being created

சரவணன் சந்திரன்

From Tamil Wiki
Revision as of 00:54, 2 February 2022 by Rajesharo (talk | contribs) (Second version after updating the comments from Peer Review by Madhu)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன் (1979) தமிழில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர். ஊடகவியலாளர், வணிகர், வேளாண்தொழில்முனைவர் என பல முகங்கள் கொண்டவர்.

பிறப்பு, கல்வி

தேனியில் 1979ல் பிறந்த சரவணன் சந்திரன் தனது ஆரம்பிக்கல்வியினை தேனியில் உள்ள பள்ளியொன்றில் தொடங்கினார். 3ம் வகுப்பு படித்து முடித்தபோது அவரது குடும்பம் வேலை நிமித்தமாக கோவில்பட்டிக்கு குடியேறினார்கள். கோவில்பட்டியில் நாடார் பள்ளியில் படித்துக் கொண்டே ஹாக்கி விளையாட்டிலும் தேர்ச்சி பெற்றார். தனது பள்ளி இறுதி ஆண்டுகளை பாளையம்கோட்டை திருமலை பள்ளியில் படித்தார். சரவணன் சந்திரன் அரசினர் விளையாட்டு விடுதியில் தங்கி ஹாக்கி விளையாட்டிலும் தேர்ச்சி பெற்றார். அதன் காரணமாக இவருக்கு விளையாட்டு வீரர்களுக்கான தகுதியில் சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பாடப்பிரிவில் இளங்கலை பயில வாய்ப்பு கிடைத்தது. மாநில அளவில் ஹாக்கி விளையாட்டில் கல்லூரி சார்பாகப் பங்கெடுத்துக் கொண்டிருந்தவர் கல்லூரி இரண்டாம் ஆண்டு பயில்கையில் ஒரு விபத்தில் சிக்கியதால் மேற்கொண்டு விளையாட்டைத் தொடரமுடியாத நிலைக்குச் சென்றார். அதன் பிறகான கல்லூரி வாழ்வில் கல்லூரி நூலகத்தில் புத்தகங்களை வாசித்து இலக்கியம் பக்கம் ஈர்க்கப்பட்டார்.

தனிவாழ்க்கை

சரவணன் சந்திரனின் மனைவி பெயர் பவித்ரா. தந்தை பெயர் சந்திரன். தாய் பெயர் சாந்தி. தங்கை பெயர் மகாலட்சுமி. இவரது சிறுவயதில் தாய் மற்றும் அத்தை பசுபதி ஆகியோர் வீட்டில் புத்தகங்களைப் படிப்பதற்கு ஆர்வமூட்டியுள்ளனர். ஆறாம்திணை இணைய இதழில் பணியாற்றிதன் மூலம் இதழியல் துறைக்கு வந்தவர். பிறகு காலச்சுவடு நடத்திய உலகத்தமிழ்.காம் இணைய இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு இந்தியா டுடே இதழில் பணியாற்றினார். பின்னர் காட்சி ஊடகமான விஜய் தொலைகாட்சியில் 'குற்றம் நடந்தது என்ன' உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் இயக்கத்தில் பணியாற்றினார். ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளின் இயக்கத்திலும், நிர்வாகத்திலும் பங்கெடுத்துள்ளார். இதற்கிடையில் ஒரு பிபிஓ நிறுவனம் தொடங்கி பிற நிறுவனங்களுக்கான சேவை வழங்கும் துறையிலும் ஈடுபட்டிருந்தார். கிழக்கு தைமூர், இந்தோனேஷியா, மலேசிய உள்ளிட்ட நாடுகளில் வியாபாரம் நிமித்தமாக 2 ஆண்டுகள் வரை தங்கியுள்ளார். மீன் வியாபாரத்திற்கான நிறுவனம் ஒன்றையையும் தொடங்கி மொத மற்றும் சில்லறை வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தார். பழனியில் கொய்யா, பேரிட்சை பயிரிடும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். சினிமா விவாதங்களில் பங்கெடுத்துள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

இதழியல் மற்றும் காட்சி ஊடகங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பின், சரவணன் சந்திரனின் முதல் நாவல் 'ஐந்து முதலைகளின் கதை' 2015 ஆண்டு அக்டோபர் மாதம் உயிர்மை பதிப்பாக வெளியானது.இந்நாவல் இளம், புதிய வாசகர்களின் கவனத்தைப் பெற்றது. இவர் முதலில் எழுதிய நாவல் 'அசோகர்' 2021ம் ஆண்டு வெளியானது. எழுத்துகளின்வழியாகத்தான் நான் சமகாலத்தைப் பதிவு செய்வதோடு சமகாலத்தில் அழுத்தமாக கால்களை ஊன்றி நின்று கடந்தகாலத்தையும் பழமையின் வேர்களையும் தொட விரும்புகிறேன் என்று சரவணன் சந்திரன் தனது எழுத்து முறை பற்றிக் குறிப்பிடுகிறார்.

இலக்கிய இடம்

தமிழ் புனைவுலகின் பேசப்படாத சில களங்களைக் கையாண்டவர் சரவணன் சந்திரன். இணையவழி எழுத்து கவனம் பெற்ற காலத்தில் எழுத வந்து, வலைத்தளங்கள் மற்றும் இணைய இதழ்களில் எழுதி பின்னர் நாவலாசிரியராக ஆனவர். சரவணன் சந்திரன் கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அப்பணசாமி, சோ.தர்மன், கோணங்கி, உதயசங்கர் உள்ளிட்டோரை தனது முன்னோடிகளாகக் குறிப்பிடுகிறார்.ரோலக்ஸ் வாட்ச் நாவலைப் பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் சாரு நிவேதிதா "திருகல் மொழி இல்லாமல் சுளுவான நடையில் எழுதப்பட்ட நாவல்" என்கிறார். "இளைஞர்கள் உணரும் நவீன உலகின் பதட்டங்களை சரசரவென்று ஆற்றின் குறுக்கே கடக்கும் பாம்பு போல் கதை செல்கிறது" என்றும் குறிப்பிடுகிறார். முகநூல் பாணி எழுத்தின் சாதகங்களான சரளமான மொழியோட்டம், திருகலற்ற மொழி என்னும் அம்சங்கள் அமையப்பட்டவை சரவணன் சந்திரனின் படைப்புகள் என்று ஜெயமோகன் இவரது படைப்புகளை  மதிப்பிடுகிறார். பிற படைப்பாளிகள் போலன்றி தான் சென்றடைந்த இடங்களை உடனே கடந்து முன்னேறிக்கொண்டிருக்கும் விசைகொண்ட சரவணன் சந்திரன் மேலும் முக்கியமான ஆக்கங்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார் என்றும் ஜெயமோகன் இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

படைப்புகள்

நாவல்கள்

வரிசை எண் ஆண்டு நூலின் பெயர் பதிப்பகம்
1 2015 ஐந்து முதலைகளின் கதை உயிர்மை பதிப்பகம்
2 2016 ரோலக்ஸ் வாட்ச் உயிர்மை பதிப்பகம்
3 2016 அஜ்வா உயிர்மை பதிப்பகம்
4 2017 பார்பி கிழக்கு பதிப்பகம்
5 2019 சுபிட்ச முருகன் டிஸ்கவரி புக்பேலஸ்
6 2019 லகுடு கிழக்கு பதிப்பகம்
7 2020 அத்தாரோ ஸீரோ டிகிரி பப்ளிஷிங்
8 2021 அசோகர் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்

கட்டுரைத்தொகுப்புகள்

வரிசை எண் ஆண்டு நூலின் பெயர் பதிப்பகம் / பதிப்பாளர்
1 2003 எக்ஸ்டஸி கிழக்கு பதிப்பகம்
2 2017 மதிகெட்டான் சோலை கிழக்கு பதிப்பகம்
3 2019 அன்பும் அறமும் கிழக்கு பதிப்பகம்
4 2019 கடலும் மகனும் ஜீவா படைப்பகம்
4 2020 வையிலைவேற் காளை கருப்பு
5 2021 தற்செயல்களை விரட்டுகிறவன் எழுத்து பிரசுரம்

கதைத்தொகுதிகள்

வரிசை எண் ஆண்டு நூலின் பெயர் பதிப்பகம் / பதிப்பாளர்
1 2003 வெண்ணிற ஆடை கிழக்கு பதிப்பகம்
2 2017 பாவத்தின் சம்பளம் கிழக்கு பதிப்பகம்

உசாத்துணை