under review

சாரு நிவேதிதா

From Tamil Wiki
Revision as of 13:33, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)
சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா

சாரு நிவேதிதா (18 டிசம்பர் 1953) தமிழ் எழுத்தாளர். தமிழில் பின்நவீனத்துவ - பின் அமைப்பியல் சார்ந்த அழகியலைக் கொண்ட எழுத்தாளர்களில் முதன்மையானவராகவும், பிறழ்வெழுத்து என்னும் இலக்கியவகைமையின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார். பலதுறைசெய்திகளை இணைத்து எழுதும் கலைக்களஞ்சியத்தன்மை, எழுத்தைப்பற்றியே எழுதும் மீபுனைவுத்தன்மை, அனைத்தையும் விளையாட்டாக ஆக்கும் தன்மை, ஒழுக்கவியல் எல்லைகளையும் அரசியல் சரிநிலைகளையும் மீறிச்செல்லும் தன்மை, அமைப்புகளுக்கு எதிரான கலகத்தன்மை ஆகியவற்றைக் கொண்ட எழுத்துக்களை எழுதியவராக அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

சாரு நிவேதிதாவின் இயற்பெயர் அறிவழகன். அரசுவேலையில் இருந்தமையால் சாரு நிவேதிதா என்று பெயர் சூட்டிக்கொண்டார். அக்காலகட்டத்தில் இடதுசாரி புரட்சிகர இயக்கங்களின் ஆதராவாளராக இருந்தமையால் நக்ஸலைட் இயக்கத்தின் கோட்பாட்டாளரும் நிறுவனருமான சாரு மஜூம்தாரின் பெயரில் இருந்து தன் பெயரை உருவாக்கிக் கொண்டார். திருவாரூர் அருகிலுள்ள இடும்பாவனம் என்னும் ஊரில் ஜி.கிருஷ்ணசாமி- பார்வதி இணையருக்கு 18 டிசம்பர் 1953 -ல் சாரு நிவேதிதா பிறந்தார். நாகூரில் பள்ளிக் கல்வியை முடித்தார். காரைக்காலில் புகுமுக வகுப்பை முடித்து தஞ்சாவூரில் பி.எஸ்ஸி. இயற்பியல் பயின்றார். படிப்பை முடிக்காமல் அரசுவேலையில் சேர்ந்தார். தஞ்சாவூரில் சாரு நிவேதிதாவுக்கு இயற்பியல் ஆசிரியராக இருந்தவர் அ. மார்க்ஸ்

தனிவாழ்க்கை

சாரு நிவேதிதா 1992 -ல் டி. ஜி. சுகந்தா (அவந்திகா)வை மணந்தார். சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தேர்வில் வென்று மத்திய அரசுப்பணியில் இடைநிலை ஊழியராகச் சேர்ந்தார். சென்னையில் சிறைத்துறை இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் உதவியாளராகச் சேர்ந்தார். அதன்பின் டெல்லியில் பொதுவினியோகத்துறையில் பணியாற்றினார். சென்னை திரும்பி தபால்துறை மேலாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றினார். 2001-ல் விருப்ப ஓய்வுபெற்றார்.

இலக்கியவாழ்க்கை

சாரு நிவேதிதாவின் இலக்கியவாழ்க்கை மூன்று காலகட்டங்களால் ஆனது.

முதற் காலகட்டம்

சாரு நிவேதிதா தொடக்கத்திலேயே தமிழ் சிற்றிதழ் சார்ந்து இயங்கிய நவீன இலக்கியத்துடன் விலக்கம் கொண்டிருந்தார். இடதுசாரி இயக்கங்களுடன் அணுக்கம் கொண்டவராகவும், சிறு குழுவுக்குள் எழுதப்படும் நவீன எழுத்துக்கள் பயனற்றவை என்னும் எண்ணம் கொண்டவராகவும் இருந்தார். தமிழ் நவீன இலக்கியம் என்பது நவீனத்துவ இலக்கியமே என்றும், அது சமூகப்போக்குகள் அரசியலியக்கங்கள் ஆகியவற்றை பற்றிய கவலை இன்றி தனிமனித அகஅவசங்களை மட்டுமே கருத்தில் கொள்வது என்றும் விமர்சித்தார். அந்தத் தனிமனித அகஅவசங்கள் தமிழ்ச்சூழலில் உருவான வெகுஜன அரசியல் மாற்றங்களால் ஒதுக்கப்பட்ட உயர்குடியினருக்கு உரியவை, பெரும்பாலும் பொய்யாகவும் மிகையாகவும் கற்பனை செய்யப்படுபவை, சிறு வட்டத்திற்குள் தங்களுக்குள் புழங்குபவை என்று கூறினார். இதைச் சுட்ட அவர் உருவாக்கிய 'தயிர்சாத நுண்ணுணர்வு’ என்னும் கேலிச்சொல் பின்னர் புகழ்பெற்றது.

பொதுவாசிப்புக்குரிய சாவி இதழில் 19--ல் நிவேதிதா என்ற பெயரில் எழுதிய கனவுகள் சிதைதல் என்பது சாரு நிவேதிதாவின் முதல் படைப்பு. 1978 முதல் 1990 வரை இலக்கிய வெளிவட்டம், படிகள் ஆகிய அன்றைய இடதுசாரி இதழ்களில் எழுதினார். 1990ல் சென்னை வந்தபின்னர் தினமலர் வாரமலர் போன்ற பொதுவாசிப்புக்குரிய இதழ்களில் எளிய கதைகளை எழுதினார். தொடர்ந்து நவீனத்தமிழிலக்கியம் மீது கடுமையான ஒவ்வாமையையும் விமர்சனத்தையும் முன்வைத்துக் கொண்டும் இருந்தார். 1982-ல் சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் நாவல் வெளிவந்தபோது சாரு நிவேதிதா அதை மிகக்கடுமையாக விமர்சனம் செய்து சிறு வெளியீடொன்றை தன் செலவில் பிரசுரித்தார். அதில் ஜே.ஜே.சில குறிப்புகள் நவீனத்துவத்தின் தனிமனிதவாதம், குறுங்குழுவாதம் ஆகியவற்றை முன்வைக்கிறது என்றும் அது ஃபாசிசத்திற்கு மிக அணுக்கமான பார்வை என்றும், மார்க்ஸியம் உட்பட எல்லாவகையான புரட்சிகர அரசியல்செயல்பாடுகளையும் அது கேலிசெய்து சிறுமைக்குள்ளாக்குகிறது என்றும் கண்டித்திருந்தார்.

டெல்லி காலகட்டத்தில் சாரு நிவேதிதா டெல்லியின் தெருநாடக இயக்கங்களுடன் தொடர்பிலிருந்தார். சார்த்தர் முன்வைத்த புரட்சிகர அரசியல் பற்றிய சிறு நூல் ஒன்றை எழுதினார். பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகள் வழியாக தீவிர இடதுசாரி அரசியல் பார்வையை முன்வைத்தார்.

இரண்டாம் காலகட்டம்

டெல்லியில் இருந்து சென்னைக்கு பணிமாறுதலாகி வந்தபோது சாரு நிவேதிதாவுக்கு ரமேஷ் பிரேதன், பிரேம், நாகார்ஜுனன் ஆகியோரின் நட்பு உருவானது. அவர்களுடன் இணைந்து பின்நவீனத்துவ - பின் அமைப்பு வாத சிந்தனைகளில் ஈடுபாடு உருவானது. பாண்டிச்சேரியில் இருந்து வெளியான நிறப்பிரிகை இதழுடன் இணைந்து செயல்பட்டார். நிறப்பிரிகை இடதுசாரிச் சிந்தனைகளையும், பெரியாரியச் சிந்தனைகளையும் பின்நவீனத்துவ பார்வையுடன் இணைக்கும் முயற்சியை முன்னெடுத்த இதழ்."சிறுபத்திரிகைகளில் இரண்டு பிரிவுகள் இருந்தன. சனாதன வாதம், பின் நவீனத்துவம் இந்த இரண்டில் நான் இரண்டாவதைச் சார்ந்திருந்தேன்" என்று சாரு நிவேதிதா குறிப்பிடுகிறார்.

பின்நவீனத்துவம் மீதான ஈடுபாடு சாரு நிவேதிதாவை நேர்கோடற்ற எழுத்து முறை, மீபுனைவு எழுத்துமுறை ஆகியவற்றில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. 1988- ல் மீட்சி 26 ஆவது இதழில் வெளிவந்த 'கிரிக்கெட்டை முன்வைத்து புத்திஜீவிகளுக்கு ஒரு முட்டாள் சொல்லிக் கொண்டது ' என்னும் சிறுகதை தமிழில் அத்தகைய இலக்கிய வடிவங்களுக்கு முன்னோடியானது. (முனியாண்டி என்ற பெயரில் வெளியானது). அது நவீனத்துவ எழுத்துமுறையையும் அதன் அகச்சித்தரிப்புகளையும் கேலிசெய்து நிராகரிக்கிறது. கதையை தன்னைத்தானே மறுத்துக்கொண்டு நகரும் ஒருவகை உரையாடலாக ஆக்கிக் காட்டுகிறது.

நேர்கோடற்ற, மீபுனைவு முறையில் சாரு நிவேதிதா எழுதிய 'எக்ஸிஸ்டென்ஷலிசமும் ஃபேன்சி பனியனும்’ என்னும் முதல் நாவல் அவருடைய முந்தைய இடதுசாரிப் பார்வையை கேலிசெய்து நிராகரிக்கிறது. இடதுசாரிப் பார்வையிலுள்ள தன்முனைப்பு, ஒழுக்கவியல் பார்வை ஆகியவற்றை நிராகரித்து அனைத்துக்கும் எதிரான கலகத்தை முன்வைக்கிறது. அதைத் தொடர்ந்து சாரு நிவேதிதா எழுதிய ஸீரோ டிகிரி அவருடைய நாவல்களில் முதன்மையானது என விமர்சகர்களால் கருதப்படுகிறது. டைரி போன்ற குறிப்புகள், வெட்டி ஒட்டியதுபோன்ற செய்தித்துணுக்குகள், கட்டற்ற உரைநடைப்பகுதிகள் என கலவைவடிவில் அமைந்த இந்நாவல் தன்னையும் புறத்தையும் மறுக்கும் கலகத்தை முன்வைப்பது. வெவ்வேறு ஒவ்வாமைகள் வழியாக தன் காலகட்டத்தை எதிர்கொள்ளும் நாவல் இது.

சாரு நிவேதிதாவின் இந்த இரண்டாம் காலகட்டத்தின் முகப்பு நூல் என சொல்லத்தக்கது அவர் விகடன் இணைய இதழில் எழுதிய கோணல் பக்கங்கள். அது ஜான் ஜெனே, மார்க்கி டி ஸாத், கேத்தி ஆக்கர், அந்தோனின் ஆர்த்தோ போன்ற உலகம் முழுக்க வகுக்கப்பட்ட எல்லைகளை மீறிச்சென்ற எழுத்தாளர்களையும்; இசைமரபுகளை உடைத்துச் சென்ற Cradle of Filth போன்ற மாற்று இசைப்போக்குகளையும் அறிமுகம் செய்து அவற்றை இணைத்து தமிழில் அறியப்படாதிருந்த ஒரு வெளியை உருவாக்கியது. சாரு நிவேதிதாவை நோக்கி ஏராளமான இளைஞர்கள் வருவதற்கு வழியமைத்தது அக்கட்டுரைத்தொடர்.

சாரு- அவந்திகா
மூன்றாம் காலகட்டம்

ஸீரோ டிகிரி நாவலின் வழியாகவே சாரு நிவேதிதா இரண்டாம் காலகட்டத்தைக் கடந்து வந்தார். அந்நாவல் அதன் முடிவில் கதைசொல்லியின் மகள் சார்ந்த உணர்வுகள் வழியாக ஓர் மதம்சாரா ஆன்மிகத்தை தொட்டது. மூன்றாம் காலகட்டம் அந்த உணர்வுகளில் இருந்து உருவானது. இக்காலகட்டத்தில் சாரு நிவேதிதா வெவ்வேறு ஆன்மிகவாதிகளை கருத்தில்கொள்ளவும், முன்பு அவர் பொருட்படுத்தாத செவ்வியல் இசை போன்றவற்றை உள்வாங்கவும் முயன்றார். எதிர்நிலைகளினூடாகச் சென்றடையும் ஓர் ஆன்மிகத்தை முன்வைக்கும் காலகட்டம் இது . அழகியல், அறம் போன்ற முன்பு அவர் ஏளனம் செய்து விலக்கிய சொற்களை தனக்குரிய பொருளில் பயன்படுத்தத் தொடங்கினார். தமிழ் நவீன இலக்கியத்தில் அவர் முழுமையாக நிராகரித்த புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு. அழகிரிசாமி முதலிய படைப்பாளிகளை மறுபரிசீலனை செய்து அவர்களில் தனக்கு உவப்பான பகுதிகளை அடையாளம் காட்டிய பழுப்புநிறப் பக்கங்கள் என்னும் நூலை எழுதினார். எக்ஸைல் என்னும் நாவல் இந்தக் காலகட்டத்தின் முகப்புநூல்.

விவாதங்கள்

1982-ல் சாரு நிவேதிதா சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே.சில குறிப்புகளை கடுமையாக கண்டித்து வெளியிட்ட பிரசுரம் விரிவான விவாதத்திற்கு ஆளாகியது

1992-ஆம் ஆண்டில் மதுரையில் சாரு நிவேதிதா தன் நண்பர்களுடன் இணைந்து நடத்திய ரெண்டாவது ஆட்டம் என்னும் நாடகம் ஒழுக்க எல்லைகளை மீறியது என குற்றம் சாட்டப்பட்டு அரங்கிலிருந்த சிலரால் தாக்கப்பட்டார்

2010-ல் சர்ச்சைக்குரிய துறவியான நித்யானந்தாவை ஆதரித்து சாரு நிவேதிதா கட்டுரைகள் எழுதினார். நித்யானந்தா ஒரு பாலியல் குற்றச்சாட்டில் கைதானபோது அவரை விமரிசித்து 'சரசம் சல்லாபம் சாமியார்’ என்ற பெயரில் எழுதிய கட்டுரைகளுக்காக நித்யானந்தா குற்றவழக்குகள் தொடர்ந்தார்.

2015-ல் பெருமாள் முருகன் அவர் எழுதிய மாதொருபாகன் என்னும் நாவல் ஒரு குறிப்பிட்ட சாதியினரை இழிவுசெய்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டு எதிர்க்கப்பட்டபோது சாரு நிவேதிதா பெருமாள் முருகனுக்கு எதிரான நிலைபாடு எடுத்தார். மக்களின் உணர்வுகளுக்கு எதிராக எழுதுவது கலகமோ புரட்சியோ அல்ல, அதிகார அமைப்புகளுக்கு எதிராகவே எழுத்தாளன் எழுதவேண்டும், கருத்துச்சுதந்திரத்தின் எல்லை அது என்று கூறினார்.

விருதுகள்,ஏற்புகள்

  • ஸீரோ டிகிரி சந்த்ரா சித்தன் மற்றும் பிரதீப் செபாஸ்டியன் தேர்வு செய்த ஐம்பது இந்திய படைப்பிலக்கிய நூல்கள் என்னும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது .
  • 2001 முதல் 2010 வரையிலான சிறந்த பத்து இந்திய எழுத்தாளர்களில் ஒருவராக எகனாமிக்ஸ் டைக்ஸ் இதழால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • ஸீரோ டிகிரி 2013 யான் மிக்கால்ஸ்கி விருது நெடும்பட்டியலில் இடம்பெற்றிருந்தது (Jan Michalski)
  • ஸீரோ டிகிரி இந்தியாவின் பதினைந்து முக்கியமான இலக்கிய நூல்களின் பட்டியலில் விமர்சகர் Dessidre Fleming ஆல் பட்டியலிடப்பட்டிருந்தது
  • 2019 -ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருது சாரு நிவேதிதாவுக்கு வழங்கப்பட்டது
  • 2022 -ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது சாரு நிவேதிதாவுக்கு வழங்கப்பட்டது.

இலக்கிய இடம்

தொடர்ச்சியாக கடுமையாக மறுக்கப்பட்டும், ஏற்கப்பட்டும் தமிழ் வாசகச்சூழலால் எதிர்கொள்ளப்பட்டு வருபவர் சாரு நிவேதிதா. சாரு நிவேதிதாவின் இலக்கிய இடம் அவர் ஓர் இலக்கியச் செயல்பாட்டாளர், படைப்பிலக்கியவாதி என்னும் இரு தளங்களைச் சேர்ந்தது,

ஓர் இலக்கியச் செயல்பாட்டாளராக சாரு நிவேதிதா சாதாரணமாக தமிழ் நவீன இலக்கியச் சூழலில் பேசப்படாத ஐரோப்பிய, அமெரிக்க கலகக்காரப் படைப்பிலக்கியவாதிகளையும் எதிர்அழகியலை முன்வைத்தவர்களையும் அறிமுகம் செய்தார். இலக்கியத்தை இசை, ஓவியம், சினிமா ஆகியவற்றுடன் இணைத்து ஒரே கலைச்செயல்பாடாக விவாதித்தார். தொடர்ச்சியாக கட்டுரைகள், பத்திகள் வழியாக பேசி அந்த மாற்றுமரபை ஒரு வலுவான தரப்பாக தமிழில் நிலைநாட்டினார். அதை ஏற்று எழுதும் ஒரு படைப்பிலக்கியவாதிகளின் வரிசையையும் உருவாக்கினார்.

படைப்பு சமூகத்தின் உண்மையையோ, ஆசிரியர் அறிந்த மெய்மையையோ முன்வைப்பது என்னும் வரையறையை மீறும் பிறழ்வெழுத்து (Transgressive Fiction) என்னும் வகைமையில் தன் நாவல்களையும் கதைகளையும் எழுதியவர் சாரு நிவேதிதா. எந்த வகையான இலக்கணங்களுக்குள்ளும் அடங்காத படைப்புக்கள் அவை. கட்டுரை, கதை, தன்வரலாறு, டைரிக்குறிப்பு ஆகிய எல்லாவற்றையும் கலந்து உருவாக்கப்பட்ட மீபுனைவு வடிவங்கள். பாலியல் மீறல்களும் அறமீறல்களும் தன்னைத்தானே ரத்துசெய்துகொள்ளும் வடிவமீறல்களும் கொண்ட படைப்புகள்.

"தமிழில் இன்று பிறழ்வெழுத்தின் முதன்மை உதாரணம் சாரு நிவேதிதாதான். இந்திய அளவில் நான் வாசித்தவரை இன்னொரு படைப்பாளியை தயக்கமில்லாமல் பிறழ்வெழுத்தை உருவாக்கியவர் என்று சொல்லமுடிவதில்லை. சாரு நிவேதிதாவின்  எழுத்தில் விழுமியங்கள் மட்டுமல்ல புனைவின் ஒழுங்குகள் கூட சிதறிக்கிடக்கின்றன. அவற்றிலிருந்து எந்த உண்மையையும் நாம் கண்டடைய முடிவதில்லை. விழுந்துடைந்த கண்ணாடியில் தெரியும் பிம்பம் போல அதை நாம் பார்க்கிறோம். எந்த ஒரு நியதியைக்கொண்டு பார்த்தாலும் அவருடைய எழுத்து வெளியே கிடக்கிறது." என்று விமர்சகர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்

நூல்கள்

நாவல்
  • எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும்
  • ஸீரோ டிகிரி
  • ராஸ லீலா
  • காமரூப கதைகள்
  • தேகம்
  • எக்ஸைல்
  • ஔரங்கசீப்
சிறுகதை
  • கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் - நாகார்ச்சுனன் மற்றும் சில்வியா (எம்.டி.முத்துக்குமாரசாமி) கதைகளுடன் வந்த தொகுதி
  • நேநோ
  • மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்
  • ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி
  • கடல் கன்னி (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்)
  • ஊரின் மிக அழகான பெண் (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்)
கட்டுரைத் தொகுப்பு
  • கோணல் பக்கங்கள் - பாகம் 1
  • கோணல் பக்கங்கள் - பாகம் 2
  • கோணல் பக்கங்கள் - பாகம் 3
  • திசை அறியும் பறவைகள்
  • வரம்பு மீறிய பிரதிகள்
  • தப்புத் தாளங்கள்
  • தாந்தேயின் சிறுத்தை
  • மூடுபனிச் சாலை
  • எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது
  • கடவுளும் நானும்
  • வாழ்வது எப்படி?
  • மலாவி என்றொரு தேசம்
  • கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்
  • கெட்ட வார்த்தை
  • கடவுளும் சைத்தானும்
  • கலையும் காமமும்
  • சரசம் சல்லாபம் சாமியார்
  • மனம் கொத்திப் பறவை
  • கடைசிப் பக்கங்கள்
  • வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள்
  • பழுப்பு நிறப் பக்கங்கள் - பாகம் 1
  • பழுப்பு நிறப் பக்கங்கள் - பாகம் 2
  • பழுப்பு நிறப் பக்கங்கள் - பாகம் 3
நாடகம்
  • ரெண்டாம் ஆட்டம்
சினிமா விமர்சனம்
  • லத்தீன் அமெரிக்க சினிமா: ஒரு அறிமுகம்
  • தீராக்காதலி
  • கலகம் காதல் இசை
  • சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல்
  • சினிமா சினிமா
  • நரகத்திலிருந்து ஒரு குரல்
  • கனவுகளின் நடனம்
அரசியல்
  • அஸாதி அஸாதி அஸாதி
  • அதிகாரம் அமைதி சுதந்திரம்
  • எங்கே உன் கடவுள்?
நேர்காணல்கள்
  • ஒழுங்கின்மையின் வெறியாட்டம்
  • இச்சைகளின் இருள்வெளி ('பாலியல் - நளினி ஜமீலாவுடன் ஒரு உரையாடல்' புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு)
கேள்வி பதில்
  • அருகில் வராதே
  • அறம் பொருள் இன்பம்
ஆங்கிலம்
  • Zero Degree (Novel)
  • Marginal Man (Novel)
  • To Byzantium: A Turkey Travelogue
  • Unfaithfully Yours (Collection of articles)
  • Morgue Keeper (Selected short stories)
  • Towards a Third Cinema (Articles on Latin American Cinema)

உசாத்துணை


✅Finalised Page