under review

நாஞ்சில் நாடன்

From Tamil Wiki
Revision as of 13:35, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)
Nanjil nadan3.jpg
தாடகை மலையடிவாரத்தில் ஒருவர்
நாஞ்சில்நாடன் சாகித்ய அக்காதமி
நாஞ்சில்நாடனுக்கு இயல்
நாஞ்சில்நாடன் மனைவி பேரக்குழந்தைகளுடன்

To read the article in English: Nanjil Nadan. ‎


நாஞ்சில் நாடன் (பிறப்பு: டிசம்பர் 31, 1947) நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளுள் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டாரவழக்கும் கலந்த நாஞ்சில்நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.

பிறப்பு, கல்வி

Nanjil.jpg

க. சுப்பிரமணியம் (ஜி. சுப்பிரமணியப் பிள்ளை) என்னும் இயற்பெயர் கொண்ட நாஞ்சில் நாடன் டிசம்பர் 31 ,1947 அன்று கன்னியாகுமரி மாவட்டம் வீரநாராயணமங்கலம் என்னும் ஊரில் கணபதியாப்பிள்ளை- சரஸ்வதி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். தந்தை ஓரேர் உழவர் என்று நாஞ்சில்நாடன் ஒரு பேட்டியில் சொல்கிறார்(ஓரேருழவர் என்பது ஒரு சங்ககால கவிஞரின் பெயர். இரு மாடுகளை மட்டும் கட்டி உழும் விவசாயி என்று பொருள்) கணபதியாபிள்ளை நாகர்கோயில் வடிவீஸ்வரம் பகுதியில் வாழ்ந்த பிராமணர்களின் நிலங்களை குத்தகைக்கு நிலம் வாங்கி விவசாயம் செய்துவந்தார்.

நாஞ்சில் நாடன் உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரி, ஐந்து சகோதரர்கள். இவரே மூத்தவர். இவரது சித்தப்பா-சித்திக்கும் நான்கு பெண்கள், இரண்டு மகன்கள். சித்தியின் மகன்களையும் மகள்களையும் தன் நேர்க்குடும்பமாகவும் எப்போதும் கருதி வந்திருக்கிறார்.

நாஞ்சில் நாடன் வீரநாராயணமங்கலம் அரசு ஆரம்பப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையும், இறச்சக்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையும் படித்தார். தாழக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். நாகர்கோவிலில் உள்ள தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் (S.T. Hindu College) இளங்கலை (பி.எஸ்.சி. கணிதம்) பட்டம் பெற்றார். இங்கே இவருக்கு முனைவர் அ.கா. பெருமாள், பேராசிரியர் வேதசகாயகுமார் இருவரும் கல்லூரித் தோழர்களாக இருந்தனர். நாஞ்சில் நாடன் தன் முதுகலைப் பட்டத்தை (எம்.எஸ்.சி. கணிதம்) திருவனந்தபுரம் மகாத்மா காந்தி மெமோரியல் கல்லூரியில் பெற்றார். நாஞ்சில் நாடன் முதுகலை மாணவராக திருவனந்தபுரத்தில் படித்துக் கொண்டிருந்த போது அவரது கல்லூரிக்கு நேர் எதிரே உள்ள மார் இவனீயோஸ் கல்லூரியில் நகுலன் ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

தனி வாழ்க்கை

Nanjil-nadan1.jpg

நாஞ்சில்நாடன் கணிதத்தில் முதுகலைப் பட்டம்பெற்றும் வேலை கிடைக்காமல் இரண்டு ஆண்டுகள் விவசாயத்தில் தந்தைக்கு உதவியாக இருந்தார். அவர்களுக்கு நிலங்களை குத்தகைக்கு விட்டிருந்த நிலஉடைமையாளர் மும்பையில் இருந்தார். அவருடைய பரிந்துரையின் பேரில் மும்பைக்குச் சென்று. மும்பை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொகுப்பூதியத்திலும், தனியார் நிறுவனம் ஒன்றிலும் பணி செய்தார். 1973-ஆம் ஆண்டு நெசவு இயந்திரங்களின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் டபிள்யூ. ஹெச். ப்ராடி (W.H. Brady) நிறுவனத்தில் உதவியாளர் வேலையில் சேர்ந்து விற்பனையாளராகி விற்பனை மேலாளராக உயர்ந்தார்.

பிராடி நிறுவனத்தின் விற்பனைத்துறை துணைமேலாளராக 1989 ல் கோவைக்கு மாற்றலாகி வந்தார். தென்னகத்தில் உள்ள நான்கு மாநிலங்கள் அடங்கிய சரகத்தின் மேலாளராகப் பணியாற்றி டிசம்பர் 31, 2005 அன்று ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப்பின் சிலகாலம் நெசவு இயந்திரங்களின் உதிரிப்பகுதிகளுக்கு விற்பனை முகவராக நாஞ்சில் ஏஜென்ஸீஸ் என்னும் நிறுவனத்தை தனியாக நடத்தி வந்தார். இப்போது கோவையில் வாழ்ந்து வருகிறார்

1979-ல் திருவனந்தபுரத்தில் சந்தியாவுடன் (வீட்டுப்பெயர் பகவதி) திருமணம் நடந்தது. மகள் சங்கீதா மயக்கவியல் துறை மருத்துவர் (MD - Anaesthetist), அவர் கணவர் விவேகானந்தன் எலும்பு முறிவு மருத்துவர். நாஞ்சில்நாடனின் மகன் கணேஷ் மென்பொருள் நிறுவனத்தில் மேலாளர், அவர் மனைவி ஶ்ரீலேகா. கணேஷ் கனடாவில் பணியாற்றுகிறார்

இலக்கிய வாழ்க்கை

Nanjil-nadan4.jpg
நாஞ்சில்நாடன் இளமைப்புகைப்படம்
Nanjil soodiya poo soodarkka.jpg
Nanjil soodiya poo soodarkka malayalam.jpg

நாஞ்சில் நாட்டில் மனிதர்கள், விவசாய நிலங்கள், நதிகள், கிராம வாழ்க்கை சூழ வாழ்ந்த நாஞ்சில் நாடனுக்கு பம்பாயில் தனிமையைப் போக்க பம்பாய் தமிழ் சங்கம் உதவியது. அங்குள்ள நூலகத்தில் புத்தகம் வாசிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டார். பம்பாய் தமிழ்ச்சங்க மலரில் அதிகாரபூர்வமற்ற ஆசிரியராக பணியாற்றியபோது அதில் எழுதத்தொடங்கினார். நா. பார்த்தசாரதி நடத்திய தீபம் மாத இதழில் ஆகஸ்ட்,1975-ல் வெளிவந்த அவரது முதல் சிறுகதை "விரதம்". அச்சிறுகதை ப. லட்சுமணச் செட்டியாரும், ப. சிதம்பரமும் சென்னையில் நடத்தி வந்த இலக்கிய சிந்தனை என்னும் அமைப்பின் சிறந்த சிறுகதை பரிசைப் பெற்றது. அகமதாபாத் சென்று கொண்டிருந்த பா. லட்சுமணச் செட்டியார் பம்பாய் வந்து நாஞ்சில் நாடனை நேரில் சந்தித்து பரிசுத் தொகையான ரூ 50/- ஐ வழங்கினார்.

கவிஞர் கலைக்கூத்தனும், எழுத்தாளர் வண்ணதாசனும் நாஞ்சில்நாடனை நாவல் எழுதும்படி தூண்டினர். அவரது முதல் நாவலான 'தலைகீழ் விகிதங்கள்' 1977-ஆம் ஆண்டு அன்னம் பதிப்பக வெளியீடாக வந்தது. ஆ. மாதவன், நகுலன், நீல பத்மநாபன் ஆகியோருடன் தொடர்ச்சியாக நட்பிலும் உரையாடலிலும் இருந்தார். நாஞ்சில்நாடனின் என்பிலதனை வெயில்காயும் என்னும் நாவல் நகுலனால் செம்மை செய்யப்பட்டு வெளிவந்தது. தலைகீழ் விகிதங்கள் நாவலுக்கு சுந்தர ராமசாமி எழுதிய விமர்சனம் இலக்கியத்தை மேலும் தீவிரமாக முன்னெடுக்க உதவியது என்று பதிவுசெய்திருக்கிறார். நாஞ்சில்நாடனின் எட்டுத்திக்கும் மதயானை அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகை பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.

நாஞ்சில் நாடன் எழுதி சாகித்ய விருது பெற்ற சூடிய பூ சூடற்க சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

கும்பமுனி

தமிழ் நவீன இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரமான கும்பமுனி நாஞ்சில்நாடனின் கதையில் தோன்றி பல கதைகளில் மையக்கதாபாத்திரமாக வருகிறார் (பார்க்க கும்பமுனி)

மரபிலக்கியம்

நாஞ்சில்நாடன் ஏழாம் வகுப்பில் எண்கோடி செட்டியார், உயர்நிலைப்பள்ளியில் மகாதேவன் பிள்ளை, கல்லூரியில் பேராசிரியர் அவ்வையார் அழகப்பன் அம்மையார், கே.சி. தாணு, புலவர் அரசு ஆறுமுகம், டாக்டர் எஸ். சுப்பிரமணியம் போன்ற ஆசிரியர்களிடமிருந்து மரபிலக்கிய ஆர்வம் கொண்டார். ராய சொக்கலிங்கம் அவர்களின் மாணவரும் கம்பராமாயண அறிஞருமான கல்லிடைக்குறிச்சி ர.பத்மநாபன் மும்பையில் இருந்தபோது அவரிடம் கம்பராமாயணப் பாடம் கேட்டார். வாழ்நாள் முழுக்க நீளும் ஒரு கல்வியாக கம்பராமாயண ஆய்வை மேற்கொண்ட நாஞ்சில்நாடன் கம்பனின் அம்புறாத்தூளி உட்பட கம்பராமாயண ஆய்வும் ரசனையுமாக பலநூல்களை எழுதியிருக்கிறார். சிற்றிலக்கியங்களிலும் ஆர்வமும் பயிற்சியும் கொண்டவர்.

விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பின் சார்பில் ஊட்டி குரு நித்யா குருகுலத்தில் நடத்தப்படும் காவிய முகாமில் 2012-ஆம் ஆண்டு முதல் கம்ப ராமாயண வகுப்பு எடுக்கிறார். கனடா இலக்கிய அமைப்பு சார்பில் கொரோனா காலத்தில் மாதத்தின் இரண்டாவது சனியன்று அவர் எடுக்கத் தொடங்கிய கம்பராமாயண வகுப்பு தொடர்கிறது.

நாட்டாரியல்

நாஞ்சில் நாடனை எழுத்தாளர் சுந்தர ராமசாமி காலச்சுவடு இதழுக்காகக் கட்டுரை எழுதும்படி கேட்டுக் கொண்டார். காலச்சுவடு சார்பில் நாகர்கோவிலில் நடந்த கருத்தரங்கில் "நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கையில் காலம் நிகழ்த்திய மாற்றங்கள்" என்ற தலைப்பில் நாஞ்சில் நாடன் பேசினார். இவ்வுரை கட்டுரை வடிவில் காலச்சுவடு இதழில் வெளிவந்தது. பின்னர் புத்தகமாக "நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை காலம் நிகழ்த்திய மாற்றங்கள்" என்ற தலைப்பில் காலச்சுவடு வெளியீடாக வந்தது. இன வரைவியல் எழுத்திற்கு தமிழில் இந்நாவல் ஒரு முன்னோடி படைப்பு.

சொற்பொழிவு

நாஞ்சில்நாடன் கம்பராமாயணம் மற்றும் மரபிலக்கியம் சார்ந்து சொற்பொழிவுகள் ஆற்றுபவராக இன்று அறியப்படுகிறார்.

திரைப்படம்

  • 2002 நாஞ்சில்நாடனின் தலைகீழ்விகிதங்கள் என்னும் நாவல் சொல்லமறந்த கதை என்னும் பெயரில் படமாக்கப்பட்டது
  • 2013 நாஞ்சில்நாடன் பாலா இயக்கிய பரதேசி படத்துக்கு வசனம் எழுதினார்.

வாழ்க்கை வரலாறுகள், மலர்கள்

  • நாஞ்சில்நாடன் பற்றி ஜெயமோகன் எழுதிய நூல் 'தாடகைமலை அடிவாரத்தில் ஒருவர்’
  • நாஞ்சில்நாடன் சிறப்பிதழ் பதாகை இணைய இதழ் ( இணைப்பு)
  • கோவை சிறுவாணி வாசகர் மையம் ஆண்டுதோறும் நாஞ்சிநாடன் பெயரால் இலக்கியவிருதுகள் வழங்கிவருகிறது.

இலக்கிய இடம்

Nanjil-nadan5.jpg

நாஞ்சில்நாடனுக்கு தமிழிலக்கியத்தில் தனித்த இடமுண்டு. தமிழ் நவீன இலக்கியம் இரண்டு மரபுகளாக நெடுங்காலமாக செயல்பட்டு வந்தது. அகவயமான பார்வையும், தத்துவநோக்கும் கொண்ட கதைமாந்தரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் நவீனத்துவ பாணி நாவல்கள் ஒரு மரபு. நகுலன்.சுந்தர ராமசாமி, ஆ.மாதவன் ஆகியோர் அவ்வரிசையில் வருபவர்கள். கிராமம் சார்ந்த யதார்த்த வாழ்க்கையை நுட்பமான தகவல்களுடன் சித்தரிப்பவர்கள் இன்னொரு மரபு. ஹெப்சிபா ஜேசுதாசன், நீல பத்மநாபன் போன்றவர்கள் இந்த மரபைச் சேர்ந்தவர்கள். நாஞ்சில்நாடன் இவ்விரு மரபுகளும் இணைந்து உருவாக்கிய இலக்கிய ஆளுமை. அவருடைய கதைமாந்தர் இருத்தலியச் சிக்கல்களும் அகவயமான பயணங்களும் கொண்டவர்கள். எட்டுத்திக்கும் மதயானை, என்பிலதனை வெயில்காயும் போன்ற அவருடைய நாவல்தலைப்புகளே இருத்தலியல் சாயல் கொண்டவை. ஆனால் அவை புறவுலகச் சித்தரிப்பில் வட்டாரத்தன்மை கொண்டவை, யதார்த்தமானவை, நாட்டாரியல் பண்புகூறுகள் மேலோங்கியவை

நாஞ்சில் நாடனின் புனைவிலக்கிய பயணம் இரண்டு காலகட்டங்கள் கொண்டது. தொடக்ககாலக் கதைகளில் சுரண்டல், ஒடுக்குமுறை ஆகியவற்றின் மீதான எதிர்ப்புணர்வும் மனிதர்களின் பொய்முகங்கள் மீதான ஏளனமும் ஓங்கி நின்றிருந்தன. இக்காலகட்டத்தை மனிதாபிமானக் காலகட்டம் என்று வரையறை செய்யலாம். இரண்டாவது பகுதியில் நாஞ்சில்நாடனின் கதைகளில் அங்கதமும் வாழ்க்கைச் சித்தரிப்பும் மேலும் தத்துவார்த்தத் தன்மை கொண்டவையாக ஆயின. நாட்டார் தெய்வங்களும் கதைமாந்தர்களாக ஊடே வரத்தொடங்கின. மரபிலக்கிய உருவகங்களும் நாட்டார்சொலவடைகளும் நவீன இலக்கியக் குறிப்புகளும் ஊடுகலந்த ஒரு மீபுனைவு (Metafiction) எழுத்துமுறையை கையாளத் தொடங்கினார். இந்த வகைமையில் நாஞ்சில்நாடன் நாவல்கள் எதையும் எழுதவில்லை. கதைகளுக்கும் கட்டுரைகளுக்குமான வேறுபாடுகள் அழிந்த நிலையில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறர்

நாஞ்சில்நாடனின் புனைவுலகம் தமிழின் தொன்மையான செவ்வியல் மரபுக்கும் நாட்டார் மரபுக்கும் இடையிலான உரையாடலை கொண்டது. நவீனத்துவ எழுத்துக்கும் யதார்த்தவாத எழுத்துக்கும் நடுவே அமைந்தது. ’நாஞ்சில் நாடனின் கதாபாத்திரங்கள் மரபு, பண்பாடு, குடும்பம் சார்ந்த பழம் பெருமைகளுக்கு ஆளான உயர் ஜாதி விவசாயிகள், காலத்தின் புதிய கோலங்களில் மருண்டு தாங்கள் பிடிக்கும் ஏருக்கு அடியில் நிர்த்தாட்சண்யமாக நழுவி ஒடும் பூமியைக் கண்டு இவர்கள் சங்கடப்படுகிறார்கள். இவர்களுடைய சங்கடத்தைச் சொற் சிக்கனமின்றிப் பதிவு செய்கிறார் நாஞ்சில் நாடன்’ என்று சுந்தர ராமசாமி மதிப்பிடுகிறார். ஜெயமோகன் அவரை "பசி மீதான கவனம் அவரை மனிதாபிமானம் நோக்கிக் கொண்டு செல்கிறது. அவர் மனிதர்களைப் பசியால் பிணிக்கப்பட்டவர்களாகவே காண்கிறார். பரிதாபத்துக்குரிய எளிய உயிர்களாக. ஆகவே அவர் அவர்களை முடிவில்லாமல் மன்னிக்கிறார். உச்சகட்டமாக சற்று நையாண்டிசெய்கிறார் அவ்வளவுதான். அந்த மனிதாபிமானம் அவரை மேலும் கனியச்செய்கிறது. ஓர் உலகுதழுவிய முழுமையை அவரால் எங்கோ தொட்டுவிடமுடிகிறது. ஆன்னமிட்டு அன்னமிட்டு சமையற்கட்டில் நம் பாட்டிகள் அடைந்த முழுமை அது" என மதிப்பிடுகிறார்

விருதுகள்

  • 1975 ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த சிறுகதை விரதம், இலக்கிய சிந்தனை, சென்னை
  • 1977 ஜீலை மாதத்தின் சிறந்த சிறுகதை வாய் கசந்தது, இலக்கிய சிந்தனை, சென்னை
  • 1979 நவம்பர் மாதத்தின் சிறந்த சிறுகதை முரண்டு, இலக்கிய சிந்தனை, சென்னை
  • 1986-ஆம் ஆண்டின் சிறந்த நாவல் மிதவை, பம்பாய் தமிழ் எழுத்தாளர் சங்கம், பம்பாய்
  • 1986-ஆம் ஆண்டின் சிறந்த நாவல் மிதவை, தெய்வத் தமிழ்மன்றம் பரிசு, மயிலாடுதுறை
  • 1993-ஆம் ஆண்டு சிறந்த நாவலுக்கான (சதுரங்கக்குதிரை) தமிழ் வளர்ச்சித்துறை தமிழக அரசின் விருது, சென்னை
  • 1993 - 1994-ஆம் ஆண்டு சிறந்த நாவல் சதுரங்கக்குதிரை, கஸ்தூரி ஸ்ரீனிவாசன் அறக்கட்டளை, கோவை
  • 1993-ன் சிறந்த நாவல் சதுரங்கக்குதிரை, புதிய பார்வை - நீலமலைத் தமிழ்ச்சங்கம் பரிசு, சென்னை
  • 1994-ன் சிறந்த சிறுகதைத் தொகுதி பேய்க்கொட்டு, லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு, கோவை
  • 1994-ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுதி பேய்க்கொட்டு, திருப்பூர் தமிழ்ச் சங்கம்
  • 1995 தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் சிறுகதை வெள்ளிவிழா சிறுகதைப் போட்டி, கல்கத்தா தமிழ்மன்றம் பரிசு, கல்கத்தா
  • 1999 வாழ்நாள் இலக்கியச் சாதனை விருது, ஆண்டு, அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு
  • 2007 நதியின் பிழைப்பன்று நறும்புனல் இன்மை, உலகத் தமிழாசிரியர்கள் நினைவுப் பரிசு
  • 2009 - தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பாக இயற்தமிழ் கலைஞர் கலைமாமணி விருது.
  • 2009 - கண்ணதாசன் விருது, கண்ணதாசன் கழகம், கோவை
  • 2010-ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது, சூடிய பூ சூடற்க சிறுகதைத் தொகுதி
  • 2012 ஆண்டுக்கான கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது
  • 2022 - வாழ்நாள் சாதனையாளர் விருது, படைப்பு குழுமம்

நூல்கள்

நாவல்கள்
  • தலைகீழ் விகிதங்கள் (1977, 1983, 1996, 2001, 2008, காலச்சுவடு பதிப்பகம்)
  • என்பிலதனை வெயில் காயும் (1979, 1995, 2007, புஸ்தக டிஜிட்டல் மீடியா)
  • மாமிசப்படைப்பு (1981, 1999, 2006, விஜயா பதிப்பகம்)
  • மிதவை (1986, 2002, 2008, விஜயா பதிப்பகம், நற்றிணை பதிப்பகம்)
  • சதுரங்கக் குதிரை (1993, 1995, 2006, விஜயா பதிப்பகம்)
  • எட்டுத்திக்கும் மதயானை (1998, 1999, 2008)
சிறுகதை தொகுதி
  • தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் (1981)
  • வாக்குப் பொறுக்கிகள் (1985)
  • உப்பு (1990)
  • பேய்க் கொட்டு (1994, 1996)
  • பிராந்து (2002)
  • சூடிய பூ சூடற்க (2007)
  • கான் சாகிப் (2010)
  • தொல்குடி
  • கரங்கு
  • அம்மை பார்த்திருக்கிறாள்
கவிதை தொகுதி
  • மண்ணுள்ளிப் பாம்பு (2001)
  • பச்சை நாயகி (2010)
  • வழுக்குப்பாறை
  • அச்சமேன் மானுடவா
கட்டுரை தொகுதி
  • நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (2003, 2004, 2008 - காலச்சுவடு பதிப்பகம்)
  • நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (2003, 2008)
  • நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை (2006)
  • காவலன் காவான் எனின் (2008)
  • தீதும் நன்றும் (2009)
  • திகம்பரம் (2010)
  • கம்பனின் அம்பறாத்துணி (2014)

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page