சே தலைவர் அம்பிகா ஶ்ரீநிவாசன் அனுமதிக்கப்பட்டார். அவருடன் எழுத்தாளர் ஏ. சமாட் சைட் மற்றும் ஜமா இஸ்லாஹ் மலேசியாவின் (JIM) தலைவர் ஜைத் கமருடின் உடன் சென்றனர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு தெருக்களில் பேரணி நடத்துவதற்கு மாற்றாக உள்ளரங்கம் ஒன்றில் நடத்த ஜூலை 5, 2011 அன்று பெர்சே உடன்பட்டது.

மெர்டெகா விளையாட்டரங்கத்தில் நடந்த பேரணியில் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

பெர்சே 2 பேரணி கொண்டிருந்த நோக்கங்கள்:
  • மலேசிய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை மறுசீரமைப்பு செய்தல்;
  • நம்பகமான நிரந்தர கருப்பு மை பயன்படுத்துதல்;
  • தேர்தலுக்கான பொய் வாக்குறுதிகளை வழங்காதிருந்தல்;
  • தேர்தல் பிரச்சாரம் 21 நாட்களுக்கு குறையாமல் நீடிப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்தல்;
  • அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்த எதிர்க்கட்சிகளுக்கு சந்தர்ப்பம் வழங்குதல்;
  • வெளிநாட்டில் உள்ள மலேசியர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுதல்

மெர்டெகா விளையாட்டரங்கத்தை நோக்கி செல்லும் வழியிலேயே அம்பிகா ஶ்ரீநிவாசன் உட்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். கண்ணீர்புகையிலிருந்து தப்பித்து ஓடிய ஒருவர் கீழே விழுந்து மரணமடைந்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெர்சே 3

Ambika 04.jpg

பெர்சே-3 பேரணி ஏப்ரல் 28, 2012-ல் நடைபெற்றது. இது ஒரு குந்தியிருப்பு போராட்டம் ஆகும். பெர்சே இயக்கம் ஏற்பாட்டில், மக்கள் கூட்டணி கட்சி ஆதரவில் எண்பத்து நான்கு அரசு சாரா இயக்கங்கள் இந்தப் பேரணியில் ஒன்றினைந்தன. இதில் 250,000 பேர் கலந்து கொண்டனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு நிகழ்ச்சி நடைபெற்றது. பொது மக்கள் அம்பிகா சீனிவாசன் தலைமையில் அணிவகுத்து நின்றனர்.

இந்தப் பேரணியில் தேர்தல் வாரியத்துக்கு முன்வைக்கப்பட்ட 8 நிபந்தனைகள்:
  • வாக்காளர் பட்டியல் மீளாய்வு
  • தபால் வாக்குகளில் சீர்திருத்தம்
  • நிரந்தர மை பயன்படுத்தவும்
  • இலவச மற்றும் நியாயமான ஊடக அணுகல்
  • குறைந்தபட்ச பிரச்சார காலம் 21 நாட்கள்
  • பொது நிறுவனங்களை வலுப்படுத்துங்கள்
  • ஊழலை நிறுத்துதல்
  • மலினமான அரசியல் அணுகுமுறைகளை நிறுத்துதல்

பெர்சே-4

SeaofYellow.jpg

பெர்சே 4 என்பது கோலாலம்பூர், கோட்டா கினாபாலு மற்றும் கூச்சிங் போன்ற பல முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 29 - 30, 2015-ல் நடைபெற்ற தொடர் பேரணிகளின் ஆகும். இந்த அரசு சாரா அமைப்பின் முக்கிய நோக்கம், தேசிய முன்னணி நிர்வாகத்தின் கீழ் உள்ள மலேசிய அரசாங்கத்தை, உலகளாவிய நீதியின் அடிப்படையில், தேர்தல் முறையை மறுசீரமைக்கவும் சரிசெய்யவும் வலியுறுத்துவதாகும். மேலும் ஜனநாயகமான பாரபட்சமற்ற அரசாங்க அமைப்பை நடைமுறைப்படுத்தவும் இந்த பேரணி நோக்கம் கொண்டிருந்தது. ஏற்கனவே நடந்த பிற பெர்சே பேரணிகளைப் போல இது அமைந்தாலும் இம்முறை தேசிய தின கொண்டாட்டத்திற்கு முதல்நாள் நடத்தப்பட்டது.

பெர்சே-4 உருவான பின்புலம்
  • 13-ஆவது தேர்தலுக்குப் பிறகு, தேசிய முன்னணி நிர்வாகத்தின் கீழ் உள்ள மலேசிய அரசாங்கம் பக்கச்சார்பான தேர்தலை நடைமுறைப்படுத்தியதாக நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் சில அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.
  • 2015-ஆம் ஆண்டில், அன்றைய மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் நிர்வாகத்தில், ஊழல் நடப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தப் பேரணியில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள்
  • நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்
  • வெளிப்படையான அரசு
  • கருத்துரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்தல்
  • பாராளுமன்ற ஜனநாயக அமைப்பை வலுப்படுத்துதல்
  • மலேசியாவின் பொருளாதார பலத்தை பாதுகாத்தல்.
  • பிரதமர் நஜிப் பதவியைத் துறத்தல்

பெர்சே தாக்கங்கள்

பெர்சே குழுவின் போராட்டங்களுக்கு பின் மலேசிய தேர்தல் நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

  • வாக்காளர்களின் கைவிரலில் மையிடும் முறையை 2008-ஆம் ஆண்டு 12-ஆவது தேர்தலில் அமல்படுத்த தேர்தல் வாரியம் முடிவுசெய்தது. போலி மை மற்றும் சில சட்ட சிக்கல்களால் அந்த தேர்தலில் விரலில் மையிடும் முறையை தேர்தல் வாரியம் செயல்படுத்தவில்லை. ஆயினும், 13-ஆவது தேர்தலில் (2013) விரலில் மையிடும் முறை முதன் முதலாக மலேசிய தேர்தலில் அமல்படுத்தப்பட்டது.
  • பெர்சே குழுவினரின், போராட்டம் மலேசியாவில் தேர்தல் வழிமுறைகளைப் பற்றிய சிந்தனைகளோடு, மேம்பட்ட ஜனநாயக அரசியல் குறித்த விழிப்புணர்வை மலேசிய மக்களிடம் ஏற்படுத்தியது.
  • பெர்சே பேரணிகளின் நேரடி விளைவாக, 2018-ல் 14-ஆவது பொதுத்தேர்தலில் தேசிய கூட்டணி தோல்வி கண்டு மாற்று அரசாங்கத்தை மக்கள் தேர்வு செய்த வரலாற்றுச் சம்பவம் குறிப்பிடத்தக்கது.

உசாத்துணை



✅Finalised Page