பெரியசாமித் தூரன்

From Tamil Wiki
Revision as of 15:56, 6 February 2022 by Ramya (talk | contribs) (Created page with "பெரியசாமித் தூரன் (செப்டம்பர் 26, 1908 - ஜூன் 20, 1987) தமிழறிஞர், மரபுவழிக்கவிஞர், கர்நாடக சங்கீதம் அறிந்து கீர்த்தனைகள் எழுதியவர், பாரதி ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், கலைச்சொற...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பெரியசாமித் தூரன் (செப்டம்பர் 26, 1908 - ஜூன் 20, 1987) தமிழறிஞர், மரபுவழிக்கவிஞர், கர்நாடக சங்கீதம் அறிந்து கீர்த்தனைகள் எழுதியவர், பாரதி ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், கலைச்சொற்களை உருவாக்கியவர் எனப் பல முகங்களை உடையவர். நவீனத்தமிழுக்கு அடித்தளமாக விளங்கிய கலைக்களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம் இரண்டிற்கும் முதன்மை ஆசிரியராக இருந்தவர். வரலாற்று, இலக்கிய, சமூக நாடகங்களை படைத்தவர். சிறுவர் இலக்கியம், மொழி பெயர்ப்பு, இதழியல், தமிழிசை என பல தளங்களில் ஈடுபட்டவர். மகாகவி பாரதியை பல்வேறு கோணங்களில் அறிமுகப்படுத்தியவர். ‘செந்தமிழ்ச் செல்வர்’ என்ற அடைமொழியால் அழைக்கப்படுபவர்.

பிறப்பு, கல்வி

பெரியசாமித்தூரன் ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி அருகே மஞ்சக்காட்டு வலசு என்ற ஊரில் பழனி வேலப்பக் கவுண்டருக்கும், பாவாத்தாளுக்கும் மகனாக செப்டம்பர் 26, 1908-ல் பிறந்தார். தூரன் என்பது கொங்கு கவுண்டர்களில் ஓரு துணைப்பிரிவு. தூரன் சிறு வயதில் தாயாரை இழந்தவர். இவரது இயற்பெயர் மஞ்சக்காட்டு வலசு பழனியப்பக்கவுண்டர் பெரியசாமி. இவரது ஆரம்பப் படிப்பு சொந்த ஊரான மொடக்குறிச்சியில். அப்போது ஆசிரியராக இருந்த திருமலைச்சாமி அய்யங்காரால் அவருக்கு தமிழார்வம் உருவானது. மேல்நிலைக் கல்வி ஈரோடு மகாஜனசபா உயர்நிலைப்பள்ளியில் படித்தார். தூரன் 1927-ல் சென்னை மாநிலக்கல்லூரியில் அறிவியல்பாடங்களில் இண்டர்மிடியட் படித்தார். 1929-ல் கணிதத்தில் எல்.டி பட்டம்பெற்று ஆசிரியர் பயிற்சியும் பெற்றார்.

தனிவாழ்க்கை

1939-ல் காளியம்மாளை மணந்து கொண்டார். மூன்று பெண்களும் ஒரு ஆணுமாக நான்கு குழந்தைகள் பிறந்தனர். 1929 முதல் நான்காண்டுகள் கோபிசெட்டிபபளையம் வைரவிழா உயர்நிலைப்பள்ளியிலும் பின்னர் போத்தனூர் மற்றும் பெரியநாயக்கன் பாளையம் பகுதிகளில் இயங்கிய ராமகிருஷ்ணா உயர்நிலைப்பள்ளியிலும் ஆசிரியராக பணியாற்றினார். இக்காலகட்டத்தில் அவர் முறைப்படி மரபிசையைக் கற்றுத்தேர்ந்தார்.

சென்னையில் 1948-68 வரை தமிழ்க் கலைக்களஞ்சியப் பணியில் முதன்மை ஆசிரியர்; 1968 முதல் 76 வரை குழந்தைகள் கலைக்களஞ்சியப் பணி. 1976க்குப்பின் ஓய்வுபெற்று முழுநேர எழுத்தாளரானார்.

இலக்கிய வாழ்க்கை

79 ஆண்டுகளில் 67 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கவிதைத் தொகுதிகள் 5. சிறுகதைத் தொகுதிகள் 5, கட்டுரைத் தொகுதிகள் 5, நாடகத் தொகுப்புகள் 7, கீர்த்தனைத் தொகுப்புகள் 8, குழந்தை இலக்கியங்கள் 16, பாரதி பற்றிய நூல்கள் 11, அறிவியல் நூல்கள் 7, மொழிபெயர்ப்புகள் 4, பதிப்பித்தவை 4 என இவர் பல துறைகளில் எழுதியுள்ளார். காளமேகத்தின் சித்திரமடல், திங்களூர் நொண்டி நாடகம், மோகினி விலாசம் ஆகியவற்றைப் பதிப்பித்தார்.

அவரைப்பற்றிய நூல்கள்

தூரனைப்பற்றிய தொகை நூல் ஒன்றை பாரதீய வித்யா பவன், கோவை மையம் வெளியிட்டிருக்கிறது. சிற்பி பாலசுப்ரமணியம் தொகுப்பாசிரியராகவும் பேராசிரியர் இராம இருசுப்பிள்ளை, டாக்டர் ஐ.கெ.சுப்ரமணியம் ஆகியோர் இணையாசிரியர்களாகவும் செயல்பட பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் முன்னுரையுடன் வந்திருக்கிறது இந்த நூல்.

கலைக்களஞ்சியம்

ஒரு மொழியின் முதல் பேரகராதியும் முதல் கலைக்களஞ்சியமும் மகத்தான சாதனை என்றவகையில் தூரனின் கலைக்களஞ்சியம் தமிழிலக்கியத்தில் முக்கியமான சாதனை.

பிறப்பு

சென்னையில் நடந்த எழுத்தாளர் மாநாடு ஒன்றில் (1947) தலைமை தாங்கிய பெரியசாமித் தூரன் ஆங்கிலமொழியில் உள்ள Encyclopedia Britanciaவுக்குச் சமமாகத் தமிழில் கலைக்களஞ்சியம் வெளியிட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். (அப்போது அவர் பொருட்களஞ்சியம் என்னும் சொல் தொடரையே பயன்படுத்தினார்) தூரன் பேசிய பேச்சைப் பத்திரிகையின் வழி அறிந்த அன்றைய கல்வியமைச்சர் அவினாசிலிங்கம் அவர்கள் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பை நிறுவி அதன் வழி கலைக்களஞ்சியத்தை வெளியிட அரசு முன்வரும் என்று அறிவித்தார். தமிழ் வளர்ச்சிக் கழகம் நிறுவப்பட்டபோது கலைக்களஞ்சியம் வெளியிட வேண்டும் என்ற தூரனின் முடிவையும் தமிழ் வளர்ச்சிக் கழக உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர். கலைக்களஞ்சியத்தின் முதன்மை ஆசிரியராக 1948-ல் தூரன் நியமிக்கப்பட்டார்.

பணி

கலைக்களஞ்சியப் பணி ஆரம்பித்தது. முதல் தொகுதி வர ஆறு ஆண்டுகள் ஆயின. பின் தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு தொகுதி என 9 தொகுதிகள் வந்தன. ஒரு தொகுதியில் 750 பக்கங்கள், பத்து தொகுதிகள்; 1200க்கு மேற்பட்ட அறிஞர்கள் எழுதிய 15000க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 20,000 கலைச்சொற்கள் என அமைந்த தமிழ்க் கலைக்களஞ்சியம் தான் இந்திய மொழிகளில் வெளிவந்த முதல் கலைக்களஞ்சியம்.

பொதுக் கலைக்களஞ்சியப் பணி முடிந்ததும் குழந்தைகள் கலைக்களஞ்சியத் தொகுப்பின் பொறுப்பை ஏற்கும்படி அரசு கேட்டுக்கொண்டதற்கேற்ப அதன் முதன்மை ஆசிரியர் ஆனார். இந்த வேலை 7 ஆண்டுகள் நடந்தது (1969-1976). ஒரு தொகுதி 100 பக்கங்கள் என 10 தொகுதிகள் வந்தன. பொதுக் கலைக்களஞ்சியம் முழுதும் வந்தபோது (1963) முதலமைச்சர் காமராசர் தலைமையில் தூரனுக்குப் பாராட்டுக் கூட்டம் நடந்தது.

சிக்கல்கள்

பெரும்பாலும் தூரனின் கலைக்களஞ்சியத்தை நீர்த்துப்போன மொழியில் நகலெடுத்திருக்கிறார்கள் ஆசிரியர்கள். அவற்றின் பெரும்பாலான கட்டுரைகள் கலைக்களஞ்சியம் என்ற தகுதிக்குள் வராதவை.

தூரனின் கலைக்களஞ்சியத் தொகுதிகளின் பயன்

அவரது கலைக்களஞ்சியங்கள் வரத்தொடங்கியபின்னரே தமிழில் பொது அறிவு துறைசார்ந்த பல்லாயிரம் நூல்கள் எழுதப்பட்டன. மருத்துவம் இயற்பியல் போன்ற துறைகளில் கூட அடித்தள மாணவர்களுக்கு உதவக்கூடிய எளிய நூல்கள் முதல் பலவகையான நூல்கள் வெளிவந்தன. அவற்றை பெரும்பாலும் தமிழாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். அவையெல்லாமே தூரனின் கலைக்களஞ்சியத்தின் மறு பிறப்புகள்.

கவிஞர்

தூரன் எழுதிய கவிதைகள் 5 தொகுப்புகளாக வந்துள்ளன. இவற்றைப் பாரி நிலையம் வெளியிட்டுள்ளது. தமிழின் சிறந்த மரபு கவிஞர்களுள் தூரன் முக்கியமானவர். கவிதையின் வடிவத்தில் சோதனை முயற்சிகள் அதிகம் செய்தவர். மொழியமைதியும் கற்பனை வளமும் மிக்கவை இவரது கவிதைகள்.

சிறுவர் இலக்கியம்

தூரன் எழுதிய நூல்களில் அதிக எண்ணிக்கையில் அமைந்தது குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள். சிறுவர்களுக்காக 16 புத்தகங்கள் எழுதினார். இவற்றில் கதை நூல்கள் 6, நாவல்கள் 5, அறிவியல் கதைகள் 2, கவிதை நூல்கள் 3 ஆகியன அடங்கும். இந்த நூல்களை எல்லாம் சென்னை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ளனர். இவர் சிறுவர்களுக்காக எழுதிய பாடல்கள் அவர்களின் வயதுக்குத் தக்க அமைந்தவை. தூரன் எழுதிய 7 அறிவியல் நூல்களும் 60களில் வந்தவை. பாரம்பரியம் (1956), அறமனம் (1957). குமரப்பருவம் (1962), மனமும் அதன் விளக்கமும் (1960), குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் (1953) ஆகியன குழந்தைகளுக்கான உளவியல் நூல்கள். கருவில் வளரும் குழந்தை (1962) என்ற நூலின் பின்னிணைப்பில் கலைச்சொற்கள் சிலவற்றைத் தந்திருக்கிறார். தூரனின் பங்களிப்புகளில் முக்கியமானவை கலைச்சொல்லாக்கம் என்று கூறலாம். (அண்டம் (Ovary), நிறக்கோல் (Chromosome), கருத்தடை (Placenta), பூரித்த அண்டம் (Fertilised Egg) என்பன சில)

மொழிபெயர்ப்பாளர்

தூரன் சிறந்த மொழிபெயர்ப்பாளர். கலைக்களஞ்சியத்திற்குக் கட்டுரை அனுப்பிய அறிஞர்கள் சிலர் ஆங்கிலத்திலேயே கட்டுரைகளை அனுப்பினர்; தூரன் அவற்றை மொழிபெயர்த்து கலைக்களஞ்சியத்தில் சேர்த்தார். தூரன் இரவீந்திரர் குழந்தை இலக்கியம் (1903), நேஷனல் புக் டிரஸ்ட் பதிப்பகத்திற்காக ஜமால் ஆரா எழுதிய பறவைகளைப் பார்(1970), கானகத்தின் குரல் (1958) ஜாக் லண்ட ன் எழுதிய The Call of the wild ஆகியவற்றை மொழிபெயர்த்துள்ளார்.

பாரதி ஆய்வாளர்

பெரியசாமித் தூரன் பாரதி பற்றி 11 நூல்கள் எழுதியுள்ளார். இவற்றில் பாரதிதமிழ் என்ற தொகுப்பு 1953-ல் வந்தது. பின்னர் வெளிவந்தவை பாரதி பற்றிய விமர்சனங்கள், பாரதிப்பாட்டு, பாரதியும் பாப்பாவும், பாரதியும் சமூகமும் என வந்த நூல்கள் எல்லாமே 1979-1982களில் வானதி பதிப்பகம் வழி வந்தவை.

1930-ல் தூரன் தொகுத்த பாரதியின் படைப்புகள் 1953-ல் நூல் வடிவில் வந்தன. 134 தலைப்புகளில் பாரதி எழுதிய படைப்புகளை முதல்முறையாகத் தூரன் தொகுத்தார். 1935-ல் பாரதி பாடல்களுக்குத் தடை நீங்கிய பிறகு பாரதி பிரசுராலயம் ஒரு தொகுப்பை வெளியிட்டது. அத்தொகுப்பில் உள்ள பல பாடல்கள் ஏற்கெனவே தூரன் தொகுத்தவை. ஆனால் தூரனின் தொகுப்பு வெளிவராததால் இவருக்கு அப்போது முக்கியத்துவம் வரவில்லை. ரா.அ. பத்மநாபன், சீனி விசுவநாதன், ஆ. இரா. வேங்கடாசலபதி, ய. மணிகண்டன் போன்ற பாரதி தொகுப்பாளர்களுக்கு முன்னோடி தூரன்.

நாடகங்கள்

தூரன் எழுதிய நாடகங்களும் கீர்த்தனைகளும் பெருமளவில் வெளிச்சத்துக்கு வரவில்லை. அறுபதுகளில் இவர் முக்கிய நாடக எழுத்தாளராக அறியப்பட்டிருக்கிறார். அழகு மயக்கம் (1955), சூழ்ச்சி (1955), பொன்னாச்சியின் தியாகம் (1955), ஆதி அத்தி (1958) காதலும் கடமையும் (1957), மனக்குகை (1960), இளந்துறவி (1961) என்னும் இவரது நாடகங்களில் உள்ள முகவுரைகள் முக்கியமானவை.

சங்ககாலக் காதலர்களான ஆதிமந்தி ஆட்டனத்தியின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பாரதிதாசன் சேரதாண்டவம் என்ற தலைப்பில் ஒரு நாடகமும் கண்ணதாசன் ஆட்டனத்தி ஆதிமந்தி என்ற தலைப்பில் காவியமும் ஆக்கியுள்ளார். தூரன் இதே கதையை ஆதி அத்தி என்ற தலைப்பில் நாடகமாக்கியுள்ளார். இதில் அத்தி - ஆதி - மருதி முக்கோணக் காதல் வருகிறது.

”தூரனின் நாடகங்களில் நாட்டுப்பற்று, தூய காதல், உள்ளத்து முரண்பாடுகளின் மோதல், கலை விளைவிக்கும் தடுமாற்றம், மகளிரின் தியாகம், ஆழ்மனம் நிகழ்த்தும் விளையாட்டு ஆகிய அடிப்படைகள் மிகுதியாகத் துலங்குகின்றன” என்கிறார் சிற்பி பாலசுப்ரமணியம்.

இசைப்பாடல்கள்

தூரன் இசைப்பாடல்கள் (கீர்த்தனைகள்) இயற்றியவர். இவர் ஆரம்பக்காலத்தில் என். சிவராம கிருஷ்ண அய்யரிடமும் பின்னர் சென்னையில் பி.கே. கோவிந்த ராவிடமும் பயிற்சி பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் இசைப்பாடல்கள் என்ற தொகுப்பையும், தமிழ்நாடு இயலிசை நாடக மன்றம் முருகன் அருள்மணி மாலை, கீர்த்தனை அமுதம், நவமணி இசைமாலை போன்ற தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளன. இவரது கீர்த்தனைகளுக்கு முசிறி சுப்பிரமணிய அய்யரின் மாணவர் டி.கே. கோவிந்தராவும் சில கீர்த்தனைகளுக்குத் தண்டபாணி தேசிகரும் ராக தாளங்களை அமைத்துள்ளனர்.

தூரனின் கீர்த்தனைகளை டைகர் வரதாச்சாரியார், சுப்பிரமணிய அய்யர், செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் போன்றோர் பாராட்டி உள்ளனர். தூரனுக்குக் கர்நாடக சங்கீதத்தில் ஈடுபாடு ஏற்படக் காரணம் அவரது சித்தப்பா அருணாசலக் கவுண்டர் என்பதை அவர் சொல்லியிருக்கிறார்.

அரசியல்

தூரன் சிறு வயதிலேயே உறுதியான காங்கிரஸ்காரர். சுதந்திரத்துக்குப்பின் தி.சு.அவினாசிலிங்கம் அழைப்பை ஏற்று 1948-1968 வரை இருபதாண்டுக்காலம் தன்னாட்சி உரிமையுடன் இயங்கிய தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் பொறுப்பில் இருந்து கலைக்களஞ்சிய வெளியீட்டில் ஈடுபட்டார். சராசரி 750 பக்கங்கள் கொண்ட 10 தொகுதிகளாக இந்நூல் வெளிவந்தது. அத்தகைய ஒரு கலைக்களஞ்சியம் இந்திய மொழிகளில் தமிழிலேயே முதலில் வெளிவந்தது. பின்னர் தன் சொந்த முயற்சியால் 1976 வரை உழைத்து சராசரி 100 பக்கங்கள் கொண்ட 10 தொகுதிகளாக குழந்தைகள் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டார்.

இறுதிக்காலம்

தூரன் 1980 முதல் வாதநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஜனவரி 20, 1987-ல் மரணமடைந்தார். கடைசிக்காலத்தில் கிட்டத்தட்ட முழுமையான புறக்கணிப்புக்கு உள்ளானார். பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் உதவி மட்டுமே இருந்தது.

வகித்த பொறுப்புகள்

  • தூரன் தமிழ் வளர்ச்சிக் கழகச் செயலர்
  • குழந்தை எழுத்தாளர் சங்கச் செயலர்
  • தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்
  • பண்ணாராய்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளர்

விருதுகள்

  • தமிழ் எழுத்தாளர் சங்கம் தூரனின் பாரதி நூல் பணியைப் பாராட்டித் தங்கப்பதக்கம் வழங்கியது.
  • மத்திய அரசு இவரது 'கருவிலே வளரும் குழந்தை' நூலுக்கு பரிசு வழங்கியது.
  • சென்னைக் கல்வித்துறை இவரது குழந்தை இலக்கியங்களுக்கும் பரிசு வழங்கியது.
  • தருமபுர ஆதினம் இவருக்குச் செந்தமிழ் கலைச்செல்வம் விருது வழங்கியது.
  • கோவை நன்னெறிக் கழகம் தமிழ் அறிஞர் விருது வழங்கியது.
  • தமிழிசைச் சங்கம் இசைப்பேரறிஞர் விருது வழங்கியது.
  • சென்னை நக்கீரர் கழகம் பெருந்தமிழ்ச் செல்வர் விருது வழங்கியது.
  • இயலிசை நாடக மன்றம் இவருக்குக் கலைமாமணி விருது கொடுத்தது.
  • பாரதக் குடியரசுத் தலைவர் இவருக்கு பத்மவிபூஷன் விருதை வழங்கியது.

நூல்கள் பட்டியல்

  • நவமணி இசைமாலை
  • மின்னல் பூ
  • இளந்தமிழா
  • தூரன் கவிதைகள்
  • நிலாப் பிஞ்சு
  • ஆதி அத்தி
  • அழகு மயக்கம்
  • பொன்னியின் தியாகம்
  • காதலும் கடமையும்
  • மனக்குகை
  • சூழ்ச்சி
  • இளந்துறவி
  • தூரன் எழுத்தோவியங்கள்
  • பிள்ளைவரம்
  • மா விளக்கு
  • உரிமைப் பெண்
  • காளிங்கராயன் கொடை & தங்கச் சங்கிலி (சிறுகதைத் தொகுதி)
  • காலச் சக்கரம் (பத்திரிகை)
  • தமிழிசைப் பாடல்கள் (15ஆம் தொகுப்பு)
  • தமிழிசைப் பாடல்கள் (7ஆம் தொகுதி)
  • இசைமணி மஞ்சரி
  • முருகன் அருள்மணி மாலை
  • கீர்த்தனை அமுதம்
  • பட்டிப் பறவைகள்
  • கானகத்தின் குரல்
  • கடல் கடந்த நட்பு
  • பறவைகளைப் பார்
  • தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்
  • மோகினி விலாசம்
  • அருள் மலை நொண்டி
  • காட்டு வழிதனிலே
  • பூவின் சிரிப்பு
  • தேன் சிட்டு
  • காற்றில் வந்த கவிதை
  • மனமும் அதன் விளக்கமும்
  • கருவில் வளரும் குழந்தை
  • குமரப் பருவம்
  • பாரம்பரியம்
  • பெற்றோர் கொடுத்த பெருங்கொடை
  • குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்
  • அடி மனம்
  • நல்ல நல்ல பாட்டு
  • சங்ககிரிக் கோட்டையின் மர்மம்
  • மழலை அமுதம்
  • நிலாப்பாட்டி
  • பறக்கும் மனிதன்
  • ஆனையும் பூனையும்
  • கடக்கிட்டி முடக்கிட்டி
  • மஞ்சள் முட்டை
  • சூரப்புலி
  • கொல்லிமலைக் குள்ளன்
  • ஓலைக்கிளி
  • தரங்கம்பாடித் தங்கப் புதையல்
  • நாட்டிய ராணி
  • மாயக்கள்ளன்
  • தம்பியின் திறமை

அறிவியல் நூல்கள்

  • பாரம்பரியம் (1956)
  • அறமனம் (1957)
  • குமரப்பருவம் (1962)
  • மனமும் அதன் விளக்கமும் (1960)
  • குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் (1953)

பாரதி

  • பாரதியும் பாரத தேசமும்
  • பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு
  • பாரதியும் பாப்பாவும்
  • பாரதித் தமிழ்
  • பாரதியும் கடவுளும்
  • பாரதியும் சமூகமும்
  • பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்
  • பாரதியும் தமிழகமும்
  • பாரதியும் உலகமும்
  • பாரதியும் பாட்டும்

மொழிபெயர்ப்பு

இரவீந்திரர் குழந்தை இலக்கியம் (1903) பறவைகளைப் பார்(1970) கானகத்தின் குரல் (1958) The Call of the wild

நாடகம்

  • அழகு மயக்கம் (1955)
  • சூழ்ச்சி (1955)
  • பொன்னாச்சியின் தியாகம் (1955)
  • ஆதி அத்தி (1958)
  • காதலும் கடமையும் (1957)
  • மனக்குகை (1960)
  • இளந்துறவி (1961)

உசாத்துணை