under review

செந்தீ நடராசன்

From Tamil Wiki
SENTHINATARAJAN.jpg

செந்தீ நடராசன் (பிறப்பு: ஜூலை 06, 1940) நாட்டார் வழக்காற்றியலாளர், சமூக மானுடவியல் ஆய்வாளர், தொல்லியல், கல்வெட்டியல், சிற்பவியல், கோயிற்கலை ஆய்வாளர். மார்க்சிய பார்வையில் ஆய்வு செய்பவர். கன்னியாகுமரி மாவட்ட கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராக இருந்தார், தற்போது மாநில வழிகாட்டு குழு உறுப்பினராக உள்ளார். தமிழ்நாடு தொல்லியல் துறையின் தலைவராகப் பதவி வகித்தார்.

பிறப்பு, கல்வி

Chenthee Natarajan.jpg

செந்தீ நடராசன் ஜூலை 06, 1940 அன்று திருவனந்தபுரத்தில் (அப்போதைய திருவிதாங்கூர்) சுப்பையன், காளியம்மாள் தம்பதியருக்கு பிறந்தார். அப்பா சுப்பையன் திருவிதாங்கூர் மாகாண உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர். உடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரிகள். செந்தீ நடராசன் அவர்களில் இளையவர்.

Chenthee Natarajan 1.jpg

செந்தீ நடராசன் ஐந்தாம் வகுப்பு வரை நாகர்கோவில் அரசு தொடக்கப்பள்ளியில் கற்றார். பின் ஆறாவது பாரம் (அப்போதைய எஸ்.எஸ்.எல்.சி) வரை எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். நாகர்கோவில் எஸ்.டி. இந்துக் கல்லூரியில் பி.யூ.சி பட்டமும்,ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். சென்னை சைதாப்பேட்டையிலுள்ள அரசுக் கல்லூரியில் கல்வியியலில் இளங்கலைப் (பி.எட்) பட்டம் பெற்றார். பணியில் இருக்கும்போது 1978-ல் எம்.எட்., 1988-ல் எம்.ஏ. சமூகவியலும் படித்தார்.

தனி வாழ்க்கை

Chenthee Natarajan 2.jpg

செந்தீ நடராசன் 1967-ம் ஆண்டு கமலாவை திருமணம் செய்துக் கொண்டார். கமலா நடராசன் (பி.எஸ்.சி, எம்.எட்) வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். செந்தீ நடராசன் கமலா தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள். மகன் செந்தில் குமரன், மகள் செந்தளிர் இந்திரா.

1961-62-ம் ஆண்டு செந்தீ நடராசன் ஊட்டி செயின்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளியில் ஐந்து மாதம் வேலை பார்த்த பின் நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1962 முதல் 1966 வரை அகஸ்தீஸ்வரத்திலும், 1966-77-ல் சூரங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். அங்கிருந்த போது பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் அரசு செலவில் கல்வியியலில் முதுகலை(எம்.எட்.) படித்து பட்டம் பெற்றார். அகஸ்தீஸ்வரம் மேல்நிலைப் பள்ளியிலும், எஸ்.எல்.பி மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றினார். 1996 முதல் 1999 வரை கலிங்கப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி 1999-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆசிரியர் பணியின் போது 1993-ம் ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார். செந்தீ நடராசன் சாரண ஆசிரியராகவும், சாரண ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பவராகவும் இருந்தார்.

Chenthee Natarajan 3.jpg

செந்தீ நடராசன் ஹிமாலயன் உட்பாட்ஜ் பயிற்சி பெற்றவர். இவர் மாணவர்களையும் இமய மலை பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பயிற்சியில் செந்தீ நடராசன் பாடிய ‘முத்துசெய்த பெட்டியில்’ என்னும் பாடல் இன்றும் தமிழகத்தில் பிரபலம்.

தற்போது மனைவி கமலாவுடன் நாகர்கோவிலில் உள்ள நாகராஜர் கோவில் அருகே உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.

பொது வாழ்க்கை

கலை இலக்கிய பெருமன்றம்
Chenthee Natarajan 4.jpg

1964-ம் ஆண்டு செந்தீ நடராசன் சூரங்குடியில் வேலை செய்த போது அங்கே தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தோடு அறிமுகம் ஏற்பட்டது. 1966-ல் நாகர்கோவில் கலை இலக்கிய பெருமன்றம் தொடங்கப்பட்டபோது அதன் உறுப்பினர் ஆனார். அங்கே செந்தீ நடராசனின் எம்.எட். கல்லூரி தோழரான எழுத்தாளர் பொன்னீலன், நா. வானமாமலையை அறிமுகம் செய்து வைத்தார். பேராசிரியர் நா. வானமாமலை உடனான தொடர்பு செந்தீ நடராசனை ஆய்வு பக்கம் திருப்பியது. செந்தீ நடராசன் எம்.எட் படிக்க பாளையங்கோட்டை சென்ற போது அங்கே வானமாமலையுடன் ஓராண்டு இருக்கும் வாய்ப்பு பெற்றார்.

செந்தீ நடராசன் தன் ஆய்வை சமூக மானுடவியலிலும், நாட்டார் வழக்காற்றியலிலும் மேற்கொள்ளத் தொடங்கினார். கலை இலக்கியப் பெருமன்றம் மூலம் நாடகம், இலக்கியம், பட்டிமன்றம் போன்றவற்றை நாகர்கோவிலில் நிகழ்த்தினார். சில நாடகங்கள் செந்தீ நடராசனே எழுதி, இயக்கி அரங்கேற்றினார். அவற்றில் நடிக்கவும் செய்தார்.

குமரி முதல் சென்னை வரை பொன்னீலன் தலைமையில் நடந்த உலகசமாதான பாத யாத்திரையின் போது வழி நெடுகிலும் கிராமங்களில் நிகழ்த்திய யுத்தபேய் போன்ற நாடகங்கள் கவனம் பெற்றன. செந்தீ நடராசன் நாடகவியலாளர்களான சே. இராமானுஜம், மு. இராமசாமி ஆகியோரிடம் நாடகப் பயிற்சி பெற்றவர்.

தொல்லியல் ஆய்வு
Chenthee Natarajan 5.jpg

பொ.யு. 2000-ல் பணி ஓய்வுக்குப் பின் செந்தீ நடராசனுக்கு தொல்லியல் ஆய்வாளர் கோபாலனின் அறிமுகம் ஏற்பட்டது. கோபாலனின் அறிமுகம் செந்தீ நடராசனை தொல்லியல் ஆய்வு பக்கம் திருப்பியது. செந்தீ நடராசன் தொல்லியல் கருத்தரங்கில் பங்கேற்றார். கல்வெட்டில் பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் படிக்கக் கற்றுக் கொண்டார். 'தொல் தமிழ் எழுத்துக்கள்- ஓர் அறிமுகம்', 'சிற்பம் தொன்மங்கள்', ’பண்பாட்டுத் தளங்கள் வழியே' போன்ற செந்தீ நடராசனின் புத்தகங்கள் முக்கியமானவை.

செந்தீ நடராசன் நாகர்கோவில், திருநெல்வேலி மாவட்டங்களைத் தன் ஆய்வு களமாக கொண்டவர். இதற்காக ‘செம்பவளம் ஆய்வுத்தளம்’ என்ற அமைப்பை உருவாக்கி புதிய கள ஆய்வாளர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார். செந்தீ நடராசன் செம்பவளம் ஆய்வுத்தளத்தின் நிர்வாக இயக்குனராகவும், ஆய்வாளர் அ.கா. பெருமாள் செயலராகவும் உள்ளனர்.

கல்வெட்டு ஆய்வுகள்
Chenthee Natarajan 6.jpg

செந்தீ நடராசன் கல்வெட்டு ஆய்வுகளை சமூகவியல் பார்வையில் நிகழ்த்தி வருபவர். குமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பல புதிய வட்டெழுத்துக் கல்வெட்டுகள், கிரந்த கல்வெட்டுகள், செப்பேடுகளை படித்து பதிவு செய்துள்ளார். செந்தீ நடராசன் நாகர்கோவிலில் உள்ள குமார கோவில் வெளிச்சுவரில் அமைந்த முப்பத்தி ஆறு வரிக் கல்வெட்டில் கோவிலுக்கு ஆளடிமை விட்டுக் கொடுத்ததைக் கண்டுப்பிடித்து, படித்து பதிவு செய்துள்ளார்.[1]

பொ.யு. 1366-ம் ஆண்டு எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்றில் வட்டெழுத்தில் தொடங்கி தற்கால தமிழ் எழுத்து வரையுள்ள கல்வெட்டை கண்டுபிடித்துள்ளார்.[2] வட்டெழுத்து - தமிழ் எழுத்து வரிவடிவமாக மாறும் காலத்திற்கான சான்றாக அது அமைகிறது.

குமரியில் சமணத்தின் சுவடுகள்
Chenthee Natarajan 7.jpg

குமரி மாவட்டத்தில் உள்ள சமண வரலாற்று தடங்களை தேடி ஆராய்ந்துள்ளார். சிதறால் மலையில் அம்பிகா யட்சியின்[3] முழு வரலாற்றையும் ஒரே சட்டகத்தில் சித்தரிக்கும் சிலையும், பிற சமண தீர்த்தங்கரர் சிலைகளும், வட்டெழுத்து கல்வெட்டுகளும் கண்டுபிடித்துள்ளார். நாகர்கோவிலில் உள்ள நாகராஜர் கோவிலை ஆராய்ந்து அங்கே தூண்களில் காணப்படும் பார்ஸ்வநாதர், மகாவீரவர்த்தமானர், அம்பிகா யட்சி, பத்மாவதி சிற்பங்களை ஆராய்ந்து பதிவு செய்தவர். கோவிலில் உள்ள பொ.யு. 1513 தொடங்கி 1580 வரை உள்ள நீள் செவ்வக தூண் கல்வெட்டுகளைப் படித்து 1600 வரை சமணர் கோவிலாக இருந்தது பற்றியும், பின்பு வைணவக் கோவிலாக மாறியது பற்றியும் பதிவு செய்துள்ளார்.[4]

Chenthee Natarajan 8.jpg
குழு செயல்பாடுகள்
  • தமிழ்நாடு தொல்லியல் துறைத் தலைவராக 2018 முதல் 2023 வரை பொறுப்பில் இருந்தார்.
  • கன்னியாகுமரி மாவட்ட கலை இலக்கிய பெருமன்றத்தின் தலைவராக 1974 முதல் ஐந்து வருடம் இருந்தார்.
  • கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில அளவில் இலக்கிய குழு செயலாளராக இருபத்தைந்து ஆண்டுகள் இருந்தார்.
  • கன்னியாகுமரி மாவட்டஅறநிலையத்துறையின் அறங்காவலர் குழு உறுப்பனராகவும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
  • தற்போது கலை இலக்கிய பெருமன்றத்தின் வழிகாட்டு குழுவின் உறுப்பினர்.
இதழியல் பங்களிப்பு
Chenthee Natarajan 9.jpg

பொ.யு. 1977-ல் செந்தீ நடராசன் குமரி மாவட்ட கலை இலக்கிய பெருமன்றத்தின் செயலாளராக இருந்த போது ’புதிய வானம்’ என்ற மாத இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். இதன் பதினெட்டு இதழ்கள் வெளிவந்துள்ளன.

Chenthee Natarajan 10.jpg

விருதுகள்

  • நல்லாசிரியர் விருது (1993)
  • அருவினையாளர் விருது (2004)
  • சிற்பம் தொன்மம் நூலிற்காக சென்னை கவிதை உறவுகள் அமைப்பு விருது வழங்கியது.
Chenthee Natarajan 11.jpg

நூல்கள்

  • பண்பாட்டுத் தளங்கள் வழியே (2002, 2014)
  • புலைப்பேடி என்றொரு விசித்திர வழக்கம் (2012)
  • தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம் (2013)
  • சிவ... சிவ... (கணிச்சியோன்) (2015)
  • சிற்பம் தொன்மம் (2016)
  • குமரியில் சமணத்தின் சுவடுகள் (2021)
Chenthee Natarajan 12.jpg
மொழிபெயர்ப்பு நூல்கள்
  • ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் கூட்டுறவு இயக்கங்கள் (1988)
  • ஆந்திரநாட்டார் வழக்காற்றியல் ஆய்வு (2006)
  • சங்கரன்கோவில் - வரலாற்று ஆய்வு (2020)
  • சுற்றுச்சூழல் அறிவியல் (2004)

ஆய்வுரை காணொளிகள்

Chenthee Natarajan 13.jpg
சமயக்கணக்கர்[5]
சமணம்
பௌத்தம்
வைணவம்
பிற

உரைகள்

நேர்காணல் காணொளிகள்

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. கல்வெட்டு குறிப்பு: குமாரகோவிலில் கிடைத்தது ஒருவர் கொடுத்த நிவந்தத்தை பற்றிய குறிப்பு அமைந்த கல்வெட்டு. அதில் ‘நிலமும், புரையிடமும், ஆள் அடிமையும் விட்டுக் கொடுத்து’ என்ற வரி உள்ளது. இதன் படி கோவில் பணிக்கு நிலம், புரையிடம், அடிமை ஆட்களும் கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது என்ற சமூகவியல் ஆய்வில் அக்கல்வெட்டை ஆராய்ந்து பதிவு செய்துள்ளார்.
  2. தமிழகத்தில் பொ.யு. 13 -ம் நூற்றாண்டிற்கு முன்பாகவே வட்டெழுத்து புழக்கம் குறைந்துவிட்டது. குமரி மாவட்டத்தில் பொ.யு. 14--ம் நூற்றாண்டில் கிடைத்த கல்வெட்டு அங்கே வட்டெழுத்துக்கள் 14 -ம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்ததைக் காட்டுகிறது என ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.
  3. நேமிநாத தீர்த்தங்கரரின் யட்சி
  4. கல்வெட்டு ‘நாகர்க்கும், நாகராஜாவுக்கும்’ என்ற குறிப்பு உள்ளது. அதன் மூலம் அது பார்ஸ்வநாதர் என்ற இருபத்தி மூன்றாம் தீர்த்தங்கருடைய யட்சன் (தர்மேந்திரன்) என்றும், கல்வெட்டு படி நாகருக்கும், நாகராஜவுக்கும் காலையும், மதியமும் அமுது படி வழக்கப்படுகிறது. இரவு நாகருக்கு இரண்டு படி அமுதும், நாகராஜவுக்கு உணவு வழக்கப்படுவதில்லை என்ற குறிப்பும் மூலம் அக்கோவில் சமண மதத்தை சார்ந்தது என்ற முடிவுக்கு ஆய்வாளர் வருகிறார்.
  5. சமயக்கணக்கர் என்ற தலைப்பில் செந்தீ நடராசன் கீற்று கீற்று யூடியூப் தளத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு


✅Finalised Page