under review

புறப்பொருள் வெண்பாமாலை

From Tamil Wiki
Revision as of 06:22, 11 January 2023 by Logamadevi (talk | contribs)

புறப்பொருள் வெண்பாமாலை, தமிழ் இலக்கணம் கூறும் அகப்பொருள், புறப்பொருள் எனும் இரு பொருள் இலக்கண வகைகளுள் புறப்பொருள் இலக்கணம் கூற எழுந்த நூலாகும். இது ஒரு உரைதருநூல். இதன் காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு. புறப்பொருள் வெண்பாமாலையை இயற்றியவர் ஐயாரிதனார்.

ஆசிரியர்

புறப்பொருள் வெண்பாமாலையை இயற்றியவர் ஐயாரிதனார். இவர், சேரர் மரபினர் என்பதை

ஓங்கிய சிறப்பின் உலகமுழு தாண்ட
வாங்குவில் தடக்கை வானவர் மருமான்
ஐயனா ரிதன் அகலிடத் தவர்க்கு
மையறு புறப்பொருள் வழாஅலின்று விளங்க
வெண்பா மாலை எனப் பெயர் நிறீஇப்
பண்புற மொழிந்தனன்

என வரும் சிறப்புப் பாயிரப் பகுதி தெரிவிக்கின்றது. ஐயனாரிதனார் சைவ சமயத்தைச் சார்ந்தவர். ஐயனாரிதனார் வாழ்ந்த காலம் பொ.யு. 7-ஆம் நூற்றாண்டிற்கும் பொ.யு. 12-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்கலாம். கா. சுப்பிரமணிய.பிள்ளை பொ.யு. 8-ஆம் நூற்றாண்டு என்றும், மு. அருணாசலம் பொ.யு. 9-ஆம் நூற்றாண்டு என்றும் கருதுகின்றனர். பொ.யு. 12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியினரான இளம்பூரணர் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுள்களைத் தமது உரையில் குறிப்பிட்டுள்ளமையால் ஐயாரிதனார் இளம்பூரணர் காலத்திற்கு முந்தையவர் என்பது புலனாகிறது.

பன்னிரு திணைகள்

தொல்காப்பியர், கைக்கிளை முதலாப் பெருந்திணை வரையான ஏழு அகத்திணைகளுக்கும் புறத்திணைகள் ஏழினைக் கூறினார். ஐயனாரிதனார் பன்னிரு படலம் என்ற இலக்கணநூலை மூல நூலாகக் கொண்டு வழிநூலாக புறப்பொருள் வெண்பாமாலையை இயற்றினார். பன்னிரு படலத்தில் உள்ளபடி பன்னிரண்டு திணைகளை ஏற்படுத்தினார்.

வெட்சி நிரைகவர்தல்; மீட்டல் கரந்தையாம்;
வட்கார்மேற் செல்வது வஞ்சியாம்; - உட்காது
எதிரூன்றல் காஞ்சி; எயில்காத்தல் நொச்சி;
அதுவளைத்தல் ஆகும் உழிஞை; - அதிரப்
பொருவது தும்பையாம்; போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்.

இச்செய்யுள் போர் நிகழ்ச்சிகள் எட்டினையே குறிக்கின்றது. மேலும் இச்செய்ளில் இடம்பெறாத பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய நான்கு திணைகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.

பாடாண் திணை பாடப்படுகின்ற ஆண்மகன் ஒருவனுடைய சீர்த்தி, வலிமை, கொடை, அருள் முதலியவற்றைக் கூறும் திணை. பொதுவியல் திணை வெட்சி முதலான திணைகளுக்கெல்லாம் பொதுவாகவுள்ளனவும் அத்திணைகளில் கூறாமல் தவிர்த்தனவும் ஆகிய இலக்கணங்களைக் கூறும் பகுதி. கைக்கிளை ஒருதலைக் காமத்தைப் பற்றியது. பெருந்திணை பொருந்தாக் காமம் பற்றியது. ஒழிபு என்பது பாடாண் திணைப் பகுதியிலும் வாகைத் திணைப் பகுதியிலும் கூறப்படாது போன புறத்துறைகளை உணர்த்துவது.

நூல் அமைப்பு

விநாயகப் பெருமானையும் ,சிவபிரானையும் போற்றும் கடவுள் வாழ்த்து வெண்பாக்கள் இரண்டொடு சிறப்புப் பாயிரம் ஒன்றும் காணப்படுகிறது.

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண் என்னும் ஒன்பது திணைகளுக்கும் அந்தத் திணைக்கான திணை இலக்கணத்தைத் துறை வகையால் தொகுத்துரைக்கும் 9 நூற்பாக்கள் உள்ளன.

பத்தாவது படலம் பொதுவியற் படலம். இதன் பகுதியான இயல்கள் மூன்று. அவை:

  • சிறப்பிற் பொதுவியல்
  • காஞ்சிப் பொதுவியல்
  • முல்லைப் பொதுவியல்

பொதுவியலுக்கு ஒன்றும், அதன் மூன்று பகுதிகளுக்கும் தலைக்கு ஒன்றாக எனநான்கு நூற்பாக்கள் உள்ளன.(1+3=4 நூற்பாக்கள்)பதினொன்றாவதாகிய கைக்கிளைப் படலத்தின் பகுதிகளாகிய ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று என்ற இரண்டினுக்கும் தனித் தனி நூற்பாவாக இரண்டு நூற்பாக்கள் இடம் பெறுகின்றன (1+1=2).

பன்னிரண்டாவதாகிய பெருந்திணைப் படலத்தைப் பெண்பாற் கூற்று, இருபால் பெருந்திணை எனப் பகுத்துத் துறைவகையான் அவற்றுக்கு இலக்கணம் கூறப்படுகின்றது. இவற்றுக்கான நூற்பா இரண்டு (2).

ஒழிபு குறித்த நூற்பா ஒன்றும், புறம் - புறப்புறம் என்பவற்றை விளக்கும் நூற்பா ஒன்றும் ஆக இரண்டு நூற்பாக்கள் ஒழிபியலில் இடம் பெறுகின்றன.(2) ஆக, இந்நூலில் மொத்தம் பத்தொன்பது (9+4+2+2+2=19) நூற்பாக்கள் காணப்படுகின்றன.

இந்நூல் 341 துறைகளைக் கொண்டுள்ளது. இந்த 341 துறைகளை விளக்கவும், எடுத்துக்காட்டாகவும் ஆசிரியர் ஐயனாரிதனார் 361 வெண்பாக்களை இயற்றினார். இவை வெண்பாவாகவும் மருட்பாவாகவும் இயற்றப்பட்டுள்ளன. இவ் வெண்பாக்களின் கருத்துகளைச் சுருக்கமாகக் கூறும் பகுதி கொளு(கொள்ளுப்பொருள்) எனப்படும். கொளு எடுத்துக்காட்டு வெண்பாக்களின் முன்னர் இடம் பெறும்.

இந்நூலில் இடம்பெறும் வெண்பாக்கள், கைக்கிளை தவிர மற்ற திணைகளுக்கே காணப்படுகின்றன. கைக்கிளை 19 துறைகளை உடையது. எனினும் ‘கனவின் அகற்றல்’ என்னும் துறைக்கு மட்டும் இரண்டு மருட்பாக்கள் உள்ளன.

ஒழிபியலின் துறைகள் 18. இவற்றை விளக்க வந்த எடுத்துக்காட்டு வெண்பாக்கள் 18. இப்பதினெட்டு வெண்பாக்களுக்கு முன்னர் மட்டும் ‘கொளு’ காணப்படவில்லை.

உரையாசிரியர்

இவ்வரிய நூலின் உரையாசிரியர், சாமுண்டி தேவ நாயகர் என்பவர். மாகறல் என்ற ஊரினர். இது, சோழ மண்டலத்து மேற்கானாட்டைச் சேர்ந்தது என்று கல்வெட்டொன்று கூறுவதாகச் செந்தமிழ்த் தொகுதி கூறுகின்றது.

சயங்கொண்ட சோழமண்டலத்து மேற்கா னாட்டு
மாகறலூர் கிழார் சாமுண்டி தேவ நாயகர்
- செந்தமிழ்த் தொகுதி -1, (45-46)

‘கிழார்’ என வருவது கொண்டு இவர் வேளாண் குடியினர் எனக் கருதலாம். இவரது காலம் பொ.யு.13 அல்லது பொ. யு.14-ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது.

இவ்வுரையாசிரியர்க்கு முன்னரும் இந்நூலுக்கு ஏட்டு வழியிலோ, வாய்மொழி வகையிலோ உரைகள் இருந்துள்ளன. இதனை, இவ்வுரையாசிரியரின் " உரைப்பாரும் உளர்’, ‘பொருளுரைப்பாரும் உளர்"என்னும் சொற்றொடர் மெய்ப்பிக்கிறது. இவருடைய உரை சுருக்கமானது; பொழிப்புரையாய் அமைந்தது; வெண்பாவோ அன்றி மருட்பாவோ எந்த வண்ணம் அமைந்துள்ளதோ, அந்த வண்ணமாகவே உரைவகுப்பது. உரையை விளக்க, இவர் ஆளும் சில பாடல்கள் எந்த நூலில் இடம் பெறுகின்றன என்பது இந்நாளில் அறிய இயலவில்லை.

உசாத்துணை

தமிழ் இணைய கல்விக் கழகம்



✅Finalised Page