under review

சி.கணேசையர்

From Tamil Wiki
Revision as of 09:03, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)
சி.கணேசையர்

சி.கணேசையர் (ஏப்ரல் 1, 1878 - நவம்பர் 3, 1958) சி.கணேச ஐயர், புன்னாலைக்கட்டுவன் கணேச ஐயர். தமிழறிஞர்,இலக்கண ஆய்வாளார், சிற்றிலக்கிய ஆசிரியர். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர். தொல்காப்பியத்துக்கு உரை எழுதிப் பதிப்பித்த முன்னோடிகளில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே ஏறத்தாழ 12 கி.மீ தொலைவிலுள்ள புன்னாலைக்கட்டுவன் என்னும் வேளாண்மைக் கிராமத்தில் ஆயாக்கடவை சித்திவிநாயகர் தேவஸ்தான பரம்பரை அந்தணர் வழிவந்த சின்னையாவுக்கும், அக்காலத்தில் பிரபல சோதிடராக விளங்கிய, வருத்தலைவிளான் யோகவன ஐயரின் சகோதரியும் வேலாயுத ஐயரின் மகளுமான பொன்னம்மை என்பவருக்கும் ஏப்ரல் 1, 1878 (ஈசுர ஆண்டு பங்குனி மாதம் 15ம் நாள்) கணேச ஐயர் பிறந்தார்.

கணேசையர்

கணேசையரின் பெரிய தந்தை கதிர்காம ஐயர் ஆயரக்கடவைச் சித்திவிநாயகர் முன்றிலில் நடத்திய சைவப்பள்ளிக்கூடத்தில் கணேசையர் எட்டாம் வகுப்புவரை கல்வி கற்றார். யாழப்பண நகரைச் சேர்ந்த வண்ணார்பண்ணையில் வசித்து வந்த வித்துவ சிரோமணி ந. ச. பொன்னம்பல பிள்ளையின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து இலக்கணம் கற்றார். (இவர் ஆறுமுக நாவலரின் மருமகன்) பொன்னம்பலப்பிள்ளையவர்கள் இறந்தபின் சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரிடம் இலக்கணமும் யாழ்ப்பாணம் பிச்சுவையரிடம் சம்ஸ்கிருதமும் கற்றார். காசிவாசி செந்திநாதையரிடம் இலக்கியம் பயின்றார்.

தனிவாழ்க்கை

தமது தாய்மாமனாகிய யோகவன ஐயரின் ஒரே புதல்வியான அன்னலட்சுமியை தன் 32-வது வயதில் திருமணம் செய்தார். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. மனைவியார் இறந்தபின் கணேசையர் மனைவியின் நினைவாக ஒரு நிலம் வாங்கி அதில் ஒரு கிணறு வெட்டுவித்து அதற்கு "அன்னலட்சுமி கூபம்" எனப் பெயரிட்டு வறுத்தலைவிளான் மருதடி விநாயகர் ஆலயத்துக்கு அதனை நன்கொடையாக அளித்தார். அக்கிணறே மருதடி விநாயகப் பெருமான் ஆலயத்துக்குத் தீர்த்தக் கிணறாக உள்ளது.

கணேசையர் சமாதி, சிவலிங்கம்

கணேசையர் வண்ணார்பண்ணையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக பணியை தொடங்கினார். விவேகானந்தா வித்தியாசாலையிலும் பின் நாவலர் காவியப் பாடசாலையிலும் கற்பித்தார். புன்னாலைக்கட்டுவன், குரும்பசிட்டி, வயாவிளான் முதலிய ஊர்களிலுள்ள பாடசாலைகளிலும் தொடர்த பணியாற்றினார். புகழ்பெற்ற நயினாதீவின் சைவப்பாடசாலையில் கற்பித்த ஏழாண்டுகளில் ஏராளமான கட்டுரைகளையும், உரைகளையும் எழுதினார்.

ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்க நிறுவனர் சதாசிவ ஐயரால் நிறுவப்பட்ட சுன்னாகம் பராசீன பாடசாலையின் தலைமையாசிரியர் பொறுப்பை 1921-ஆம் ஆண்டில் கணேசைர் ஏற்று 1932 வரை செயற்பட்டார். இக்காலத்தில் இவர் ஈழத்தின் சிறந்த தமிழாசிரியர் பரம்பரையை உருவாக்கியிருந்தார். இவர் தன்னுடய கற்பித்தல் செயற்பாட்டிற்காக எழுதியிருந்த பாடக்குறிப்புகள் பின்னர் கட்டுரைகளாகவும், நூல்களாகவும் வெளிவந்தன.

இப்பாடசாலையை விட்டு நீங்கியபின் தனிப்பட்ட முறையிலான கற்பித்தலில் ஈடுபட்டார். வருத்தலை விளானில் யாழ்ப்பாணத்தின் பல ஊர்களிலுமிருந்து வருகின்ற ஆசிரியர்களுக்கும் பிறர்க்கும் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களும், சங்க இலக்கியங்கள் முதலான இலக்கிய நூல்களும், தருக்க சிங்கிரகமும் பாடஞ்சொல்லி வந்தார். நாள்தோறும் மாலைவேளையில் மருதடி விநாயகர் ஆலயச் சூழலிலுள்ள ஆலமர நிழலில் இருந்து மாணவர் சிலருக்குப் பாடஞ்சொல்லி வந்தார். கணேசையர் புராணவாசிப்பு, சோதிடம் ஆகியவற்றையும் பொதுச்சேவையாகச் செய்துவந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கணேசையர் சிலை

கணேசையர் தனது 25-வது வயதில் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட 'செந்தமிழ்’ போன்ற இதழ்களில் இலக்க்ண ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதினார். 1905 முதல் செந்தமிழில் தொடராக எழுதிய கம்பராமாயணத்தில் பாடவேறுபாடுகள் என்னும் கட்டுரை பழந்தமிழ் நூல்களை பதிப்பவர்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டிநூலாகக் கருதப்படுகிறது. சைவ சித்தாந்தம் பற்றிய கட்டுரைகளும் இவரால் எழுதப்பட்டுள்ளன. கவியின்பம், ஒரு செய்யுட் பொருளாராய்ச்சி, நச்சினார்க்கினியார் உரைநயம், இராமாயணச் செய்யுட் பாடாந்தரம், அளபெடை, போலி எழுத்து, தொல்காப்பியச் சூத்திரப் பொருளாராய்ச்சி, பிறிது பிறிதேற்றல், ஆறனுருபு பிறிதேற்றல், இரு பெயரொட்டாகு பெயரும் அன்மொழித் தொகையும், தொகைநிலை, சிறுபொழுதாராய்ச்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

'மருதடி விநாயகர் பிரபந்தம்’, 'மருதடி விநாயகர் இருபா இருபஃது’ 'மருதடி விநாயகர் அந்தாதி’ 'மருதடி விநாயகர் ஊஞ்சல்’ 'ஆயாக்கடவை சித்தி விநாயகர் ஊஞசல்’, 'திருச்செல்வச்சந்நிதி நான்மணிமாலை’ போன்ற செய்யுள்களையும் எழுதினார்.கணேசையர் ஈழநாட்டு தமிழ்ப் புலவர் சரிதம், சுன்னாகம் அ.குமாரசாமிப் புலவரின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை நூல்களாக எழுதியுள்ளார்

தொல்காப்பிய ஆய்வு

கணேசையருக்கு புகழ் தேடித்தந்தவை தொல்காப்பிய ஆய்வுகள். அன்று தொல்காப்பியத்தை பொருள்கொள்ளும்பொருட்டு விரிவான விவாதங்கள் நிகழ்ந்தன. கணேசையர் அவற்றில் முன்னோடியான பங்களிப்பை ஆற்றினார். அவர் இயற்றிய தொல்காப்பிய உரை விளக்கக் குறிப்புகள் முக்கியமான அறிவுக்கொடைகள். தொல்காப்பிய உரைகளின் ஏட்டுப் பிரதிகளைத் தேடி எடுத்து அவற்றை ஒப்புநோக்கி பல ஆண்டுகாலமாகக் குறிப்புகள் எழுதி கட்டுரைகளை வெளியிட்டார். மதுரைக்கு வந்து டி.கே.ராமானுஜ ஐயங்கார் உதவியுடன் தொல்காப்பிய ஏடுகளை சேகரித்து பாடவேறுபாடுக் குறிப்புகளை உருவாக்கினார். பின்னர் அக்கட்டுரைகளை நூல்வடிவமாக்கினார். ஈழகேசரி அதிபர் நா.பொன்னையா அதன் பதிப்பாசிரியராக இருந்தார். எழுத்ததிகாரம் (1937), சொல்லதிகாரம் (1938), பொருளதிகாரம் இரண்டாம் பகுதி (1943), பொருளதிகாரம் முற்பகுதி (1948) ஆகியன வெளிவந்தன.

'தொல்காப்பியப் பாயிரம் – முதற் சூத்திரம்’ ஆகியவற்றிற்கு அரசன் சண்முகனார் 'சண்முக விருத்தி’ எனும் பெயரிலெழுதிய விருத்தியுரையில் "ஆகுபெயர் வேறு – அன்மொழித்தொகை வேறு" என நிறுவியிருந்தார். கணேசையர் அவையிரண்டும் ஒன்றே என்று கூறினார். இந்த விவாதம் அன்று பெரிதும் கவனிக்கப்பட்டது.

பார்க்க தொல்காப்பிய பதிப்புகள்

பார்க்க் தொல்காப்பிய மொழிபெயர்ப்பாளர்கள்

பரிசுகள், பாராட்டுகள்

  • கணேசையருக்கு 1938-ஆம் ஆண்டு ஐப்பசி 5-ஆம் நாள் அவரது பவள விழாவையொட்டி யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் சு. நடேசபிள்ளை தலைமையி, சுவாமி விபுலானந்தர் உட்படப் பலர் பங்கேற்ற விழாவில் ஈராயிரம் ரூபாய் பெறுமதி கொண்ட பொற்கிழி பரிசிலாக வழங்கப்பட்டது
  • யாழ்ப்பாணம் ஆரிய – திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் கணேசையருக்கு ஈழத்து தமிழியலின் உயர் விருதான 'வித்துவ சிரோமணி’ பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
கணேசையர் சமாதி

மறைவு

கணேசையர் தனது வாழ்நாளின் இறுதிப் பத்தாண்டுகளுக்கு மேலாக தனது மனைவியின் ஊரான வருத்தலை விளானில் உள்ள மருதடி விநாயகர் ஆலய சூழலில் ஓர் ஆச்சிரமம் அமைத்து துறவற வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். இக்காலத்தில் ஈழகேசரி நிறுவனத்தாரும், உறவினர் – நண்பர்களும் இவருக்கு உதவி வந்தனர். நவம்பர் 3, 1958 அன்று காலமானார்.

நினைவுகள்,நூல்கள்

கணேசையர் ஆலய நிறுவுதல்

நூல்கள்

  • குசேலர் சரித்திரம்
  • ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரம்
  • குமாரசுவாமிப்புலவர் வரலாறு
ஆய்வுக்கட்டுரைகள்
  • இராமவதாரச்செய்யுட் பாடாந்தரம்
  • இராமவதார் அருஞ்செய்யுள் விளக்கம்
  • பெரியபுராண முதற்செய்யுளுரை
  • இந்திய அரசர் போர்வீரம்
  • இருகண்ணொருமணி
  • திணைமயக்கம்
  • திருக்குறள் பரிமேலழகர் உரைவிளக்கம்
  • பொருள் கோடல்
  • சாவாவுடம்பு
  • கவித்தன்மை
  • குமாரசுவாமிப் புலவர்
  • யாப்பருங் கலங்காரிகையுரைத் திருத்தம்
  • வடசொல்
  • வடமொழி முதுமொழியன்றோ
  • உடம்படு மெய்
  • வசிட்டரும் வள்ளுவரும் கூறிய அரசியல்
  • அந்தணர் நூல்
  • ஆறனுருபு பிறிதுருபேற்றல்
  • முன்னைத் தமிழ்நாட்டு பெண்களின் கற்புநிலை
  • சில ஆராய்ச்சி
  • அளபெடை
  • கவியின்பம்
  • சிறுபொழுது
  • தொகைநிலை
  • ஒரு செய்யுட் பொருள் ஆராய்ச்சி
  • கவியின்பம்
  • தொல்காப்பியச் சூத்திரப் பொருள் ஆராய்ச்சி
  • பிறிது பிறிதேற்றல்
  • இருபெயரொட்டுப்பெயரும் அன்மொழித்தொகையும்
  • தமிழ்மொழி வளர்ச்சி
  • பரிசோதனைத் தொடர்
  • சிறு பொழுதாராய்ச்சி
  • மதுரைக் காஞ்சியுட் கூறிய யாமப்பிரிவு
  • சேனாவரையப் பதிப்பும் பிழை திருத்தமும்
  • சில ஆராய்ச்சி
  • சீவகசிந்தாமணி உரைநயம்
  • இயற்கை நவிற்சியும் செயற்கைப் புணர்ச்சியும்
  • கம்பனும் உவமலங்காரமும்
  • பிழையும் திருத்தமும்
  • மெய்ப்பாடு
  • தமிழ்நாட்டு மணம்
  • பொருட்புடைப் பெயர்ச்சி
  • அனுதாபக் குறிப்பு
  • இரங்கற்பா
  • இல்லறக் கிழத்தி மாண்புகள்
  • செந்தமிழ்
  • தமிழ்நாட்டு மக்களின் சில ஒழுக்க மரபுகள்
  • இராமவதாரமும் கலித்தொகையும்
  • கம்பரும் அவலச்சுவையும்
  • நீர் விளையாட்டு
  • கவிச்சக்கரவர்த்தி கம்பனே
  • உலகியலும் இலக்கியமும்
  • பெண்களுக்கு பெருந்தகைமை கற்பே
  • தெய்வப் புலவரின் நாவுணர்ச்சி
  • இராமவதாரத்திற் கவிநயம்

உசாத்துணை


✅Finalised Page