under review

ந.பாலபாஸ்கரன்

From Tamil Wiki
Revision as of 22:05, 3 June 2023 by Tamizhkalai (talk | contribs)
ந.பாலபாஸ்கரன்
மனைவி கிரிஜாவுடன் பாலபாஸ்கரன்
மலாயா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றபோது

ந. பாலபாஸ்கரன் (மே 6,1941- பெப்ருவரி 19, 2023) ( சுப்ரமணியன் பாலபாஸ்கரன்) ஊடகவியலாளர், இலக்கிய விமர்சகர், ஆய்வாளர். சிங்கப்பூர், மலேசியாவில் தமிழ் ஒலிபரப்பு, ஒளிபரப்புத்துறைகளில் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஊடகவியல் ஆளுமை.  சிங்கப்பூர் - மலேசியாவின் தமிழ் இலக்கியம், ஊடகத் துறை, சமூகம் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டவர். இலக்கிய விமர்சகர். மலாயாப் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர்.

பிறப்பு, கல்வி

ந. பாலபாஸ்கரன் இந்தியாவில் புதுச்சேரியின் கதிர்காமம் என்ற கிராமத்தில்  மே 6,1941-ல் பிறந்தவர். தந்தை நடராஜன். தாயார் மீனாட்சி. பரிமளா, மஞ்சுளா ஆகிய இரு சகோதரிகள். தந்தையின் அண்ணன் தங்கவேலு பினாங்கு, சிங்கப்பூர், சிலோன் ஆகிய இடங்களுக்கு துணி வியாபாரம், குறிப்பாக கைலி வியாபாரம் செய்துவந்தார். பின்னர்  தந்தை நடராஜனை அவர் பினாங்குக்கு அழைத்தார். தந்தை கெடா மாநிலம் கூலிமில் ‘கூலிம் ஸ்டோர்’ என்ற கடையை வைத்திருந்தார். நடராஜன் வணிகத்தில் காலூன்றியதும் குடும்பத்தை அழைத்தார்.

தொடக்கல்விப் படிப்பை புதுச்சேரியில் படித்த பாலபாஸ்கரன் 10 வயதில் கூலிம் வந்தார். அங்கு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் இங்கிலிஷ் ஸ்கூல் என்று அழைக்கப்பட்ட கூலிமின் ஆகப் பழைய பள்ளியான  சுல்தான் பட்லிஷா பள்ளியில் மூன்றாம் படிவம்வரை படித்தார். சீனியர் கேம்பிரிட்ஜ் கல்வியை புக்கிட் மெர்தாஜாம் ஹை ஸ்கூலில் முடித்தார். பிறகு செர்டாங் ஆங்கிலப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றினார். தாயாருக்கு கூலிம் உடல்நல ரீதியாக ஒத்துவராததால் தாயுடன் புதுச்சேரி திரும்பி ஓராண்டு பயின்று  புகுமுகக் கல்வியை முடித்தார். பள்ளிக் காலத்தில் விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கிய பாலபாஸ்கரன் ஓட்டப் பந்தயங்களிலும் பூப்பந்து விளையாட்டுகளிலும் விருதுகள் வாங்கியுள்ளார்.

மலாயாப் பல்கலைக்கழத்தில் பொருளியலில் இளநிலைப் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது  1969-ல் மே கலவரம் மூண்டது. அச்சமயத்தில் ஏற்பட்ட விரக்தியில் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, மனம்போன போக்கில் அலைந்தார். திருமணம் நடந்தது. பின்னர் 1970-களில் மலாயாப் பல்கலைக்கழக இந்தியவியல் துறையில் இளங்கலை (பி ஏ ஹானர்ஸ்), முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து முதுநிலைப் பட்டக்கல்வியை முடித்தார்

தனி வாழ்க்கை

ந. பாலபாஸ்கரன் கடலூர் பெருமத்தூரைச் சேர்ந்த கிரிஜா வேலாயுதத்தை செம்டம்பர் 18,1971-ல் மணமுடித்தார். மூத்த மகள் பிரபாவதி புதுச்சேரியில் பிறந்தார். 1976-ல் குடும்பத்தை கோலாலம்பூருக்கு  அழைத்தார். விசாகன், விமலன் இரு மகன்களும் கோலாலம்பூரில் பிறந்தனர். 1982-ல் குடும்பத்துடன் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார்.

கல்விப்பணி

ந. பாலபாஸ்கரன் 1950-களின் இறுதியில் மலேசியா, செர்டாங் ஆங்கிலப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக முதல் பணியை தொடங்கினார்.முதுகலைப் படிப்பின்போது மலாயா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.

ஊடகப்பணி

சக வானொலி கலைஞர்களுடன் பாலபாஸ்கரன் (இடக்கோடி)

ந. பாலபாஸ்கரன் 1963-ல் அன்றைய ரேடியோ மலாயாவில் ஒலிபரப்பு உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். தாமஸ் மேத்தியூ, ரெ. கார்த்திகேசு, பைரோஜி நாராயணன், முகம்மது ஹனீப் என பெயர் பெற்ற தமிழ் வானொலிக் கலைஞர்கள் பலரால் ரேடியோ மலேசியா சிறப்போடு செயல்பட்டுக்கொண்டிருந்த  அக்காலகட்டத்தில்  மொழிபெயர்ப்பு, நேரடி வர்ணனை, நிகழ்ச்சி தயாரிப்பு, கலப்படம், நாடக விழா, நாடகம்- இலக்கிய நிகழ்ச்சிகள் தயாரிப்பு என பல பணிகளையும் அவர் மேற்கொண்டார். ஆறு ஆண்டுகள் முழு நேர வேலை பார்த்தார். பின்னர் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடங்கியதும் பகுதிநேரமாக வானொலியில் பணியாற்றினார்.

ந. பாலபாஸ்கரன் சிறிது காலம் தமிழ் நேசனிலும் வேலை பார்த்துள்ளார். 1982-ல் சிங்கப்பூரில் குடியேறியதும் சிங்கப்பூர்த் தொலைக்காட்சியின் தமிழ்ச் செய்திப் பிரிவில் மூத்த செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்து 2000-ல் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் 2012 வரையில் பகுதிநேரமாக ஊடகத் துறையில் பணிபுரிந்தார்.

ந. பாலபாஸ்கரன் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனமான மெகாஸ்டார் புரொடக்‌ஷனில் 2004 முதல் 2008 வரையில் பணியாற்றி, பல நடப்புவிவகார நிகழ்ச்சிகளுக்கு எழுதியுள்ளார். அந்நிறுவனம் மீடியாகார்ப் தமிழ்த் தொலைக்காட்சிக்குத் தயாரித்த உள்ளூர், வெளிநாட்டு விவகாரங்கள் குறித்த ‘30 நிமிடங்கள்’ நடப்பு விவகார நிகழ்ச்சி அவர் எழுத்தில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் முக்கியமானது. நான்கு ஆண்டும் அந்த நிகழ்ச்சியே, நடப்பு விவகாரப் பிரிவில் சிறந்த எழுத்துப் படைப்பு விருதை வென்றது,

சமூக, இயக்க ஈடுபாடுகள்

ந. பாலபாஸ்கரன் பள்ளிக்காலத்தில் கூலிம் திராவிடர் கழகத்தால் ஈர்க்கப்பட்டு அதில் தீவிர ஈடுபாடு காட்டினார். 1959-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருந்தலைவர்களில் ஒருவர் ஈ. வெ. கி. சம்பத் கூலிம் வருவதாக இருந்தது. அவரை வரவேற்கும் அமைப்புக்குழுவுக்குச் செயலாளர்  இருந்தார். ஆனால் சம்பத் வருகையை அரசாங்கம் தடைசெய்துவிட்டது.

ந.பாலபாஸ்கரன்

மலேசிய இலக்கியத்துறையில் 1960-களில் ஈடுபாடு காட்டிய பாலபாஸ்கர், மலேசிய தமிழ் எழுத்தாளர் கழகத்தில் துணைத்தலைவராகவும் சில காலம் பங்காற்றியுள்ளார். இலக்கிய விமர்சனம், ஆய்வுகளை முன்னெடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இலக்கியவாழ்க்கை

மலேசியாவில் படித்த காலத்தில் பாலபாஸ்கரனுக்கு இலக்கியத்தின் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. பாலபாஸ்கரன் ஊடகம், இலக்கியத் துறையில் செயல்படத்தொடங்கிய 1960-கள் தனித்தன்மையான மலாயா - சிங்கப்பூர் இலக்கியம் தோன்றி வளர்ந்த காலம். ஏராளமான இதழ்களும் சஞ்சிகைகளும் தோன்றி மறைந்து, தமிழ் நேசனும் தமிழ் முரசும் பத்திரிகைத் துறையில் முன்னணியில் இருந்தன. சிங்கப்பூர் - மலேசிய தமிழ் வானொலிகள் ஒலிபரப்புத் துறையில் களத்தில் இறங்கி செயல்பட்டுக்கொண்டிருந்தன. அதனால் எழுத்து, விமர்சனம் என பாலபாஸ்கரன் ஈடுபடத் தொடங்கினார்.

ஆய்வுகள்

மு. கருணாநிதி நடத்திய முத்தாரம் இதழில் திருக்குறள் பற்றிய  பாலபாஸ்கரனின் முதல் கட்டுரை 1962-ல் வெளியானது. தமிழ், ஆங்கிலம், மலாய் மொழிகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணிபுரிந்தவர்களுடன் பாலபாஸ்கரன் (இடக்கோடி)

ந. பாலபாஸ்கரனின் முதுகலைப் பட்ட ஆய்வான ‘மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள்’ (1995) மலேசியாவில் சிறுகதை எழுத்து குறித்த ஆய்வுக்கு அப்பால் பல தகவல்களைச் சொல்லும் நூல். டாக்டர் இரா தண்டாயுதம் மேற்பார்வையாளராகவும் டாக்டர் க. கைலாசபதி அயலகக் கணிப்பாளராகவும் இருந்த இந்த ஆய்வுக்காக  மலேசியாவில் 1930 முதல் 1970கள் வரை வெளியான சிறியதும் பெரியதுமான 70 சிறுகதைத் தொகுதிகளை அவர் ஆய்வு செய்துள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரைக்காக 200 எழுத்தாளர்களின் 630 கதைகள் ஆய்வு செய்திருக்கிறார்.

சிங்கப்பூரையும் உள்ளடக்கிய அன்றைய மலேசியாவில் வெளிவந்த முதல் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பு 1930-ல் சிங்கப்பூரில் அச்சடித்து வெளியிடப்பட்டது என்பதை முதன்முதலில் வெளிப்படுத்தியது அந்த ஆய்வு. யாழ்ப்பாணம் வல்வை வே. சின்னையா எழுதிய  ‘நவரச கதாமஞ்சரி:  இவை இனிய கற்பிதக் கதைகள்’ என்ற அந்த நூல்  சிங்கப்பூரில் கோ. சாரங்கபாணி முன்னுரையுடன் வெளிவந்தது.

மேலும் 1942 முதல் 1945 நடுப்பகுதி வரை ஜப்பான்காரக் கொடுங்கோல் ஆட்சியிலும் தமிழ் இலக்கியம் குறிப்பாக சிறுகதைகள் ஏராளமாக பிரசுரமாகின என்ற விவரத்தையும் வாசகர் கவனத்துக்கு கொண்டு வந்தார். சுதந்திர இந்தியா, சந்திரோதயம், யுவபாரதம் ஆகிய 3 இதழ்களில் மொத்தம் 47 கதைகள் வெளிவந்ததைக் குறிப்பிட்டு, தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் சிங்கப்பூரின் தனித்துவப் பங்களிப்பாக இந்தக் கதைகளைக் கருதவேண்டும் என பாலபாஸ்கரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆய்வை விரிவுபடுத்தி ‘The Malaysian Tamil Short Stories 1930-1980 – A Critical Study’ என்ற ஆங்கில நூலை 2006-ல் வெளியிட்டார். அடிக்குறிப்புகளில்,  இங்கு வெளிவந்த நூல்கள், இதழ்கள் குறித்த அரிய தகவல்களையும் கொண்டிருக்கும் தமிழ், ஆங்கில நூல்கள் இரண்டும் சிங்கப்பூர் -மலாயாவின் இலக்கியம், சமூக வரலாறு குறித்த ஆய்வுகளுக்கான முக்கிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

'கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும் - இன்றைய பார்வை’ என்ற ஆய்வு பாலபாஸ்கரனின் நீண்ட கால உழைப்பு. சிங்கப்பூர் -மலேசியாவின் ஒப்பற்ற சமூகத் தலைவரான  கோ.சாரங்கபாணி, தமிழ் முரசைத் துணையாகக்கொண்டு வாய்ப்பு வசதியற்ற தமிழர்களின் முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளை எப்படி முன்னெடுத்தார் என்பதை இந்நூல் விவரிக்கிறது.

மலேசிய – சிங்கை இலக்கியத்ம் பற்றி ஒன்பது கட்டுரைகள், ஐந்து சந்திப்புகள் எனத் தொகுத்துக்கொடுத்த ‘சிங்கப்பூர் - மலேசிய தமிழ் இலக்கியத் தடம் - சில திருப்பம்’ இன்னொரு முக்கிய நூல். சிங்கப்பூர் மலேசியா தொடர்பான இலக்கிய, சமூக, வரலாற்றுத் தகவல்களை மையமாகக்கொண்ட நூல். இணையத்தளத்தில் அவர் எழுதிவெளியிட்டிருந்த கட்டுரைகளைச் செறிவாக்கி, புதிய கட்டுரைகளையும் சேர்த்து இந்நூலை வெளியிட்டுள்ளார்.

மாதவி இலக்கிய மன்றமும், தங்கமீன் இணைய இதழும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘சிங்கப்பூர்த் தமிழ் இதழ்கள் 1875 – 1941′ என்ற தலைப்பில் திரு. பால பாஸ்கரனின் உரை நிகழ்ச்சி 19.02.2011 அன்று அங் மோ கியோ நூலகத்தில் நடைபெற்றது.
16.3.2016 சிங்கப்பூர் வாசகர் வட்ட ஆண்டுவிழாவில் பாலபாஸ்கரனின் 'கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும்: இன்றைய பார்வை' நூல் வெளியீடு கண்டபோது. இடமிருந்து மூன்றாவது பாலபாஸ்கரன், நூலை வெளியிட்ட நாஞ்சில் நாடான்.

ந. பாலபாஸ்கரனின் இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் பெரும்பாலும் 1910 முதல் 1980 வரையிலான காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டவை.

சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் 25-ஆவது ஆண்டு நிறைவு மலருக்காக சிங்கப்பூர் சிறுகதைகள் குறித்து பாலபாஸ்கரன் எழுதிய ஆய்வுக் கட்டுரை சிங்கப்பூரின் அக்காலகட்ட சிறுகதைகள் குறித்த கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறது.  அமரர் நா. கோவிந்தசாமி நினைவையொட்டி ‘நா.கோவிந்தசாமி எனும் படைப்பாளி’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ‘எது முதல் சிறுகதை? அது எங்கே இருக்கிறது?’ என்ற தலைப்பில் பாலபாஸ்கரன்  படைத்த கட்டுரையில்,. சிங்கை நேசன் ஆசிரியர் மகுதூம் சாயுபு 1888-ல் விநோத சம்பாஷணை என்று தலைப்பிட்டு எழுதிய சில சம்பாஷணைகளை தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை என்று நா.கோவிந்தசாமி நிறுவியதை சிறுகதை இலக்கணம், வரலாற்று போன்றவற்றை மேற்கோள்காட்டி மறுத்ததுடன், பொதுஜனமித்திரன் எனும் சிங்கப்பூரில் வெளிவந்த பத்திரிகையில் மே 28. 1924-ல்வெளிவந்த 'பாவத்தில் சம்பளம் மரணம்’ எனும் சிறுகதையே இவ்வட்டாரத்தில் வெளிவந்த முதல் கதை என்று வலியுறுத்தினார்.

1875 முதல்  1941 வரை சிங்கப்பூரில் தமிழில் ஐம்பது ஏடுகளும், 1883 முதல் 1941 வரை மலாயாவில் அறுபது ஏடுகளும் வந்திருக்கின்றன என்பதை பெயர் விவரங்களுடன் முறையாகப் பட்டியலிட்டவர் பாலபாஸ்கரன். அதுபோல முறையான பதிவுகளோ, சேமிப்போ இல்லாத ஒரு சூழலில் 100 ஆண்டு காலத்துக்கும் மேற்பட்ட இதழ்களையும் சஞ்சிகைகளையும் தேடிப் பிடித்து ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார்.

பாலபாஸ்கரன் ஐந்து நூல்களின் ஆசிரியர். அவற்றுள் இரண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. ஆங்கிலம், தமிழ், மலாய் மொழிகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

புனைவிலக்கியம்

கோலாலம்பூர் பாரதியார் விழாவுக்காக பாரதியாரின் சில பாடல்களைப் பேராசிரியர் ச.சிங்காரவேலு, விரிவுரையாளர் பி. பழநியப்பன் ஆகியோருடன் சேர்ந்து மலாயில் மொழிபெயர்த்து அச்சிட்டுள்ளார்.

வானொலிக்காக  நடப்புவிவகார செய்திகளுடன் சிறுகதைகள், நாடகங்கள், இலக்கிய விமர்சனம், கட்டுரையும் எழுதியுள்ளார். 50 சிறுகதைகளை எழுதியுள்ளார்.

இறுதிக் காலம்

பணி ஓய்வு பெற்றபின்னர் ஆய்வு எழுத்துகளில் தீவிர ஈடுபாடு காட்டிவந்த பாலபாஸ்கரனுக்கு 2012-ல் தொண்டையில் ஏற்பட்ட புற்றுநோய் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. வானொலிக் கலைஞர், தயாரிப்பாளராக தனித்தன்மையான குரல்வளத்தால்  ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்தவர், அறுவை சிகிச்சைக்குப் பின் பெரும் பலமாக இருந்த குரலை இழந்தார். இருந்தபோதும் நூலாக்கங்களில் உற்சாகத்துடன் ஈடுபட்டு வந்தார்.

அதன்பின்னான 10 ஆண்டு காலத்தில் அதிக துடிப்போடு இயங்கினார். இரு முக்கிய நூல்களை வெளியிட்டார். பல கட்டுரைகளை இணையத்தளத்தில் எழுதினார். 2020-ல் மனைவியின் இறப்புக்குப் பின்னர் உடலும் மனமும் மிகவும் சோர்ந்தபோதும், ‘சிங்கப்பூர் சுகப் பிரசவம் அல்ல’ எனும் நூலை நிறைவுசெய்தார்.

சிங்கப்பூர் -மலேசியாவில் பத்திரிகை, கவிதை, நாவல், சிறுகதை, நாடகம் ஆகிய ஐந்து வடிவங்களின் தொடக்கமும் வளர்ச்சியும் விரிவாக எழுதப்பட்ட ‘வாழவந்தவர் எழுதி வைத்தனர்: வரலாற்றில் ஏறிவிட்டனர்’ நூல் வெளிவர இருப்பதாக ‘சிங்கப்பூர் - மலேசிய தமிழ் இலக்கியத் தடம் - சில திருப்பம்’ நூலில் அறிமுக உரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், Early Tamil Printing (books and periodicals) in Singapore and Malaysia; The Indian Mutiny in Singapore in 1915; The Origin and Growth of the Tamil Nesan and the Tamil Murasu ஆகிய தலைப்புகளிலும் நூல்களை எழுதிக்கொண்டிருந்தார்.

உடல் நலிவுற்று பிப்ரவரி 19, 2023-ல் காலமானார்.

2016ல் கவிமாலை அமைப்பின் கணையாழி விருதைப் பெற்றபோது.
கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும் - இன்றைய பார்வை நூலுக்காக சிங்கப்பூர் இலக்கியப் பரிசை வென்றபோது

விருதுகள்

  • 2018-ஆம் ஆண்டின் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு (தமிழ்- அபுதினப் பிரிவு),(கோ. சாரங்கபாணியும் தமிழ் முரசும் – இன்றைய பார்வை)
  • தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்– சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை இணைந்து வழங்கும் கரிகாழச்சோழன் விருது (கோ. சாரங்கபாணியும் தமிழ் முரசும் – இன்றைய பார்வை)
  • கவிமாலை அமைப்பின் கணையாழி விருதையும் இவர் 2016-ஆம் ஆண்டு பெற்றார்.

பங்களிப்பு / வரலாற்று இடம்

ந.பாலபாஸ்கரன் மலாயா- சிங்கப்பூர் இலக்கியங்களை தரவுகளுடன் ஆராய்ந்து எழுதிய முன்னோடி ஆய்வாளராகவும், புகழ்பெற்ற ஊடகவியலாளராகவும் மதிப்பிடப்படுகிறார். மலாயாப் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்த காலகட்டத்தில் பாலபாஸ்கரன் மலாய் மொழியில் தமிழ் தொடர்பான ஆய்வுகளை வெளியிட்டிருக்கிறார் என்கிறார் செ.ப.பன்னீர்செல்வம். சிங்கப்பூர் – மலேசியா தமிழ் இலக்கியத் தடம்’ நூலில் பாலபாஸ்கரன் அளித்துள்ள தகவல்களை ஆய்வுக்குட்படுத்தி விரிவுபடுத்தினால் அது முழுமையான சிங்கப்பூர் – மலேசியப் புனைவிலக்கிய வரலாறாக மலரக்கூடும் என்கிறார் சிவானந்தம் நீலகண்டன். ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ (பொதுஜனமித்திரன், மே 28, 1924) என்ற கதையே சிங்கப்பூரின் முதல் தமிழ்ச் சிறுகதை என்ற பாலபாஸ்கரனின் ஆய்வு முடிவும் குறிப்பிடத்தக்கது.

நூல்கள்

  1. மலேசியத் தமிழ்ச் சிறுகதை [அரசி பதிப்பகம், புதுச்சேரி, 1995]  
  2. The Malaysian Tamil Short Stories (1930-1980) – A Critical Study [சொந்த வெளியீடு, 2006]
  3. VR Nathan – Community Servant Extraordinary [ISEAS Publishing, 2012]
  4. கோ. சாரங்கபாணியும் தமிழ் முரசும் – இன்றைய பார்வை [சொந்த வெளியீடு, 2016]
  5. சிங்கப்பூர் – மலேசியா தமிழ் இலக்கியத் தடம், சில திருப்பம் [சொந்த வெளியீடு, 2018]

உசாத்துணை


✅Finalised Page