under review

பரமஹம்சதாசன்

From Tamil Wiki
Revision as of 09:05, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)
பரமஹம்சதாசன்

பரமஹம்சதாசன் (1916 -1965) இலங்கைத் தமிழ் கவிஞர். ராமகிருஷ்ண மடத்துடன் தொடர்புடையவர். பக்திக்கவிதைகளும் தேசியக்கவிதைகளும் எழுதினார்.

பிறப்பு, கல்வி

பரமஹம்சதாசனின் இயற்பெயர் சுப்பராமன். இவர் பிறப்பால் தமிழ்நாட்டினர். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், அதிகரம் என்ற சிற்றூரில் திரு. முத்துப்பழனியப்பர்- திருமதி அழகம்மை இணையருக்கு டிசம்பர் 16, 1916-ல் பிறந்தவர்.

தனிவாழ்க்கை

சுப்பராமன் இளம்வயதிலேயே பணியின் காரணமாக, இலங்கைக்குச் சென்றார். அங்கே மட்டக்களப்பு நகரில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தார். மட்டக்களப்பு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தொடர்பு இவரை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் தாசனாக்கியது. இந்திய வம்சாவளியிரனரை வெளியேற்றும் சட்டத்தின்படி 1962-ல் இலங்கையிலிருந்து அவர் தமிழகத்திற்குத் திரும்பினார். திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தார்

இலக்கிய வாழ்க்கை

பரமஹம்சதாசன். 1945 முதல் இலங்கைத் தமிழ் இதழ்களில் கவிதைகள் எழுதினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழர் தேசிய கீதத்தை எழுதினார். கவியோகி சுத்தானந்த பாரதியார் மீது பக்தியும் மதிப்பும் கொண்டிருந்த பரமஹம்சதாசன் அவர் மீது பாடிய பாடல்களை கவியோகி தான் இயற்றிய பாரதசக்தி மாககாவியத்தின் பிற்காலப் பதிப்புகளில் முகவுரையாக வெளியிட்டார். பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ஜீவா இலங்கைக்குச் சென்றிருந்த காலத்தில் அவரோடு அணுகிப் பழகியவர் பரமஹம்சதாசன். சுவாமி சித்பவானந்தா, சுவாமி சச்சிதானந்தா, தவத்திரு குன்றக்குடி அடிகளார், திருலோகசீதாராம், துறைவன் முதலியவர்களுடன் நெருங்கிப் பழகியவர்.

மகாகவிதாகூர் பாடிய Fruit Gathering 'கனிகொய்தல்’ என்ற கவிதை நூலையும், கீதாஞ்சலியையும் மரபுக்கவிதை வடிவில் மொழியாக்கம் செய்தார். 'கனிகொய்தல்’ நூலைத் 'தீங்கனிச்சோலை’ என்ற பெயரில் இலங்கை நாவலப்பிட்டி ஆத்மஜோதி நிலையம் 1963-ல் பதிப்பித்து வெளியிட்டது இவருடைய கவிதைகள் தேசியக் கவிதைகள், பக்திக்கவிதைகள், பல்சுவைக் கவிதைகள் என்ற பகுப்புகளில் வெளியிடப் பெற்றுள்ளன. குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனக் கவிஞர் மரு.பரமகுரு இத்தொகுப்புகளின் பதிப்பாசிரியர் . இத்தொகுப்புகளுக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், கிருங்கை சேதுபதி ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர்.

மறைவு

கவிஞர் பரமஹம்சதாசன் நீண்ட நாட்கள் உடல் நலம் குன்றியிருந்து தமது 49-வது வயதின் தொடக்கத்தில் 1965 ஜனவரியில் அவர் சொந்த ஊரான அதிகாரத்தில் காலமானார். அவர் இல்லத்தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

நூல்கள்

  • தீங்கனிச் சோலை
  • கவிதை மணிமாலை
  • தேசியக்கவிதைகள்
  • பக்திக் கவிதைகள்
  • பல்சுவைக் கவிதைகள்

உசாத்துணை


✅Finalised Page