under review

பிரெண்டா பெக்

From Tamil Wiki
Revision as of 13:36, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)

To read the article in English: Brenda Beck. ‎

பிரெண்டா
பிரெண்டா

பிரெண்டா பெக் ( Dr. Brenda E.F. Beck ) (1940),கனடாநாட்டு மானுடவியலாளர். தமிழ்நாட்டில் கொங்கு வட்டார நாட்டார் பண்பாட்டை ஆய்வுசெய்தவர். அண்ணன்மார் சாமி கதை என்னும் நாட்டார் காவியத்தை முழுமையாக பதிவுசெய்து ஆய்வுக்குறிப்புகளுடன் பதிப்பித்தவர். எட்டு நூல்களும் அறுபதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளும் எழுதி தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படைகளை உலக அளவில் அறிமுகம் செய்தவர். கனடாவில் தமிழ் பண்பாட்டுச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுபவர்.

பிறப்பு, கல்வி

பிரெண்டா கனடாவில் 1940-ல் பிறந்தார். அவருக்கு 14 வயதிருக்கையில் லெபனான் நாட்டில் பெய்ரூட் நகரில் பணியாற்றிய அவருடைய தந்தை குடும்பத்துடன் சிரியா, லெபனான், துருக்கி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் , இந்தியா ஆகிய நாடுகளுக்கு பயணமாக அழைத்துச்சென்றார். திருச்சியில் இருந்து கோயம்புத்தூருக்கு செய்த ஒரு பயணம் தமிழ்ப்பண்பாட்டுடன் அவருடைய முதல் அறிமுகம். 1964-ல் பிரெண்டா ஆக்ஸ்ஃபோர்ட் சாமர்வெல் கல்லூரி (Somerville College, Oxford)யில் மானுடவியலில் முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்தார். பழைய கோவை மாவட்டம் காங்கேயம் அருகே ஓலப்பாளையம் என்னும் ஊரில் தங்கி தமிழ் பயின்றார். தமிழ்ப்பெண்கள் போல நகைகளும் புடவையும் அணிந்து தமிழ் கிராமத்தின் ஓர் உறுப்பினராகவே ஆனார்.

அண்ணன்மார் சுவாமி கதை

பிரெண்டா 1965-ல் ராமசாமி, பழனிச்சாமி என்னும் இரு கிராமத்துப் பாடகர்கள் அண்ணன்மார் சுவாமி கதையை பாடுவதை கேட்டார்.குன்னுடையார் கதை அல்லது பொன்னர் -சங்கர் கதை என இன்று அறியப்படும் அந்த நாட்டார்க்காவியம் அப்போது பலர் சேர்ந்து பலநாட்கள் தொடர்ச்சியாக பாடுவதாக இருந்தது. பொது பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கருதப்படும் அண்ணன்மார் சுவாமி கதை பாட்டு, நடனம், கூத்து என பலவடிவங்களில் கொங்கு கிராமங்களில் அவர்களின் குலக்கதையாக ஓர் இதிகாசத் தகுதியுடன் புழங்கியது

பிரெண்டா அண்ணன்மார் சுவாமி கதையை ஒலிப்பதிவு செய்தார். 18 இரவுகளிலாக மொத்தம் 38 மணிநேரம் இந்த ஒலிப்பதிவு நீடித்தது. பிரெண்டா இருபதாயிரம் பக்கங்கள் அளவுக்கு நாட்டார் கதைகளை கொங்கு வட்டாரத்தில் இருந்து சேகரித்தார். "அற்புதமான அனுபவம். நான் பதிவுசெய்துகொண்டே இருந்தேன். ஒலிநாடா தீர்ந்தபோது நான் சேகரித்திருந்த வட அமெரிக்க நாட்டார் பாடல்களை அழித்து அவற்றின்மேல் பதிவுசெய்தேன்’ என்று பிரெண்டா கூறினார்

பிரெண்டா தொடர்ச்சியாக அண்ணன்மார் சுவாமி கதையை பலவகைகளில் உலகுமுன் வைத்து வருகிறார். "50 வருடத்துக்கு முன்னர் அந்தச் சிறிய கிராமத்தில் வாழ்ந்ததை நான் யோசித்துப் பார்த்தேன். அந்த எளிய மக்கள் காட்டிய அன்பும் ஆதரவும் என்னால் என்றென்றைக்கும் மறக்கமுடியாதவை. அவர்களுடைய கலை 500 வருட பாரம்பரியம் கொண்டது. நான் அவர்களுக்கு திருப்பி என்ன செய்தேன்? என் குற்ற உணர்வு என்னை வதைத்தது. அண்ணன்மார் கதையை எப்படியும் அழியாமல் எதிர்காலச் சந்ததியினருக்கும் கடத்தவேண்டும் என்று தோன்றியது" என்று பிரெண்டா கூறியதாக அ.முத்துலிங்கம் பதிவு செய்கிறார்.

1992-ல் பிரெண்டா கனடா நாட்டு இந்தியரும் ஓவியருமான ரவிச்சந்திரன் ஆறுமுகம் உதவியுடன் அண்ணன்மார் சுவாமி கதையை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஓவியங்களுடன் வெளியிட்டார். பதிமூன்று மணி நேரம் ஓடக்கூடியதும் இருபத்தாறு பகுதிகள் கொண்டதுமான ஆங்கிலக் காணொளி தொடர் ஒன்றை அண்ணன்மார் சுவாமி கதையை ஒட்டி உருவாக்கினார். அண்ணன்மார் சுவாமி கதையை ஆங்கிலத்தில் ஓவியநாவல் (கிராஃபிக் நாவல்) வடிவிலும் வெளியிட்டார். ( Elder Brothers' Story: An Oral Epic of Tamil, The Legend of Ponnivala or Ponnar Shankar.) அவை சென்னை ஆசியவியல் ஆய்வுக் கழகத்தால் வெளியிடப்பட்டன ( Institute of Asian Studies). அவை இப்போது மின்னூல் வடிவில் கிடைக்கின்றன

தமிழ்ப்பணிகள்

2016-ல் கனடாவில் புலம்பெயர்ந்த தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கும் இணைய மென்பொருள் ஒன்றை பிரெண்டா உருவாக்கினார். அவ்வாண்டு பிரெண்டா 10,000/ டாலர்களை டொரொண்டோ தமிழ் கல்வி மையத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.

2018-ல் பிரென்டா பெக் தமிழ் நிரலி உருவாக்க நிதி, ( Brenda Beck Tamil Programming Fund ) பிரெண்டா பெக் தமிழ் எண்ம நிதி (Brenda Beck Tamil Digital Fund) ஆகியவற்றை உருவாக்கினார். தமிழ் நூல்களை மின்வடிவ ஆவணங்களாக்கும் பணிகளுக்கு நிதியுதவி செய்யும்பொருட்டு இவை உருவாக்கப்பட்டன. பிரெண்டா 327,000/- டாலர் பணத்தை இந்த நிதிக்காக தனது கொடையாக அளித்தார்

செப்டெம்பர் 1-2, 2018,-ல் பிரெண்டா கொங்கு குடும்பக் கூடுகை ஒன்றை விர்ஜீனியாவில் மனஸாஸ் நகரில் கொங்கு கூட்டமைப்பு (Kongu Association in Manassas, Virginia) சார்பில் ஒருங்கிணைத்தார்

பிரெண்டா அண்ணன்மார் சுவாமி கதை குறித்த மானுடவியல் மற்றும் நாட்டாரியல் ஆய்வுரைகளை அளிக்கிறார். கனடாவின் தமிழ்க்கல்விச் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறார். தற்போது பிரெண்டா சோஃபியா ஹில்டன் நிறுவனம் (Sophia Hilton Foundation of Canada) என்னும் தொண்டு நிறுவனத்தை வழிநடத்துகிறார். கதை சொல்லல் வழியாக கற்றலை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது இந்த அமைப்பு. அண்ணன்மார் சுவாமி கதையை பலவகைகளில் இவ்வமைப்பு வெளியிட்டுள்ளது.

2019-ல் பிரெண்டாவின் உதவியுடன் டொரொண்டோ பல்கலைக் கழகம் ஸ்கார்பரோ நகரில் முதல் தமிழ் பண்பாட்டு மாதக் கொண்டாட்டத்தை நடத்தியது.(Tamil Heritage Month celebration) வில்லுப்பாட்டு போன்ற தமிழக நாட்டார் கலைகள் அரங்கேற்றப்பட்டன.

பண்பாட்டுப் பங்களிப்பு

தமிழ் நாட்டாரியல், மானுடவியல் தரவுகளை இராபர்ட் கால்டுவெல் போன்ற தமிழ்ப் பண்பாட்டு முன்னோடிகள் பதிவுசெய்திருக்கிறார்கள். அவை ஓர் தனி பண்பாட்டு மரபு, அறிவுச்சேகரிப்பு என்னும் தன்னுணர்வுடன் முறையாக பதிவுசெய்யப்படுவது இரு வெவ்வேறு அறிவுத்தரப்புகளாக 1940-கள் முதல் நடைபெற்று வருகிறது. கி. வா. ஜகந்நாதன், மு. அருணாசலம் ஆகியோர் செவ்விலக்கியத் தரப்பில் நின்று பதிவு செய்தனர். நா.வானமாமலை போன்றவர்கள் மார்க்ஸிய கண்ணோட்டத்தில் பதிவுசெய்தனர். மானுடவியல், நாட்டாரியல் ஆகியவற்றை அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக் கழகங்கள் உருவாக்கிய சமூகஅறிவியல் சார்ந்த முறைமையுடன், அறிவியல் கருவிகளின் உதவியுடன் பதிவுசெய்தவர்கள் அயல்நாட்டு ஆய்வாளர்கள். அவர்களில் பிரெண்டா முன்னோடியானவர்.

தமிழில் நாட்டாரியல் சார்ந்த கல்வியமைப்புகள் உருவாவதற்கும், நாட்டாரியல் பல்கலைகழகங்களால் தனி அறிவுத்துறையாக ஏற்கப்படுவதற்கு முன்னரே பிரெண்டாவின் ஆய்வுகள் நடைபெற்றன. நாட்டார் வாய்மொழி மரபு பிற்கால தொழில்நுட்ப ஊடுருவலால் அழியும் முன்னரே தரவுகளை பதிவுசெய்திருக்கிறார். அவ்வகையில் தமிழின் அரிய பண்பாட்டுத் தொகைகள் பிரெண்டாவின் சேகரிப்புகள். அண்ணன்மார் சுவாமி கதை பேராசிரியர் சக்திக்கனல் பதிப்பில் அச்சில் வெளிவந்து ஆய்வாளர்களின் கவனத்துக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே பிரெண்டா பதிவுசெய்திருக்கிறார். பிரெண்டா பதிவுசெய்துள்ள 38மணிநேர நேரடிக் குரல்பதிவு தமிழ்ப் பண்பாட்டு பதிவுகளில் முதன்மையான சிலவற்றில் ஒன்று. அத்தகைய பதிவு இன்று இயல்வதல்ல என்னும் உண்மை அந்த பதிவின் முக்கியத்துவத்தை உறுதி செய்கிறது. பிரெண்டா அண்ணன்மார் சுவாமி கதையின் பல்வேறு இலக்கிய, பண்பாட்டு உட்குறிப்புகளை ஆராய்ந்து எழுதியிருக்கும் குறிப்புகளும், அதை மானுட நாட்டார்க் கதைச் செல்வத்தின் முக்கியமான பகுதியாக ஆக்கும்பொருட்டு உலக அளவில் எடுத்து வரும் முயற்சிகளும் தமிழ்ப் பண்பாட்டுச் செயல்பாடுகளில் முக்கியமானவை.

நூல்கள்

பிரெண்டா Anthropologica, Current Anthropology, Journal of South Asian Literature, The Journal of Asian Studies, and Western Folklore. போன்ற ஆய்விதழ்களில் எழுதியிருக்கிறார்.

  • Body Imagery of the Tamil Proverbs of South India
  • The Metaphor as a Mediator Between Semantic and Analogic Modes of Thought
  • The Logical Appropriation of Kinship as a Political Metaphor: An Indian Epic at the Civilizational and Regional Levels
  • The Right-Left Division of South Indian Society
  • The Three Twins
  • The Telling of a South Indian Folk Epic
  • A Praise-Poem for Murugan.

உசாத்துணை


✅Finalised Page