படுமரத்து மோசிக்கொற்றனார்
From Tamil Wiki
படுமரத்து மோசிக்கொற்றனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
படுமரத்து மோசிகொற்றனார் சங்ககாலப் புலவர். படுமரம் என்பது ஊரின் பெயர். மோசி என்பது தந்தை பெயர்.
இலக்கிய வாழ்க்கை
படுமரத்து மோசிக்கொற்றனார் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் 376-வது பாடலாக உள்ளது. பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியதாக பாடல் உள்ளது. நெய்தல் திணைப்பாடல். கூற்று விளக்கம்: பொருள் தேடுவதற்காகத் தலைவியைப் பிரியக் கருதிய தலைவன், தலைவியின் நல்லியல்புகளை நினைத்துப் பிரிவதைத் தவிர்த்தான்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- நிலைபெற்ற உயிர்களால் முழுதும் அறிய முடியாத, நெருங்குவதற்கரிய பொதிய மலையின் சிறப்பு கூறப்பட்டது.
- உவமை: பொதிய மலையிலுள்ள சந்தனத்தைப் போல வேனிற்காலத்தில் தலைவி குளிர்ச்சியை உடையவள். கதிரவனின் கதிர்கள் தனக்குள் மறையுமாறு குவிந்து, வெயிலை, உள்ளே வைத்துக் கொண்ட தாமரை மலரின் உள்ளிடத்தைப் போல் பனிக்காலத்தில் சிறிதளவு வெப்பமுடையவள்.
பாடல் நடை
- குறுந்தொகை 376 (திணை: நெய்தல்)
மன்னுயிர் அறியாத் துன்னரும் பொதியிற்
சூருடை அடுக்கத் தாரங் கடுப்ப
வேனி லானே தண்ணியள் பனியே
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி ஐயென
அலங்குவெயிற் பொதிந்த தாமரை
உள்ளகத் தன்ன சிறுவெம் மையளே.
உசாத்துணை
- சங்ககால புலவர்கள் வரிசை 3, புலவர் கா. கோவிந்தன். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் கழகம்
- மோசிக்கொற்றனார்: tamilvu
- 376. தலைவன் கூற்று: nallakurunthogai
✅Finalised Page