under review

பாவண்ணன்

From Tamil Wiki
Revision as of 18:48, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:இலக்கிய விமர்சகர்கள் சேர்க்கப்பட்டது)
பாவண்ணன்
பாவண்ணன், சொல்புதிது
பாவண்ணன்
பாவண்ணன்

பாவண்ணன் (பி.பாஸ்கரன்) (அக்டோபர் 20, 1958) தமிழில் கதைகளும் விமர்சனங்களும் குழந்தைப்பாடல்களும் எழுதி வரும் எழுத்தாளர். கன்னடத்தில் இருந்து இலக்கிய மொழியாக்கங்களும் செய்து வருகிறார். யதார்த்தவாத அழகியலுடன் பாண்டிச்சேரி கடலூர் பகுதியை சித்தரித்தவர். கன்னடத்திலிருந்து தலித் இலக்கியங்களை மொழியாக்கம் செய்து தமிழ் தலித் இலக்கிய அலை உருவாக அடிப்படைகளை அமைத்தவர்களில் ஒருவர் என அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் அக்டோபர் 20, 1958 அன்று பலராமன், சகுந்தலா ஆகியோருக்கு மகனாக பிறந்தார்,.வளவனூர் ஊராட்சிமன்ற தொடக்கப்பள்ளி, கோவிந்தையர் பள்ளி, அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளிகளில் தொடக்ககல்வியை முடித்தார்.விழுப்புரம் அண்ணா கலைக்கல்லூரியில் புகுமுக வகுப்பையும், புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் கணிதப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பையும் முடித்தார்.

தனிவாழ்க்கை

அமுதாவை ஆகஸ்ட் 22, 1987 அன்று மணமுடித்தார். மகன். பெயர்- அம்ரிதா மயன் கார்க்கி. பாவண்ணன் இந்திய தபால்தந்தி துறை ஊழியராக பணியை தொடங்கினார். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில், கர்நாடக மாநிலத்தில் உதவிக் கோட்டப் பொறியாளராக பணியாற்றி 2018-ல் ஓய்வுபெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சிறுகதைகள்

பாவண்ணனின் முதல் சிறுகதை ’பழுது’ 1982-ல் தீபம் இதழில் பிரசுரமானது. 1986 ல் இவருடைய முள் என்னும் சிறுகதை இலக்கியசிந்தனை விருது பெற்றதும் கவனிக்கப்பட்டார். 1987 ல் கவிதா பதிப்பகம் பாவண்ணனின் முதல் சிறுகதை தொகுதியான வேர்கள் தொலைவில் இருக்கின்றன நூலை வெளியிட்டது. காலச்சுவடு இதழில் ராஜ் கௌதமன் அந்நூலுக்கு எழுதிய முன்னுரை வெளியானதும் இலக்கிய முக்கியத்துவம் அமைந்தது. பாவண்ணன் தன் இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக கு.அழகிரிசாமி, மக்சீம் கார்க்கி, ஜெயகாந்தன், வண்ணதாசன் ஆகியோரை குறிப்பிடுகிறார்.

நாவல்கள்

பாவண்ணனின் முதல் நாவல் வாழ்க்கை ஒரு விசாரணை. தொடர்ந்து சிதறல்கள், பாய்மரக்கப்பல் போன்ற நாவல்களை எழுதினார்.பாவண்ணன். புதுச்சேரி கடலூர் பகுதியின் வாழ்க்கையை யதார்த்தவாத அழகியலுடன் சித்தரிப்பவர்.

குழந்தை இலக்கியம்

பாவண்ணன் இளமையிலேயே ம.இலெ. தங்கப்பா அறிமுகத்தால் அவரைப்போலவே குழந்தைப்பாடல்களையும் எழுதியிருக்கிறார். முதல் குழந்தைப்பாடல் தொகுதி நீண்டகாலம் கழித்து 1997ல் தான் வெளியாகியது (குழந்தையைப் பின்தொடரும் காலம். விடியல் பதிப்பகம்)

இலக்கிய விமர்சனம்

பாவண்ணன் ரசனை அடிப்படையில் இலக்கியங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவற்றில் தமிழின் நூறு சிறந்த சிறுகதைகளைப் பற்றிய அவருடைய ரசனை விமர்சனமான எனக்குப் பிடித்த கதைகள் குறிப்பிடத்தக்கது. முப்பதுக்கும் மேற்பட்ட விமர்சன நூல்களை எழுதியுள்ளார்.

மொழியாக்கம்

பாவண்ணன் கன்னடத்தில் இருந்தும் ஆங்கிலத்தில் இருந்தும் மொழியாக்கங்கள் செய்துள்ளார். ஆங்கில மொழியாக்கங்கள் பெரும்பாலும் சூழியல், வாழ்க்கைவரலாறு ஆகியவை. கன்னடத்தில் இருந்து பாவண்ணன் செய்த மொழியாக்கங்கள் தமிழிலக்கியத்தில் முக்கியமான இடம் வகிப்பவை. அவை மூன்றுவகையானவை

நாவல்கள்

பாவண்ணன் கன்னடத்தில் இருந்து எஸ்.எல். பைரப்பாவின் ’பருவம்’, ராகவேந்திரபாட்டீலின் ’தேர்’ போன்ற நாவல்களை மொழியாக்கம் செய்தார். பருவம் தமிழில் ஒரு பேரிலக்கியமாக மதிக்கப்படும் மொழியாக்கம்

தலித் இலக்கியம்

பாவண்ணன் எஸ்.சித்தலிங்கையாவின் ஊரும்சேரியும் போன்ற தன்வரலாறுகளையும் கன்னட தலித் சிறுகதைகளையும் மொழியாக்கம் செய்து தலித் இலக்கியம் தமிழில் உருவாவதற்கான முன்வடிவங்களை உருவாக்கிக் காட்டினார்.

நாடகம்

பாவண்ணன் எச்.எஸ்.சிவப்பிரகாஷ் எழுதிய மதுரைக்காண்டம், கிரீஷ் கர்நாட் எழுதிய நாகமண்டலம், பலிபீடம் போன்ற நாடகங்களை தமிழாக்கம் செய்துள்ளார்.

விருதுகள்

  • இலக்கிய சிந்தனை விருது (முள் சிறுகதை) 1986
  • புதுச்சேரி அரசின் சிறந்த நாவலுக்கான விருது(வாழ்க்கை ஒரு விசாரணை) - 1987
  • இலக்கியச் சிந்தனை சிறந்த நாவலுக்கான விருது(பாய்மரக்கப்பல்) - 1995
  • கதா அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருது (பயணம்)- 1996
  • சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது (பருவம்) - 2005
  • தமிழக அரசின் சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான விருது (பச்சைக்கிளியே பறந்து வா) -2009
  • சென்னை இலக்கிய திருவிழாவின் சிறந்த எழுத்தாளர் விருது -2016
  • சுஜாதா-உயிர்மை அறக்கட்டளையின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான விருது - பச்சைக்கிளிகள்
  • என்.சி.பி.எச். வழங்கும் 2015 ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரைத்தொகுதிக்கான விருது - கனவுகளும் கண்ணீரும்
  • வாழ்நாள் சாதனைக்காக விளக்கு இலக்கிய அமைப்பு வழங்கிய புதுமைப்பித்தன் விருது -2018
  • எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு நினைவு விருது -2021
  • கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது 2022

இலக்கிய இடம்

தமிழில் யதார்த்தவாத அழகியலை முன்னெடுத்து கூறப்படாத வாழ்க்கைக்களங்களை இலக்கியத்திற்குள் கொண்டுவந்த படைப்பாளிகளின் வரிசையில் எண்பதுகளுக்குப்பின் உருவானவர்களில் பாவண்ணன் முக்கியமானவர். பாண்டிச்சேரி- கடலூர் பகுதியின் மொழியும் மக்களும் இவருடைய ஆக்கங்கள் வழியாக இலக்கியத்தில் இடம்பெற்றனார். மொழியாக்கங்கள் வழியாக கன்னட இலக்கியத்தை தமிழில் அறிமுகம் செய்தவர். தமிழில் தலித் இலக்கியம் உருவாக பாவண்ணனின் கன்னட தலித் இலக்கிய மொழியாக்கங்கள் பெரும்பங்கு வகித்தன.

நூல்பட்டியல்

சிறுகதைகள்
  • வேர்கள் தொலைவில் இருக்கின்றன (1987, காவ்யா பதிப்பகம்)
  • பாவண்ணன் கதைகள் (1990, அன்னம் பதிப்பகம்)
  • வெளிச்சம் (1990, மீனாட்சி பதிப்பகம்)
  • வெளியேற்றம் (1991, காவ்யா பதிப்பகம்)
  • நேற்று வாழ்ந்தவர்கள் (1992, காவ்யா பதிப்பகம்)
  • வலை (1996, தாகம் பதிப்பகம்)
  • அடுக்கு மாளிகை (1998, காவ்யா பதிப்பகம்)
  • நெல்லித் தோப்பு (1998, ஸ்நேகா பதிப்பகம்)
  • ஏழுலட்சம் வரிகள் (2001, காவ்யா பதிப்பகம்)
  • ஏவாளின் இரண்டாவது முடிவு (2002, தமிழினி பதிப்பகம்)
  • கடலோர வீடு (2004, காவ்யா பதிப்பகம்)
  • வெளியேற்றப்பட்ட குதிரை (2006, அகரம் பதிப்பகம்)
  • இரண்டு மரங்கள் (2008, புதுமைபித்தன் பதிப்பகம்)
  • பொம்மைக்காரி (2011, சந்தியா பதிப்பகம்)
  • பச்சைக்கிளிகள் (2014 சந்தியா பதிப்பகம்)
  • பாக்குத்தோட்டம் ( 2014, உயிர்மை பதிப்பகம் )
  • கண்காணிப்புக் கோபுரம் (2016, சந்தியா பதிப்பகம்)
  • பிரயாணம் ( தேர்ந்தெடுத்த சிறுகதைகள்- 2016, காலச்சுவடு பதிப்பகம்)
  • ஆனந்த நிலையம் (2020, சந்தியா பதிப்பகம் )
  • கனவு மலர்ந்தது (2020, சந்தியா பதிப்பகம் )
நாவல்கள்
  • வாழ்க்கை ஒரு விசாரணை (1987 புத்தகப்பூங்கா, 2014 என்.சி.பி.எச். பதிப்பகம்)
  • சிதறல்கள் (1990 தாகம் பதிப்பகம், 2014 என்.சி.பி.எச். பதிப்பகம் )
  • பாய்மரக்கப்பல் (1995, 2014 காவ்யா பதிப்பகம்)
குறுநாவல்கள்
  • இது வாழ்க்கையில்லை (1989, சரவணபாலு பதிப்பகம்)
  • ஒரு மனிதரும் சில வருஷங்களும் (1989, 2005, 2018 அகரம் பதிப்பகம்)
கவிதைகள்
  • குழந்தையைப் பின்தொடரும் காலம் (1997, விடியல் பதிப்பகம்)
  • கனவில் வந்த சிறுமி (2006, அகரம் பதிப்பகம்)
  • புன்னகையின் வெளிச்சம் (2007, சந்தியா பதிப்பகம்)
கட்டுரைகள்
  • எட்டுத்திசையெங்கும் தேடி (2002 அகரம் பதிப்பகம்)
  • எனக்குப் பிடித்த கதைகள் (2003 காலச்சுவடு பதிப்பகம்)
  • ஆழத்தை அறியும் பயணம் (2004 காலச்சுவடு பதிப்பகம்)
  • தீராத பசிகொண்ட விலங்கு (2004 சந்தியா பதிப்பகம்)
  • வழிப்போக்கன் கண்ட வானம் (2005 அகரம் பதிப்பகம்)
  • எழுத்தென்னும் நிழலடியில் (2004 சந்தியா பதிப்பகம்)
  • மலரும் மணமும் தேடி (2005 சந்தியா பதிப்பகம்)
  • இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள் (2006 சந்தியா பதிப்பகம்)
  • நதியின் கரையில் (2007 எனி இந்தியன் பதிப்பகம், 2018, சந்தியா பதிப்பகம்)
  • துங்கபத்திரை (2008 எனி இந்தியன் பதிப்பகம், 2017, சந்தியா பதிப்பகம்)
  • ஒரு துண்டு நிலம் (2008 அகரம் பதிப்பகம்)
  • உரையாடும் சித்திரங்கள் (2008 புதுமைபித்தன் பதிப்பகம்)
  • வாழ்வென்னும் வற்றாத நதி (2008 அகரம் பதிப்பகம்)
  • ஒட்டகம் கேட்ட இசை (2010 காலச்சுவடு பதிப்பகம்)
  • அருகில் ஒளிரும் சுடர் (2010 அகரம் பதிப்பகம்)
  • மனம் வரைந்த ஓவியம் (2011 அகரம் பதிப்பகம்)
  • புதையலைத் தேடி (2012 சந்தியா பதிப்பகம்)
  • கனவுகளும் கண்ணீரும் (2014, என்.சி.பி.எச். வெளியீடு)
  • படகோட்டியின் பயணம் (2017, என்.சி.பி.எச். வெளியீடு)
  • வெங்கட் சாமிநாதன்: சில பொழுதுகள் சில நினைவுகள் (2017, சந்தியா பதிப்பகம்)
  • கதவு திறந்தே இருக்கிறது (2018, பாரதி புத்தகாலயம்)
  • சிட்டுக்குருவியின் வானம் (2018 சந்தியா பதிப்பகம்)
  • சத்தியத்தின் ஆட்சி - காந்திய ஆளுமைகளின் கதைகள் (2019, சந்தியா பதிப்பகம்)
  • ஒரு சொல்லின் வழியாக (2019, என்.சி.பி.எச். வெளியீடு)
  • எல்லாம் செயல்கூடும் - காந்திய ஆளுமைகளின் கதைகள் (2020, சந்தியா பதிப்பகம் )
  • வற்றாத நினைவுகள் (2021, என்.சி.பி.எச். வெளியீடு)
  • நான் கண்ட பெங்களூரு (2021, சந்தியா பதிப்பகம்)
  • ஒன்பது குன்று (2021, சிறுவாணி வாசகர் மையம்)
  • என் வாழ்வில் புத்தகங்கள் (2021, சந்தியா பதிப்பகம் )
  • மண்ணில் பொழிந்த மாமழை - காந்திய ஆளுமைகளின் கதைகள் (2021, சந்தியா பதிப்பகம்)
  • சென்றுகொண்டே இருக்கிறேன் - பாவண்ணன் நேர்காணல்கள் (2022, சந்தியா பதிப்பகம்)
  • தங்கப்பா - இந்திய இலக்கியச்சிற்பிகள் வரிசை நூல் (2022, சாகித்திய அகாதெமி )
  • விட்டல்ராவும் நானும் உரையாடிக்கொண்டிருந்தோம் (2022, சந்தியா பதிப்பகம் )
  • எப்பிறப்பில் காண்போம் இனி (2022, சந்தியா பதிப்பகம் )
குழந்தை இலக்கியம்
  • பொம்மைக்கு ஓர் இடம் வேண்டும் - பாடல்கள் (1992, கலைஞன் பதிப்பகம்)
  • பச்சைக்கிளியே பறந்துவா - பாடல்கள் (2009, அகரம் பதிப்பகம்)
  • யானை சவாரி - பாடல்கள் (2014, பாரதி புத்தகாலயம்)
  • மீசைக்காரப் பூனை- பாடல்கள் (2016, பாரதி புத்தகாலயம்)
  • எட்டு மாம்பழங்கள் - பாடல்கள் (2017, பாரதி புத்தகாலயம்)
  • நான்கு கனவுகள் - சிறுகதைகள் (2018, நெஸ்லிங் புக்ஸ் பப்ளிஷிங்)
  • கன்றுக்குட்டி - பாடல்கள் (2019, பாரதி புத்தகாலயம்)
  • கொண்டைக்குருவி – பாடல்கள் (2021, பாரதி புத்தகாலயம்)
  • பொம்மைகள் -சிறார் கதைகள் (2022, தன்னறம் பதிப்பகம்)

மொழியாக்கப் படைப்புகள்

ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த புத்தகங்கள்
  • நீர்யானை முடியுடன் இருந்தபோது (1998, ஆப்பிரிக்க வனவிலங்களைப்பற்றிய கதைகள், என்பிடி)
  • காட்டின் கதைகள் (2003, சுற்றுப்புறச்சூழல் கல்வி மையம், பெங்களூரு)
  • வியப்பூட்டும் பாலூட்டிகள் (2003, சுற்றுப்புறச்சூழல் கல்வி மையம், பெங்களூரு)
  • மரங்கள் (2003, சுற்றுப்புறச்சூழல் கல்வி மையம், பெங்களூரு)
  • கஸ்தூர்பா: ஒரு நினைவுத்தொகுப்பு (2019, சந்தியா பதிப்பகம் )
கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்த புத்தகங்கள்
  • கன்னட நவீனக் கவிதைகள் (1992, கனவு)
  • பலிபீடம் (1992, நாடகம், நாடகவெளி, காவ்யா பதிப்பகம்)
  • நாகமண்டலம் (1993, நாடகம், நாடகவெளி, காவ்யா பதிப்பகம்)
  • மதுரைக்காண்டம் (1994, நாடகம், காவ்யா பதிப்பகம்)
  • வினைவிதைத்தவன் வினை அறுப்பான் (1995, நாவல், என்பிடி)
  • புதைந்த காற்று (1996, தலித் எழுத்துகளின் தொகைநூல், விடியல் பதிப்பகம்)
  • ஊரும் சேரியும் (1996 தலித் சுயசரிதை, விடியல் பதிப்பகம், 2015 காலச்சுவடு பதிப்பகம்)
  • கல்கரையும் நேரம் (1998, லங்கேஷ் சிறுகதைகள், சாகித்திய அகாதெமி)
  • கவர்மென்ட் பிராமணன் (1998 தலித் சுயசரிதை, விடியல் பதிப்பகம், 2015 காலச்சுவடு பதிப்பகம்)
  • பசித்தவர்கள் (1999, நாவல், என்பிடி)
  • வடகன்னட நாட்டுப்புறக்கதைகள் (2001, சாகித்திய அகாதெமி)
  • அக்னியும் மழையும் (2002, நாடகம், காவ்யா பதிப்பகம்)
  • பருவம் (2002, நாவல், சாகித்திய அகாதெமி)
  • ஆயிரம் மரங்கள் ஆயிரம் பாடல்கள் (2004, நவீன கன்னட இலக்கிய எழுத்துகள் தொகைநூல், அகரம் பதிப்பகம்)
  • நூறு சுற்றுக்கோட்டை (2004, நவீன கன்னட சிறுகதைகள் தொகைநூல்)
  • ஓம் நமோ (2008, நாவல், சாகித்திய அகாதெமி)
  • அக்னியும் மழையும் (2011, ஆறு நாடகங்களின் தொகைநூல், காலச்சுவடு பதிப்ப‌கம்)
  • தேர் (2010, நாவல், சாகித்திய அகாதெமி)
  • வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் (2013, கட்டுரை, காலச்சுவடு பதிப்ப‌கம்)
  • வாழ்வின் தடங்கள் (தன்வரலாறு, 2017, காலச்சுவடு பதிப்பகம்)
  • சிதைந்த பிம்பம் (நாடகம், 2018, காலச்சுவடு பதிப்பகம்)
  • அஞ்சும் மல்லிகை (நாடகம், 2018, காலச்சுவடு பதிப்பகம்)
  • திருமண ஆல்பம் (நாடகம், 2019, காலச்சுவடு பதிப்பகம்)
  • அனலில் வேகும் நகரம் (நாடகம், 2019, காலச்சுவடு பதிப்பகம் )

உசாத்துணை


✅Finalised Page