தேவநேயப் பாவாணர்

From Tamil Wiki
Revision as of 15:32, 5 February 2022 by Ramya (talk | contribs) (Created page with "தேவநேயப் பாவாணர் (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) தமிழறிஞர், சொல்லாராய்ச்சி வல்லுனர், பன்மொழி வித்தகர். நாற்பதுக்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று சொல்லாராய்ச்சிகள் செய்து...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தேவநேயப் பாவாணர் (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) தமிழறிஞர், சொல்லாராய்ச்சி வல்லுனர், பன்மொழி வித்தகர். நாற்பதுக்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். தனித்தமிழ் இயக்கத்திற்கு பங்காற்றீயவர். ‘தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின் (Etymological Dictionary) தந்தை’ என்று போற்றப்படுகிறார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

பாவாணர் பெப்ரவரி 7, 1902-ல் ஞானமுத்து கணக்காயருக்கும், பரிபூரணம் அம்மையாருக்கும் பத்தாவது மகவாகவும் நான்காவது மகனாகவும் சங்கரன்கோவிலில் பிறந்தார். இவரின் ஆறு வயதில் தந்தை இறந்து போனார். அக்காளின் பொறுப்பில் தேவநேயர் வளர்ந்தார். சிறுவயதில் வறுமையில் உழன்றதால் குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து படிக்க முடியாத நிலையில் இருந்தார். தாய்வழித் தாத்தா உபதேசியாரின் ஆம்பூர் லுத்தரன் பள்ளியிலும் பாளையங்கோட்டை சி.எம்.எஸ் பள்ளியில் படித்தார்.

பள்ளி இறுதி வகுப்பு முடிந்ததுமே மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதர் தேர்வு எழுதி அதில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றார். 1921-ல் ஆம்பூர் பள்ளியில் வேலை கிடைத்தது. 1942-ல் பின்னர் மதுரைத் தமிழ்ச்சங்க வித்துவான், நெல்லைத் தமிழ்ச் சங்கப் புலவர் படிப்புகளை முடித்துவிட்டு சென்னைப் பல்கலைக்கழகம் வழி பி.ஓ.எல். முடித்தார். பி.ஓ.எல். முடித்துவிட்டு எம்.ஓ.எல். க்கு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கும் போது அதை பல்கலைக்கழகம் ஏற்றுக் கொள்ளவில்லை.

தனிவாழ்க்கை

அழகிய மணவாள தாசன், நச்சினார்க்கினிய நம்பி, சிலுவை தாங்கிய செல்வராசன், அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான், மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி, மணிமன்ற வாணன், பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் ஆகியோர் இவரின் பிள்ளைகள் ஆவர். 1963-ல் மனைவி இறந்தார்.

ஆம்பூர் நடுநிலைப்பள்ளி, பெரம்பூர் கண்ணன் உயர்நிலைப்பள்ளி, திருச்சி பிஷப் ஹீபர் உயர்நிலைப்பள்ளி, இராஜ மன்னார்குடி பள்ளி, ராமநாதபுரம் சியோன் மலை, மன்னார்குடி என 23 வருடங்கள் பல்வேறு பள்ளிகளில் வேலை பார்த்தார். 1944-ல் தொடங்கி 12 ஆண்டுகள் சேலம் நகராட்சிக் கல்லூரியில் ஆசிரியர் ஆனார். 1956-1961 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் திராவிட மொழி ஆராய்ச்சித் துறையில் பணியாற்றினார்.

இலக்கியப்பணிகள்

ஸ்கீட் என்பவர் எழுதிய Principles of EnglishEtymology என்னும் நூலைப் படித்த தேவநேயப் பாவாணர் அந்த நூலின் அடிப்படையில் தமிழ்ச் சொற்களின் பிறப்பு பற்றி ஆய்வு செய்து "செந்தமிழின் சொற்பிறப்பியல் நெறிமுறை” என்ற கட்டுரை எழுதினார். தமிழுக்கும் திராவிட மொழிகளுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் சொல் பிறப்பியல் பற்றியும் ஆய்வு செய்தார்.

பாவாணர் தமிழ்மொழி ஆய்வு, தமிழ்ப் பண்பாட்டாய்வு தொடர்பாக 26 நூல்களை எழுதியுள்ளார். 1934-ல் பள்ளியாசிரியராய் இருந்தபோது மாணவர்களுக்காக உரைநடையில் இலக்கண நூல் ஒன்றை வெளியிட்டார். இது எழுத்து, சொல், பொருள், யாப்பு, இலக்கணங்களைப் பற்றிய எளிய அறிமுக நூல். கட்டுரை எழுதுவது எப்படி, பிழைகள் இல்லாமல் இலக்கண முறைப்படி எழுதுவது எப்படி என்னும் மாணவர்களுக்கான வழிகாட்டி நூலை 1936இல் வெளியிட்டார்.

பழந்தமிழாட்சி (1952), தமிழ்நாட்டு விளையாட்டுகள் (1959) தமிழர் திருமணம் (1956) ஆகிய மூன்று நூல்களும் வரலாறு, நாட்டார் வழக்காற்றியல், சமூகவியல் தொடர்பானவை. தமிழக நாட்டுப்புற விளையாட்டுகள் பற்றிய முழுமையான முதல் நூல் இவருடையதுதான். பொதுவாகச் சொல்லின் அமைப்பை வைத்தே வேர்ச்சொல்லைக் கண்டுபிடித்தது மாதிரியே விளையாட்டின் பெயரை வைத்துத் தோற்றத்தை ஆராய்கிறார் விளையாட்டுகளின் தோற்றத்தைப் பழைய இலக்கியங்களில் தேடுவது எனும் முயற்சியை இந்நூலில் காணலாம்.

தமிழரின் திருமணம் என்னும் நூலில் தமிழரின் திருமண நிகழ்வில் ஆரியரின் செல்வாக்கு புகுந்ததையும் தமிழரின் பழைய திருமணமுறையையும் ஆராய்கிறார். இதே நூலில் பாவாணர் நடத்திவைத்த திருமணம் தொடர்பான அனுபவத்தகவல்களும் உள்ளன. பிற்காலத்தில் இந்த நூல் விமர்சனத்துக்கு உள்ளாயிருக்கிறது. குறிப்பாக ம.பொ.சி. தமிழரசுக் கட்சிக் கூட்டங்களில் இதை விமர்சித்தார். 1967-ல் வரலாற்றையும் மொழிநூலையும் இணைத்து எழுதப்பட்ட முயற்சி தமிழர் வரலாறு என்ற தலைப்பில் நூலாக வந்தது. குமரிக்கண்டம், தமிழரின் பெருமை, மதி நுட்பத்தை இதில் விளக்குகிறார்.

தமிழர் மதம் என்னும் நூல் (1972) கில்பர்ட் ஸ்லேட்டர் என்ற திராவிடவியல் ஆராய்ச்சியாளரின் கருத்தை ஒத்துச் செல்வது. ஸ்லேட்ட ர் கூறிய While the Aryans were Dravidanised in Culture, the Dravidians were Aryanised in Language என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது தமிழர் மதம். தமிழ் இலக்கிய வரலாறு (1979) என்ற நூல், தமிழ் இலக்கியப் பின்னணியைத் தலைக்காலம் (கி.மு. 50000 முதல் கி.மு. 1500வரை), இடைக்காலம் (கி.மு. 1500 முதல் கி.பி. 18ஆம் நூற்றாண்டு வரை, ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் (கி.பி. 19ஆம் நூற்றாண்டு), இக்காலம் (கி.பி. 20ஆம் நூற்றாண்டு) எனப் பகுத்துக் கூறுகிறது. தலித் இலக்கியங்களை வரலாறாக எழுதத்தக்கவர் யாவர் என்ற விவாதக் குறிப்பும் இந்நாலில் உள்ளது. இந்நூல் மானுடவியல், மொழிநூல் அடிப்படையில் தமிழ் இலக்கியங்களைப் பார்ப்பதாக கூறுகிறது. 1968-ல் தனித்தமிழ்க் கழகம் நிறுவப்பட்டபோது அதன் தலைவராகப் பாவாணர் இருந்தார். 1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் (Tamil Etymological Project) முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றவர்.

ஆய்வுகள்

  • 1944-ல் பாவாணர் எம்.ஓ.எல். ஆய்வுக்காக 'திராவிட மரபு தோன்றிய இடம் குமரிநாடே' என்ற தலைப்பில் ஓர் ஆய்வேட்டைச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தார். அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
  • 1956-57-களில் பாவாணர் சொல்பிறப்பியல் அகர முதலி குறித்த ஆய்வை முறைப்படி செய்தார். ஆனால் ஆய்வு முழுமை பெறத் தடை இருந்தது.
  • 1930ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மொழியின் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் பாவாணர் ஈடுபட ஆரம்பித்தார்.
  • 1940-ல் வெளிவந்த ஒப்பியல் மொழிநூல் பண்டைத் தமிழகம், தமிழரின் தோற்றம் பற்றி விளக்குகிறது.
  • 1944-ல் திராவிடத்தாய் என்னும் நூல் தமிழைத் திராவிட மொழிகளின் தாயாக உருவகித்து, அதை நிலைநாட்டுவதற்காக எழுதப்பட்டது. இதில் பிற திராவிட மொழிச் சான்றுகளும் உண்டு.
  • 1949-ல் சொல்லாராய்ச்சிக் கட்டுரை என்னும் நூல் தமிழ் வடமொழிக்குக் கடன்பட்டதல்ல என்று கூறுவதற்காகவே எழுதப்பட்டது.

மறைவு

ஜனவரி 5,1981 உடல் நலம் சரியில்லாது அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நோயிலிருந்து மீளாமலேயே ஜனவரி 15, 1981-ல் இயற்கை எய்தினார்.

விருதுகள்

  • பாவாணர் 1971-ல் 'செந்தமிழ் ஞாயிறு' என்ற பட்டத்தைப் பெற்றார்.
  • பாவாணருக்கு 1972-ல் இவருக்கு 'எழுபது விழா' நடந்தது.
  • 1980-ல் எம்.ஜி.ஆர். இவருக்கு 'செந்தமிழ்ச் செல்வர்' என்ற பட்டத்தைக் கொடுத்தார்.


நூல்கள் பட்டியல்

  • திரட்டு நூல்கள் 12
  • மண்ணில் விண் அல்லது வள்ளுவன் கூட்டுடைமை
  • திருக்குறள் தமிழ் மரபு (1969)
  • தமிழர் வரலாறு
  • வடமொழி வரலாறு
  • இலக்கணக் கட்டுரைகள்
  • தமிழியற் கட்டுரைகள்
  • மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்
  • மொழிநூற் கட்டுரைகள்
  • பண்பாட்டுக் கட்டுரைகள்
  • தென்சொற் கட்டுரைகள்
  • செந்தமிழின் சொற்பிறப்பியல் நெறிமுறை - 1938
  • தலைமைத் தமிழ் (தனிச் சொற்கள்; தொகுதிச் சொற்கள்)
  • மறுப்புரை மாண்பு
  • தமிழ் வளம்
  • பாவாணர் நோக்கில் பெருமக்கள்
  • பாவாணர் உரைகள்

ஆங்கிலம்

  • The Manifold Defects of the Madras University Tamil Lexicon - 1961
  • The Primary Classical Language of the World (1966)
  • The Language Problem of Tamilnad and Its Logical Solution என்ற (1967)
  • The Lemurian Language and its Ramifications (1984)

உசாத்துணை