under review

கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர்

From Tamil Wiki
Revision as of 00:39, 5 January 2023 by Boobathi (talk | contribs)

To read the article in English: Konerirajapuram Vaidyanatha Ayyar. ‎

கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர் புகைப்படம் உதவி: veethi.com
கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர் புகைப்படம் உதவி: veethi.com

கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர் (1880-1921) புகழ்பெற்ற கர்னாடக சங்கீதப் பாடகர்களில் ஒருவர்

பிறப்பு, கல்வி

வைத்தியநாத ஐயர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பந்தநல்லூரை அடுத்த மரத்துறையில் 1880-ல் நாராயண ஐயர் - சீதாலக்ஷ்மி இணையருக்குப் பிறந்தார். மூன்று வயதில் இவர் தாய் இறந்துவிட, இவரது பாட்டியின் ஊரான கோனேரிராஜபுரம் (திருநல்லம்) என்ற ஊரில் வளர்ந்தமையால் கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர் என்றழைக்கப்பட்டார்.

கோனேரிராஜபுரத்தில் இருந்த நாதஸ்வர இசைக் கலைஞர்கள் குழந்தைவேல், அவருடைய மகன் வைத்தியலிங்கம் ஆகியோரிடம் இசை பயின்றார். பந்தநல்லூர் நட்டுவனார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்பவரிடமும் சிறிதுகாலம் இசை கற்றார். மருதநல்லூர் குழந்தைஸ்வாமி, சின்ன குழந்தைஸ்வாமி, மெலட்டூர் சுந்தர பாகவதர், வெங்கட்ராம பாகவதர் ஆகியோரிடம் இசைப்பயிற்சி பெற்றார். புதுக்கோட்டை மான்பூண்டியாபிள்ளையிடம் பல்லவி பாடுவதிலும் லய ஞானத்திலும் தனிப்பயிற்சி எடுத்து திறமை பெற்றார்[1]

தனிவாழ்க்கை

கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர் தன் 12-ஆவது வயதில் மணம்புரிந்துகொண்டார்.

இசைப்பணி

கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர் கச்சேரிகளில் இவர் பாடுவதற்குப் பக்கவாத்தியங்கள் இசைப்பது கடினம் என்னும் அளவுக்கு கடினமான பல்லவிகளைப் பாடுபவர். திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர் இசை சுகமான அனுபவமாக இருப்பதுதான் உயர்வு என உணர்த்திய பிறகு, அவ்விதமே மாற்றிக்கொண்டார். இவரது கச்சேரிகள் ஐந்து மணி நேரம் நிகழ்பவை. இவர் கற்பனை ஸ்வரப் பிரயோகங்களுக்காகப் புகழ்பெற்றிருந்தார்.

இவர் ஒலிப்பெருக்கிகள் இல்லாத காலத்தில் வாய்மூடி மந்தர ஸ்தாயியில் பாடும்போது தெளிவாகக் கேட்கும் குரல்வளம் கொண்டிருந்தார் என முடிகொண்டான் வேங்கட்ராம ஐயர் சொல்கிறார். கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர் இந்துஸ்தானி இசையில் ஈடுபாடு கொண்டிருந்தார். ஹஃபிஸ் கான் (Hafiz Khan) பக்‌ஷி கான் (Bakshi Khan) ஆகியோரின் இசையை விரும்பிக் கேட்டுவந்தார்.

மாணவர்கள்

  • கோட்டு வாத்தியம் பூதலூர் கிருஷ்ணமூர்த்தி ஐயர்
  • கோயமுத்தூர் விஸ்வநாத ஐயர்
  • தேதியூர் கிருஷ்ணமூர்த்தி
  • முடிகொண்டான் வேங்கட்ராம ஐயர்
  • பாபநாசம் சிவன்[2]
  • திருவீழிமிழலை சகோதரர்கள்

மறைவு

1921-ல் தனது 43-வது வயதில் நோய்வாய்ப்பட்டு மறைந்தார்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page