under review

தி. த. சரவணமுத்துப் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 20:09, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:நாவலாசிரியர்கள் சேர்க்கப்பட்டது)
தமிழ் பாஷை
மோகனாங்கி

தி.த.சரவணமுத்துப் பிள்ளை (1865 - 1902) தமிழகத்தின் தொடக்ககால நாவலாசிரியர். ஈழத்தமிழர். ஈழத்து எழுத்தாளர், தமிழறிஞர். தமிழின் முதல் வரலாற்றுநாவல் மோகனாங்கியை எழுதியவர்.

(பார்க்க மோகனாங்கி )

பிறப்பு, கல்வி

ஈழத்தின் திருகோணமலையில் தம்பிமுத்துப் பிள்ளை- அம்மணி அம்மாள் இணையருக்கு 1865-ல் பிறந்த சரவணமுத்துப்பிள்ளை புகழ்பெற்ற தமிழறிஞர் தி. த. கனகசுந்தரம் பிள்ளையின் தம்பி. திருகோணமலை நகரசபைத் தலைவராக இருந்த முகாந்திரம் பாலசுப்பிரமணியப்பிள்ளை இவ்விருவருக்கும் இளையவர்.

ஆரம்பக்கல்வியை தந்தையார் தம்பிமுத்துப்பிள்ளையிடமும் தமிழ் சமஸ்கிருத மொழிகளைக் கணேச பண்டிதரிடமும் ஆங்கில மொழியைக் கதிரவேற்பிள்ளை ஆசியரிடமும் கற்றார்.

1880-ம் ஆண்டு தனது பதினைந்தாவது வயதிலேயே சென்னை சென்று அங்கு சென்னை பச்சையப்பப்பன் கல்லூரியிலும் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் கற்று சென்னைப் பல்கலைகழக பட்டதாரித்தேர்வில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு பி. ஏ. பட்டத்தையும் பெற்றார்.

தனிவாழ்க்கை

தி.த.சரவணமுத்துப் பிள்ளை சித்தூர் உயர்தரப் பாடசாலையில் ஆசியரியராகப் பணியாற்றிய பின்னர் சென்னை மாநிலக்கல்லூரியின் நூலகத்தில் கீழைத்தேய சுவடிகள் நிலையத்தின் பொறுப்பாளராக கடமையாற்றினார்.

இலக்கியவாழ்க்கை

தி.த.சரவணமுத்து பிள்ளை தமிழின் முதல் வரலாற்று நாவலான மோகனாங்கியை எழுதினார். பெண்விடுதலையை நோக்கமாகக் கொண்ட சிற்றிலக்கியமான தத்தைவிடு தூது இன்னொரு நூல்.

1892-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியினுள் தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கும் போது சரவணமுத்துப்பிள்ளை ஆற்றிய தொடக்க உரை தமிழ்பாஷை என்னும் ஆய்வுக்கட்டுரையாகவும் பின்னர் நூலாகவும் வெளிவந்துள்ளது.

மறுகண்டடைவு

தி.த.சரவணமுத்துப் பிள்ளையின் பெயரும் மோகனாங்கி நாவலும் தொடக்ககால ஆய்வாளர்களால் அறியப்படவில்லை. திருகோணமலை சித்தி. அமரசிங்கம் அம்மாவட்டத்தின் முக்கியமான கலை இலக்கிய ஆளுமைகளைப்பற்றிய பதிவுகளைச் செய்தபோது தி. த கனகசுந்தரம்பிள்ளை பற்றிய செய்திகளுடன் தி.த.சரவணமுத்து பிள்ளையையும் அடையாளப்படுத்தினார். இதில் திருகோணமலை இந்து இளைஞர் மன்றம் மற்றும் அதன் முன்னைநாள் பொதுச் செயலாளர் செ.சிவபாதசுந்தரம் அவர்களதும் முயற்சி குறிப்பிடத்தக்கது. சித்தி. அமரசிங்கத்தின் உதவிகொண்டு சரவணமுத்துப்பிள்ளை பற்றிய தகவல்களை “தமிழ்நாடும் ஈழத்துத் தமிழ்ச் சான்றோரும்” என்ற தமது நூலில் தனி அத்தியாயமாக சு.செபரத்தினம் வெளிக்கொணர்நதார்.

மோகனாங்கி பற்றிய தகவல்களை சரியாக முதலில் கவனப்படுத்தியவர் சில்லையூர் செல்வராசன். அதைத் தொடர்ந்து சிட்டி -சிவபாதசுந்தரம் தம் நாவல்கலை நூலில் மோகனாங்கி மற்றும் தி.த.சரவணமுத்துப் பிள்ளை பற்றி எழுதினர். ஈழத்து இலக்கிய முன்னோடிகள் நூலில் தி.சரவணமுத்துப் பிள்ளையின் தத்தைவிடு தூது கவிதையை பாராட்டி எழுதினார் க. கைலாசபதி

தி.த.கனகசுந்தரம் பிள்ளையின் புதல்வர் தி.க.இராஜசேகரன் தொகுப்புகளில் இருந்து பேராசிரியர் செ.யோகாராசா முயற்சி எடுத்து 2011-ஆம் ஆண்டு கிழக்குமாகாண சாகித்திய விழா மலரில் தி.த.சரவணமுத்து பிள்ளை எழுதிய தமிழ் பாஷை கட்டுரை இடம்பெற்றது.இந்நூலில் ‘தமிழ்பாஷை’ தவிர்த்து சரவணமுத்துப்பிள்ளை இயற்றிய செய்யுள்களும் ஆங்கிலக் கவிதை ஒன்றும் அடங்கியுள்ளது.

மோகனாங்கி 1895-ல் முதல் பதிப்புக்கு 123 ஆண்டுகள் பின்னர், 2018-ல் திருகோணமலை இந்துக்கல்லூரி சம்பந்தன் மண்டபத்தில் முனைவர் க.சரவணபவன், ச.சத்யதேவன், மு.மயூரன் ஆகியோரை இணைப்பதிப்பாசிரியாரகக் கொண்டு திருகோணமலை வெளியீட்டாளர்களால் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

2012-ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சாகித்திய விழாவில் தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் பெயரால் ஓர் ஆய்வரங்கும் நடத்தப்பட்டது

மறைவு

தி.த. சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் 1902-ஆம் ஆண்டு தமது 37-ஆம் வயதில் மறைந்தார்

இலக்கிய இடம்

தி.த.சரவணமுத்துப் பிள்ளை தமிழின் முதல் வரலாற்று நாவலை எழுதியவர் என அறியப்படுகிறார். பிற்காலத்தில் கல்கி முதலியோரால் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சாகசக் கதைகளைப் போல அன்றி வரலாற்றுக்கு மிக அணுக்கமான வரலாற்றுநாவலாகவே மோகனாங்கி அமைந்துள்ளது.

நூல்கள்

  • மோகனாங்கி (நாவல்) 1895
  • தத்தை விடு தூது (சிற்றிலக்கியம்)
  • தமிழ் பாஷை (கட்டுரை) 1892

உசாத்துணை


✅Finalised Page