under review

த.நா.குமாரசாமி

From Tamil Wiki
Revision as of 20:26, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:சிறுகதையாசிரியர்கள் சேர்க்கப்பட்டது)
த.நா.குமாரசாமி
த.நா.குமாரசாமி, வாழ்க்கை வரலாறு

த.நா. குமாரசாமி (தண்டலம் நாராயணசாமி குமாரசாமி) (த.நா.குமாரசுவாமி) (த.நா.குமாரஸ்வாமி) (டிசம்பர் 24, 1907 - செப்டம்பர் 17, 1982) தமிழில் நாவல், சிறுகதை ஆகியவற்றை எழுதிய எழுத்தாளர். முதன்மையாக வங்கமொழி நாவல்களை மொழியாக்கம் செய்தவராக அறியப்படுகிறார். இதழாளர், பல நவீன இலக்கியப் படைப்புக்களை செம்மைசெய்து உதவியவர். இவரது படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியது.

பிறப்பு, கல்வி

த. நா. குமாரசாமி, தண்டலம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த நாராயண சாஸ்திரி - ராஜம்மாள் தம்பதியருக்கு டிசம்பர் 24, 1907-ல் பிறந்தவர். த.நா.குமாரசாமியின் தந்தை தண்டலம் சங்கரநாராயண சாஸ்திரி தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் அறிந்த அறிஞர், எழுத்தாளர். போஜ சாஸ்திரம் என்னும் நாடகத்தை எழுதியவர். மகத மன்னர்கள், ஆதிசங்கரரின் காலம் போன்ற நூல்களின் ஆசிரியர். புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு எழுத்தாளரான த. நா. சேனாபதி இவருக்கு ஏழுவயது இளைய சகோதரர்.

சென்னை முத்தியால் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் சமஸ்கிருதம், தெலுங்கு முதலிய மொழிகளை துணைப்பாடமாக கொண்டிருந்தார். சென்னை முத்தியால் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் இவருக்கு ஆசிரியராக இருந்தவர் அரவிந்தருக்கு அணுக்கமானவரும், ரிக்வேதத்துக்கு உரை எழுதியவரும், சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியின் நிறுவனர்களில் ஒருவருமான கபாலி சாஸ்திரி. அவர் த.நா.குமாரசாமிக்கு சம்ஸ்கிருத ஆர்வத்தையும், இலக்கிய ரசனையையும் உருவாக்கினார்.

இளமையிலேயே த.நா.குமாரசாமியின் தந்தை தண்டலம் நாராயணசாமி சாஸ்திரி மறைந்தார். அவர் நாடகத்துக்காக செய்த செலவுகளால் குடும்பம் வறுமை எய்தியது. ஆகவே த.நா.குமாரசாமி தன் அன்னையுடனும் உடன்பிறந்தவர்களுடனும் சென்னையை அடுத்த பாடி என்னும் சிற்றூருக்குக் குடிபெயர்ந்தார். த.நா.குமாரசாமி சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவம், உளஇயல் முதலிய பாடங்களைப் படித்து 1928-ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

த.நா.குமாரசாமி

த.நா.குமாரசாமி 1925-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுதந்திரப்போராட்ட வீரர் ராமச்சந்திர சர்மாவின் ஐந்தாவது மகள் ருக்மணியை திருமணம் செய்து கொண்டார். குடும்பங்களுக்கிடையே நிகழ்ந்த பூசலால் 1931 வரை மனைவியைப் பிரிந்தே இருந்தார். த.நா.குமாரசாமியின் முதல் இரு மகன்களும் நோய்வாய்ப்பட்டு இளமையிலேயே மறைந்தனர். அந்தத் துயர் அவரை இறுதிவரை தொடர்ந்தது. 'சந்திரகிரகணம்' என்னும் தன் நூலை 'உதிர்ந்துபோன என் பிள்ளை அரும்புகள் ஜதீன், கிருஷ்ணன் நினைவாக’ என்று சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

த.நா. குமாரசுவாமியின் மகன் த.கு. அஸ்வின்குமார் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் எழுதிய சிந்தனை செயல் சாதனை எனும் நூல் 1987-ல் தமிழக அரசின் பரிசு பெற்றது. அஸ்வின்குமார் சென்னை வானொலி நிலைய உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

த.நா.குமாரசாமி இரண்டாம் உலகப்போரை ஒட்டி சென்னையை விட்டு விலகி அரக்கோணம் அருகே உள்ள தன் அன்னையின் மோசூர் என்னும் ஊரில் வேளாண்மை செய்து வாழ்ந்தார். அவருடைய 'ஒட்டுச்செடி', 'வீட்டுப்புறா', 'குறுக்குச்சுவர்' போன்ற நாவல்களின் களமாக அமைந்தது மோசூர் கிராமம்.

இதழியல்

த.நா.குமாரசாமி 1947 – 1948-ஆம் ஆண்டுகளில் 'விருந்து' மாத இதழ் ஒன்றைத் தொடங்கி சில மாதங்கள் நடத்தினார். 1947 முதல் கலைமகள் காரியாலய வெளியீடான மஞ்சரி எனும் மொழியாக்கத்துக்கான இதழில் சிறிதுகாலம் பணியாற்றினார்.

இசை

இசையார்வம் கொண்டவர். சுயமாகவே நாதஸ்வரம் வாசிக்கக் கற்றுக் கொண்டவர். கோட்டு வாத்தியம் வாசிக்கத் தெரியும்.

அரசியல்

த.நா.குமாரசாமி காந்திய அரசியலில் ஈடுபாடு கொண்டவர். சென்னையை அடுத்த பாடி கிராமத்தில், தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஓர் ஏக்கரை ஜாதிக் கலவரத்தால் வீடுகளை இழந்த ஆதி திராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கி, அகிம்சை முறையில் தங்களுடைய உரிமைகளை நிலை நாட்டத் தூண்டினார் த.நா.குமாரசாமி. ஊர் மக்கள் அவரை காந்தி ஐயர் என்று அழைத்தனர் என்று சா.கந்தசாமி குறிப்பிடுகிறார்.

த.நா.குமாரசாமி 1930-ல் ஆந்திரகேசரி டி.பிரகாசம் தலைமையில் நடந்த சுதந்திரப்போராட்ட நடவடிக்கைகளில் கலந்துகொண்டார். பாடியில் இருந்த அவருடைய இல்லத்தில் பறந்த காங்கிரஸின் மூவண்ணக் கொடியை போலீசார் வலுக்கட்டாயமாக எரித்தனர். த.நா.குமாரசாமி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய 'இளைஞனின் கனவு', 'புதுவழி 'ஆகிய நூல்களைத் தமிழாக்கம் செய்தார்.

த.நா.குமாரசாமி 'சிவன் கோயில் பல்லக்கில் காந்திஜியின் படத்தை வைத்து ஊர்வலமாக ஊர் வீதிகளில் வலம் வந்த பிறகு, சேரிப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய போது, சாதிக் கட்டுப்பாட்டை மீறி நாங்கள் வர முடியாது என்று மேட்டுக் குடியினர் மறுத்தனர். நானும் என்னுடைய இரு சகோதரர்களும் மற்றும் ஓர் உறவினரும் பல்லக்கைத் தூக்கி, ஆதி திராவிடர் வசித்த தெருவில் கொண்டு நிறுத்தினோம். அப்போது அந்த மக்களின் உள்ளத்தில் ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது" என்று கூறியதாக, அவருடைய டைரி குறிப்புகளிலிருந்து "சக்தி’ சீனிவாசன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

ஆன்மிகம்

த.நா.குமாரசாமி இறுதிக்காலத்தில் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி மேல் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். த.நா.குமாரசாமியின் தந்தை எழுதிய 'The Age Of Sankara' என்னும் நூலை த.நா.குமாரசாமி விரிவாக்கி எழுதினார் என்று சக்தி சீனிவாசன் குறிப்பிடுகிறார்.

த.நா.குமாரசாமி

இலக்கியவாழ்க்கை

த.நா.குமாரசாமி 1930-ல் வங்கம் சென்று, வங்கமொழி வல்லுநர் சுநீதிகுமார் சட்டர்ஜியின் உதவிபெற்று சாந்தி நிகேதனில் இரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். தான் மொழியாக்கம் செய்த தாகூரின் கவிதைகளை காட்டி வாழ்த்து பெற்றார். இலக்கிய ஆர்வம் தாகூரில் இருந்து தொடங்கியது என்று குறிப்பிட்டிருக்கிறார்

சிறுகதைகள்

த.நா. குமாரசாமி 1934-ஆம் ஆண்டு ’கன்னியாகுமரி’ என்ற முதல் கதையை தினமணியில் எழுதினார். கல்கி ஆசிரியராக இருந்த ஆனந்த விகடனில் 'இராமராயன் கோயில்', 'ஸ்ரீசைலம்', போன்ற கதைகளை எழுதி புகழ்பெற்றார். தொடர்ந்து கலைமகள், கல்கி, சுதேசமித்திரன் இதழ்களில் சிறுகதைகளும் குறுங்கட்டுரைகளும் எழுதினார். 1934 முதல் 1939 வரை எழுதிய கதைகளைத் தொகுத்து 'கன்யாகுமரி முதலிய கதைகள்’ என்னும் முதல் சிறுகதை தொகுதியை அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியிட்டது.

தன் முதல் சிறுகதை 'கன்யாகுமாரி 'பற்றி விரிவாக எழுதியிருக்கும் குமாரஸ்வாமி "இன்றைய தமிழ் இலக்கியத்தில் எனக்கு ஓர் இடம் ஏற்படுவதற்கு இந்தக் கன்யாகுமரியே காரண பூதமாக விளங்குகிறாள். இந்தக் கதையை எழுதி இருபது ஆண்டுகளுக்குமேல் ஆகின்றன. திப்பேத்தில் லாமாவின் உன்னதமான மடாலயமான போதாலா வே கன்யாகுமரியாம். அவளுடைய வழிபாடு திப்பேத்து வரை பரவியிருந்த அதிசயத்தைச் சமீபத்தில் ஓர் அமெரிக்க யாத்ரிகர் எழுதிய (Forbidden Land ) என்ற நூலில் படித்தேன். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தென்படும் (இன்று அருகிய) 'புத்தேள் நாடு' என்பது இவ்வம்பிகையின் சக்தி பீடத்தைத் தான் குறிக்கின்றதோ? என் கன்னி முயற்சி ஒரு மனிதப் பிறவியைப் பற்றி இராமல், கடவுளாகத் திகழும் ஒரு கன்னிகையின் புகழாக அமைந்தது என் பாக்கியம்" என்கிறார்.

நாவல்

த.நா.குமாரசாமியின் நாவல் ஒட்டுச்செடி 1955-ல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து பின் நூலாக வெளியிடப்பட்டது. தமிழகத்தில் அணைக்கட்டு உருவாக்கிய இடப்பெயர்வைச் சித்தரிக்கும் முதல் நாவல் இது. விட்டல்ராவ் எழுதிய "போக்கிடம்", வைரமுத்து எழுதிய "கள்ளிக்காட்டு இதிகாசம்" ஆகியவை இதே கரு கொண்டு பின்னாளில் வெளிவந்த படைப்புகள். 'வீட்டுப்புறா', 'குறுக்குச்சுவர்' போன்ற நாவல்களையும் எழுதியிருக்கிறார்

மொழியாக்கப்பணி

த.நா.குமாரசாமி முதன்மையாக மொழியாக்கத்துக்காகவே இன்று நினைவுகூரப்படுகிறார். ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த கல்கி ஏற்கனவே ஒருவரால் மொழியாக்கம் செய்யப்பட்டு நான்கு அத்தியாயங்களுடன் நின்றுவிட்டிருந்த பங்கிம்சந்திர சட்டர்ஜியின் நாவல் ஒன்றை ஆனந்த விகடன் இதழுக்காக மொழியாக்கம் செய்து அளிக்கும்படி கோரினார். அவ்வாறாக த.நா.குமாரசாமி தன் முதல் மொழியாக்க நாவலை முழுமைசெய்து வெளியிட்டார். பங்கிம் சந்திரரின் 'மாதங்கினி' என்னும் நாவல் இருபத்துமூன்று அத்தியாயங்களாக ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது

த.நா.குமாரசாமியின் மொழியாக்கங்களில் முதன்மையானது ஆரோக்கிய நிகேதனம். தாராசங்கர் பானர்ஜியின் இந்நாவல் விமர்சகர்களால் இந்திய மொழிகளில் எழுதப்பட்ட நாவல்களில் முதன்மையானது என குறிப்பிடப்படுவதுண்டு. தமிழ் நவீன இலக்கியச் சூழலில் இன்றும் வாசிக்கப்பட்டுவரும் படைப்பு இது. த.நா.குமாரசாமி மொழியாக்கம் செய்த தாராசங்கர் பானர்ஜியின் கவி இன்னொரு முக்கியமான ஆக்கம்.

காந்தி மொழியாக்கம்

காந்தியின் நூல்களைத் தமிழ்ப்படுத்தும் குழுவில் மொழியாக்கப் பணியில் ஈடுபட்டு, முதல் தொகுதி தயாராகும் வரையில் பணியாற்றினார் . அக்குழுவின் தலைவருக்கும் அவருக்கும் குஜராத்திச் சொல்லொன்றைத் தமிழாக்கம் செய்வதில் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாகப் பதவி விலகினார்."கருத்துகள் உள்ளது உள்ளபடி மொழிபெயர்க்கும் அதிகாரம்தான் நமக்கு உண்டே ஒழிய, நம் மனம் போனபடி மொழிபெயர்க்கும் உரிமை நமக்குக் கிடையாது. அதனால்தான் அந்தக் காலத்திலேயே ஐநூறு ரூபாய் ஊதியம் தந்த அந்தப் பணியை விட்டுவிட்டேன்’ என்று அதைப்பற்றி அவர் குறிப்பிட்டார். பின்னாளில் 'பாபுஜியின் நினைவுக்கோவை' போன்ற நூல்களை மொழியாக்கம் செய்தார்.

த.நா.குமாரசாமி
வங்கமொழியாக்கம்

த.நா.குமாரசாமி தன் முயற்சியால் வங்கமொழியைக் கற்றுக்கொண்டதாக தன் வரலாற்றுக் குறிப்பில் சொல்கிறார். தலைவலி மருந்துப் புட்டிகளின் மேலே உள்ள பலமொழி எழுத்துக்களில் இருந்து வங்கமொழி எழுத்துக்களை மட்டும் தனியாக எழுதி எடுத்து வங்கமொழி பயின்றதாகவும், பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய 'ஆனந்தமடம்' நாவலை 1908-ல் மகேசகுமார சர்மா மொழியாக்கம் செய்திருந்ததை தேடிப்படித்து அதை மூலத்துடன் ஒப்பிட்டு வங்கமொழியை ஆழ்ந்தறிந்ததாகவும் சொல்கிறார்.

த.நா.குமாரசாமி தனிப்பட்டமுறையிலும் தாராசங்கர் பானர்ஜியின் நண்பர். தாராசங்கர் எழுதிய 'ஆகுர்' என்னும் நாவலை 1943-ல் 'அக்னி' என்னும் பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்தார். தமிழுக்கு வந்த தாராசங்கரின் முதல் நாவல் அதுவே.

த.நா.குமாரசாமியின் வங்க நூல்களின் மொழியாக்கங்கள் புகழ்பெற்றவை "ஒரு மொழியின் இலக்கியத்தில் புதிய கருத்துகள், புதிய உவமைகள், புதிய சொற்கள் புகுவதனாலேயே அம்மொழி வளர்ச்சியும் செழுமையும் பெறுகிறது. ஒரே ஒரு வழியுடைய அறையில் இருந்தால் புழுங்கித்தான் போக வேண்டும். சுற்றுப்புறத்தில் சாளரங்கள் இருந்தால்தான் நல்லன உள்ளே புகவும், நம்மைப் பற்றி பிறர் அறியவும் வழி ஏற்படும்" என அவர் எழுதினார். பங்கிம் சந்திரர், தாராசங்கர் பானர்ஜி, சுபாஷ் சந்திரபோஸ் நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார்.

ரவீந்திரநாத் தாகூர் மொழியாக்கம்

சாகித்திய அக்காதமி சார்பில், 1960-1961-களில் மகாகவி இரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது 'ரவீந்திரர் கட்டுரைத் திரட்டு', 'ரவீந்திரர் கதைத்திரட்டு' ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. த.நா.குமாரசாமி அவற்றின் மொழிபெயர்ப்பாளர் மற்றும் தொகுப்பாளாராகப் பணியாற்றினார். தமிழில் முதன்மையாகத் தாகூர் மொழிபெயர்ப்பாளர் என்றே அறியப்படுகிறார்.

இலக்கியச் சுற்றுப்பயணம்

த.நா.குமாரசாமி 1962-ஆம் ஆண்டு எழுத்தாளர்கள் பரிவர்த்தனத் திட்டப்படி தமிழ் எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் என்ற தகுதியில், வங்க மொழி எழுத்தாளர் நிகார் ரஞ்சன் ரே, அசாமிய எழுத்தாளர் ஹேம் காந்த் பரூவா ஆகியோருடன் இரண்டு மாதம் சோவியத் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார் .

இலக்கிய நண்பர்கள்

த.நா.குமாரசாமி கு.ப. ராஜகோபாலனுக்கு மிக அணுக்கமான நண்பராக இருந்தார். கி. வா. ஜகந்நாதன், பி.எஸ். ராமையா ஆகியோருக்கும் மிகவும் நெருக்கமானவர்.

திரைப்படம்

1940-ல் ஏ.கே.செட்டியார் காந்தி பற்றி எழுதிய ஆவணப்படத்துக்கு த.நா.குமாரசாமி பின்னணி உரை எழுதினார். அதைத் தொடர்ந்து வங்க திரைப்படத்துறையைச் சேர்ந்த தேவகி போஸின் தொடர்பு கிடைத்தது. அக்காலத்தில் வங்கமொழியில் இருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்ட சில படங்களுக்கு தமிழ் வசனத்தை த.நா.குமாரசாமி எழுதினார்.வங்கமொழித் திரைக்கதைகளைத் தழுவி தமிழில் எடுக்கப்பட்ட சில படங்களுக்காகவும் அவர் பணியாற்றினார் என அவர் மகன் அஸ்வினிகுமார் தன் நூலில் குறிப்பிடுகிறார். தன் திரைப்பட அனுபவங்களை 'கானல்நீர்' என்னும் நாவலாக எழுதியிருக்கிறார்.

விருதுகள்

  • வங்க அரசு, தமிழ் – வங்க மொழிக்கு ஆற்றிய தொண்டைப் பாராட்டி "நேதாஜி இலக்கிய விருது" அளித்தது.
  • த.நா.குமாரசாமியின் படைப்புகளைத் தமிழக அரசு 2006 - 2007-ஆம் நிதியாண்டில் நாட்டுடைமை ஆக்கியது

மறைவு

த.நா.குமாரசாமி தமது 75-வது வயதில் செப்டம்பர் 17, 1982 அன்று காலமானார்.

நினைவுநூல்கள்

  • த.நா.குமாரசாமி- த.கு.அஸ்வின் குமார்- இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை (இணையநூலகம்)[1]
  • குடத்திலிட்ட விளக்கு -முகுந்தன்- வானதி பதிப்பகம்

நூற்றாண்டு விழா

த.நா.குமாரசாமியின் நூற்றாண்டு அவர் மகன் த.கு .அஸ்வின்குமார் மற்றும் குடும்பத்தவரால் பிப்ரவரி 2008-ல் சென்னையில் கொண்டாடப்பட்டது. எழுத்தாளர் சா.கந்தசாமி கலந்துகொண்டு த.நா.குமாரசாமி குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

இலக்கிய இடம்

"நாட்டில் நிலவும் அரசியல் கொந்தளிப்பிலோ, சீர்திருத்த வேகத்திலோ ஈடுபடாமல், அமைதியாக ஒரு மூலையிலிருந்து, மக்களின் வாழ்க்கையைக் கண்டுணர்ந்து, சொல் ஓவியமாக ஆக்கித் தரும் கலை உள்ளம் சிலருக்கு இயல்பாகவே அமைகிறது. த.நா. குமாரசுவாமியின் கதைகளும் அப்படிப்பட்டவைகளே"- என்று மு.வரதராசன் 'தமிழ் இலக்கிய வரலாறு' நூலில் குறிப்பிடுகிறார். த.நா.குமாரசாமியின் கதைகளை வாழ்க்கைச் சித்திரங்கள் என்று வரையறை செய்யலாம். நவீனச் சிறுகதையின் இலக்கணம் அமையாத சிறிய கதைகள் அவை.

"துயரத்தைப் பெரிதாக்கிக் கொண்டு அதிலுள்ள ரஸத்தை எல்லாம் வடித்துத் தந்து ஆனந்திப்பதை ஒரு உத்தியாக மேலைநாடுகளில் போற்றி வளர்த்து இருக்கிறார்கள். இத்தகைய 'ரொமாண்டிக் மெலான்கலி (Romantic Melancholy) அதாவது இன்பம் தரும் துயர மனப்பான்மை உத்திக்கு த.நா.கு.வின் கன்யாகுமரி முதலிய கதைகளிலிருந்து ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். இந்த அளவுக்கு இந்த மனோபாவத்தில் மூழ்கி இருப்பவர்கள் தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களில் வேறு எவரும் இல்லை என்றும் சொல்லிவிடலாம்" என்று மதிப்பிடுகிறார், க.நா.சுப்ரமணியம்.

சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றை எழுதியிருந்தாலும் த.நா.குமாரசாமியின் முதன்மைக் கொடை மொழியாக்கங்களே. அவர் மொழியாக்கம் செய்த தாராசங்கர் பானர்ஜியின் ஆரோக்கிய நிகேதனம், கவி, தாகூரின் கோரா போன்ற நாவல்கள் முக்கியமானவை. அவை தமிழிலக்கியத்தில் அழுத்தமான செல்வாக்கை செலுத்தியவை. வங்கமொழி படைப்புகள் மொழியாக்கம் வழியாக இந்திய மொழிகளில் இலக்கிய வளர்ச்சிக்கு பெருந்தூண்டுதலை அளித்தன. எல்லா மொழிகளிலும் புகழ்பெற்ற வங்காள மொழிபெயர்ப்பாளர்கள் உண்டு. தமிழில் த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி , ஆர். சண்முகசுந்தரம், அ.கி.கோபாலன், சு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் புகழ்பெற்ற வங்க மொழிபெயர்ப்பாளர்கள். முதன்மையிடம் த.நா.குமாரசாமிக்கே விமர்சகர்களால் அளிக்கப்படுகிறது.

நூல்கள்

  • நடைமுறை தமிழ் அகராதி
சிறுகதை
  • கன்யாகுமாரி முதலிய கதைகள் - 1946
  • குழந்தை மனம்
  • சக்தி வேல்
  • தேவகி
  • மோகினி
  • பிள்ளைவரம்
  • போகும் வழியில்
  • வஸந்தா
  • கதைக்கொடி
  • அன்னபூரணி
  • கதைக் கோவை-3
  • கதைக் கோவை-4
  • இக்கரையும் அக்கரையும்
  • நீலாம்பரி
  • சந்திரகிரகணம்
  • பூந்தோட்டம்
  • காரும் கதிரும்
  • யாத்ரீகன்
  • மயூகன்
  • கற்பகவல்லி
  • பைரவி
  • இவளும் அவளும்
நாவல்
  • ராஜகுமாரி விபா
  • விடுதலை
  • குறுக்குச் சுவர்
  • சந்திரிகா
  • இல்லொளி
  • மனைவி
  • உடைந்தவளையல்
  • ஶ்ரீகண்டனின் புனர்ஜன்மம்
  • தீனதயாளு
  • இந்திரா
  • லலிதா
  • கானல் நீர்
  • அன்பின் எல்லை
  • ஒட்டுச்செடி
  • வீட்டுப்புறா
மொழிபெயர்ப்பு
பங்கிம்சந்திரர்
  • விஷ விருட்சம்
  • ஆனந்த மடம்
  • கிருஷ்ணகாந்தன்
  • உயில்
  • கபாலகுண்டலா
தாராசங்கர் பானர்ஜி
ரவீந்திரநாத் தாகூர்
  • மானபங்கம்
  • தாகூரின் நகைச்சுவை நாடகங்கள்
  • தாகூர் சிறுகதைகள்
  • கோரா
  • வினோதினி
  • புயல்
  • மூன்றுபேர்
  • சாருலதா
  • தாகூரின் கடிதங்கள்
  • மனைவியின் கடிதம்
  • ரவீந்திரர் கதைத்திரட்டு
  • ரவீந்திரர் கட்டுரைத்திரட்டு
  • ரவீந்திரர் கவிதைத் திரட்டு
  • இளமைப்பருவம்
  • இரு சகோதரிகள்
  • லாவண்யா
  • புலைச்சி(சண்டாளிகா)
  • ராஜரிஷி
  • சிதைந்த கூடு
  • வெற்றி
  • சதுரங்கம்
  • ராஜகுமாரி விபா
  • ஜாவா யாத்திரை
சரத்சந்திர சட்டர்ஜி
  • தேவதாஸ்
  • அமூல்யன்
  • பைரவி
  • சௌதாமினி
  • விஜயா
  • மிருணாளினி
பிற
  • காதலர்- பர்மியக்கதைகள்
  • ரங்மகால்-ஹரிசாதன் முகோபாத்யாய
  • பொம்மலாடம் - "புதுல் நாச்சார் கி இதிகதா", வங்காளி, மாணிக் பந்தோபாத்யாய
  • இளைஞனின் கனவு – நேதாஜி சுபாஸ்சந்திர போஸ்
  • புது வழி - நேதாஜி சுபாஸ்சந்திர போஸ்
  • கோதமபுத்தர்- ஆனந்த குமாரசாமி& ஐ.பி.ஹானர்
  • மால்கோஷ் வங்காளச் சிறுகதைகள்
  • பாபுஜியின் நினைவுக்கோவை
  • யாத்ரீகன் - பிரபோத் குமார் சன்யால்
  • சித்திரா- சரணதாஸ் கோஷ்
  • துர்லக்- ஹிரண்மய கோஷால்
  • சந்துவீடு -சந்தோஷ்குமார் போஸ்
  • கோதமபுத்தர் - ஆனந்த குமாரஸ்வாமி, ஐ.பி.ஹானர்
  • கிழக்கோடும் நதி- ரா.தாமோதரன்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page