under review

நாரா. நாச்சியப்பன்

From Tamil Wiki
Revision as of 05:30, 26 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved template to bottom of article)
நாரா. நாச்சியப்பன்

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (பிறப்பு: ஜூலை 13, 1927; இறப்பு: 2000த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

பிறப்பு, கல்வி

நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார் - அன்னபூரணி ஆச்சி இணையருக்கு, ஜூலை 13, 1927-ல் பிறந்தார். குடும்ப வணிகம் காரணமாக தந்தை பர்மாவில் வசித்தார். நாச்சியப்பன் பர்மாவில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி பயின்றார். தமிழகம் திரும்பி, திருச்சி தேசியக்கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

தனி வாழ்க்கை

நாரா நாச்சியப்பன் 1950-ல், பணி நிமித்தம் பர்மாவுக்குச் சென்றார். அங்கு கப்பல்களுக்கு உணவுப் பொருள் வழங்கும் நிறுவனம் ஒன்றில் கணக்கராகப் பணி புரிந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் தமிழகம் திரும்பினார். மணமானவர்.

நாரா. நாச்சியப்பனின் முதல் கவிதை

இலக்கிய வாழ்க்கை

நாரா நாச்சியப்பன், இளம் வயது முதலே இலக்கிய ஆர்வம் உடையவராக இருந்தார். கல்லூரியில் படிக்கும்போது ’மழை’ என்னும் அவரது முதல் கவிதை ’பொன்னி’ இதழில் வெளியானது. அவ்விதழில் ‘பாரதிதாசன் பரம்பரை’க் கவிஞர் ஆக அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து பல இதழ்களுக்குக் கவிதைகள் எழுதிய நாச்சியப்பன், பின்னர் அதே ‘பொன்னி’ இதழில் சேர்ந்து முருகு சுப்ரமணியனுக்கு உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். சிறார்களுக்காகப் பல கதைகளை, நூல்களை எழுதினார். இவரது கவிதைகள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ‘நான்கு பார்வையில் பாரதிதாசன்’, ‘குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்’ போன்றவை இவரது திறனாய்வு நூல்கள். அண்ணாவின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதினார். அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

இளந்தமிழன் இதழ்: ஆசிரியர் - நாரா. நாச்சியப்பன்.

இதழியல் வாழ்க்கை

நாச்சியப்பன் சிறார் இலக்கியத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் ‘முத்து’ என்ற சிறார் இதழை ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார். இளைஞர்களுக்காக ‘இளந்தமிழன்’ என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். தனது நூல்களை அச்சிடுவதற்காக ’நாவல் ஆர்ட் பிரிண்டர்ஸ்’ என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார்.

அரசியல் வாழ்க்கை

நாரா நாச்சியப்பன் ‘குடியரசு’ இதழின் கட்டுரைகளால் ஈர்க்கப்பட்டார். ஈ.வெ.ரா. பெரியாரின் கொள்கைகளை ஏற்றுப் பகுத்தறிவுவாதி ஆனார். பாரதிதாசன் கவிதைகளை வாசித்தும், அண்ணாவின் சொற்பொழிவுகளைக் கேட்டும் தனது சிந்தனையை மேம்படுத்திக் கொண்டார். அண்ணாத்துரை திராவிடர் கழகத்திலிருந்து விலகி, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியபோது நாச்சியப்பனும் அதில் தன்னை இணைத்துக் கொண்டார். பல திராவிட இயக்கக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றி இருக்கிறார். மு. கருணாநிதி, அன்பழகன் போன்றோருக்கு நண்பராக இருந்தார்.

பர்மாவில் பணியாற்றியபோது, பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளாராகப் பொறுப்பு வகித்தார். 1954-ல் அங்கு வருகை தந்த ஈ.வெ. ராமசாமிப் பெரியாருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தார். பெரியாருடனான தனது அனுபவங்களை பின்னர் ‘பர்மாவில் பெரியார்’ என்ற தலைப்பில் நூலாக எழுதினார்.

விருதுகள்

  • தமிழக அரசின் பாரதிதாசன் விருது (1990)
  • சிறுவர் இலக்கியப் பங்களிப்புக்காகத் தமிழக அரசின் பரிசு (1991)
  • சேலம் அறக்கட்டளைப் பரிசு - கீதை காட்டும் பாதை நூலுக்காக.
  • பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில் பணமுடிப்பும் பாராட்டும் அளிக்கப்பட்டு தமிழக அரசால் சிறப்பிக்கப்பட்டார்.

மறைவு

நாரா. நாச்சியப்பன் 2000ங்களுக்குப் பின் வந்த ஓர் ஆண்டில் காலமானார்.

நாட்டுடைமை

நாரா. நாச்சியப்பனின் நூல்கள், 2015-ல், தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

ஆவணம்

நாரா. நாச்சியப்பனின் நூல்களில் சில தமிழ் இணையக் கல்விக்கழக நூலகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன.

இலக்கிய இடம்

நாரா. நாச்சியப்பன், திராவிட இயக்கம் சார்ந்த எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய பல நூல்களை எழுதியுள்ளார். சிறார் படைப்பாளராகவும், கவிஞராகவும் இவரது பங்களிப்புகள் அதிகம் என்பதால் அவ்வகை எழுத்தாளராகவே  இவர் அறியப்படுகிறார்.

நாரா. நாச்சியப்பனின் புத்தகங்களில் சில

நூல்கள்

சிறார் நூல்கள்
  • மூன்றாவது இளவரசன்
  • குமரித் தீவு
  • சரவணச்சாமி
  • காளி கோயில்
  • மாஸ்டர் கோபாலன்
  • சவுக்கடி தர்பார்
  • மாந்தோப்பு மன்னன்
  • கிரேக்கப் புராணக் கதைகள்
  • ஐந்து மூக்கு மிருகம்
  • ஒட்டுக் குடுமி பட்டுச் சாமி
  • நீளமூக்கு நெடுமாறன்
  • அழகு இளவரசி
  • தெய்வ அரசு கண்ட இளவரசன்
  • சிட்டு
  • அப்பம் தின்ற முயல்
  • காக்கைப் பள்ளிக் கூடம்
  • அசோகர் கதைகள்
  • பஞ்சதந்திரக் கதைகள்
  • தாவிப் பாயும் தங்கக் குதிரை
  • பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்
  • மாயத்தை வென்ற மாணவன்
  • இறைவர் திருமகன்
  • தங்கத் தேனீ
  • பஞ்சதந்திரக் கதைகள்
  • பறவை தந்த பரிசு-1
  • பறவை தந்த பரிசு-2
  • பாசமுள்ள நாய்க்குட்டி
  • ஒரு ஈயின் ஆசை
  • கள்வர் குகை
சிறார் பாடல் நூல்கள்
  • பாடு பாப்பா
  • சிறுவர் பாட்டு
  • மழலைச் சோலை
  • மழலைப் பொழில்
  • மழலைப் பூங்கா
  • செம்மை நலம்
  • குழந்தைப் பாடல்கள்
பாடல் தொகுப்புகள்
  • கல்வி நெறி
  • சான்றோர்
  • சிங்காரக் கவிதைகள்
  • நாச்சியப்பன் பாடல்கள்
  • நாச்சியப்பன் பாடல்கள் முதல் தொகுதி
  • நாச்சியப்பன் பாடல்கள் இரண்டாம் தொகுதி
  • தமிழ் வளர்கிறது
  • நெறிசூடி (புதிய ஆத்திச்சூடி)
நாவல்கள்
  • மோகனக் கிளி
  • நான்கு பக்கீர்கள் கதை
  • மதுரைச் சீமையில் புதுவைக் கள்ளன்
  • நகரும் சுவர்
  • உமார் கயாம்
  • மன ஊஞ்சல்
சிறுகதைத் தொகுப்புகள்
  • நல்வழிச் சிறுகதைகள் முதல் பாகம்
  • நல்வழிச் சிறுகதைகள் இரண்டாம் பாகம்
  • ஏழாவது வாசல்
கட்டுரை நூல்கள்
  • குருகுலப் போராட்டம்
  • இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு
  • பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சர்
  • கடல் வீரன் கொலம்பஸ்
  • பர்மாவில் பெரியார்
  • புத்த பெருமான் வரலாறு
  • என்ன? ஏன்? எப்படி?
  • மூன்று திங்களில் அச்சுத் தொழில்
  • ஓவியப் பாவை
  • தேடி வந்த குயில்
  • குயில் ஒரு குற்றவாளி
  • குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்
  • நாயகப் பெருமான்
  • ஈரோட்டுத் தாத்தா
  • கீதை காட்டும் பாதை
  • கடவுள் பாட்டு
  • மதங்கள் ஒரு ஞானப் பார்வை
  • பாரதிதாசன் ஒரு சித்திரக்கவி
  • இன்பத் திராவிடம்
நாடகம்
  • சிந்தனையாளர் மாக்கியவெல்லி


உசாத்துணை

நாரா. நாச்சியப்பன் நூல்கள்: தமிழ் இணையக் கல்விக் கழகம்:


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.