க. வேற்பிள்ளை
To read the article in English: K. Verpillai.
க. வேற்பிள்ளை (1847 - பிப்ரவரி 2, 1930) ம.க.வேற்பிள்ளை. இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், உரையாசிரியர், தமிழாசிரியர் மற்றும் பதிப்பாளர். இவர் எழுதிய உரை நூல்கள் முக்கியமான பங்களிப்பாகும்.
வாழ்க்கைக் குறிப்பு
மட்டுவில் கணபதிப்பிள்ளை வேற்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணம் மட்டுவில்லில் கணபதிபிள்ளை உடையாருக்கு புலோலியைச் சேர்ந்த உமாமகேசுவரி மகனாக 1847-ல் மகனாகப் பிறந்தார். இளமையில் மட்டுவில் சண்முகம்பிள்ளையிடம் நீதி நூல்கள், இலக்கண இலக்கியங்கள், நிகண்டுகளையும் கற்றார். நல்லூர் கார்த்திகேய உபாத்யாயரிடம் இலக்கண இலக்கியங்கள் கற்றார். ஆறுமுக நாவலரிடம் ஐயங்கள் கேட்டு தெளிவுற்றார். சபாபதி நாவலரின் நண்பர். நல்லூர் பொன்னம்பலப் பிள்ளையிடம் தொல்காப்பியம், இராமாயணம் கற்றார்.
ம. வே. திருஞானசம்பந்தம், சட்ட அறிஞர் வே. மாணிக்கவாசகர், குருமணி ம. வே. மகாலிங்கசிவம், நடராசா, கந்தசாமி ஆகியோர் ம. க. வேற்பிள்ளையின் பிள்ளைகள் ஆவர்.புலவர் ம. பார்வதிநாதசிவம் இவரின் பேரனாவார்.
இலக்கிய வாழ்க்கை
சிதம்பரத்திலுள்ள நாவலர் சைவ பிரகாச வித்தியாசாலையில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். சிற்றிலக்கிய நூல்களான ஈழமண்டல சதகம், புலோலி பர்வதவர்த்தினியம்மை தோத்திரம், புலோலி வைரவக் கடவுள் தோத்திரம் பாடினார். வைரவ ஸ்தோத்திர மாலை அச்சிடப்படவில்லை.
உரையாசிரியர்
உரையெழுதும் திறமையைப் பாராட்டி சிரோமணி பொன்னம்பலப் பிள்ளை இவருக்கு "உரையாசிரியர்" என்னும் பட்டத்தை அளித்தார். திருவாதூர் புராண விருத்தியுரை, புலியூரந்தாதியுரை, கெவுளி நூல் விளக்கவுரை, அபிராமி அந்தாதி ஆகிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.
மாணவர்கள்
- ச. பொன்னம்பலப்பிள்ளை
- நமச்சிவாயப் புலவர்
- வித்துவான் சுப்பையா பிள்ளை
மறைவு
க. வேற்பிள்ளை பிப்ரவரி 2, 1930-ல் சிதம்பரத்தில் காலமானார்.
நூல்கள் பட்டியல்
- ஈழமண்டல சதகம்
- புலோலி பர்வதவர்த்தினியம்மை தோத்திரம்
- புலோலி வைரவக் கடவுள் தோத்திரம்
- வைரவ ஸ்தோத்திர மாலை
- ஆருயிர்க் கண்மணி மாலை
உரைகள்
- திருவாதூர் புராண விருத்தியுரை
- புலியூரந்தாதியுரை
- கெவுளி நூல் விளக்கவுரை
- அபிராமி அந்தாதி
பதிப்பித்த நூல்கள்
- வேதாரணிய புராணம்
- சிவகாமியம்மை சதகம்
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
✅Finalised Page