under review

பிள்ளைத்தமிழ்

From Tamil Wiki
Revision as of 14:52, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed non-breaking space character)

பிள்ளைத்தமிழ் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தெய்வங்கள், அரசர்கள் போன்றவர்களை குழந்தையாக உருவகித்துப் பாடுவது பிள்ளைத்தமிழ். மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் பருவத்தை பத்துப் பருவங்களாகப் பிரித்து இப்பாடல்கள் இயற்றப்படும். ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் பாடப்படும்.

குமரகுருபரர் எழுதிய மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் புகழ்பெற்ற படைப்பு.

தோற்றமும் வளர்ச்சியும்

கடவுள் மீது காமம் கொண்டு பாடுவது கைக்கிளை என்னும் ஒருதலையான காமத்துக்கான அகத்திணையில் வைக்கப்படும். கைக்கிளையின் புறம் பாடாண் திணை ஆகையால் கடவுள்மீது பாடும் புறப்பொருள் பாடல் பாடாண் திணை. இதில் கடவுளைக் குழந்தை வடிவமாக்கிப் பாடும் மரபும் உண்டு எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[1]

திருமாலைக் குழந்தையாக உருவகித்து பெரியாழ்வார் பாடும் பாடல்கள் பிள்ளைத்தமிழ் இலக்கியத்துக்கு முன்னோடியாகத் திகழ்கின்றன. குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் தமிழில் எழுதப்பட்ட முதலாவது பிள்ளைத்தமிழ் நூல்.

வகைகள்

பிள்ளைத்தமிழ் நூல்கள் ஆண்பால் பிள்ளைதமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இருவகை.

ஆண்பால் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களை கொண்டது.

காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய பருவங்கள் ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவானவை.

பெண்பால் பிள்ளைத்தமிழ் இறுதியிலுள்ள மூன்று பருவங்களுக்கு பதிலாக சிற்றில் இழைத்தல், சிறு சோறாக்கல், குழமகன், ஊசல், காமவேள்நோன்பு ஆகியவற்றுள் ஏதேனும் மூன்று வரும். பெரும்பாலும் நீராடல் அல்லது கழங்கு, அம்மானை, ஊசல் எனும் பருவங்களே அதிகம் இடம் பெறுகின்றன.

அமைப்பு முறை

பிள்ளைத்தமிழ், குழந்தையின் 3-ஆம் மாதம் முதல் தொடங்குகிறது.

  1. 3-ஆம் மாதம்: காப்பு
  2. 5-ஆம் மாதம்: செங்கீரை
  3. 7-ஆம் மாதம்: தாலாட்டு
  4. 9-ஆம் மாதம்: சப்பாணி
  5. 11-ஆம் மாதம்: முத்தம்
  6. 13-ஆம் மாதம்: வருகை
  7. 15-ஆம் மாதம்: அம்புலி
  8. 17-ஆம் மாதம்: சிற்றில் (ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது) / நீராடல் (பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது)
  9. 19-ஆம் மாதம்: சிறுபறை (ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது) / அம்மானை (பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது)
  10. 21-ஆம் மாதம்: சிறுதேர் (ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது) / ஊசல் (பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது)
பருவங்கள்

ஆண்பால் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, ஆகியவற்றைப் பொதுவாகக் கொண்டு இறுதியிலுள்ள மூன்று பருவங்களுக்கு ஈடாகச் சிற்றில் இழைத்தல், சிறு சோறாக்கல், குழமகன், ஊசல், காமவேள்நோன்பு முதலியவற்றுள் எவையேனும் மூன்றைப் பெற்று வரும். ஆயினும் பெரும்பாலும் நீராடல் அல்லது கழங்கு, அம்மானை, ஊசல் எனும் பருவங்களே அதிகம் இடம் பெறுகின்றன[2][3][4].

பிள்ளைத்தமிழ் பத்து பருவங்களில் தான் அமைய வேண்டும் என்பது இலக்கண வரையறை. பெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்கள் இவ்வாறே பாடப்பட்டுள்ளன. ஆயினும் ஆண்டாள் பிள்ளைத்தமிழ் 11 பருவங்களையும், தில்லை சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழ் பன்னிரண்டு பருவங்கள் கொண்டதாகவும் இயற்றப்பட்டிருக்கின்றன.

1. காப்புப்பருவம்

பிள்ளைத்தமிழின் முதல் பருவம் காப்புப்பருவம். பிள்ளைத்தமிழ் இலக்கியம் சிறக்கவும் பாட்டுடைத் தலைவன் மேன்மையடையவும் வேண்டி இறைவனை பாடும் பருவம். காக்கும் பருவத்தில் முதற்கடவுளாகப் போற்றப்படுகிறார் திருமால். வேறு கடவுள்களை காப்பாகக் கூறும் முறையும் உள்ளது.

"அவன்தான்

காதற்கிழவன் ஆகலானும்

பூவின் கிழத்தியைப் புணர்த லானும்

முடியும் கடகமும் மொய்பூந் தாரும்

குழையும் நூலும் குருமணப் பூணும்

அணியும் செம்மல் ஆகலானும்

முன்னுற மொழிதற்குரியன என்ப" ( பாடல். 24)

எனப் பன்னிரு பாட்டியல் குறிப்பிடுகிறது.

2. செங்கீரைப் பருவம்

பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் இரண்டாவது பருவம் செங்கீரைப் பருவம். இது குழந்தையின் ஐந்தாம் மாதத்தில் நிகழ்வதாகும். "கீர் என்பதற்கு சொல் எனப் பொருள் கொண்டு இது குழந்தைகள் மழலையை விட இனிமையான பொருள் தெரியாத ஓசையை எழுப்பும் பருவம்" என்றும், "ஆடுக செங்கீரை எனப்பாடுவதால் குழந்தை ஒருகாலை உயர்த்தியுமொருகாலை மடக்கியும் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி முகத்தை மேலே உயர்த்தி ஆடுதலாகிய பருவம்" என்றும், "அவ்வாறு ஆடும் பொழுது சுற்றத்தார் சிறந்த சொற்களை மழலை கூற வேண்டும் என்று வேண்டிக் கொள்வர்" என்றும் கூறுவர். (கலைக்களஞ்சியம், தொகுதி 7 பக்கம்: 370)

குழந்தை தலையெடுத்து முகமசைத்தாடும் நிலையே பெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்களில் காணப்படுகிறது.

3. தாலப்பருவம்

பிள்ளைத்தமிழில் மூன்றாம் பருவம் தாலப்பருவம் . இது குழந்தையின் ஏழாம் மாதத்தில் நிகழ்வது. தால் என்பது நாக்கு. நாக்கை அசைத்து தாலாட்டி குழந்தைகளைத் தூங்க வைப்பது இப்பருவம். பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் ஒரு பருவமாக விளங்கும் தாலாட்டு நாளடைவில் தனியொரு சிற்றிலக்கியமாக உருப்பெற்றிருக்கலாம்.

4. சப்பாணிப் பருவம்

சப்பாணிப்பருவம் குழந்தையின் ஒன்பதாம் மாதத்தில் நிகழ்வது. ஒன்பதாவது மாதத்தில் குழந்தை உட்காரத் தொடங்கிய பிறகு மகிழ்ச்சியால் கை கொட்டுதல், கையாட்டுதல் போன்ற விளையாட்டுகள் அதனிடம் தோன்றும். பெற்றோரும் மற்றோரும் கைதட்டிக் காட்டி குழந்தையை அழைப்பதோடு குழந்தையையும் கைத்தட்டும்படி வேண்டுவர். குழந்தை அதற்கேற்ப " சப்" என்ற ஒலி உண்டாகும்படி "பாணி" யைக் (கையை) கொட்டி முழக்கும். இதுவே சப்பாணிப் பருவம்.

5. முத்தப்பருவம்

பிள்ளைத்தமிழின் ஐந்தாவது பருவம் முத்தப் பருவம். குழந்தையின் பதினோராம் திங்களில் மாதத்தை சொல்வது இப்பருவம். பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் முத்தப்பருவம் சிறந்த பருவமாகக் கருதப்படுகிறது. குழந்தையைப் பாராட்டி மடியில் தூக்கி வைத்துக் கொண்டு, அதன் மலரினும் மெல்லிய இதழ்களால் முத்தம் பெற்று மகிழ்தலே முத்தப் பருவம். பாட்டுடைத் தலைவனைக் குழந்தையாக்கி அதன் முத்தத்திற்கு ஏங்கும் கவிஞர்களின் நிலையினை எல்லாப் பிள்ளைத்தமிழ் நூல்களிலும் காணலாம். அப்போது பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள் பலவாறு புகழப்படும்.

6. வருகைப்பருவம்

ஆறாவது பருவமாகிய வருகைப் பருவம் குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வதாகும். இதனை வாரானைப் பருவம் என்றும் போற்றுவர். வரவேற்றல் என்பது தமிழர் பண்பாட்டில் தலை சிறந்த ஒன்றாகும். இப்பான்மையில் தோன்றியதே வருகைப் பருவமாகும். தத்தித் தத்தி தளர்நடை இட்டு வரும் குழந்தையை அருகில் வருக! வருக! என வாய் குளிர மெய்மகிழ அழைக்கும் பருவமே வாரானைப் பருவம் ஆகும். குழந்தையை அவ்வாறு வரவேற்கும் பொழுது அதன் சிறப்புகளையெல்லாம் எடுத்துச் சொல்வர்.

7. அம்புலிப்பருவம்

அம்புலி என்பது சந்திரனைக் குறிக்கும். விண்ணில் விளங்கும் சந்திரனை விளையாட வருமாறு அழைக்கும் பருவம் அம்புலிப் பருவம். பிள்ளையின் பதினைந்தாம் மாதத்தில் இது நிகழும். நடக்கக் கற்றுக் கொண்ட குழந்தை அங்குமிங்கும் சென்று காட்சிகளைக் காண மிகுதியாக விரும்பும். வெண்ணிலவை குழந்தையுடன் விளையாட வருமாறு அழைக்கும் பொழுது

  1. குழந்தையுடன் சரி நிகராக அம்புலியை எண்ணுதல்
  2. அம்புலியும் குழந்தையும் வேறுபடுதல்
  3. விளையாட வருவதனால் ஏற்படும் நலன்களைக் கூறுதல்
  4. வருந்தி அழைத்தும் வரவில்லையாயின் இன்ன தண்டனை பெறுவாய் என்று கூறுதல்

எனச் சாம பேத தான தண்ட முறையில் அமைவது இப்பருவமாகும். அவ்வாறு அழைக்கும் பொழுது சிலேடை முதலிய அணி இலக்கணங்கள் பயன்படுத்தப்படும்.

ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கு உரியன
8. சிற்றில் இழைத்தல் / சிற்றில் சிதைத்தல்

ஓடியாடி சுற்றித்திரிந்து விளையாடும் குழந்தையின் பதினேழாம் திங்களில் இப்பருவம் பாடப்படுவது. இதன் முந்தைய பருவத்தில் அம்புலியை விளையாட அழைத்து அது வாராத போது கோபம் கொண்ட குழந்தை, பெண்குழந்தைகள் கட்டிய சிற்றிலை சிதைக்கிறது. அப்போது அதனைக் கட்டிய பெண்மக்கள் எல்லாம் எம் சிற்றிலைச் சிதைக்க வேண்டாம்! என வேண்டிப் பாடப்படுவதே இப்பருவம். மற்ற பருவங்கள் எல்லாம் பெற்றோரும் மற்றோரும் பாடுவதாக அமைய, இப்பருவம் மட்டும் சிறுமிகள் பாடுவதாக அமையும்.

9. சிறுபறை முழக்கல்

ஆண்பாற் பிள்ளைத்தமிழின் ஒன்பதாவது பருவம் சிறு பறை முழக்கல் ஆகும். இது குழந்தையின் பத்தொன்பதாம் மாதத்தில் நிகழ்வதாகும். இப்பருவத்தில் ஒலி இன்பங்கள் குழந்தையை மிகவும் ஈர்க்கும். ஆதலால் குழந்தை சிறு பறை முதலியவற்றைக் கொட்டிக்கொண்டு விளையாடும். அவ்வாறான கருவிகளைக் கொடுத்து ஒலி முழக்குமாறு செய்து மகிழ்விப்பது இப்பருவம்.

10. சிறு தேர்ப்பருவம்

ஆண்பால் பிள்ளைத்தமிழின் பத்தாவது பருவம் சிறுதேர்ப் பருவம். இது 21-ம் திங்களில் நிகழ்வது. மரத்தாலான சிறிய தேரினை உருட்டி மகிழும்படி குழந்தையை வேண்டிப்பாடுவது இப்பருவம். மட நடை பயிலும் பருவத்தில் உள்ள குழந்தைகளின் நடைப் பயிற்சிக்கு உதவும் பொருட்டு சிறு தேரினை ஓட்டி மகிழச் செய்வர். குழந்தை வளர வளர நடந்து செல்லுதல் மட்டுமின்றி தேர் முதலியவற்றின்மீது ஊர்ந்து செல்லுதலையும் விரும்பும். இது குழந்தையின் இருபத்தோராம் திங்களில் நிகழும் என்பது பொது இலக்கணம். ஆனால் 'இலக்கண விளக்கப்பட்டியல்' இப்பருவம் குழந்தையின் ஏழாம் ஆண்டில் நிகழும் எனக் கூறுகிறது.

பெண்பால் பிள்ளைத்தமிழுக்கு உரியன

காப்பு முதல் அம்புலி வரை சொல்லப்பட்ட பருவங்கள் ஏழும் ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவானது. நீராடல், அம்மானை, ஊசல் ஆகியன பெண்பால் பிள்ளைத்தமிழுக்கு மட்டும் உரியவை.

8. நீராடல்

இது பெண்பால் பிள்ளைத்தமிழின் எட்டாவது பருவம்.குழந்தையின் பதினேழாம் மாதத்தில் நிகழ்வது இப்பருவம். குழந்தையை நீர் நிலைகளில் நீராட வேண்டிப் பாடும் பருவமாகும்.

9. அம்மானை

அம்மானை பெண்பால் பிள்ளைத்தமிழின் ஒன்பதாவது பருவம். கழங்கு என்றும் இதனைக் கூறுவர். கழங்கு என்பது மரம் அல்லது ஈயம் போன்ற பொருள்களால் பந்து போன்று உருண்டையாகச் செய்து அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக மேலே எரிந்து கையால் பிடித்து விளையாடும் விளையாட்டு ஆகும். கழங்குக் காய்கள் கொண்டு ஆடுவர் என்றும் கூறப்படுகிறது. பேதை அல்லது பெதும்பைப் பருவ மகளிர் அம்மானை ஆடுவர் என்று உலா நூல்களில் குறிப்பிடப்படுகிறது. அம்மானை கலம்பகம் என்ற சிற்றிலக்கிய உறுப்புகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.

மகளிர் மூவர் கூடி தம் தலைவனைக் குறித்து மூவரில் ஒருத்தி வினா எழுப்ப, மற்றொருத்தி அதற்கு விளக்கம் சொல்ல, வேறொருத்தி இவ்விருவருக்கும் விடை கூறி அம்மானைக் காய்களை எறிந்து ஆடி மகிழ்வர். இவ்வாறு அமையும் பாடலின் இறுதிச் சீரில் அம்மானை என்ற சொல் அமையும். அம்மானை என்பது ஒரு வகை மகளிர் விளையாட்டு என்ற நிலை மாறி கதை அமைப்பை இசையோடு கூறும் இலக்கியம் என்ற நிலை தோன்றியது. இவ்வம்மானைப் பாடல்கள் தொடக்கத்தில் நாட்டுப் பாடல்களாகவே இருந்திருத்தல் வேண்டும் என்றும் கூறுவர்.

10. ஊசல்

பெண்பால் பிள்ளைத்தமிழின் பத்தாவது பருவம் ஊசல். ஊசல் என்பது ஊஞ்சல் ஆடல். குழந்தையை ஊஞ்சலாடி மகிழும்படி வேண்டும் பருவமே ஊசல் பருவம். குழந்தையை ஊஞ்சலில் அமர்த்தி அக்குழந்தையின் சிறப்புகளையெல்லாம் எடுத்துரைத்து ஊஞ்சலை ஆட்டி குழந்தையை மகிழ்விப்பர். ஊஞ்சல் அமைக்கும் வகை, ஆடும் வகை, குழந்தையின் சிறப்பு, காண்போருக்கு விளையும் கருத்து ஆகியவை இப்பருவத்தில் இடம் பெறும்.

பாடல் வரையறை

பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் பத்துப் பருவங்களையும் பாடும்போது பாடல்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும் எனவும், இரட்டித்துப் பாடினால் ஓசை நீண்டு பாட வேண்டும் என்பது இலக்கண வரையறை. ஆனாலும் இவ்வரையறையை மீறி பத்துப் பருவத்திற்கான பாடல் எண்ணிக்கைக் குறைத்தும் கூட்டியும் பாடப்பட்டுள்ளது.

பிள்ளைத்தமிழ் நூல்கள்

பிள்ளைத்தமிழ் நூல்களின் வகைகள்

பொதுவாக பிள்ளைத்தமிழ் நூல்கள் ஆண்பால் பிள்ளைதமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இருவகையிலேயே அடங்கும். ஆயினும் பிள்ளைத்தமிழ் நூல்களின் வளர்ச்சியைக் கணக்கிட உதவும் வகையில் இவை மேலும்

  1. இறைவன் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்
  2. இறைவி பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்
  3. கவிஞர் அல்லது சான்றோர் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்
  4. அரசன் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்
  5. மக்கள் தலைவர் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்

என்றும் வகைப்படுத்தலாம்.

புகழ் பெற்ற சில பிள்ளைத்தமிழ் நூல்கள்

உசாத்துணை

  • கு. முத்துராசன் அவர்கள் எழுதிய பிள்ளைத்தமிழ் இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம். -1984

இணைப்பு

அடிக்குறிப்புகள்

  1. காமப் பகுதி கடவுளும் வரையார்
    ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர். (தொல்காப்பியம் புறத்திணையஅயல் 23)
    குழவி மருங்கினும் கிழவது ஆகும். (தொல்காப்பியம் புறத்திணையியல் 24)
  2. சாற்றிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி

    மாற்றாரிய முத்தமே வாரானை - போற்றாரிய

    அம்புலியே யாய்த்த சிறுபறையே சிற்றிலே

    பம்புசிறு தேரோடும் பத்து

    - வெண்பாப் பாட்டியல் (பாடல் 7) ,

  3. சிற்றில் இழைத்தல் சிறுசோறாக்கல்

    பொற்பமர் குழமகன் புனைமணி ஊசல்

    ஆண்டு ஈறாறதில் இழிற்காமன் நோன்போடு

    வேண்டுதல் தானுள விளம்பினர் புலவர்

    - பன்னிரு பாட்டியல் (பாடல் 105)

  4. பின்னைய மூன்றும் பேதையர்க் காகா

    ஆடுங் கழங்கு அம்மானை ஊசல்

    பாடுங் கவியால் பகுத்து வகுப்புடன்

    அகவல் விருத்தத் தாள் கிளையளவாம்

    (பாடல்.47)

    - இலக்கண விளக்கப் பாட்டியல்


✅Finalised Page