being created

பிரபஞ்சன்

From Tamil Wiki
Revision as of 06:27, 31 January 2022 by RV (talk | contribs)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


Work in progress by User:Muthu_kalimuthu

பிரபஞ்சன்
பிரபஞ்சன்

பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றியவர். தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது 1995 ஆம் ஆண்டு பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு, கல்வி

பிரபஞ்சன் பிறந்த ஊர் புதுச்சேரி. இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

இவரது மனைவியின் பெயர் பிரமிளா ராணி. மூன்று மகன்கள் உள்ளனர். சென்னையிலும் புதுச்சேரியிலும் வசித்து வந்தார். சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். தமிழகத்தின் எழுத்தாளர்கள் மட்டுமின்றி வாசகர்கள், அரசியல், திரை ஆளுமைகள் என்ப பலரும் பிரபஞ்சனுடனான, அவரின் எழுத்துகளுடனான தங்கள் நினைவுகளை பகிர்ந்துள்ளனர்.

முறையான தமிழ்க் கல்வி கொண்ட பிரபஞ்சன் எழுத்தாளராகவே வாழ வேண்டும் என்ற விழைவால் ஆசிரியர் பணியை மறுத்தவர். எழுதி வாழ வேண்டும் என்னும் நிலை அவரை இதழாளராக ஆக்கியது. இல்லையென்றால், அவர் மேலும் அதிகம் எழுதியிருக்கக்கூடும்.

பங்களிப்பு

இதழியல்

1980-1982ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார்.

இலக்கியம்

யதார்த்தவாத முற்போக்கு பாணியின் முக்கியமான சிறுகதையாசிரியர்களில் ஒருவர் பிரபஞ்சன்.

1961ல், இவரது முதல் சிறுகதை ‘என்ன உலகமடா’, ‘பரணி’ என்ற இதழில் வெளியானது.

1995ல் இவரது வரலாற்று நாவல் ‘வானம் வசப்படும்’ தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றது. ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது.

கற்பனையற்ற [கட்டமைப்பையும், தொடர்ச்சியையும் உருவாக்குவதற்காக மட்டுமே கற்பனையைக் கையாண்ட] வரலாற்று ஆக்கம் ‘மானுடம் வெல்லும்’ தமிழில் முதல் படைப்பு. ‘மானுடம் வெல்லும்’ வரலாற்றின் இயல்பான ஆதிக்கப் பரிணாமத்தையும், அதிலுள்ள குரூரத்தையும், ஒட்டுமொத்தமான பொருளின்மையையும் கற்பனையால் மிகையாக்காமல் அப்படியே சொல்ல முற்பட்ட ஆக்கம்.

இன்னொரு வகையிலும் பிரபஞ்சனின் அந்நாவல் முக்கியமானது. எழுதப்பட்டதை திரும்ப எழுதுவது என்பது ஒரு பின்நவீனத்துவ எழுத்துமுறை. ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பின் மறு ஆக்கம் மானுடம் வெல்லும். கதையாடலின் மறுகதையாடல். அதனூடாக வரலாறு எப்படி மீண்டும் மீண்டும் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது என்னும் பார்வையை வாசகன் அடையமுடியும்.

இவரது படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் ஸ்வீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாடகமான ‘முட்டை’ தில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது.

இவரது சிறுகதைத் தொகுப்பான ‘நேற்று மனிதர்கள்’ பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக உள்ளது. புதுச்சேரியின் சுதந்திர வரலாற்றை `கண்ணீரால் காப்போம்' எனும் நூலில் விளக்கியிருப்பார்.

மற்ற எழுத்தாளர்களின் கதைகளையும் வெகுவாய் பாராட்டி ‘கதை மழை’ எனும் நூல் எழுதியுள்ளார். பிரபஞ்சனின் ‘மகாபாரதம்’ புதிய வாசகர்களை உருவாக்கியது.

46 புத்தகங்களுக்கும் கூடுதலாக எழுதியுள்ளார். நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் அவர் படைத்த பாத்திரங்கள் பலருக்கும் நெருக்கமானவை.

படைப்புகள்

நாவல்கள்
  • வானம் வசப்படும்
  • மகாநதி
  • மானுடம் வெல்லும்
  • சந்தியா
  • காகித மனிதர்கள்
  • கண்ணீரால் காப்போம்
  • பெண்மை வெல்க
  • பதவி
  • ஈரோடு தமிழர் உயிரோடு
  • அப்பாவின் வேஷ்டி
  • முதல் மழை துளி
  • மகாபாரத மாந்தர்கள்
சிறுகதை தொகுப்புகள்
  • நேற்று மனிதர்கள்
  • விட்டு விடுதலையாகி
  • இருட்டு வாசல்
  • ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்
குறுநாவல்கள்
  • ஆண்களும் பெண்களும்
நாடகங்கள்
  • முட்டை
  • அகல்யா
மொழிபெயர்ப்புகள்
கட்டுரைகள்
  • மயிலிறகு குட்டி போட்டது
  • அப்பாவின் வேஷ்டி
  • தாழப் பறக்காத பரத்தையர் கொடி
நேர்காணல்கள்

விருதுகளும் பரிசுகளும்

  • சாகித்திய அகாதமி விருது (1995)
  • சாரல் விருது (2013)
  • பாரதிய பாஷா பரிஷத் விருது
  • கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது - மகாநதி
  • இலக்கியச் சிந்தனை விருது - மானுடம் வெல்லும்
  • சி. பா. ஆதித்தனார் விருது - சந்தியா
  • தமிழக அரசின் பரிசு - நேற்று மனிதர்கள்
  • தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு - ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்

இலக்கிய முக்கியத்துவம்

பிரபஞ்சன் தமிழ் இலக்கியத்தின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவர். யதார்த்தவாத முற்போக்கு பாணியின் முக்கியமான சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர். பாண்டிச்சேரி வரலாற்றை மறுஆக்கம் செய்து அவர் எழுதிய ‘மானுடம் வெல்லும்’ ‘வானம் வசப்படும்’ என்னும் இரு நாவல்களும் ஆசிரியராக அவரை நிலைநிறுத்தும் முக்கியமான இலக்கியப் பங்களிப்புகள்

எழுத்தாளர் ஜெயமோகன் "பிரபஞ்சன் முறையாக தமிழ் படித்து வந்தவர். மு.வரதராசனார், நா.பார்த்தசாரதியை ஆதர்சமாகக் கொண்டு தொடங்கியவர். அந்த பாதிப்பு கதாபாத்திரங்களை கருத்து மாதிரிகளாகவும்,  உரையாடல்களை கட்டுரையின் பகுதிகளாகவும் ஆக்கும் வழக்கத்தை அவருக்கு அளித்தது.

அதே சமயம் அவரிடமிருந்த தனிமனித ஒழுக்கம், நேர்த்தியான தோற்றம், பண்பான அணுகுமுறை போன்ற பல நற்பண்புகளும் அந்த முன்னோடிகளிடமிருந்து கிடைத்தவையே. பிரபஞ்சனில் நா.பாவின் செல்வாக்கு மிக அதிகம்.

இரண்டாவது செல்வாக்கு அவர் எழுத வந்த பின் உருவானது. அவர் ஜெயகாந்தனால் கவரப்பட்டார். இடதுசாரி கருத்துக்கள் மேல் இருந்த தீவிரம், அவரை படைப்பாளியாக செயல்படவிடாது தடுத்தன.

அவருள் இருந்த ஆழ்ந்த இன்னொரு செல்வாக்கு தி. ஜானகிராமன். தஞ்சையில் படித்த காலத்தில் அவர் சங்கீதம், சீவல், காபி என ஒரு ஜானகிராம அழகியலை அடைந்தார். ஆனால் அதற்குள் ஆழ்ந்து செல்ல அவரால் இயலவில்லை." என்று குறிப்பிடுகிறார்.

மறைவு

டிசம்பர் 21, 2018ல் மறைந்தார். பாண்டிச்சேரி அரசு, அரசு மரியாதையுடன் அவரை நல்லடக்கம் செய்தது.

உசாத்துணை