under review

த.நா.குமாரசாமி

From Tamil Wiki
த.நா.குமாரசாமி

த.நா. குமாரசாமி (தண்டலம் நாராயணசாமி குமாரசாமி) (த.நா.குமாரசுவாமி) (த.நா.குமாரஸ்வாமி) (டிசம்பர் 24, 1907 - செப்டம்பர் 17, 1982) தமிழில் நாவல், சிறுகதை ஆகியவற்றை எழுதிய எழுத்தாளர். முதன்மையாக வங்கமொழி நாவல்களை மொழியாக்கம் செய்தவராக அறியப்படுகிறார். இதழாளர், பல நவீன இலக்கியப் படைப்புக்களை செம்மைசெய்து உதவியவர்.

பிறப்பு, கல்வி

த. நா. குமாரசாமி, தண்டலம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த நாராயண சாஸ்திரி - ராஜம்மாள் தம்பதியருக்கு டிசம்பர் 24, 1907-ல் மகனாகப் பிறந்தவர். த.நா.குமாரசாமியின் தந்தை நாராயண சாஸ்திரியும் ஓர் எழுத்தாளர். போஜ சாத்திரம் என்னும் நாடகத்தை எழுதியவர். புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு எழுத்தாளரான த. நா. சேனாபதி இவருடைய மூத்த சகோதரர். த.நா.குமாரசாமி சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று பி.ஏ பட்டம் பெற்றார். சமஸ்கிருதம், தெலுங்கு, வங்கம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

தனிவாழ்க்கை

த.நா.குமாரசாமி

த.நா.குமாரசாமி 1925-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ருக்மணியை திருமணம் செய்து கொண்டார். த.நா. குமாரசுவாமியின் மகன் த.கு. அஸ்வின்குமார் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் எழுதிய சிந்தனை செயல் சாதனை எனும் நூல் 1987-ல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. அஸ்வின்குமார் சென்னை வானொலி நிலைய உதவி இயக்குநராக பணியாற்றினார்.

இலக்கியவாழ்க்கை

1930-ல் வங்கம் சென்று, சாந்தி நிகேதனில் இரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். தான் மொழியாக்கம் செய்த கவிதைகளை காட்டி வாழ்த்து பெற்றார். த.நா. குமாரசாமி 1934-ஆம் ஆண்டு ’கன்னியாகுமரி’ என்ற முதல் கதையை தினமணியில் எழுதினார்.1947 – 1948-ஆம் ஆண்டுகளில் மாத இதழ் ஒன்றைத் தொடங்கி சில மாதங்கள் நடத்தினார். காந்தியின் நூல்களைத் தமிழ்ப்படுத்தும் குழுவில் மொழியாக்கப் பணியில் ஈடுபட்டு, முதல் தொகுதி தயாராகும் வரையில் பணியாற்றினார் . அக்குழுவின் தலைவருக்கும் அவருக்கும் குஜராத்திச் சொல்லொன்றைத் தமிழாக்கம் செய்வதில் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாகப் பதவி விலகினார்."கருத்துகள் உள்ளது உள்ளபடி மொழிபெயர்க்கும் அதிகாரம்தான் நமக்கு உண்டே ஒழிய, நம் மனம் போனபடி மொழிபெயர்க்கும் உரிமை நமக்குக் கிடையாது. அதனால்தான் அந்தக் காலத்திலேயே ஐநூறு ரூபாய் ஊதியம் தந்த அந்தப் பணியை விட்டுவிட்டேன்’ என்று அதை அவர் குறிப்பிட்டார்.

த.நா.குமாரசாமி

த.நா.குமாரசாமி 1962-ஆம் ஆண்டு எழுத்தாளர்கள் பரிவர்த்தனத் திட்டப்படி தமிழ் எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் என்ற தகுதியில், வங்க மொழி எழுத்தாளர் நிகார் ரஞ்சன் ரே, அசாமிய எழுத்தாளர் ஹேம் காந்த் பரூவா ஆகியோருடன் இரண்டு மாதம் சோவியத் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார் . முதன்மையாக மொழியாக்கத்தில் ஈடுபட்டார். அவருடைய வங்க நூல்களின் மொழியாக்கங்கள் புகழ்பெற்றவை ‘ஒரு மொழியின் இலக்கியத்தில் புதிய கருத்துகள், புதிய உவமைகள், புதிய சொற்கள் புகுவதனாலேயே அம்மொழி வளர்ச்சியும் செழுமையும் பெறுகிறது. ஒரே ஒரு வழியுடைய அறையில் இருந்தால் புழுங்கித்தான் போக வேண்டும். சுற்றுப்புறத்தில் சாளரங்கள் இருந்தால்தான் நல்லன உள்ளே புகவும், நம்மைப் பற்றி பிறர் அறியவும் வழி ஏற்படும்’ என அவர் எழுதினார். த.நா.குமாரசாமியின் படைப்புகளைத் தமிழக அரசு 2006 - 2007-ஆம் நிதியாண்டில் நாட்டுடைமை ஆக்கியிருக்கிறது

விருதுகள்

வங்க அரசு, தமிழ் – வங்க மொழிக்கு ஆற்றிய தொண்டைப் பாராட்டி "நேதாஜி இலக்கிய விருது" அளிதது. தமிழக விருதுகள் எவையும் கிடைக்கவில்லை.

மறைவு

த.நா.கு. தமது 75-வது வயதில் செப்டம்பர் 17, 1982 அன்று காலமானார்.

நூல்கள்

சிறுகதை
  • கன்யாகுமாரி
  • குழந்தை மனம்
  • சக்தி வேல்
  • தேவகி
  • மோகினி
  • பிள்ளைவரம்
  • போகும் வழியில்
  • வஸந்தா
  • கதைக்கொடி
  • அன்னபூரணி
  • கதைக் கோவை-3
  • கதைக் கோவை-4
  • இக்கரையும் அக்கரையும்
  • நீலாம்பரி
  • சந்திரகிரகணம்
நாவல்
  • ராஜகுமாரி விபா
  • சந்திரிகா
  • இல்லொளி
  • மனைவி
  • உடைந்தவளையல்
  • ஶ்ரீகண்டனின் புனர்ஜன்மம்
  • தீனதயாளு
  • மிருணாளினி
  • இந்திரா
  • தேவதாஸ்
  • ஸெளதாமினி
  • லலிதா
  • கானல் நீர்
  • அன்பின் எல்லை
  • ஒட்டுச்செடி
  • வீட்டுப்புறா
மொழிபெயர்ப்பு
  • கோரா – ரவீந்திரநாத் தாகூர்
  • புயல் - ரவீந்திரநாத் தாகூர்
  • விஷ விருட்சம் – பக்கிம் சந்திரர்
  • இளைஞனின் கனவு – நேதாஜி சுபாஸ்சந்திர போசு
  • ஆரோக்கிய நிகேதனம் - தாராசங்கர் பந்தோபாத்தியாய்
  • பொம்மலாடம் - ”புதுல் நாச்சார் கி இதிகதா”, வங்காளி, மாணிக் பந்தோபாத்யாய
  • வினோதினி - இரபீந்திரநாத் தாகூர்)
  • யாத்ரீகன் - பிரபோத் குமார் சான்யாஸ்

உசாத்துணை


✅Finalised Page