under review

பத்மாவதி சரித்திரம்

From Tamil Wiki

To read the article in English: Padmavathi Sarithiram. ‎

Padmavathi Charithiram Vol 3 1928 ed.png

பத்மாவதி சரித்திரம் (1898) தமிழின் தொடக்ககால நாவல்களில் ஒன்று. இதன் ஆசிரியர் அ.மாதவையா. பத்மாவதி சரித்திரம் பெண்கல்வியையும் விதவை மறுமணத்தையும் வலியுறுத்துவது.

எழுத்து,பதிப்பு

1898-ல் பத்மாவதி சரித்திரம் நாவலை அ. மாதவையா எழுதத் தொடங்கினார். ஆனால் முழுமையற்ற வடிவில் முதல் பகுதி மட்டும் வெளியாகியது. அதற்கு ஆங்கிலத்தில் எழுதிய முன்னுரையில் மாதவையா அந்நூல் வாசகர்களால் விரும்பப்படாமல் போகலாம் என்று எண்ணுவதாகவும் ஆகவே அதை தொடர்ந்து எழுதவில்லை என்றும் சொல்கிறார். ஆனால் பத்மாவதி சரித்திரம் நாவலுக்கு பொதுவாக வரவேற்பு இருந்தது. ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டு மதிப்புரைகள் வந்தன என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பரிதிமாற்கலைஞர் என அழைக்கப்பட்ட தமிழறிஞரான வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி பத்மாவதி சரித்திரம் நாவலை பாராட்டி, அந்தத் தயக்கம் தேவையில்லை என எழுதினார். அதனால் ஊக்கம் பெற்ற மாதவையா 1899-ஆம் ஆண்டில் பத்மாவதி சரித்திரம் நாவலின் இரண்டாம் பகுதியையும் எழுதினார். 1899-ல் இரண்டு பகுதிகளும் இணைந்து ஒரேநூலாக வெளிவந்தன. அதன் தொடர்ச்சியை அவர் 1923-ல் பஞ்சாமிர்தம் இதழில் எழுத ஆரம்பித்தார். அதை முடிக்கும் முன்னரே உயிர்துறந்தார்.

1898 முதல் பத்மாவதி சரித்திரம் நாவல் ஆசிரியரால் ஆறு முறை பதிப்பிக்கப்பட்டது. 1950 முதல் சென்னைப் பல்கலைக் கழகத்தாரால் பாடநூலாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பத்மாவதி சரித்திரம் ஏழாம் பதிப்பை தி. லிட்டில் ஃப்ளவர் கம்பெனியார் 1958-ல் மலிவுப் பதிப்பாக வெளியிட்டனர். 1994-ல் நியூ செஞ்சுரி பதிப்பகம் நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் பத்மாவதி சரித்திரம் நூலை பதிப்பித்தது. பத்மாவதி சரித்திரம் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. முற்றுப்பெறாத மூன்று பாகங்களையும் ஒன்றாக இணைத்து காவ்யா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

மொழியாக்கம்

பத்மாவதி சரித்திரம் மீனாட்சி தியாகராஜன் மொழியாக்கத்தில் பத்மாவதி என்னும் பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது.

கதைச்சுருக்கம்

பத்மாவதி சரித்திரம் நாவல் இரு பகுதிகளாலானது. முதல்பகுதி 30 அதிகாரங்கள் கொண்டது. இரண்டாம் பகுதி 23 அதிகாரங்கள் கொண்டது.

பத்மாவதி சரித்திரம் நாவலின் கதைநாயகி பத்மாவதி. இளமையில் இருந்தே அவளை காதலிக்கும் நாராயணன் அவளை மணந்துகொள்கிறான். அவளுக்கு அவன் எழுதப்படிக்க சொல்லிக் கொடுக்கிறான். நாராயணனின் நண்பன் கோபாலன். கோபாலனின் தம்பி சங்கரன் இளமையிலேயே போகவாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஊரைவிட்டு ஓடிப்போகிறான்.

நகரத்திற்கு படிப்பதற்காக வரும் நாராயணனும் கோபுவும் அங்கே சங்கரன் ஒரு நாடகக் கம்பெனியில் நடிகனாக இருப்பதை காண்கிறார்கள். அவனை தங்களுடன் அழைத்து வருகிறார்கள். சங்கரன் பத்மாவதியைப் பார்த்து காமம் கொள்கிறான். அவளை அடையவேண்டுமென்றால் நாராயணனை அவளிடமிருந்து பிரிக்கவேண்டும் என திட்டமிடுகிறான்.

கோபாலன் அவன் மனைவியிடம் உளவேறுபாடு கொண்டவனாக இருக்கிறான். அவன் சாலா என்ற தவறான பெண்ணுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அந்தக் கடிதத்தை கோபாலன் பத்மாவதிக்கு எழுதியதுபோல திரிக்கிறான் சங்கரன். அக்கடிதம் நாராயணன் கையில் கிடைக்கும்படி செய்கிறான். நாராயணன் பத்மாவதிமேல் மனவேறுபாடு கொள்கிறான்.

பல சிக்கல்களுக்குப்பிறகு நாராயணன் கோபாலனிடம் அதைப்பற்றி வெளிப்படையாகப் பேசுகிறான். உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவருகிறது. மனவேறுபாடு மறைகிறது. சங்கரன் தன் சொத்துக்களை விற்றுவிட்டு அவன் தந்தையான ஐயங்காரையும் சாலாவையும் அழைத்துக்கொண்டு பம்பாய்க்கு செல்கிறான். கோபாலனும் அவன் மனைவியும் பத்மாவதியும் ஒன்றாகிறார்கள்.

கதைமாந்தர்

  • பத்மாவதி - கதைநாயகி. இனிய குணம் உடைய பெண். கணவனை நேசிப்பவள். அவனுக்கு உகந்த மனைவியாக இருக்கவேண்டும் என்பதனால் கல்வி கற்கவும் நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ளவும் முயல்பவள்.
  • நாராயணன் - பத்மாவதியின் இளமைக்காதலன். கணவன். அவளுக்கு கல்விகற்பிக்கவும் அவளை நாகரீகப்பெண்ணாக ஆக்கவும் முயற்சி எடுத்துக் கொள்கிறான். இளமையில் வறுமைக்கு ஆளாகிறான். தன் கல்வியால் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறான்.
  • சீதையம்மாள் - நாராயணனின் அம்மா. அறத்தில் பற்று கொண்டவள். தன் மகனை கடும் உழைப்பால் படிக்க வைக்கிறாள்.
  • சீதாபதி அய்யர்- நாராயணனின் தந்தை. பணச்செருக்கு கொண்டவர். பத்திரமோசடிகள் செய்பவர். வழக்கில் சிக்கி குடும்பத்தை நிராதரவாக விட்டுவிட்டு சிறைசெல்கிறார்.
  • கோபாலன் - நாராயணனின் நண்பன். மனைவி நாகரீகமாக பழகாமல் கிராமியத்தனமாக இருப்பதனால் ஒழுக்கப்பிழைகளுக்கு செல்கிறான்.
  • சாவித்ரி - கோபாலனின் சகோதரி. இளம் விதவை. வாழ்க்கையின் வெறுமையை வெல்ல கல்வி, அறப்பணிகளில் ஈடுபடுபவள்.
  • சங்கரன் – கோபாலனின் தம்பி. தீயகுணங்களும் போகநாட்டமும் கொண்டவன். கிறித்தவனாக மதம் மாற முயல்கிறான். பின்னர் நாடகநடிகனாக ஆகிறான்.
  • சாலா – சங்கரனின் காதலி. ஒழுக்கமில்லாத பெண்.
  • கல்யாணி - கோபாலனின் மனைவி. கிராமத்துப் பெண். கல்வி இல்லாததனால் அவள் மூர்க்கமான நடத்தை கொண்டிருக்கிறாள். பின்னர் திருந்துகிறாள்.
  • டாக்டர் வில்லியம் மில்லர் – சென்னை கிறித்தவக் கல்லூரி முதல்வர். உண்மையான வரலாற்று ஆளுமை. மாணவர்களை வழிநடத்துபவர்.

மதிப்பீடு

பத்மாவதி சரித்திரம் விரிவான புறச்சூழல் சித்தரிப்பும், கதைமாந்தர் இயல்புகளின் நுட்பமும் கொண்டது அல்ல. ஆசிரியரின் கருத்துக்களுக்கு ஏற்ப கட்டமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் பெரும்பாலும் கருத்துநிலையில் நின்று பேசுகின்றன. விதிவிலக்கான இரு இடங்கள் - ஆசிரியர் குற்றாலத்தை வர்ணிப்பது. மனம் திருந்தி வந்த கோபாலனிடம் அவன் மனைவி கல்யாணி இதை நான் செய்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்கும் இடம். ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ நாடகத்தின் சாயல் பத்மாவதி சரித்திரம் நாவலில் உண்டு.

பெண் கல்விக்கு அளித்த முக்கியத்துவம், ஆண்பெண் உறவு என்பது இணையான நட்பின் அடிப்படையில் அமையவேண்டும் என்னும் பார்வை, விதவைமறுமணத்துக்கான கோரிக்கை ஆகியவற்றால் பத்மாவதி சரித்திரம் நாவல் முக்கியமானதாக ஆகிறது.

அத்துடன் பத்மாவதி சரித்திரம் விவரிக்கும் சூழல்சித்தரிப்புகள் அக்காலத்து சமூக, அரசியல் சூழலை காட்டுகின்றன. குறிப்பாக, அன்று பிரிட்டிஷார் உருவாக்கியிருந்த நீதிமன்ற நடைமுறையில் நிலவிய ஊழல்கள், நில அளவைமுறை மற்றும் ஆவணங்களில் நிகழ்ந்த மோசடிகள், பிராமண சமூகத்தில் இருந்த வைதிகவெறியும் போலிப் பாவனைகளும் பத்மாவதி சரித்திரம் நாவலின் நுண்சித்திரங்களில் வெளிப்படுகின்றன.

உசாத்துணை

  • தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்: கி.வா.ஜகந்நாதன் இணைப்பு
  • அ.மாதவையா நவீனத்துவத்தின் முதற்குரல்: மானசீகன், தமிழினி இணைய இதழ்.

இணைப்புகள்


✅Finalised Page