under review

கொத்தமங்கலம் சுப்பு

From Tamil Wiki
Revision as of 18:36, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:இலக்கிய விமர்சகர்கள் சேர்க்கப்பட்டது)

To read the article in English: Kothamangalam Subbu. ‎

கொத்தமங்கலம் சுப்பு

கொத்தமங்கலம் சுப்பு (கலைமணி) (அக்டோபர் 10, 1910 - பிப்ரவரி 15, 1974) தமிழில் நாவல்களையும் திரைக்கதைகளையும் இசைப்பாடல்களையும் எழுதிய எழுத்தாளர். வில்லுப்பாட்டுக் கலைஞர், நடிகர், பாடகர். நாதஸ்வர இசையில் ஈடுபாடுகொண்ட இசைவிமர்சகர். இவர் எழுதிய தில்லானா மோகனாம்பாள் என்னும் நாவல் புகழ்பெற்றது. ஜெமினி கதை இலாகாவுடன் நீண்டநாள் இணைந்து பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

கொத்தமங்கலம் சுப்புவின் இயற்பெயர் சுப்பிரமணியன். இவர் தமிழ்நாடு, காரைக்குடி அருகில் ஆவுடையார் கோயிலுக்கு அண்மையிலுள்ள கானேரியேந்தல் என்ற ஊரில் மகாலிங்கம் ஐயருக்கும், கங்கம்மாளுக்கும் அக்டோபர் 10, 1910-ல் பிறந்தார். சிறு வயதிலேயே தாயை இழந்த சுப்பு, சிற்றன்னையின் பராமரிப்பில் வளர்ந்தார். எட்டாம் வகுப்புவரை ஆவுடையார் கோயில் தொடக்கப்பள்ளியில் கல்விகற்றார்.

தனிவாழ்க்கை

காந்திமகான் கதை விளம்பரம்
கொத்தமங்கலம் சுப்பு
கொத்தமங்கலம் சுப்பு

கொத்தமங்கலம் சுப்பு இளமையில் தன் முறைப்பெண் மீனாட்சியை மணந்துகொண்டார். கொத்தமங்கலத்திற்கு வந்து அங்கு ஒரு வணிகரிடம் கணக்கு எழுதுபவராக சேர்ந்தார். பள்ளத்தூரில் இருந்த நாடகக்குழு ஒன்றுக்கு பாடல் எழுதினார். அந்நாடகக்குழுவிற்கு நடிக்க வந்த வத்திராயிருப்பைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் நடிகராகவும் பாடகராகவும் நாடக ஆசிரியராகவும் இருந்தார். சீனிவாசன் சங்கரதாஸ் சுவாமிகளிடம் நாடகமும் வத்திராயிருப்பு சாமா ஐயங்காரிடம் இசையும் கற்றவர். அவர் கொத்தமங்கலத்துக்கு இடம்பெயர்ந்தார். கொத்தமங்கலம் சீனு என பெயரை மாற்றிக்கொண்டார். அவருடன் இணைந்த சுப்ரமணியன் கொத்தமங்கலம் சுப்பு என பெயரை மாற்றிக்கொண்டார். இருவரும் இணைந்து பவளக்கொடி முதலிய நாடகங்களை நடத்தினர்.

கொத்தமங்கலம் சீனு பாடிய இசைத்தட்டு ஒன்று வெளிவந்ததும் அவருக்கு திரைப்பட வாய்ப்பு வரவே அவர் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். சீனுவின் அழைப்பின்பேரில் சுப்பு சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தார். ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்தார். திரையில் நடிகராகவும் எழுத்தாளராகவும் புகழ்பெற்றபின் சினிமாநடிகை சுந்தரிபாயை இரண்டாவதாக மணந்துகொண்டார்.

கொத்தமங்கலம் சுப்பு ஜெமினி ஸ்டுடியோவின் மேலாளர் பதவிக்கு உயர்ந்தார். ஜெமினி நினைவுகளை எழுதிய அசோகமித்திரன் ’கொத்தமங்கலம் சுப்பு ஜெமினி ஸ்டுடியோவின் முக்கிய அங்கம். அவர்தான் அங்கே நம்பர் டூ. ஒவ்வொரு மாதமும் தன் இல்லத்தில் இசைக்கச்சேரிகள் நடத்துவார். அவர் வீடு ஒரு தர்மசத்திரம் போலவே இருக்கும். எப்போதும் யாராவது ஒரு பத்துபேர் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர் சம்பாதித்தார், மற்றவர்களுக்காகச் செலவழித்தார்’ என்று கூறுகிறார்.

கொத்தமங்கலம் சுப்புவுக்கு பன்னிரண்டு குழந்தைகள். இரு குழந்தைகள் இளமையில் மறைந்தன. அவருடைய மகன் கொத்தமங்கலம் விஸ்வநாதன் தனியார் நிறுவனம் ஒன்றில் உயரதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர், தந்தையின் வில்லிசை நிகழ்வுகளை தொடர்ந்து நடத்திவந்தார்.

கொத்தமங்கலம் சுப்பு சுந்தரிபாய்
கொத்தமங்கலம் சுப்பு நடிகராக (ஔவையார்)

கலைவாழ்க்கை

திரைப்படம்

கொத்தமங்கலம் சுப்பு ஜெமினி கதை இலாகா ஊழியராக இருபத்திரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். 1935-ல் கே. சுப்பிரமணியம் இயக்கிய பட்டினத்தார் திரைப்படத்தில் நடித்தார். 1936-ல் சந்திரமோகனா என்ற திரைப்படத்தில் நடிகர் எம்.கே. ராதாவின் நண்பனாக நடித்தார். 1937-ல் மைனர் ராஜாமணி; தொடர்ந்து அனாதைப் பெண், அதிர்ஷ்டம், திருநீலகண்டர், அடங்காப்பிடாரி, கச்ச தேவயானி, மதனகாமராஜன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். 1939-ல் வெளிவந்த சாந்த சக்குபாய் என்னும் படத்தில் நடித்ததுடன் அதற்கு கதைவசனம் பாடல்களும் எழுதினார். அதுவே அவருடைய ஆற்றல் வெளிப்பட்ட முதல்படம்.

1944-ஆம் ஆண்டில் வெளிவந்த ஜெமினியின் தாசி அபரஞ்சி இவர் நடித்த ஒரு வெற்றிப் படம். 1945-ஆம் ஆண்டில் கண்ணம்மா என் காதலி படத்தை இயக்கினார். இதன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் கொத்தமங்கலம் சுப்புவே எழுதியிருந்தார். பின்னாளில் இவர் மனைவியான சுந்தரிபாய் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். 1947-ல் மிஸ் மாலினி திரைப்படத்தை இயக்கி, அதில் தானே கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படம் பின்னர் மிஸ்டர் சம்பத் என்ற பெயரில் இந்தியில் வெளிவந்தது. 1953-ஆம் ஆண்டில் ஔவையார் என்ற பிரபலமான திரைப்படத்தை இயக்கினார். கே.பி. சுந்தராம்பாள் போன்ற அன்றைய பிரபலமான நடிகர்கள் இதில் நடித்தனர். இத்திரைப்படத்தில் மனைவி சுந்தரிபாயுடன் சிறு வேடம் ஒன்றில் சுப்பு நடித்தார்.

வில்லுப்பாட்டு
கொத்தமங்கலம் சுப்பு வில்லுப்பாட்டு

வில்லுப்பாட்டுக் கலைஞரும் பாடகருமான கொத்தமங்கலம் சுப்பு அந்த நாட்டார் கலையை நவீனப்படுத்தியவர்களில் ஒருவர். தொடர்ந்து அதற்கான பாடல்களை எழுதினார். அவை நாட்டார்மொழியில் அமைந்தவை. தேசிய இயக்க செய்திகளையும் சமூகசீர்திருத்த அறைகூவலையும் கொண்டவை. காந்திமகான் கதை என்ற பெயரில் வில்லுப்பாட்டாகவே காந்தியின் வாழ்க்கையை எழுதி பலநூறு மேடைகளில் பாடி நிகழ்த்தியிருக்கிறார். 'மருக்கொழுந்து' என்ற கொத்தமங்கலம் சுப்பு கவிதைத் தொகுப்பு இரண்டு தொகுதிகளாய் வந்துள்ளது. முதல் தொகுதியில் பண்டிகை, அறிவுரை, காதல், நாட்டு நடப்பு, நாட்டுப் பற்று என்ற தலைப்புகளில் 200-க்கு மேற்பட்ட பாடல்கள் உள்ளன. இரண்டாம் தொகுதியில் தெய்வீகம், இவர்களைப் பற்றி, இவைகளைப் பற்றி என்ற தலைப்புகளில் 160-க்கு மேற்பட்ட கவிதைகள் உள்ளன.

மனைவி: சண்முகம் ஆறுபடை வீடு – கந்த
சட்டிக்கு போய்வா காசுபணம் தேடு
கணவன்: சிந்தனை ஏண்டி ரயிலேறு – நம்ம
செலவுக்கு வேண்டியதை சாமி தருவாரு

என்பது இக்கவிதைகளின் பாணி.

இசைப்பாடல்கள்

தமிழிசை இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட கொத்தமங்கலம் சுப்பு தமிழில் பல இசைப்பாடல்களை எழுதினார். ’மனமே முருகனின் மயில்வாகனம்’ போன்ற பாடல்கள் புகழ்பெற்றவை.

இலக்கிய வாழ்க்கை

கொத்தமங்கலம் சுப்பு எழுதிய புகழ்பெற்ற நாவல் தில்லானா மோகனாம்பாள்தான். தொடர்ந்து பந்தநல்லூர் பாமா, பொன்னிவனத்து பூங்குயில் போன்ற தொடர்களை எழுதினார். சினிமாவுக்கான கதையை ராவ்பகதூர் சிங்காரம் என்ற பெயரில் எழுதினார். 1957-ல் ஆனந்த விகடனில் வெளிவந்த 'தில்லானா மோகனாம்பாள்' மட்டுமே அவருடைய படைப்பாக வாசகர்களால் அறியப்படுகிறது. இக்கதையை அவர் கலைமணி என்ற பெயரில்தான் முதலில் எழுதினார்.

கொத்தமங்கலம் சுப்பு மரபுக் கவிஞர். நாமக்கல் கவிஞர் மரபு என அடையாளப்படுத்தப்படும் பாரதிக்கு பிந்தைய மரபுக்கவிதைப் போக்கைச் சேர்ந்தவர். எளிய நடையில், எளிமையான யாப்புமுறைகளில், நாட்டார்க்கூறுகளுடன் எழுதப்படும் கவிதைகள் இவை. கலைமகள், கல்கி, ஆனந்தவிகடன் இதழ்களில் சுப்புவின் கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. 'காந்தி மகான் கதை' சுப்பு எழுதிய கவிதைநூல்களில் புகழ்பெற்றது.

இலக்கிய இடம்

கொத்தமங்கலம் இரண்டு பங்களிப்புகளுக்காக ஆராயப்படுகிறார். குறிப்பிட்ட சூழலில் அமைந்த வில்லுப்பாட்டு முதலிய நாட்டார்கலைகள் 1930-கள் முதல் அச்சு ஊடகம், சினிமா வழியாக மேலும் பொதுவான களத்திற்கு சென்றடைந்து கேளிக்கைக்காகவும் பிரச்சாரத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டபோது அவற்றில் உருவான மாறுதல்களை நிகழ்த்திய கலைஞர்களில் கொத்தமங்கலம் சுப்பு முதன்மையானவர். கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் மரபார்ந்த இசைக்கலைஞர்களின் கோயில்சார்ந்த வாழ்க்கைப்புலத்தை காட்டும் நாவல்.

மறைவு

கொத்தமங்கலம் சுப்பு பிப்ரவரி 15, 1974-ல் மறைந்தார்.

விருதுகள்

  • கலாசிகாமணி (1967)
  • பத்மஸ்ரீ (1971)

நூல்கள்

நாவல்
  • தில்லானா மோகனாம்பாள் 1957
  • பந்தநல்லூர் பாமா
  • பொன்னி வனத்துப் பூங்குயில்
  • ராவ் பஹதூர் சிங்காரம்
  • மிஸ் மாலினி
  • மிஸ் ராதா
கவிதை
  • மஞ்சி விரட்டு
  • காந்திமகான் கதை
  • மருக்கொழுந்து
  • பாட்டிலே பாரதி
நாடகம்
  • பஞ்சாமிர்தம்
  • நாடகமே உலகம்

திரைப்படங்கள்

நடித்தவை
  • பட்டினத்தார் (1935)
  • நவீன சாரங்கதரா (1935)
  • சந்திரமோகனா (1936)
  • மைனர் ராஜாமணி (1937)
  • அனாதைப் பெண் (1938)
  • அதிர்ஷ்டம் (1939)
  • திருநீலகண்டர் (1939)
  • சாந்த சக்குபாய் (1939)
  • பக்த சேதா (1940)
  • சூர்யபுத்ரி (1941)
  • அடங்காப்பிடாரி (1939)
  • கச்ச தேவயானி (1941)
  • மதனகாமராஜன் (1941)
  • தாசி அபரஞ்சி (1944)
  • மிஸ் மாலினி (1947)
இயக்கியவை
  • கண்ணம்மா என் காதலி (1945)
  • மிஸ் மாலினி (1947)
  • ஔவையார் (1953)

உசாத்துணை


✅Finalised Page