under review

நாராயணையங்கார்

From Tamil Wiki
Revision as of 09:04, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)
நாராயணையங்கார்

நாராயணையங்கார் (அக்டோபர் 31, 1861 - ஜூலை 29, 1947) தமிழறிஞர், பதிப்பாளர், இதழாளர். மதுரை தமிழ்ச்சங்கத்தால் வெளியிடப்பட்ட செந்தமிழ் இதழின் மூன்றாவது கட்ட ஆசிரியர்.

பிறப்பு கல்வி

அ. நாராயண ஐயங்கார் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ள எதிர்க்கோட்டை என்னும் சிற்றூரில் அக்டோபர் 31, 1861 அன்று கோ. அப்பனையங்கார் – செங்கமலவல்லி என்னும் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். மாடபூசி என்னும் குலமுறை கொண்டவர் (ஆந்திர நிலத்தில் மாடசி என்னும் ஊரில் இருந்து படையெடுப்பின்போது குடிபெயர்ந்து வந்தவர்கள்)

ஆரம்பக் கல்விக்குப்பின் இராமநாதபுரம் சென்று பாண்டித்துரை தேவரின் தந்தை பொன்னுச்சாமித் தேவரின் அணுக்கரானார். ராமநாதபுரத்தில் வாழ்ந்த பந்தல்குடி வேங்கடாசாரியாரிடம் சம்ஸ்கிருதத்தையும் சித்தாத்திக்காடு ஸ்ரீவாசாசாரியாரிடம் திவ்யப் பிரபந்தம் உள்ளிட்ட வைணவ நூல்களையும் சாமாசாரியாரிடம் ஏரணமுறை (தருக்கம்)யையும், திருவாவடுதுறை ஆதீனம் பழனிக்குமார தம்பிரானிடம் சைவநூல்களையும் கற்றார். மேலும் சதாவதானம் முத்துசாமி ஐயங்காரிடம் குருகுலவாசம் செய்து பல நூல்களைக் கற்றறிந்தார். முத்துசாமி ஐயங்காரின் மகன் மு. இராகவையங்கார். முத்துசாமி ஐயங்காரின் மருமகன் ரா.ராகவையங்கார்.

நாராயணையங்கார்

இலக்கியவாழ்க்கை

முத்துசாமி ஐயங்காரிடம் பயில்கையில் உடன்பயின்ற மதுரை பாண்டித்துரைத் தேவர் அரசவையில் அவைக்களப் புலவராகப் பணியாற்றினார். மே 24, 1901-ல் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டபோதிருந்து தமிழ்ச்சங்கக் கலாசாலைத் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் இறுதிக்காலம் வரை ஏறத்தாழ நாற்பத்தாறு ஆண்டுகள் அப்பதவியை வகித்தார். பாண்டித்துரை தேவரின் கோரிக்கைக்கு ஏற்ப மொழியாக்கம் செய்த 'ஜாதகசந்திரிகை’ என்னும் சம்ஸ்கிருத நூல் இவருடைய முதல் படைப்பு.

செந்தமிழ் ஆசிரியர்

நாராயணையங்கார் மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட வெளியிடப்படும் செந்தமிழ் இதழின் ஆசிரியராக 1911 முதல் 1947 வரை பணியாற்றினார். இவருக்கு முன்னர் அவ்விதழுக்கு 1902 முதல் 1907 வரை ரா.ராகவையங்கார் 1907 முதல் 1911 வரை மு. இராகவையங்கார் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர்.

இலக்கிய இடம்

நாராயணையங்கார் பாண்டித்துரைத் தேவர் மறைந்து செந்தமிழ் இதழ் இடர்களைச் சந்தித்த காலகட்டத்தில் தொடர்ந்து அவ்விதழை நடத்தினார்.

மறைவு

நாராயணையங்கார் ஜூலை 29, 1947 அன்று மறைந்தார்.

விருதுகள்

நாராயணையங்கார் பெற்ற விருதுகளும் பாராட்டுக்களும் பல. சில இங்கே வருமாறு:

  • 1896 - விக்டோரியா மகாராணியாரின் ஜுபிலீ பண்டிகைக் கொண்டாட்டத்தில் உதவி கலெக்டர் ராஜாராமையாவால் பரிசளிக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.
  • ஜனவரி 13, 1922 - வேல்ஸ் இளவரசர் சென்னை வருகையை முன்னிட்டு, சென்னை அரசாங்கம் நாராயண ஐயங்காரின் தமிழ் புலமையை மெச்சி அவருக்கு தங்கத் தோடாவும், பதக்கமும், சால்வையும், இளவரசர் கரத்தாலேயே பரிசளிக்கச் செய்து கௌரவித்தது.
  • 1934 - மதுரை தமிழ் சங்கத்தின் முப்பத்து மூன்றவது வருட விழாவில், அவர் தமிழ் சங்கத்திற்கு ஆற்றிய தொண்டை மெச்சி சென்னை மாகாண கவர்னர் முஹமது உஸ்மான் ஸாஹிப் பகதூர் கரத்தால் பொன்முடிப்பும் சால்வையும் அளித்துச் சிறப்பித்தனர்.
  • 1945 - சேது வேந்தர் ஷண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி அவர்கள் தமது முப்பத்து ஏழாம் ஆண்டு நிறைவு விழாவில் பொற்பதக்கமும் பட்டும் பரிசும் நல்கிப் பாராட்டினார்

நூல்கள்

இவர் பின்வரும் நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்:

  • வான்மீகரும் தமிழும் - 1938, செந்தமிழ் இதழில் கட்டுரையாக வந்தது, பின்பு புத்தகமாக வெளியிடப் பட்டது.
  • நியாயப் பிரவேச மணிமேகலை - அநுமான விளக்கம்
  • பரதாழ்வான் வைபவம் - செந்தமிழ் இதழில் கட்டுரையாக வந்தது, பின்பு "படியில் குணத்து பரதநம்பி" என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப் பட்டது.
  • அண்ட கோள விருத்தி - 1931, செந்தமிழ் இதழில் கட்டுரையாக வந்தது, பின்பு "வான்மீகரும் தமிழும்" புத்தகத்தின் பகுதியாக வெளியிடப் பட்டது.
  • அமிர்த ரஞ்சனி - 1939, செந்தமிழ் இதழில் கட்டுரையாக வந்தது, பின்பு "வான்மீகரும் தமிழும்" புத்தகத்தின் பகுதியாக வெளியிடப் பட்டது.
  • தமிழ் ஜாதகசந்திரிகா - ஜாதகசந்திரிகா என்ற வடமொழி நூலை தமிழ் வெண்பாக்களாக வடிக்கப்பட்ட நூல்
  • பழமொழி நானூறு உரை - பழமொழி நானூறின் முதல் 200 பாக்களுக்கான விரிவான உரை
  • பாண்டியம் - 1911-ஆம் ஆண்டு முதன் முதலில் எழுதப்பட்ட, பல மொழிகளுக்குப் பொதுவான எழுத்து வடிவமும் சுருக்கெழுத்தும்

இவை தவிர இலக்கணம். இலக்கியம். ஏரணம் (தருக்கம்), சோதிடம், வரலாறு, சமயம் தொடர்பாக ஐம்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

உசாத்துணை


✅Finalised Page