under review

தாண்டவராய முதலியார்

From Tamil Wiki

தாண்டவராய முதலியார் (வித்வான் தாண்டவராய முதலியார்) (மறைவு - 1850) வில்லிவாக்கம் தாண்டவராய முதலியார். தமிழ் இலக்கண நூல்களை பதிப்பித்தவர்களில் முன்னோடி, மற்றும் பொது வாசகர்களுக்கான உரைநடை நூல்களை எழுதி வெளியிட்டவராகவும் அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

தாண்டவராய முதலியார் செங்கல்பட்டு அருகே உள்ள வில்லியம்பாக்கம் என்ற வில்லிவாக்கத்தில் கந்தசாமி முதலியாருக்கு பிறந்தார். (இவரது பிறப்பு தேதி விவரங்கள் அறியப்படவில்லை). இவரின் தந்தை மரணமடைந்த பிறகு செங்கல்பட்டுக்கு அருகே உள்ள பொன்விளைந்த களத்தூரில் இவரின் அம்மாவின் உடன் பிறந்தவரான குமாரசாமி உபாத்தியாயரின் பாதுகாப்பில் வளர்ந்தார். அவரிடம் நெடுங்கணக்கு(அரிச்சுவடி), எண்சுவடி போன்றவைகளைக் கற்றார். பின்னர் வீரராகவ முதலியார் வழிவந்த உழலூர் வேலப்ப தேசிகரிடம் இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார்.

சென்னைக்கு சென்று புதுவை விஸ்வநாதப் பிள்ளை, கூனிமேடு இராமானுஜ முதலியார் ஆகியவர்களிடம் தமிழ் இலக்கியங்களைப் பயின்றார். மேலும் தொல்காப்பிய இலக்கணத்தை வரதப்ப முதலியார், சீர்காழி அருணாச்சலக் கவிராயர் வழிவந்த சீர்காழி வடுகநாத தம்பிரான் என்பவரிடம் கற்றார்.

மேலும் வடமொழி, தெலுங்கு, கன்னடம், உருது, மராட்டி, ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.

தனிவாழ்க்கை

இவரின் புலமையை அறிந்த ஆங்கிகிலேய அரசு இவரை சென்னைக் கல்விச் சங்கத்தின் (The College of Fort St. George 1812-1854) தலைமைத் தமிழ்ப் புலவராக நியமித்தார்கள். பின்னர் 1843-ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியில் அமர்த்தப்பட்டார்.

பங்களிப்பு

நன்றி-archieve.org

சென்னைக் கல்விச் சங்கத்தின் தலைவராக இருந்த ரிச்சர்ட் கிளார்க் (கிளார்க் ஐயர்) அவர்களின் விருப்பப்படி இலக்கண வழிகாட்டி என்ற நூலை உரைநடையில் எழுதி இச்சங்கத்தின் சார்பில் 1820-ஆம் ஆண்டு வெளியிட்டார்.

பொது வாசகர்களுக்கான உரை நடை நூலாக பஞ்ச தந்திர வசனம் என்ற நூலை மராட்டியிலிருந்து தமிழுக்கு முதன் முதலில் மொழி பெயர்த்து 1824-ஆம் ஆண்டு வெளியிட்டார். இதன் ஐந்தாவது தொகுதியை சற்று கடுமையான மொழி நடையில் மாற்றி எழுதினார் என்று குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது.

பின்னர் தமிழகத்தில் வழங்கிவந்த வாய்மொழி கதைகளைத்தொகுத்து கதாமஞ்சரி என்ற உரைநடை நூலை 1826-ஆம் ஆண்டு வெளியிட்டார்.

இவர் கிருத்துவப் பாதிரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க பைபிள் (விவிலியம்) நூலை விமர்சித்து எழுதிய புரசைப் பொன்னம்பல அடிகளாரின் நூலான வேதவிகற்பம் என்னும் நூலை எதிர்த்து வேதவிகற்ப்பதிக்காரம் என்னும் கண்டன நூலை எழுதி கொடுத்தார். இது வேறு ஒருவருடைய பெயரில் வெளிவந்தது.

பதிப்புப்பணி

இலக்கண நூல்களான இலக்கணப் பஞ்சகம் (நன்னூல் மூலம், அகப்பொருள் மூலம், புறப்பொருள் வெண்பா மாலை) என்ற நூலை 1835 -ஆம் ஆண்டும், சூடாமணி நிகண்டு (முதல் பத்துப்பகுதி), சேந்தன் திவாகரம் (முதல் எட்டுப் பகுதி) போன்ற நூல்களைப் பிழை திருத்தி முதன் முதலில் பதிப்பித்தார்.

வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியின் முதல் மூன்று பகுதிகளை 1824-ல் அச்சிட்டு வெளியிட்டார்.

மறைவு

தாண்டவராய முதலியார் 1850-ஆம் ஆண்டு மறைந்தார்.

மற்ற குறிப்புகள்

தன்னுடைய காலத்தில் வாழ்ந்த இராமானுஜக் கவிராயருடனும் அவருடைய மாணவராகிய சரவணப் பெருமாளையருடனும் இலக்கண இலக்கியங்களைப் பற்றி வாதம் செய்தார்.

இலக்கிய இடம்

தாண்டவராய முதலியார் தமிழிலக்கிய இலக்கணங்கள் அச்சில் ஏற்றப்பட்டு பொதுவாசிப்புக்கு வந்த தொடக்க காலத்தில் அவற்றை புரிந்துகொள்வதற்கான முன்னோடி முயற்சிகளைச் செய்த தமிழறிஞர்களுள் ஒருவர். இலக்கண விளக்கத்தில் தனிப்பங்களிப்பாற்றியவர்.

படைப்புகள்

இவர் இயற்றிய நூல்கள்

  • பஞ்ச தந்திர வசனம் இணையநூலகம்
  • கதாமஞ்சரி
  • திருத்தணிகை மாலை
  • திருப்போரூர்ப் பதிகம்
  • இலக்கண வினாவிடை
  • வேதவிகற்பதிக்காரம்

இவர் பதிப்பித்த நூல்கள்

  • இலக்கணப் பஞ்சகம் (நன்னூல் மூலம், அகப்பொருள் மூலம், புறப்பொருள் வெண்பா மாலை)
  • சேந்தன் திவாகரம் (முதல் எட்டுப் பகுதிகள்) இணையநூலகம்
  • சூடாமணி நிகண்டு (முதல் பத்துப் பகுதிகள்)
  • வீரமா முனிவரின் சதுரகராதி (முதல் மூன்று பகுதிகள்)

உசாத்துணை


✅Finalised Page