under review

ஜீவனாம்சம்

From Tamil Wiki
Revision as of 15:36, 29 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved categories to bottom of article)
ஜீவனாம்சம்

ஜீவனாம்சம் (1962) சி.சு.செல்லப்பா எழுதிய நாவல். ஒரு பெண்ணின் நினைவுகளாக நீளும் நனவோடை அமைப்பு கொண்டது.

எழுத்து, பிரசுரம்

சி.சு.செல்லப்பா நடத்திய எழுத்து சிற்றிதழில் 1960 முதல் தொடராக வெளிவந்து 1962-ல் எழுத்து வெளியீடாக நூல்வடிவு கொண்டது. 1920-ல் தன் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை ஒட்டி இந்நாவலை எழுதியதாக சி.சு.செல்லப்பா சொல்கிறார். ஒரு விதவைக்கு ஜீவனாம்சம் கோரி நீண்டநாள் வழக்கு நடந்து, அவ்வழக்கு முடிவதற்குள் அவள் இறந்துவிட்டாள். அதை ஒட்டியே இந்நாவலை எழுதியதாகச் சொல்கிறார்

கதைச்சுருக்கம்

சாவித்ரி என்னும் பெண்ணின் நினைவுகளாகவும் அகத்தில் ஓடும் சொற்களாகவும் விரியும் கதை இது. கதை என்னும் அமைப்பை விட அன்றாட நிகழ்வுகளும் அதையொட்டிய உரையாடல்களுமே இதிலுள்ளன. சாவித்ரிக்கு பன்னிரண்டு வயதில் திருமணம் நடைபெறுகிறது. கணவன் கிருஷ்ணமூர்த்தியை அவள் சரியாகப் பார்த்ததுகூட இல்லை. பதினாறு வயது வரை அவள் தன் அப்பா அம்மாவுடன் இருக்கிறாள். அம்மா இறந்த பின் ஓராண்டு நிறைவுக்குள் அவள் கணவனுடன் அனுப்பபடுகிறாள். கணவன் இல்லத்தில் மகிழ்ச்சியுடன் இருக்கிறாள். சில மாதங்களுக்குப் பின் அவள் தன் வீட்டுக்கு வந்திருக்கும்போது அவள் கணவன் விபத்தில் இறந்துவிடுகிறான். அவள் கணவன் வீட்டுக்குச் செல்ல நேரவில்லை. அவள் தந்தை இறந்துவிட தமையன் வெங்கடேஸ்வரனுடன் வாழ்கிறாள். கணவனின் பங்காக அவளுக்கு வரவேண்டிய சொத்துக்களை அவள் கோரவில்லை. கதை தொடங்கும்போது வெங்கடேஸ்வரன் அவள் மாமனாரிடம் அவளுக்கு ஜீவனாம்சம் அளிக்கும்படி கோரி வழக்கு தொடுக்கிறான். வழக்கு ஏழாண்டுகளாக இழுத்துக்கொண்டிருக்கிறது. வெங்கடேஸ்வரனின் மனைவி அலமேலுதான் ஜீவனாம்சம் வாங்கவேண்டுமென ஆர்வமாக இருக்கிறாள்.

சாவித்ரியின் மனக்குழப்பம் கதை முழுக்க ஓடுகிறது. அவள் கணவன் இல்லை என்றானபிறகு, அவ்வுறவு அற்றுப்போன பிறகு ஜீவனாம்சம் கோருவது முறையாகுமா? அவள் மாமியாருக்கு கண்பார்வை போகிறது. அச்செய்தி வரும்போது வெங்கடேஸ்வரன் ஆர்வம் காட்டுவதில்லை. நீதிமன்றம் இரு குடும்பத்தினரும் பேசி முடிக்கும்படி ஆலோசனை சொல்கிறது. மாமனார் ராமஸ்வாமி ஐயர் சாவித்ரி தன் இல்லத்தில் வந்து இருக்கட்டும் என்கிறார். ஆனால் வெங்கடேஸ்வரன் அதை ஏற்பதில்லை. கதை முடிவில் அவள் மாமனார் ராமஸ்வாமி ஐயர் மறைந்த செய்தி வருகிறது. அங்கே சென்று துக்கம் அனுஷ்டிக்க சாவித்ரி செல்கிறாள். ஆனால் அந்த பத்துநாட்களுக்குப் பின் அவள் வரப்போவதில்லை என்பது உணர்த்தப்படுகிறது.

கதைமாந்தர்

  • சாவித்ரி - கதைநாயகி
  • வெங்கடேஸ்வரன் - சாவித்ரியின் தமையன்
  • அலமேலு - வெங்கடேஸ்வரனின் மனைவி
  • ராமஸ்வாமி ஐயர் - சாவித்ரியின் மாமனார்
  • கிருஷ்ண மூர்த்தி -சாவித்ரியின் கணவன்

இலக்கிய இடம்

நனவோடை முறையில் எழுதப்பட்ட இந்நாவல் ஓர் அன்றாட வாழ்க்கைச்சூழலில் உறவுகளில் உருவாகும் உரசல், அதில் மனித உள்ளங்கள் கொள்ளும் வெவ்வேறு உணர்வுமாற்றங்கள் ஆகியவற்றை மிகையின்றி கூர்மையாகச் சொன்ன நாவல் என்று கருதப்படுகிறது. சாவித்ரியின் எண்ண ஓட்டங்கள் வழியாக அவள் வெளியே அதிகம் பேசாமலேயே ஒவ்வொருவரையும் தன் உள்ளத்தால் எதிர்கொள்ளும் விதம் கூறப்பட்டுள்ளது. இந்நாவலின் இலக்கிய மதிப்பு அதுவே. சாரு நிவேதிதா சாவித்ரி இறுதி சில பக்கங்களில் தன்னுள்ளேயே சொற்களைப் பெருக்கிக்கொண்டு சென்று குறைவான சொற்கள் பேசி முடிவை உணர்த்துமிடம் இந்நாவலை இலக்கியத்தரம் கொண்டதாக ஆக்குகிறது என்கிறார்[1]. சாவித்ரி என்னும் பெயரில் ஒரு பிராமண விதவையின் துயரக்கதையையும் அவள் மறுமணம் செய்யவேண்டியதன் தேவையையும் அ.மாதவையா எழுதி (முத்து மீனாட்சி) எண்பது ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த இந்நாவல் விதவைகளைப் பற்றிய பழமைவாதப் பார்வையை கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சாவித்ரி ஒரு விதவையின் வழக்கமான எண்ணங்களுடன் இருக்கிறாள். இளமையில் கணவனை இழந்தவள் மாமியாருக்கு பணிவிடைசெய்யவேண்டும், அதுவே கடமை என முடிவெடுக்கிறாள். இந்நாவலின் பார்வை பிற்போக்கானது என்றாலும் இதன் உளவியல் அணுகுமுறை ஆழமானது என்று அ.ராமசாமி கருதுகிறார்.[2]

உசாத்துணை

குறிப்புகள்



✅Finalised Page