under review

கொங்கு மண்டல சதகம்

From Tamil Wiki
Revision as of 21:07, 12 April 2023 by Tamizhkalai (talk | contribs)
கொங்குமண்டல சதகம்
1658111054827.jpg

கொங்கு மண்டல சதகம் (பொ.யு. 17-ஆம் நூற்றாண்டு) கொங்கு மண்டலம் என்னும் பண்டைய ஆட்சிப்பரப்பின் புகழ் கூறும் நூல். கார்மேகக் கவிஞர் இயற்றியது. சதகம் என்னும் சிற்றிலக்கிய வகையில் எழுதப்பட்டது.

கொங்குமண்டல சதகங்கள்

கொங்குமண்டல சதகங்கள் மூன்று உள்ளன. கார்மேகக் கவிஞர், வாலசுந்தரக் கவிராயர், கம்பநாதசாமி ஆகியோர் மூன்று கொங்குமண்டல சதகங்களை இயற்றியுள்ளனர். இவற்றில் கார்மேகக் கவிஞர் எழுதிய கொங்குமண்டல சதகமே முதன்மையானதாகக் கருதப்படுகிறது.

ஆசிரியர்

கொங்கு மண்டல சதகத்தை இயற்றியவர் கார்மேகக் கவிஞர். இவரின் ஊர் விஜயமங்கலம் என்றும் இவர் சமணர் என்றும் கூறப்படுகிறது. (பார்க்க கார்மேகக் கவிஞர்)

பெயர்க்காரணம்

கொங்கு மண்டல சதகம் கொங்கு மண்டலத்தைப் பற்றிப் பாடப்பட்ட சதகம். சதகம் என்பது அகப்பொருளையோ புறப்பொருளையோ அடிப்படையாக வைத்து, ஏதாவது ஒரு பொருள் மீது நூறு செய்யுட்களால் பாடுவது.

'விளையுமொருபொருண் மேலொருநூறு, தழையவுரைத்தல் சதகமென்ப' (இலக்கண விளக்கப்பாட்டியல் - 86 )

சதகங்கள் மண்டல சதகம், துதி சதகம், நீதி சதகம் என மூன்று வகைப்படும். மண்டலச் சதகம் ஒரு மண்டலத்தின், அங்கு வாழ்ந்த மன்னர்கள், வள்ளல்கள், கவிஞர்கள் போன்றோரின் வரலாற்றைக் கூறுவது(தொண்டை மண்டல சதகம், கார்மண்டல சதகம்). துதி சதகம் ஒரு தலத்தில் எழுந்தருளியுள்ள கடவுளை முன்னிலைப்படுத்துவது( எம்பிரான் சதகம், அருணாசல சதகம்). நீதி சதகம் அறிவு நெறிகளையும் அறமுறைகளையும் கூறுவது (குமரேச சதகம், அறப்பளீசுர சதகம்).

’கொங்குமண்டல சதகம் என்பது, தொண்டை மண்டல சதகம். பாண்டிமண்டல சதகம், சோழ மண்டல சதகங்களைப் போல நூறு கட்டளைக்கலித்துறைச் செய்யுட்களாற் கொங்கு மண்டலச் சிறப்பை உணர்த்தக் கருதிப் பாடப்பட்ட ஒரு நூல்’ என தி. அ. முத்துசாமிக் கோனார் குறிப்பிடுகிறார்

காலம்

கொங்குமண்டல சதகம் நூலில் படிக்காசுத் தம்புரான், தளவாய் ராமப்பையர் ஆகியோர் குறிப்பிடப்படுவதை சான்றாகக்கொண்டு இந்நூல் பொ.யு. 17-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என தி. அ. முத்துசாமிக்கோனார் மதிப்பிடுகிறார்.

பதிப்பு வரலாறு

ஏட்டுச்சுவடிகளில் இருந்து இந்நூலை தி. அ.முத்துசாமிக் கோனார் 1923-ல் பதிப்பித்தார். முத்துசாமிக் கோனார் 1910-ல் அவரே நடத்திவந்த 'விவேக திவாகரன்' மாத இதழில் கொங்கு என்னும் தலைப்பில் கொங்குநாட்டுச் செய்திகளை தொகுத்து எழுதிவந்தார். 1912-ல் கொங்குமண்டலச் சதகத்தின் 40 செய்யுள்கள் அடங்கிய சுவடி கிடைத்தது. பழைய கோட்டைப்பட்டக்காரர் நல்லதம்பிச் சர்க்கரை உத்தமிக்காமிண்ட மன்றாடியார் உதவியுடன் பல்வேறு இடங்களில் சுவடிகளைத் தேடினார். பூந்துறை பதுமநாப அய்யர் நூறுபாடல்கள் கொண்ட சுவடி ஒன்றை அளித்தார். குட்டைபாளையம் அர்ஜுன கவுண்டர், டாக்டர் P. சுப்பராயன் போன்றவர்களின் நிதியுதவியுடன் கல்வெட்டுகள், அன்று வெளிவந்துகொண்டிருந்த சோழர்கால வரலாற்றுக் குறிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் உரையெழுதி இந்நூலை முத்துசாமிக்கோனார் பதிப்பித்தார்.

முதல்பதிப்புக்கு உ.வே.சாமிநாதையர் , மு.ரா. அருணாச்சலக் கவிராயர், சே.ரா. சுப்பிரமணியக் கவிராயர், கு. வீராசாமி பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார் , அ. கந்தசாமி பிள்ளை ,குமாரமங்கலம் கி.மு.ப. ஆறுமுகம் பிள்ளை, திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் ஆகியோர் சிறப்புப் பாயிரம் வழங்கியிருந்தனர்.

நூல் அமைப்பு

கொங்கு மண்டல சதகம், மண்டல சதகம் வகையைச் சார்ந்தது. நூறு கட்டளைக் கலித்துறைச் செய்யுள்களால் கொங்கு மண்டலச் சிறப்பை உணர்த்தக் கருதிப் பாடப்பட்ட நூல். ஒவ்வொரு செய்யுளும் 'கொங்கு மண்டலமே' என்று முடியுமாறு இயற்றப்பட்டுள்ளது.

உள்ளடக்கம்

கொங்கு மண்டல சதகத்தில், கிழக்கே மதில்கரையும், மேற்கே வெள்ளிமலையும், வடக்கே பெரும்பாலையும், தெற்கே பழநி மலையையும் எல்லைகளாகக் கொண்டு அமைந்துள்ள கொங்கு மண்டலத்தின் பண்டைக்கால நிலப்பரப்பு, தெய்வீக விளக்கம், சித்தர், சமயாசிரியர், முடியுடை வேந்தர், குறுநிலமன்னர், வள்ளல், புலவர் மற்றும் பலவகை மாந்தர்களின் நீதி, வீரம், கொடை, ஆண்பாலர் பெண்பாலர் கல்வி, நட்பு, கற்பு, நன்றி மறவாமை, அடக்கமுடைமை, புலவர்களை ஆதரித்து வந்த அருமை புலவர்களின் பெருமை இன்னும் பல பழக்கவழக்கங்கள் சுருக்கிக் கூறப்பட்டுள்ளன.

கொங்கு மண்டல சதகத்தில் பல தலங்கள், வீரர்கள், வள்ளல்கள், புலவர்கள், சித்தர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தலங்கள்
  • பவானி
  • குரக்குத்தளி
  • அறப்பள்ளி
  • வெண்ணெய் மலை,.
  • அவிநாசி
  • கருவூர் ஆனிலையப்பர்
  • காறையூர் (திருப்பாண்டிக் கொடுமுடி)
  • குடக்கோட்டூர்
  • திருச்செங்கோடு
  • திருமுருகன் பூண்டி
  • துடியலூர்
  • பழனி (பொதினி, திரு-ஆவி-நன்குடி)
  • பேரூர்
  • வானி கூடல் திருநண்ணாவூர்
  • வெஞ்சமாக்கூடல்
வீரர்கள்
  • உத்தம சோழன்
  • காங்கேயன் (சூரிய காங்கேயன்)
  • குப்பிச்சி (பூந்துறை)
  • கோப்பணன்
  • செய்யான் பல்லவராயன்
  • தித்தன்
  • தொண்டைமான்
  • மன்றாடி (காரையூர்)
  • முதலிக்காமிண்டன்
  • மும்முடிப் பல்லவராயன்
வள்ளல்கள்
  • அசதி
  • அதிகன்
  • அன்னதியாகி
  • ஆணூர்க் காமிண்டன்
  • ஆணூர்ச் சர்க்கரை
  • உலகுடையான்
  • ஓரி
  • காரையூர்ச் சர்க்கரை
  • குமணன்
  • செட்டிபிள்ளையப்பன்
  • பல்லவராயன் சிறுவன்
  • பேகன்
  • வானவராயன்
புலவர்கள்
  • அடியார்க்கு நல்லார்
  • ஆட்கொண்டான்
  • கங்கா குலத்தவர்
  • காங்கேயன்
  • காழிப் புலவர்
  • கொங்கு வேளிர்
  • சம்பந்தர்
  • சீயகங்கன்
  • சுவாமிநாதப் புலவர்
  • செங்குன்றார் கிழார்
  • நல்லதம்பி காங்கேயன்
  • பவணந்தி முனிவர்
  • பூங்கோதையார்
  • மசக்காளி மன்றாடி
  • வேதாந்த தேசிகர்
சித்தர்கள்
  • கஞ்சமலைச் சித்தர்
  • கருவூர்ச் சித்தர்
  • கொங்கக் குயவன்
  • கொங்கணச் சித்தர்
  • புலிப்பாணி

உரைகள்

தி. அ.முத்துசாமிக் கோனார், கொங்கு மண்டல சதகத்தின் சுவடிகளை தேடிக் கண்டடைந்து, அவற்றிற்கு உரை எழுதி 1923-ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார். இவர் சதகச் செய்யுள்களுக்கு உரை எழுதியதோடு, தாம் சேகரித்த வரலாற்றுக் குறிப்புகளையும், பழங்கதைகளையும் பதிவு செய்துள்ளார். ஆனால் 99 -ஆம் செய்யுளுக்கு இவர் உரை எழுதவில்லை.

முனைவர் ந. ஆனந்தி உரை கொங்குமண்டல சதகத்திற்கு உரை எழுதியுள்ளார். சாரதா பதிப்பகம் (2008)

சிறப்புகள்

கொங்கு நாடு தொடர்பான புராணக் கதைகள், ஆண்ட மன்னர்கள் இயற்றப்பட்ட இலக்கியம் முதலியவற்றைத் தொகுத்துச் செய்யுள் வடிவில் கொங்கு மண்டல சதகம் இயற்றப்பட்டுள்ளது. நூலில் உள்ள செய்திகளுக்கு கல்வெட்டுகள், செப்பேடுகளிலிருந்தும் ஆதாரங்கள் கிடைப்பதால் சில செய்திகளுக்கான வரலாற்று மூலமாகவும் கொங்கு மண்டல சதகம் கொள்ளப்படுகிறது.

பாடல் நடை

திருச்செங்கோடு

நெடுவா ரிதிபுடை சூழல கத்தி னிமலியுமை
யொடுவாகு பெற்ற திருமேனி காணு முயிர்கட்கெல்லாம்
நடுவாக நின்ற பரஞ்சோதி தானர்த்த நாரிச்சிவ
வடிவான துந்திருச் செங்கோடு சூழ்கொங்கு மண்டலமே.

(கடல்சூழ்ந்த இவ்வுலகத்தில் உமாதேவியாரோடு சிவபெருமான் அர்த்தநாரீசுவரர் என்ன ஒரு வடிவான திருச்செங்கோடு மேவியது கொங்கு மண்டலம்.)

குமண வள்ளல்

நாட்டினைத் தம்பி கொளக்காடு சென்று நலிவுறுநாள்
பாட்டிசைத் தோர்புல வன்வேண்ட வென்றலை பற்றியறுத்
தீட்டியென் றம்பி யிடத்தீயிற் கோடிபொ னெய்து மென்று
வாட்டங் கைத்தரு மக்குமணன் கொங்கு மண்டலமே.

(நாட்டைத் தம்பி வசம் விட்டுக் காட்டிற் சென்றுள்ள காலத்து ஒரு புலவன் பாடிப் பரிசு கேட்க, என் தலையை அறுத்துத் தம்பியிடம் கொடுத்தால் கோடி பொன் கொடுப்பன் என்று தன் வாளாயுதத்தைக் கொடுத்த குமணனும் கொங்கு மண்டலத்தவனே)

எம்பெருமான் கவிராயர்

அம்புவி மெச்சுகுன் றத்தூரி லாயரி லாய்கலைதேர்
எம்பெருமானைக் கொடுதக்கை யென்னு மிசைத்தமிழால்
நம்பு மிராம கதையையன் பாக நவிலவிசை
வம்பவிர் தார்ப்புய னல்லயனுங்கொங்கு மண்டலமே.

(குன்றத்தூரான சங்ககிரி துர்க்கத்தில் இடையர் குலத்திலுதித்துச் செந்தமிழ்ப் புலமை வாய்ந்த எம்பெருமான் என்னும் கவிராயனைக் கொண்டு இசைத் தமிழில் இராமாயண கதையை இயற்றுவித்த நல்லதம்பிக் காங்கேயனுங் கொங்கு மண்டலம்.)

இலக்கிய இடம்

தமிழகத்தின் மையஓட்ட வரலாறான சேர சோழ பாண்டிய மன்னர்கள் மற்றும் அவர்களின் நகரங்களின் வரலாற்றுக்கு அப்பால் அடுத்தநிலை வரலாறுகள் எழுதப்படுவதற்கு அடிப்படையாக அமைந்திருப்பவை சிற்றிலக்கியங்கள். அவற்றில் நேரடியாகவே ஒரு நிலப்பகுதியின் வரலாற்றைச்சொல்லும் கொங்குமண்டல சதகம் போன்றவை முக்கியமானவை. கொங்குமண்டல சதகம் கொங்கு நிலப்பகுதியின் வரலாற்றுச் சான்றாக மதிக்கப்படுகிறது. அதன் எளிய சந்தநடையும், நாட்டார்ப்பாடல்களுடனான அணுக்கமும் இலக்கியநோக்கில் குறிப்பிடப்படுகின்றன .

உசாத்துணை


✅Finalised Page