under review

நித்ய சைதன்ய யதி

From Tamil Wiki
நித்ய சைதன்ய யதி
நித்ய சைதன்ய யதி
நித்ய சைதன்ய யதி
Nitya Guru
Guru
Guru
நித்யா
குரு

நித்ய சைதன்ய யதி (ஜெயச்சந்திரப் பணிக்கர்) (நவம்பர்2,1923 - மே 14, 1999) சிந்தனையாளர், தத்துவ அறிஞர், அத்வைதி, ஆன்மிகவாதி. நாராயணகுருவின் மரபில் வந்தவர். நடராஜகுருவின் மாணவர். நாராயணகுருவும் நடராஜகுருவும் உருவாக்கிய புதிய அத்வைத நோக்கையும் முதல் முழுமைவாத நோக்கையும் நவீன இலக்கியக் கோட்பாடுகளிலும் அறிவியல் கோட்பாடுகளிலும் செயல்படுத்திக் காட்டியவர் நித்ய சைதன்ய யதி. நடராஜகுரு நிறுவிய நாராயண குருகுலத்தின் இரண்டாவது தலைவர்.

பிறப்பு, கல்வி

பிறப்பு

நித்ய சைதன்ய யதியின் இயற்பெயர் ஜெயச்சந்திரப் பணிக்கர். நவம்பர் 2,1923-ல் கேரளாவின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் கோந்நி அருகே முறிஞ்ஞகல் என்ற ஊரில் பந்தளம் பணிக்கர்கள் என்ற ஈழவ நிலப்பிரபுக் குடும்பத்தில் பந்தளம் ராகவப் பணிக்கர், வாமாக்ஷி அம்மா இணையருக்குப் பிறந்தார்.

முன்னோர்

நித்ய சைதன்ய யதியின் தந்தை பந்தளம் ராகவப் பணிக்கர் ஆசிரியராகப் பணியாற்றினார். பந்தளம் ராகவப்பணிக்கர் கவிஞர், கட்டுரையாசிரியர் என புகழ்பெற்றிருந்தார். தாய்வழித் தாத்தா பாலி மொழி அறிஞர். பௌத்த மதம் சார்ந்த பல செப்பேடுகள் அவரது குடும்பத்திலிருந்து கிடைத்துள்ளன. மூலூர் பத்மநாபப் பணிக்கர் என்னும் புகழ்பெற்ற கவிஞர் நித்ய சைதன்ய யதியின் தாய்மாமா

கல்வி

நித்ய சைதன்ய யதி நாணு பிள்ளை என்னும் ஆசிரியரின் திண்ணைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். பந்தளம் அருகே குளத்துங்கல் உயர்நிலைப்பள்ளியில் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தபின் 1939 ல் வீட்டை விட்டு கிளம்பி பிரிட்டிஷ் இந்தியாவில் வட இந்தியாவிலும் இன்றைய பாகிஸ்தாநிலும் பங்களாதேஷிலும் நாடோடியாக 8 ஆண்டுகள் அலைந்தார்.

1947-ல் மீண்டும் பந்தளத்திற்கு திரும்பினார். ஆலுவா யூனியன் கிறிஸ்தவக் கல்லூரியில் தத்துவம் இளங்கலைப் படிப்பில் சேர்ந்தார். அதன்பின் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் 1952-ல் தத்துவத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார். உளவியல் அதில் விருப்பப் பாடமாக இருந்தது.

1956-ல் மும்பை பல்கலையில் இருந்து விழியிழந்தோர் உளவியலில் முனைவர் பட்டம் பெற்றார்

கல்விப்பணி

Nitya Guru

நித்ய சைதன்ய யதி கொல்லம் ஶ்ரீநாராயணா கல்லூரியில் 1952 ல் தத்துவ ஆசிரியராகப் பணியாற்றினார். 1953 முதல் ஓராண்டுக்காலம் சென்னை விவேகானந்தா கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

ஜவஹர்லால் நேருவின் ஆணைப்படி 1959-ல் மாற்று உளவியல் ஆய்வு மையம் துவக்கப்பட்டபோது அதன் ஸ்தாபக தலைவராக இருந்தார்.

நித்ய சைதன்ய யதி போர்ட்லண்ட், சிக்காகோ உள்ளிட்ட பல பல்கலைகழகங்களில் கீழைத் தத்துவம் மற்றும் மாற்று உளவியல் துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். இங்கிலாந்திலும், பிரான்ஸிலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்

ஆன்மிக வாழ்க்கை

நித்ய சைதன்ய யதி குழந்தையாக இருக்கையில் அவருடைய தந்தை அவரை காந்தியை பார்க்க அழைத்துச் சென்றிருந்தார். காந்தி முன் நித்ய சைதன்ய யதி ஒரு பிரார்த்தனைப் பாடலைப் பாடினார். குழந்தையாக நாராயணகுருவையும் நித்ய சைதன்ய யதி கண்டிருந்தார்.

பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு நாடோடியாக அலைந்த காலகட்டத்தில் நித்ய சைதன்ய யதி திருவண்ணாமலையில் ரமணரின் ஆசிரமத்திலும், சபர்மதியில் காந்தியின் ஆசிரமத்திலும் சிலகாலம் இருந்தார். பல்வேறு ஆன்மிக ஆசிரியர்களை அவர் அப்போது சந்தித்தார்

Guru

கொல்லம் ஶ்ரீநாராயணா கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிவந்தபோது அங்கே சொற்பொழிவாற்ற வந்த நடராஜகுருவின் அறிமுகம் ஏற்பட்டது. சென்னை ராமகிரிஷ்ண மடத்தின் விவேகானந்தா கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றியபோது 1953-ல் டாக்டர் ராதாகிருஷ்ணனுடனான ஒரு தத்துவ மோதலுக்குப் பிறகு அப்பதவியைத் துறந்தார்.

நித்ய சைதன்ய யதி, நடராஜகுரு
நடராஜகுருவுடன்

1953-ல் ஜெயச்சந்திரன் ஊட்டி ஃப்ரென்ஹில் குருகுலத்துக்குச் சென்று நடராஜகுருவின் நேரடி சீடரானார். இருவரும் கடும் வறுமையில் தனிமையில் பல வருடங்களை ஊட்டியில் செலவிட்டார்கள். நடராஜகுருவிடமிருந்து ஜெயச்சந்திரன் துறவு பெற்று நித்யசைதன்ய யதி என்ற பெயரை சூட்டிக்கொண்டார். 1956-ல் நடராஜ குரு உலகப்பயணம் மேற்கொண்டபோது மும்பை சென்று முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார்.

உலகப்பயணம்
குரு ஒரு வகுப்பு

1969-ல் நித்ய சைதன்ய யதி ஆஸ்திரேலியாவுக்கு ஒரு மாலுமியால் அழைத்துச் செல்லப்பட்டுத் திட்டமிடப்படாத ஓர் உலகப் பயணத்தை துவங்கினார். ஆஸ்திரேலியாவில் ஓராண்டு வாழ்ந்தபின் அமெரிக்கா சென்றார். போர்ட்லண்ட், சிக்காகோ உள்ளிட்ட பல பல்கலைகழகங்களில் கீழைத் தத்துவம் மற்றும் மாற்று உளவியல் துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். இங்கிலாந்திலும், பிரான்ஸிலும் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ரஸ்ஸல், கார்ல் பாப்பர் போன்றவர்களிடம் தொடர்பு கொண்டிருந்தார்.

Guru

நாராயணகுருகுலம்

நடராஜகுரு 1924 ல் நீலகிரியில் நாராயணகுருகுலம் என்னும் அமைப்பை உருவாக்கியிருந்தார். 1936-ல் ஊட்டி ஃபெர்ன் ஹில் என்னுமிடத்தில் அன்பளிப்பாகக் கிடைத்த தேயிலைத்தோட்டத்தில் சிறிய குடில் ஒன்றைக் கட்டி நாராயணகுருகுலம் அமைப்பை மீண்டும் தொடங்கினார். அவ்வமைப்பின் தலைமையகம் பின்னர் கேரளத்தில் வர்க்கலாவில் நாராயணகுரு தொடங்கிய ஶ்ரீநாராயண தர்ம பரிபாலன சபா தலைமையகம் அருகே அமைந்தது. 1970-ல் நடராஜகுரு தனக்குப்பின் அவ்வமைப்பின் தலைவராக நித்ய சைதன்ய யதி பணியாற்றவேண்டும் என ஆணையிட்டார்.

1973-ல் நடராஜகுரு உடல்நலம் குறைந்தபோது நித்ய சைதன்ய யதி இந்தியா திரும்பி நாராயண குருகுலத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்றார். நித்ய சைதன்ய யதி பின்னர் பெரும்பாலும் ஊட்டி பெர்ன் ஹில் குருகுலத்தில் தங்கியிருந்தார். நாராயண குருகுலம் நித்ய சைதன்ய யதியின் காலகட்டத்தில் பெரிதாக வளர்ந்தது. எழிமலை, ஆலுவா, தொடுபுழா என பல ஊர்களில் அதன் கிளைகள் அமைந்தன.

நடராஜகுருவின் ஆணைப்படி தலைமைப்பொறுப்பில் மூன்றாவது இடத்தில் இருந்த முனி நாராயணப் பிரசாத் நித்ய சைதன்ய யதி மறைவுக்குப் பின் நாராயண குருகுலத்தின் தலைமைப்பொறுப்பில் இருக்கிறார்.

எழுத்துக்கள்

நித்ய சைதன்ய யதி ஆங்கிலத்தில் எண்பது நூல்களையும், மலையாளத்தில் நூற்று இருபது நூல்களையும் எழுதினார். நித்ய சைதன்ய யதியின் எழுத்துக்கள் இலக்கியம், கலை, அறிவியல், ஆன்மிகம் என்னும் நான்கு தளங்களைச் சேர்ந்தவை. அனைத்து அறிதல்களையும் ஒன்றென உணரும் ஒரு மெய்ஞானத்தை அவர் முன்வைத்தார். அதை முழுமையறிவு அல்லது மதிப்பீடுகளின் சேர்ந்திசை (Symphony Of Values) என்று அவர் வரையறை செய்தார்

இலக்கியம்

நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இலக்கிய விமர்சன நூல்களை, ஆய்வுநூல்களை எழுதியிருக்கிறார். மாக்ஸிம் கார்க்கி, சீமோன் த பூவா போன்ற மேலைநாட்டு இலக்கிய ஆசிரியர்கள் பற்றிய ஆய்வுகள் முதல் இந்திய இலக்கிய மரபு குறித்த ஆய்வுகள் வரை அவை பல வகையானவை. இலக்கியக் கொள்கைகள் பற்றியும் எழுதியுள்ளார். கேரள கவிஞர் குமாரன் ஆசானின் கவிதைகள் பற்றிய ஆய்வுநூலுக்காக கேரள சாகித்ய அக்காதமி விருது பெற்றார்

கலை

ஓவியக்கலையில் ஈடுபாடு கொண்டிருந்த நித்ய சைதன்ய யதி ரஷ்ய ஓவியர் ஷெகால் குறித்தும் இந்திய வங்காள ஓவியக்கலைமரபு குறித்தும் நூல்களை எழுதியிருக்கிறார்

நித்ய சைதன்ய யதி சமாதி. ஊட்டி ஃபெர்ன் ஹில்
அறிவியல்

நித்ய சைதன்ய யதி உளவியலாளர். உளவியலை அறிமுகம்செய்யும் நூல்களை எழுதியிருக்கிறார். உளவியலையும் இந்திய ஞானமரபையும் இணைத்து ஆராயும் நூல்களையும் நவீன இயற்பியலின் தத்துவம் குறித்த நூல்களையும் எழுதியிருக்கிறார். எளிய உளவியல் ஆலோசனை நூல்களையும் எழுதியுள்ளார்.

ஆன்மிகம்

நித்ய சைதன்ய யதியின் முதன்மைப் படைப்புக்கள் ஆன்மிகம் சார்ந்தவை. தொன்மையான இந்திய ஞானநூல்களுக்கும் நாராயண குரு எழுதிய நூல்களுக்கும் அவர் எழுதிய விரிவான உரைகள் புகழ்பெற்றவை. பகவத்கீதை, உபநிடதங்கள், விவேகசூடாமணி, சௌந்தரிய லகரி போன்ற நூல்களுக்கு உரைகள் எழுதினார். நாராயணகுருவின் தர்சன மாலா, ஆத்மோபதேச சதகம் போன்ற நூல்களுக்கும் விரிவான உரைகள் எழுதியிருக்கிறார். வேதாந்த மரபை விளக்கும் நூல்களை எழுதினார். நாராயண குருவின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியிருக்கிறார்.

கவிதைகள்

நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் இசைப்பாடல்கள் எழுதியுள்ளார். அவை 'நித்ய சைதன்ய கீதங்கள்', 'சங்கீர்த்தனங்கள்' என்ற பேர்களில் இரண்டு நூலாகியுள்ளன. இசையமைக்கப்பட்டு பாடப்பட்டுமுள்ளன.

நித்ய சைதன்ய யதி ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகள் 'My Inner Profile' என்ற தலைப்பில் நூலாகியுள்ளன.

தன்வரலாறு
குரு, எழுத்துப்பணியில்

நித்ய சைதன்ய யதி தன் வாழ்க்கை வரலாற்றை மலையாளத்தில் சிறு நூல்களாக எழுதினார். பின்னர் அவை ஒரே நூலாக தொகுக்கப்பட்டன. ஆங்கிலத்தில் அவை 'Love and Blessings' என்ற பேரில் ஒரே நூலாக வெளிவந்துள்ளன.

தத்துவம்

வேதாந்த மரபு

இந்தியச் சிந்தனை மரபில் வேதாந்த மரபு தொல்பழங்காலம் முதல் இருந்து வந்துள்ளது. ரிக்வேதத்தின் சிருஷ்டிகீதம் அதன் தொடக்கப்புள்ளி எனப்படுகிறது. அதன்பின் உபநிடதங்கள் வேதாந்த மெய்யியலை வளர்த்தெடுத்தன. பாதராயணர் அவருடைய பிரம்மசூத்திரம் வழியாக வேதாந்தக் கருத்துக்களை வரையறை செய்தார். அதன்பின் சமண, பௌத்த மதங்களின் எழுச்சி உருவானது. அந்த மரபுகளுடன் விவாதித்து வளர்ச்சியடைந்த வேதாந்த மரபை சங்கரர் உருவாக்கினார். அது அத்வைதம் எனப்படுகிறது. சங்கரர் உருவாக்கிய அத்வைத மடங்கள் நாடெங்கும் உள்ளன.

பின்னர் ராமானுஜர் வைணவத்தின் ஒரு பிரிவான விசிஷ்டாத்வைதம் எனும் மரபையும், மத்வர் வைணவத்தின் ஒரு பிரிவான துவைதம் எனும் மரபையும், நிம்பார்க்கர் வைணவப்பிரிவான துவைதாத்வைதம் என்னும் மரபையும் வல்லபர் புஷ்டிமார்க்கம் என அழைக்கப்படும் வைணவப்பிரிவான சுத்தாத்வைதம் என்னும் மரபையும் உருவாக்கினார்கள். இவர்களின் மரபுகள் உருவாக்கிய மடங்கள் இந்தியாவெங்கும் உள்ளன.

நீண்ட இடைவெளிக்குப்பின் நவீன காலகட்டத்தில் வேதாந்த மரபு புதிய வடிவில் உருவாகி வந்தது. இது நவவேதாந்தம் எனப்படுகிறது. இதன் முதன்மை ஆளுமை ராமகிருஷ்ண பரமஹம்சர். அவருடைய மாணவரான விவேகானந்தர் உருவாக்கிய ராமகிருஷ்ண மடம் மற்றும் அதன் வழியாக உருவாகி வந்த பிற மடங்கள் வழியாக நவவேதாந்தம் இந்தியாவில் வலுவாக வேரூன்றியது. சிவானந்தர் மடம், சின்மயானந்தர் மடம், தயானந்தர் மடம் போன்றவை அந்த வரிசையில் வரும் அமைப்புகள்.

மேலும் பல நவவேதாந்திகள் இந்தியாவில் உருவாயினர். நாராயணகுரு அவர்களில் ஒருவர். நாராயண குருவின் நவவேதாந்த தரிசனத்தை ஐரோப்பியச் சிந்தனைகளுடன் இணைத்து வளர்த்தெடுத்தவர்கள் அவருடைய மாணவரான நடராஜகுருவும், நடராஜ குருவின் மாணவரான நித்ய சைதன்ய யதியும்.

நாராயணகுருவின் தரிசனம்

நாராயண குருவின் வேதாந்தப் பார்வை சங்கரரின் அத்வைத தரிசனத்தின் நவீன வடிவம். ஆனால் ஒரு சிறிய வேறுபாடு நாராயணகுருவால் முன்வைக்கப்பட்டது. அத்வைதம் தூய பிரம்மவாதமாகும். 'பிரம்மம் எனப்படும் அருவமான, அறியமுடியாத ஒன்றே உண்மையில் உள்ளது. இப்பிரபஞ்சம் அதன் மாயை வடிவம்' என்பது அத்வைதம். நாராயண குரு இந்த பிரபஞ்சம் மாயை என்பதை ஏற்றுக்கொண்டாலும்கூட மாயை என்பது வெறும் தோற்றமயக்கம் அல்ல, அது இன்னொரு வகை யதார்த்தம் என்று கூறினார்.

சங்கரர் கயிற்றரவு என்னும் உவமையை முன்வைத்து பிரம்மவாதத்தை விளக்கினார். கயிற்றை பாம்பென நினைத்து அஞ்சுபவன் அஞ்சும்கணத்தில் கயிறு பாம்பாகவே உள்ளது, அச்சம் விலகியதும் அது கயிறு என உண்மையுரு காட்டுகிறது. அதைப்போல மாயையில் இருப்பவன் பிரபஞ்சத்தை மெய் என நினைக்கிறான். மாயை விலகியதும் அது பிரம்மம் என்று தெளிகிறான். இது சங்கரரின் உவமை. நாராயண குரு அதற்குப் பதிலாக மலரும் மாலையும் என்னும் உவமையை முன்வைத்தார். மலர்களை பார்க்கையில் மாலை தெரிவதில்லை. மாலையை பார்க்கையில் மலர்கள் தெரிந்தாலும் அவை ஒன்றாக ஆகி மாலையாக தெரிகின்றன. அதன் வழியாக இந்த உலகம் பொய் அல்ல, இங்குள்ள துயர்கள் வெறும் தோற்றங்கள் அல்ல என நாராயணகுரு சொன்னார். இந்தப் பார்வை காரணமாகவே அவர் சமூகசீர்திருத்தப் பணிகளிலும் கல்விப்பணிகளிலும் ஈடுபட்டார்.

நாராயண குருவின் பார்வை ஒரு குறிப்பிட்ட மதம், குறிப்பிட்ட வழிபாட்டுமுறை ஆகியவற்றைச் சார்ந்தது அல்ல. எல்லா மதக்கொள்கைகளையும் தத்துவங்களையும் இணைத்து ஒருமைப்பார்வையை உண்டுபண்ணிக்கொள்ள அவர் முயன்றார். அதை தத்வ சமன்வயம் என அழைத்தார்.

குரு பிறந்தநாள்
நடராஜகுருவின் பார்வை
குரு கலிஃபோர்னியா 1984

நாராயணகுருவின் தத்துவப் பார்வையை முதல்முழுமைவாதம் ( Absolutism) என வரையறைசெய்யும் நடராஜ குரு மிக விரிவாக அப்பார்வையை மேலைநாட்டு அறிஞர்களின் தத்துவங்களுடன் ஒப்பிட்டு விளக்கினார். இந்திய மெய்ஞானநூல்களான கீதை, சௌந்தரிய லஹரி ஆகியவற்றுடன் இணைத்தும் விளக்கினார். நாராயணகுருவின் நூல்களுக்கும், தொன்மையான மெய்ஞானநூல்களுக்கும் விரிவான விளக்கவுரைகளை நடராஜகுரு எழுதினார். அறிவியலறிஞரான நடராஜ குரு நவீன அறிவியலையும் தத்துவ ஆய்வுக்கு துணைகொண்டார். (பார்க்க நடராஜகுரு)

நித்யசைதன்ய யதியின் பார்வை

நாராயணகுருவும் நடராஜகுருவும் உருவாக்கிய புதிய அத்வைத நோக்கையும் முதல்முழுமைவாத நோக்கையும் நவீன கலையிலக்கியக் கோட்பாடுகளிலும் அறிவியல் கோட்பாடுகளிலும் செயல்படுத்திக் காட்டியவர் நித்ய சைதன்ய யதி. நித்ய சைதன்ய யதி நடராஜ குரு முன்வைத்த முதல்முழுமைவாதப் பார்வையை பயில்வதற்கான ஒரு வழிமுறையை உருவாக்கினார். அதை மதிப்பீடுகளின் சேர்ந்திசை ( Symphony of Values) என்று அழைத்தார்.

கலையிலக்கியங்கள், அறிவியல், தத்துவம், மெய்யியல், தியானம் அனைத்தையும் ஒன்றென ஆக்கி அறியும் முழுமையறிவை பயில்வதற்கான வழிமுறைகளை உருவாக்கினார். உண்மை என்பது நாம் அறியும் அழகு, முழுமை, நடைமுறைப்பயன் என எல்லாவகையிலும் தன்னைக் காட்டுவது என்றார். அதுவே சத்யம் சிவம் சுந்தரம் என்னும் சொல்லாட்சியாக உள்ளது. ஆகவே ஒன்றை இன்னொன்றைக்கொண்டு கற்பதும் மதிப்பிடுவதுமே உகந்த வழி. ஒவ்வொன்றிலும் நாம் காணும் மறுக்கமுடியாமை ஒன்றுண்டு, அதுவே பிரம்மம் என்பது நித்ய சைதன்ய வரி

குரு ஒரு வகுப்பு
அறிவியக்கம்

நித்ய சைதன்ய யதி கலை இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவர். கவிதை, ஓவியம், இசை மூன்றிலும் அவரது ஆர்வமும் பயிற்சியும் விரிவானது. அவரது எழுத்துக்களில் தத்துவ நோக்கைவிட கலைநோக்கு மேலெழுந்து காணப்பட்டது. இந்தியச்சிந்தனை, இலக்கிய மரபில் ஆழ்ந்த ஞானமும், அதேயளவு மேற்கத்திய சிந்தனை, கலையிலக்கிய மரபில் தேர்ச்சியும் கொண்டிருந்தார்.

குரு நூலகத்தில்

மேலைச் சிந்தனைகளையும் அழகியல் நோக்குகளையும் அப்படியே ஏற்று அவற்றை பிரதிபலிப்பதே சிறந்த செயல்பாடு என்று நம்புதல் இந்தியாவில் மைய ஓட்டமாக உள்ளது. இதற்கு எதிராக ஞானங்கள் அனைத்துமே மரபில் உள்ளன என்றும் மரபை பயின்று செயல்படுத்தலே போதும் என்றும் நம்புதல் இன்னொரு தரப்பாக உள்ளது. இந்த இரு எதிரெதிர் நிலைகள் வளர்ந்து இந்திய சிந்தனையானது தேக்கமடைந்த காலத்தில், இவ்விரு தேக்கநிலைகளுக்கும் எதிரான அலையாக எழுந்ததே நித்ய சைதன்ய யதி உருவாக்கிய அறிவியக்கம்.

நித்ய சைதன்ய யதி

மாணவர்கள்

இந்திய சிந்தனையில் தொடர்ச்சியாக மூன்றாவது தலைமுறையாக வளர்ச்சி பெற்ற சிந்தனைப்பள்ளி நாராயணகுருவினுடையது. பலகோணங்களில் பல தளங்களில் செயல்படும் முக்கியமான பல மாணவர்கள் இதற்கு அமைந்தனர்.

நாராயண குருவின் மாணவர்களில் கவிஞர் டி.கே.மாதவன், குமாரன் ஆசான் , சகோதரன் ஐயப்பன், நடராஜ குரு மற்றும் ஆகிய நால்வரும் முதன்மையானவர்கள். நடராஜ குருவின் மாணவர்களில் ஜான் ஸ்பியர்ஸ், நித்ய சைதன்ய யதி, மங்கலானந்த சுவாமி, சிதம்பர தீர்த்தர், முனி நாராயணப் பிரசாத், சுவாமி வியாசப்பிரசாத், ஜெஃப்ரி, வினய சைதன்யா ஆகியோர் முக்கியமானவர்கள்

நித்ய சைதன்ய யதியின் மாணவர்களில்

  • பீட்டர் ஓப்பன்ஹீமர்
  • பீட்டர் மொரேஸ்
  • நான்ஸி யீல்டிங்
  • எம்மா வாக்கர்
  • சுவாமி தன்மயா
  • ஷௌகத் அலி
  • டெபோரா புக்கானன்
  • டேவிட் டீட்ஸ்வர்த்

போன்ற பலர் பல தளங்களில் பணியாற்றி வருகிறார்கள்.

மலையாள எழுத்தாளர்களில் அஷித, தமிழ் எழுத்தாளர்களில் ஜெயமோகன் போன்ற பலர் நித்ய சைதன்ய யதியின் மாணவர்கள்.

நித்ய சைதன்ய யதி

மறைவு

நித்ய சைதன்ய யதி மே 14, 1999 -ல் சமாதியானார்.

நினைவுகள்

  • ஊட்டி ஃபெர்ன் ஹில் நாராயணகுருகுல வளாகத்தி ல் ஜப்பானிய முறைப்படி அமைந்த நித்ய சைதன்ய யதியின் சமாதி உள்ளது.
  • நித்ய சைதன்ய யதி பயின்ற ஆலுவா யூனியன் கிறிஸ்தவக் கல்லூரியில் அவர் பெயரில் ஒரு ஆய்விருக்கை அமைந்துள்ளது
  • தமிழகத்தில் அந்தியூர் அருகே நித்யவனம் என்னும் பெயரில் நித்யசைதன்ய யதி நினைவு பண்பாட்டுமையம் செயல்படுகிறது
  • நித்ய சைதன்ய யதி நினைவாக கேரளத்தில் காயங்குளம் அருகே குரு நித்ய சைதன்ய யதி சட்டக்கல்லூரி[1] செயல்படுகிறது

வரலாற்று இடம

”நித்ய சைதன்ய யதியின் அணுகுமுறை சமநிலை கொண்ட நடுப்பாதை. கண்மூடித்தனமான மேலைச்சார்பு, மரபு எதிர்ப்பு ஆகியவற்றுக்கு அவர் எந்த அளவுக்கு எதிரானவரோ அதேயளவுக்கு மரபு வழிபாடு, மதவாத அரசியல் ஆகியவற்றுக்கும் எதிரானவர். ஆனால் நாராயணகுருவின் மரபை ஒட்டியவர் என்பதால் ஒருபோதும் எதிர்மறைக் கருத்துக்களைச் சொல்லி விவாதங்களில் ஈடுபடும் இயல்பு அவரிடம் இல்லை-விதிவிலக்காக இந்திய அரசியலில் மதவாதம் தலையெடுத்தபோது மட்டும் ஒரு சிறு பிரசுரம் அளவுக்கு எதிராக எழுதியுள்ளார். ஆக்கபூர்வமான படைப்புகளை தொடர்ந்து முன்வைப்பதே அவரது வழிமுறையாகும். நூறு வருடம் முன்பு மனித சமத்துவம் மற்றும் முழுமையான ஆன்மிக விடுதலையின் குரலாக நாராயணகுருவின் தத்துவம் எழுந்தது. பின்பு உலகசிந்தனையை நோக்கி முழுமைவாதத்தை முன்வைப்பதாக அது நடராஜ குருவால் விரிவாக்கம் செய்யப்பட்டது. நித்ய சைதன்ய யதியின் காலத்தில் இந்திய மரபைச் சார்ந்து உலகசிந்தனையை எதிர்கொள்வதற்கான காய்தல் உவத்தல் அற்ற நோக்குநிலையாக அது வளர்ச்சி பெற்றது.” என ஜெயமோகன் மதிப்பிட்டார்.

நூல்கள் பட்டியல்

ஆங்கிலம்
  • The Bhagavad Gita: A Sublime Hymn of Yoga Composed by the Ancient Seer Vyasa(1981)
  • Brhadaranyaka Upanisad: with Original Text in Roman Transliteration (2000)
  • Saundarya Lahari: of Sankaracarya: A Translation and Commentary on the Anandalahari
  • Living the Science of Harmonious Union (Patanjali’s Yoga Shastra)
  • That Alone, the Core of Wisdom (2003) A Commentary on Atmopadesa Satakam, the One Hundred Verses of Self-instruction of Narayana Guru.
  • Love and Blessings: The Autobiography of Guru Nitya Chaitanya Yati (2000)
  • Neither this Nor that But ... Aum: One Hundred Meditations Based on Narayana Guru's Atmopadesa Satakam (1995)
  • Meditations on the way: a contemplative and personalized study of the Tao teh ching (1981)
  • Meditations on the Self (1974)
  • In the Stream of Consciousness (1976)
  • An Intelligent Man's Guide to the Hindu Religion (1976)
  • Marxism and Humanist Nonarchy (1980)
  • Sri Narayana Guru: A Brief Biographical Sketch (1984)
  • Love and Devotion(1995)
  • Psychology of Darsana Mala (2004)
தமிழில்
  • ஈசோவாஸ்ய உபநிடதம் (சூத்ரதாரி மொழிபெயர்ப்பு)
  • அனுபவங்கள் அறிதல்கள் (தமிழினி வெளியீடு)
  • குருவும் சீடனும் (எனி இண்டியன் பதிப்பகம்)
  • யதி : தத்துவத்தில் கனிதல் (தன்னறம் நூல்வெளி)
  • சின்னச் சின்ன ஞானங்கள் (யூமா வாசுகி மொழிபெயர்ப்பு) (தன்னறம் நூல்வெளி)
  • அறிவு: ஞானத்தின் ஆய்வியல் (எம். கோபாலகிருஷ்ணன்)
  • உண்மை சார்ந்த உரையாடல் (காலச்சுவடு) (நித்ய சைதன்ய யதி நேர்காணல்)
  • இந்துமதம் ஒரு விவேகிக்கான வழிகாட்டி - (மொழியாக்கம்.கே.பி வினோத்)
நித்யா

உசாத்துணை

இணைப்புகள்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page