standardised

கூத்தாண்டவர் திருவிழா

From Tamil Wiki
(நன்றி: தமிழ் ஒன்.இந்தியா)

கூத்தாண்டவர் திருவிழா மகாபாரத்தில் அரவான் களப்பலியாகும் நிகழ்வை மையமாகக் கொண்டு நடத்தப்படும் திருவிழா. இவ்விழா தமிழகத்தின் வடமாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது. திருவிழா ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று நிகழ்கிறது. அரவான் பலியாகியபோது அவன் தலை உயிருடன் இருந்து, உடல் மட்டும் தரையில் விழுந்து இறந்தது. வெட்டுண்ட உடல் பகுதி கூத்தாடியதால் அரவானுக்கு கூத்தாண்டவர் என்ற பெயர் வந்தது. இவ்விழா பலியிடும் சடங்கை அம்மன் கோவிலில் நிகழ்த்திக் காட்டுவது. அரவானை கூத்தாசூரன் என்றும் அழைப்பர்.

பார்க்க: அரவான் களப்பலி

கூத்தாண்டவர் - அரவான்

(நன்றி: தமிழ் இந்து)

இந்திர பிரஸ்தத்தில் தர்மரும், திரௌபதியும் கூடியிருந்தபோது அர்ஜூனன் தருமரின் அறைக்குள் நுழைந்தான். இதனால் சீற்றம் கொண்ட தர்மர் அர்ஜூனனை ஓராண்டு அரச வேஷத்தை களைந்து தீர்த்த யாத்திரை செல்லும்படி கட்டளையிட்டார். அர்ஜூனனும் அதற்கு இசைந்து வேதிகனாய் தீர்த்த யாத்திரை புறப்பட்டான். அர்ஜூனன் வடகிழக்காக தன் பயணத்தை தொடர்ந்தான். வடகிழக்கின் எல்லை வரை சென்று நாகர்கள் வாழும் நாகருலகத்தை அடைந்தான். நாகருலகத்தில் உலோபி என்ற அழகிய நாகக் கன்னி இருந்தாள். அவளைக் கண்டதும் அவள்மேல் காதல் கொண்டான். உலோபிக்கும் அர்ஜூனன்மேல் காதல் எழுந்தது. இருவரும் கூடி மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர். பத்து மாதம் கழித்து இருவருக்கும் அரவான் பிறந்தான். பிறப்பிலேயே 32 லட்சணங்களும் பொருந்தியிருந்தான். கிருஷ்ணனைப் போல் எதிர்ரோமம் கொண்டிருந்தான். மகாபாரதப் போரில் பாண்டவ படைக்காக அரவான் பலியிடப்பட்டான்.

அரவான் காளி கோவில் பலியாகும் நிகழ்வையே கூத்தாண்டவர் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். அரவானே கூத்தாண்டவராகக் கருதப்படுகிறான்.

இந்திரன் கூத்தாண்டவராகப் பிறப்பெடுத்ததற்கு வேறொரு கதை வழக்கிலுள்ளது. பிராமணன் ஒருவனை வதம் செய்ததால் இந்திரன் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானான். கூத்தாண்டவராக பூலோகத்தில் மறுபிறவி எடுத்து தலையை தவிர மற்ற உடல் பாகமனைத்தும் மறைந்து போகும்படியான சாபம் பெற்று பூலோகத்தில் இந்திரன் பிறந்தான். இச்சாபத்தை அறிந்த பூலோகத்தவர்கள் கூத்தாண்டவருக்கு பெண் தரமறுக்கின்றனர். இதனை அறிந்த கிருஷ்ணன் பெண்தோற்றம் கொண்டு கூத்தாண்டவரை மணக்கிறார். அவர்களின் திருமணம் முடிந்ததும் கூத்தாண்டவரான இந்திரன் களப்பலியில் இறக்கிறான்.

சந்திரகிரி அரசன் மனைவியுடன் தன் அரண்மனையில் வாழ்ந்தான். அவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லாததால் கிருஷ்ணனை நோக்கி தவமிருந்தனர். இருவரின் தவத்திற்கு இறங்கிய கிருஷ்ணன், பாரதப் போரில் பலியான அரவானின் தலை உயிருடன் இருந்ததால் கருடனை அழைத்து அதனை சரபங்க நதியில் வைக்கச் சொன்னார். சந்திரகிரி அரசன் வேட்டைக்குச் சென்றபோது சரபங்க நதிக்கரையிலுள்ள அம்மன் கோவிலில் குழந்தை தவழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டார். அதை கிருஷ்ணன் தங்களுக்கு அருளியதாக எண்ணி அரண்மனை எடுத்து வந்தார். சரபங்க நதியிலிருந்து எடுத்தால் அவனுக்கு ‘சரபாலன்’ எனப் பெயரிட்டனர். சந்திரகிரி மன்னர் சரபாலனுக்கு அனைத்து வித்தைகளையும் கற்பித்தார்.

(நன்றி: தினத்தந்தி)

கூத்தாசூரன் என்பவன் சந்திரகிரி மீது படையெடுத்து போரிட்டு சந்திரகிரியைக் கைப்பற்றினான். தன் நாட்டை இழந்த மன்னர் மனைவி மற்றும் குழந்தை சரபாலுடன் அருகிலிருந்த திட்டச்சாவடிக் காட்டிற்குச் சென்றார். சரபாலன் காட்டில் வளர்ந்தான். மன்னர் சரபாலனுக்கு தேவையான கல்வியும், பயிற்சியும் காட்டிலேயே வழங்கினார். சரபாலன் பதினாறு வயதிருந்தபோது மன்னரிடம் சென்று அவர்கள் காட்டிலிருக்கும் காரணத்தை வினவினான். சந்திரகிரி மன்னர் நாடிழந்த விவரத்தை மகன் சரபாலனிடம் சொன்னார். சரபாலன் பெற்றோரை அழைத்துக் கொண்டு சந்திரகிரி மீண்டான். சந்திரகிரியில் சரபாலனுக்கும், கூத்தாசூரனுக்கும் நிகழ்ந்த போரில் கூத்தாசூரனை தோற்கடித்து நாட்டை தந்தையிடம் ஒப்படைத்தான். நாட்டை திரும்பப் பெற்ற சந்திரகிரி மன்னர் சரபாலனிடம் அவன் பிறப்பு பற்றிய ரகசியத்தைச் சொன்னார். சரபாலன் தான் பிறந்த இடமான சரபங்க நதிக்குச் சென்றான். சரபாலன், “நாளை இருவரும் என்னை இதே இடத்தில் வந்து காணுங்கள்” எனச் சொல்லிவிட்டு அவ்விடம் மீண்டான். மறுநாள் இருவரும் திரும்பி வந்த போது உடலில்லாமல் சிரசு மட்டும் பூமியில் பதிந்திருந்தான் சரபாலன். தன் மகனின் நிலையைக் கண்ட பெற்றோர் கதறி அழுதனர். சரபாலன் இருவரையும் சமாதானம் செய்து, “கவலை விடுங்கள். என்னை இருவரும் சித்திரைப் பௌர்ணமியான இதே தினத்தில் வந்து தேர் அலங்காரத்தில் கூத்தாசூரனோடு போர் புரிந்த என்னைக் காணலாம். மற்ற நாளில் என் சிரசை மட்டும் காணலாம்” எனக் கூறி மறைந்தான்.

கூத்தாண்டவருக்கு சரபாலன் என்ற பெயருமுண்டு. இதன் காரணத்தால் அரவான் கூத்தாசூரன் என்றும் அழைக்கப்பட்டான் என்ற கதை வழக்கில் உள்ளது.

கூத்தாண்டவர் பற்றிய புராணக் கதைகள்

கூத்தாண்டவர் திருவிழா2.jpg
மகாபாரத அரவான் கதை

இந்திரனின் அம்சமாக குந்திதேவியின் வயிற்றில் பிறந்தவன் அர்ஜூனன். அர்ஜூனன் இந்திர பிரஸ்தத்தில் தருமரும், திரௌபதியும் கூடியிருந்தபோது அர்ஜூனன் தருமரின் அறைக்குள் நுழைந்தான். இதனால் சீற்றம் கொண்ட தருமர் அர்ஜூனனை ஓராண்டு அரச வேஷத்தை களைந்து தீர்த்த யாத்திரை செல்லும்படி கட்டளையிட்டார். அர்ஜூனனும் அதற்கு இசைந்து வேதிகனாய் தீர்த்த யாத்திரை புறப்பட்டான். அர்ஜூனன் வடகிழக்காக தன் பயணத்தை தொடர்ந்தான். வடகிழக்கின் எல்லைவரை சென்று நாகர்கள் வாழும் நாகருலகத்தை அடைந்தான்.

நாகருலகத்தில் உலோபி என்ற அழகிய நாகக் கன்னி இருந்தாள். அவளைக் கண்டதும் அவள்மேல் காதல் கொண்டான். உலோபிக்கும் அர்ஜூனன்மேல் காதல் எழுந்தது. இருவரும் கூடி மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர். பத்து மாதம் கழித்து இருவருக்கும் அரவான் பிறந்தான். பிறப்பிலேயே 32 லட்சணங்கள் கொண்டும், கிருஷ்ணனைப் போல் எதிர்ரோமமும் பெற்றான். மகாபாரதப் போருக்கு முன்னால் ஜோதிடத்தில் சிறந்தவனான சகாதேவனை துரியோதனன் அணுகினான். எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் வல்லமை பெற்ற சகாதேவன் துரியோதனனுக்கு போரில் வெல்வதற்காக களப்பலி கொடுக்கும் நாளை கணித்துச் சொன்னான். “32 லட்சணங்களும், எதிர் ரோமமும் கொண்டு ஒருவனை அமாவாசை அன்று காளிக்கு பலியிட்டால் நீ வெல்வது உறுதி” என்றான்.

சகாதேவன் சொல் கேட்டு மீண்ட துரியோதனன் அத்தகைய லட்சணம் கொண்ட ஒருவனைத் தேடினான். தன் தம்பியின் மகன் அரவான் இருப்பதை சகுனியின் மூலம் அறிந்த துரியோதனன் அரவானிடம் சென்று அமாவாசையன்று காளிக்கு பலியாகும்படி வேண்டினான். தன் பெரியப்பாவே தன்னிடம் வந்த கேட்டதால் அரவான், “அமாவாசை வரை இந்த உடல் பின்னமாகாமல் இருந்தால் வருகிறேன்” என வாக்களித்தான்.

துரியோதனன் முதலில் சென்று அரவானை பலியிட கேட்டது குறித்தறிந்த கண்ணன் சூழ்ச்சி செய்தான். அமாவாசைக்கு முந்தைய நாளான சதுர்த்தசி அன்று ‘அமாவாசை சடங்குகளை செய்யுங்கள்’ என்று வேதியரிடம் கட்டளையிட்டான். கண்ணன் சொல்படி சடங்குகள் நடந்தன. பின் தருமன், அர்ஜூனன் ஏனைய தம்பியர்களை அழைத்த கண்ணன் அரவானையும் உடனழைத்து, “கௌரவர்களுக்கு முன் நாம் களப்பலி கொடுக்க வேண்டும். சாமுத்திரிகா லட்சணம் 32-உம் பெற்றவர்கள் மூவர்தான். கண்ணனாகிய நான், அர்ஜூனன் மற்றும் அவன் மகன் அரவான். எனவே நீங்கள் போரில் வெற்றி பெற என்னைப் பலியிடுங்கள்” எனச் சொல்ல அருகிலிருந்த அரவான் முன்வந்து பலியாக சம்மதித்தான்.

ஆனால் அரவான் பலியாவதற்குமுன் இரண்டு வரங்களை கேட்டான். ஒன்று பலியிட்ட பின்னும் தன் தலை உயிருடன் இருக்க வேண்டும், இரண்டு சாகும்முன் ஒரு பெண்ணை மணமுடிக்க வேண்டுமென்றான். அரவானின் நிபந்தனைகளுக்கு கண்ணன் சம்மதித்தான். மணமான மறுநாளே அரவான் இறப்பான் என்றறிந்ததால் அவனுக்கு பெண் தர மறுத்தனர். இதனால் கண்ணன் பெண் வேஷம் கொண்டு அரவானை திருமணம் செய்தான்.

யாமள நூலின் கணக்குபடி குரு நாட்டிலுள்ள காளிக்கு அமாவாசை முந்தைய தினம். எனவே கௌரவர்கள் அறியாதபடி அன்றைய தினத்தில் அரவானை பலியிட்டனர். அரவான் தன் உறுப்புளைத் தானே அறுத்துக் காளியின் முன்புள்ள வாழையிலையில் வைத்தான். அரவான் இறந்ததும் யானையை பலியிட்டனர். மண்ணில் விழுந்த அரவானின் உடல் இறந்தது. வெட்டுண்ட தலை மட்டும் உயிருடன் இருந்தது. தலை வெட்டப்பட்டதும் உடல் சிறிது நேரம் குதித்துப் படபடவெனத் துடிக்கும். இதனைக் கவந்தம் ஆடல், அட்டையாடல் என்பர். இவ்வாறு தலையிருக்க உடல் தானாக ஆடியதால் அரவான் ‘கூத்தாண்டவர்’ என்றழைக்கப்பட்டான்.

மறுதினம் உடல் நீங்கி தலையுடன் இருக்கும் அரவானைக் கண்ட துரியோதனன் அதிர்ச்சியுற்றான். அரவானின் தலை துரியோதனனிடம், “தந்தையின் கட்டளைக்குப் பணிந்து நான் பலியானேன். அமாவாசைக்கு முன் உடல் பின்னமாகாமல் இருந்தால் பலியாகிறேன் என்றே உங்களிடம் வாக்களித்தேன்” எனக் கூறினான். பின் பாண்டவருக்கும், கௌரவருக்கும் நிகழ்ந்த பதினெட்டு நாள் போரையும், பாண்டவர்கள் வெற்றி கண்டதையும் அரவானின் தலை மட்டும் கண்டது.

கணவன் இறந்த காரணத்தினால் பெண்ணுருக் கொண்ட கண்ணன் விதவையானான். இதன் காரணமாக கண்ணனின் மறு அவதாரமாக அரவாணிகள் தங்களை எண்ணுகின்றனர். அரவாணிகள் கூத்தாண்டவரைக் கணவனாக எண்ணித் தாலி கட்டிக் கொள்வதும், அரவான் இறந்ததும் தாலியறுப்பதும் சடங்காக நிகழ்கிறது.

வில்லிபாரத அரவான் கதை
கூத்தாண்டவர் திருவிழா3.jpg

குந்தியின் சொல்படி பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியை மணந்தனர். இந்திரபிரஸ்தம் நகர் அமைத்து பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியுடன் வாழ்ந்த போது நாரத முனிவர் அவர்களைக் காண வந்தார். கந்தோபசுந்தர் என்ற இணைசகோதரக்ள் திலோத்தமை என்ற பெண்ணால் அழிந்த கதையை கூறினார். மேலும் பாண்டவர் ஐவரும் ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் மட்டுமே திரௌபதியோடு கூடி வாழ வேண்டும். அவ்வாறு கூடி வாழும் போது மற்றவர் இடையூறு செய்தால் அவர்கள் தீர்த்தயாத்திரை செல்ல வேண்டும் என நிபந்தனை விதித்துச் சென்றார். பின்னாளில் தருமர் திரௌபதியுடன் இருக்கும் போது அர்ஜூனன் அலுவல் காரியமாக அந்தப்புரத்தின் உள்ளே சென்றான். அதனால் நாரத முனிவரின் சொல்படி அர்ஜூனனை தீர்த்த யாத்திரை செல்லும்படி தருமர் கூறினார். வேதிகனாக அர்ஜூனன் கங்கையில் தீர்த்தமாடிய போது உலோபி என்ற நாகக்கன்னி அங்கே நீராட வந்தாள். உலோபியின் அழகில் மயங்கிய அர்ஜூனன் உலோபியின்மேல் காதல் கொண்டு அரவான் என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தான்.

துரியோதனன் பாரதப் போரில் வெற்றிபெற அரவானை அமாவாசையன்று பலியாகும்படி வேண்டினான். இதனை அறிந்த கண்ணன் அமாவாசைக்கு முந்தைய நாளாக சதுர்த்தசி திதியன்று சூரிய சந்திரரை ஒன்று சேர்த்து அமாவாசையாக்கினான். பாண்டவர்கள் அரவானைக் களப்பலி கொடுத்தனர். அரவான் காளியின்முன் தன் உறுப்புகளைப் பலியாகக் கொடுத்தான். 18 நாள் போரை அரவானின் தலை கண்டது.

எட்டாம் நாள் போரில் அலம்புசன் பீமன்மேல் கோபம் கொண்டு போர் செய்தான். அரவான் அவன்முன் நின்றான். அரவானின் வீரத்தைக் கண்ட அலம்புசன் ஓடினான். பின் பாம்புகளை அழிக்கும் கருடவேடம் கொண்டு அரவானை தாக்கினான். அரவான் இறந்ததைக் கண்டு வருந்தி நின்ற பாண்டவர்களைப் பார்த்து கண்ணன், “அன்றே களப்பலியான அரவான் இன்றுவரை உயிர் வாழ்ந்ததற்கு மகிழ வேண்டும், வருந்துதல் கூடாது” என்றான்.

மணியாட்டி மகாபாரத அரவான் கதை
(நன்றி: தமிழ் ஒன்.இந்தியா)

மணியைக் கையில் வைத்து ஆட்டி கதைபாடுவதால் மணியாட்டி மகாபாரதம் என்றானது. சகாதேவன் அரவானைக் களப்பலி கொடுக்க துரியோதனனுக்கு நாள்குறித்துக் கொடுத்தான். அரவான் துரியோதனனின் வேண்டுகோளை ஏற்று களப்பலிக்கு சம்மதித்தான். இதனை அறிந்து கண்ணன் சூழ்ச்சி செய்தான். அமாவாசையை முந்தைய தினமே வரும்படி செய்தான். கண்ணன் அர்ஜூனனை அழைத்து அரவானைக் காணச் சென்றபோது ஒரு மலையில் தலைவைத்து மறுமலையில் கால் நீட்டி அரவான் படுத்திருந்தான். ‘ஏன் இவ்வாறு அமர்ந்திருக்கிறாய்?’ எனக் கிருஷ்ணன் கேட்ட போது, “எந்தக் கட்சி பாரதப் போரில் தோல்வியடைகிறதோ அந்தக் கட்சியில் சேர்ந்து வெற்றி பெற்றவர்களைக் கொல்ல வேண்டும். அதற்காக என் வாளைத் தீட்டுகிறேன்” என்றான். அர்ஜூனன் பயந்து, “கண்ணா, இனி என்ன செய்வது” என வினவினான். கண்ணன் அரவானைத் தனியே அழைத்து, “அரவானே, உன் தந்தை உனக்குத் திருமணம் செய்து பார்க்க ஆசைப்படுகிறான்” என்றான். அரவான் கல்யாண செய்தி கேட்டதும் உற்சாகத்துடன் சம்மதித்தான். தாலி கட்டிய அன்றே களப்பலியாவான் என்றறிந்திருந்ததால் ஒரு பெண்ணும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.

காமராஜனின் மகள் காமவல்லியை மணக்கும் மணாளனுக்கு அன்றே விதி முடியும் என ஜாதகத்தில் இருந்தது. அதனால் காமன் பெண் தர முன்வந்தான். அரவானுக்கும், காமவல்லிக்கும் திருமணம் நிகழ்ந்தது. பள்ளியறைக்கு அசரீரி வடிவில் சென்ற கண்ணன் அரவானை அழைத்து வந்தான். “பாண்டவர் வெற்றிக் கம்பத்தைத் துரியோதனன் பிடுங்கிவிட்டான். அதனால் இன்று இரவு நீ கொடிக்கம்பத்தின் அடியில் முகத்தை மூடிப்படுத்துக் கொள்” என்றான்.

அரவான் கொடிக் கம்பத்தைக் கையில் பிடித்துக் கொண்டு தூங்கினான். அச்சமயம் கண்ணன் திரௌபதியை அழைத்தும், ”திரௌபதி நீ உன் கூத்தலை முடிக்கவேண்டுமென்று அரக்கன் ஒருவன் கொடிக் கம்பத்தைப் பிடுங்கிக் கொண்டிருக்கிறான். நீ உடனே காளியாகச் சென்று அவனை வதம் செய்” என்றான். அதனைக் கேட்ட திரௌபதி காளியாக மாறி வெற்றிக்கம்பம் அருகே சென்று அரவான் என்றறியாது தலையை வெட்டினாள். அரவான் ‘அம்மா’ என்ற அலறலுடன் தரையில் வீழ்ந்தான்.

”என் மகனைக் கொல்லச் செய்த கண்ணனை இதே வாளால் வெட்டுகிறேன்” எனக் கூறி திரௌபதி துவாரகை விரைந்தாள். கண்ணன் பயந்தோடி சத்யபாமா, ருக்மணியை அழைத்து, “என்னைக் கொல்ல திரௌபதி வருகிறாள். நீங்கள் இருவரும் விரைந்து மாவினால் கோலமிட்டு தோரணம் கட்டிக் காலில் விழுந்து வணங்குங்கள்” என்றான். திரௌபதி வரும் வழியில் இடையில் சென்று பாமாவும், ருக்மணியும் வணங்கினர். திரௌபதி அவர்களை, “தீர்க்க சுமங்கலி பவ” என ஆசிர்வதித்தாள். அதனைக் கேட்டு மறைந்திருந்த கண்ணன் வெளியே வந்தான். “திரௌபதி, உன் கையால்தான் அரவானைக் கொல்லமுடியும். வேறு யாராலும் கொல்லமுடியாது. அதனால்தான் இவ்வாறு செய்தேன்” என்றான்.

பின் குருஷேத்திரம் மீண்ட கண்ணனிடம் அரவான் பதினெட்டு நாள் போரைக் காண வரம் கேட்டான். கண்ணன் வரமருளியதால் அரவானின் தலை போரைப் பார்க்கிறது. அரவானின் மனைவி காமவல்லி கண்ணனிடம் வந்து, “என் கதி என்ன?” எனக் கதறி அழுதாள். “நீ இனி தர்மதேவதையாக இருப்பாய். மக்கள் கோமாதா பூசையைக் கொண்டாடி உன்னை வழிபடுவர்” என்றான்.

வில்லுப்பாட்டு அரவான் கதை
(நன்றி: தமிழ்)

அஸ்தினாபுரியின் நாட்டு வளத்துடன் வில்லுப்பாட்டு தொடங்குகிறது. குந்தி தன் புதல்வர்களை திரௌபதியை மனைவியாக்கும்படி கூறினாள். அங்கு வந்த நாரத முனிவர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டு திரௌபதியுடன் வாழவேண்டுமென சொல்லி நிபந்தனை விதித்தார். தருமன் திரௌபதியுடன் மகிழ்ந்திருக்கும் போது அர்ஜூனன் உள்ளே சென்றான். அதனால் தருமன் அர்ஜூனனை தீர்த்தயாத்திரை செல்லும்படி கூறினான். வேதிகனான அர்ஜூனன் கங்கையில் நீராடச் சென்ற போது உலோபி என்னும் நாகக்கன்னி அர்ஜூனன்மீது மோகம் கொண்டாள். அர்ஜூனன் மறுத்தபோது உலோபி அர்ஜூனனை விடாது அழைத்துச் சென்றாள். இருவருக்கும் அரவான் பிறந்தான். அரவான் பாரதப் போரில் கௌரவர்களை ஒரே நாளில் அழித்துவிடுவான் என்றெண்ணிய கண்ணன் சகாதேவனை அழைத்து போர் பதினெட்டு நாட்கள் நடக்க வழிகேட்டான். ”அரவானைக் களப்பலி கொடுத்தால் போர் பதினெட்டு நாள் நிகழும்” என்றான் சகாதேவன்.

அரவான் பதினெட்டு நாட்கள் நிகழும் போரைக் காண வரம் பெற்று காளி கோவிலில் பலியானான். அதனால் பதினெட்டு நாட்கள் உயிர் பிரியாது கழுவிலிருந்து போரினைக் கண்டான். பதினெட்டாம் நாள் போர் முடிந்ததும் அரவானின் உயிர் பிரிந்தது. கைலாயம் சென்ற அரவான் சிவனிடம் பூமியில் தனக்கு பூஜை வாங்க வரம் பெற்று திரும்பி வந்து தெய்வமாக அமர்ந்தான்.

இசை நாடகம் அரவான் கதை

பாண்டவர்கள் பதிமூன்று ஆண்டுகள் வனவாசம் இருந்து திரும்பிய போது துரியோதனனிடம் நாட்டைக் கேட்டனர். துரியோதனன் நாட்டைத் தர மறுத்ததால் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே போர் மூண்டது. போரில் வெற்றி பெற யுத்த தெய்வமான ரணபத்ரகாளிக்கு சிறந்த ஆண் மகனை யாமள நூல் முறைப்படி பலியிட வேண்டும். அதற்கு ஏற்றவன் அரவான். தருமன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் பாஞ்சாலி ஆறு பேரிடமும் அரவானைப் பலியிடுவதைப் பற்றி கண்ணன் கேட்டான். ஆறுபேரும், “அரவானைப் பலியிட்டு நாடாள வேண்டுமா? நாங்கள் மீண்டும் கானகத்திற்கே மீள்கிறோம்” என்றனர். அதனைக் கேட்ட கண்ணன் அவர்களிடம் பேசி ஆறு பேரின் சம்மதத்தையும் பெற்றான். அரவான் முழுமனத்துடன் களப்பலியாக சம்மதித்தான். பாஞ்சாலியிடம், “அறுத்திடம்மா” என வேண்டினான். பாஞ்சாலி அரவானின் தலையை அறுத்துக் காளிக்குப் பலியிட்டாள். அரவான் கேட்டுக் கொண்டபடி பதினெட்டு நாள் போரைக் காண அவன் தலை உயிருடன் இருந்தது. போர் முடிந்ததும் அரவான் தலை கண்ணனின் பாதத்தை அடைந்தது.

கூத்தாண்டவர் கோவில் திருவிழா

(நன்றி: தினமலர்)

வடதமிழ் மாவட்டங்களில் மகாபாரதக் கதைப்படி கூத்தாண்டவர் திருவிழா நடத்தப்படுகிறது. அம்மன் கோவிலில் அரவான் களப்பலி நிகழ்கிறது. திருவிழா நாட்களில் இக்கதையின் தொடர்புடைய பிற நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே நடந்த பதினெட்டு நாள் போரினை நினைவுகூரும் வகையில் கூத்தாண்டவர் திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறும். சித்திரை அமாவாசையன்று கோமுட்டிச் செட்டியார் சாதியினர் கொடியை யாருக்கும் தெரியாமல் கோவிலுள் கட்டுவர். இக்கொடி திருட்டுதனமாகக் கட்டப்படுவதால் திருட்டுக் கொடி என்றழைக்கின்றனர். பிரிட்டிஷ் காலத்தில் பயத்தின் காரணமாக யாருக்கும் தெரியாமல் விடியற் காலையில் கோவிலுள் கொடி கட்டுவது வழக்கம். கொடி கட்டிவிட்டால் திருவிழா நிச்சயம் நடத்தவேண்டும் என்ற மரபின் நீட்சியாக இவ்வழக்கம் வந்ததாக வாய்மொழி வழக்கு உள்ளது.

காப்புக் கொடி கட்டுதல்

கோமுட்டிச் செட்டியார் சாதியினர் யாருக்கும் தெரியாமல் கொடி ஏற்றியதும். அம்மனுக்கு அபிஷேகம் செய்து அமாவாசையன்று கொடி ஏற்றுவதோடு அவர்கள் பணி முடிந்துவிடும். பின் பழைய கொடி அவிழ்க்கப்பட்டு ஊரார் சேர்ந்து புதிய கொடி கட்டுவர். அமாவாசை அடுத்த செவ்வாய்கிழமை ஊரார் காப்புக் கொடி கட்டுவர் (மஞ்சளை நூலில் கோர்த்து வலது கையில் கட்டுவது). பின் கலசம் சோடிக்கும் நிகழ்விலும் காப்புக் கட்டாதவர்கள் கட்டுவர்.

இதில் முக்கியமாக கரகம் எடுப்பவர், பலி கொடுப்பவர் என ஏழு பேர் உரிமையுடன் காப்புக் கட்டிக் கொள்கின்றனர். காப்புக் கட்டியவர் கொடியேற்றத்தின் அன்று காலை கோவிலில் கிளம்பி மேளதாளத்துடன் பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு ஆற்றுக்குச் செல்கின்றனர். அங்கு கரகம் செய்து வைத்துவிட்டு காப்புக் கட்டியவர்கள் மற்ற பக்தர்களுக்குக் காப்புக் கட்டிவிடுகின்றனர். பின்னர் ஏழு பேரும் கரகத்தை எடுத்துக் கொண்டு கோவிலைச் சுற்றி வீதியுலா வருகின்றனர். பின் சுவாமி சிலைக்கு அருகில் வைத்து முளைப்பாரி (ஒரு வாரத்திற்கு முன் கம்பு, கேழ்வரகு, நெல் ஆகிய நவதானியங்களை அபிஷேக நீர் கொண்டு முளைக்க வைப்பதை முளைப்பாரி அல்லது முளைப்பாலிகை என்றழைக்கின்றனர்) இடுகின்றனர். கொடி கட்டிய மறுவாரம் செவ்வாய்க் கிழமை திருவிழா நடைபெறும்.

இடைப்பட்ட ஒரு வாரம் கூத்தாண்டவருக்கும் பிற தெய்வங்களுக்கும் பகலில் பொங்கல் கொண்டு பூஜையும், இரவில் சுண்டலுடன் பூஜையும் நிகழும்.

சாலங்கரகம் எடுத்தல்

திருவிழா அன்று கோவிலில் இருந்து மேளத்துடன் (2 மேளம், 2 நாதஸ்வரக் குழு), பறைமேளம் அடிக்க பூசாரி பூஜையை முடித்ததும், கரகக்காரர்கள் சாலங்கரகம் எடுக்க கூத்தாண்டவர் கோவிலின் முன்னுள்ள மாரியம்மன் கோவில் செல்வர். அங்கிருந்து சாலங்கரகம் எடுத்துக் கொண்டு கூத்தாண்டவர் கோவிலின் தெற்கிலுள்ள கங்கம்மா கோவிலின்முன் சென்று பூஜை நிகழ்த்துவர். பூஜை முடித்தபின் சாலங்கரகம் கூத்தாண்டவர் கோவிலினுள் கொண்டு செல்லப்படும்.

கலசம் சோடித்தல்

கோவிலில் அபிஷேகப் பொருட்களுடன் காத்தவராயனின் மரப்பொம்மையை செய்து வைத்திருப்பர். அதனை ஆற்றுக்கு எடுத்துச் சென்று கிழக்கு முகமாக அமரவைத்து இருபக்கமும் சூலமும், கத்தியும் வைப்பர். நடுவில் புதுப்பானையால் சோடிக்கப்பட்ட கலசம் இருக்கும். சூலம், கத்தி, கலசம், கொந்தன், காத்தவராயன், கத்தி, சூலம், பெரிய சூலம் என்ற வரிசையில் இடம்பெற்றிருக்கும். அனைத்திற்கும் நீராட்டிக் கொண்டு செல்லுதல் கலசம் சோடித்தல் என்ற சடங்காக நிகழ்கிறது.

திருமஞ்சணம் திரட்டுதல்

ஆற்றுக்குச் சென்று இரண்டு மண்பானைகளில் நீர் கொண்டு வரும் சடங்கு நடக்கும். இதனை ‘ஜலம் திரட்டுதல்’ என்றும் அழைப்பர். நீரை கலசத்துப் பின்னால் வைத்து வேப்பிலை, மாவிலை வைத்து தீபாராதனைக் காட்டுவர்.

கோவிலுக்குள் கலசம் கொண்டுவருதல்

ஆற்றிலிருந்து கொண்டு வரும் கலசத்தை பனைவரத்தான் கோவில், கங்கம்மா கோவில் எனத் தீபாராதனைக் காட்டி கூத்தாண்டவர் கோவிலுக்குள் எடுத்துச் செல்வர். பூசாரி மட்டும் உள்ளே சென்று கூத்தாண்டவருக்கு தீபாராதனைக் காட்டி முடித்ததும் கலசத்தை சாலங்கரகம் முன் வைப்பர். மற்றவற்றை உள்மண்டபத்துள் வைப்பர்.

கண்ணன் அலங்காரம்

கூத்தாண்டவருக்கு பூஜைகள் முடிந்த பின் கண்ணனைப் பெண்ணுருவாக்கும் சடங்கு நிகழும். பனவரத்தான் கோவிலில் உள்ள கண்ணனுக்குப் பெண் வேடமிடுவர். மரத்தால் ஆன இருக்கையில் கூரப்புடவை கொசுவம் வைத்து அதன் மேல் இடக்காலை மடக்கி வலக்காலை தொங்கவிட்டுக் கண்ணன் அமர்ந்திருப்பார். இடக்கையை மடிமீது வைத்தும் வலக்கையை ஆசீர்வதிப்பது போலவும் அமர்ந்திருப்பார். கண்ணனின் நெற்றியில் குங்குமம் வைத்து, உதட்டில் சாயம் பூசி பெண்ணுருக் கொள்ளச் செய்வர். தலையில் நீலநிறக் கிரீடம் சூட்டி கழுத்தில் அணிகலன்கள் அணிவர்.

(நன்றி: விகடன்)
அரவாண் அலங்காரம்

ஆற்றிலிருந்து கொண்டுவரப்பட்ட கலசநீர் கொண்டு அபிஷேகம் செய்து அரவானுக்கு மஞ்சளாடை அணிவிப்பர். ஐய்யனார் கோவிலில் உள்ள மரத்தாலான அரவான் தலை அலங்கரிக்கப்படும். அரவானுக்கு கோடித் துணியில் அலங்காரமும், மாலைகளும் அணிவிக்கப்படும்.

கண் திறத்தல்

மோகினி அவதாரம் எடுத்த கிருஷ்ணனையும், அரவானையும் மூடியபடி கூத்தாண்டவர் கோவிலுக்குள் எடுத்து வருவர். அரவானுக்கு வாழையிலையில் பச்சரிசி, குங்குமமிட்ட எலுமிச்சம் பழங்கள் ஆகியவற்றுடன் தேங்காய்முனையில் கற்பூரம் எரியும் கரியைப் படியச் செய்து கற்பூரத்தைக் கையில் எடுத்துச் சாமிக்குமுன் வைப்பர். இப்படி செய்வதால் அரவானின் நெற்றிக்கண் திறந்தநிலை பெறுவதாக நம்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியை ‘கண் திறத்தல்’ என்றழைக்கின்றனர்.

வெடி வெடித்தல்

ஆற்றங்கரை உட்பட திருவிழா நிகழும் இடங்களில் ‘இரட்டை வெடி’ வெடிக்கும் சடங்கு நிகழும். இதனை ‘கோவில் வெடி’ என்றழைப்பர் (ஒற்றை வெடி என்பது அமங்கலத்தைக் குறிக்கும், ‘சாவு வெடி’ என்றழைப்பர்). அரவான் கண் திறத்தல் சடங்கு நிகழும் போது இரட்டை வெடி வெடிப்பர். ஆற்றிலிருந்து வரும் வரை மேளம் இசைப்பர். கண் திறத்தல் சடங்கு முடிந்து அரவான், கிருஷ்ணனை கங்கம்மா கோவிலுக்குக் கொண்டு செல்வதிலிருந்து பறை மேளம் பின்னணி இசையாக அமையும்.

வரிசை கொண்டுவருதல்

இரண்டு விளக்குடன் சீர்வரிசை கொண்டு வருவர். இவ்வரிசை வந்த பிறகு தான் திருமணம் நிகழும். பூ, வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு, சாத்துக்குடி, தேங்காய், கிருணிப்பழம், அண்ணாச்சிப் பழம், ஆரஞ்ச் போன்றவை வரிசையாகக் கொண்டுவரப்படும்.

திருமணம்

மோகினி உருக் கொண்ட கிருஷ்ணன், தலைப்பகுதி மட்டும் கொண்ட அரவான் இருவருக்கும் திருமணம் நிகழும். திருமணம் நிகழும் இடம் பூப்பந்தலால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். காமாட்சி அம்மன் விளக்கு, உரல், உரல்மேல் சாலங்கரகம் ஆகியவை திருமணத்தில் இடம்பெற்றிருக்கும்.

தாலி கட்டுதல்

ஐயர் முறைப்படி செய்யும் திருமணச் சடங்குகள் நிகழும். மஞ்சளைக் கயிற்றில் கட்டி அரவான் சார்பில் ஐயர் கிருஷ்ணனின் கழுத்தில் கட்டுவார். பின் செட்டியார் குடும்பத்திலிருந்து சாமிக்கு மாலைகள் போடுவர். பின் வரிசைக் கொடுப்பவர் வீட்டிலிருந்து மாலையிடுவார். இச்சடங்கு முடிந்ததும் ஐயர் செட்டியார் வீட்டின் ஆண் ஒருவருக்கு தாலி கட்டுவார். பின் வரிசைக் கொடுத்தவர் வீட்டில் இருவருக்கு தாலி கட்டுவார். கடைசியாகக் கிருஷ்ணனைத் தூக்குபவர்களுக்கு தாலி கட்டப்பட்டதும் வரிசைக்காரர்கள் அவற்றைத் திரும்ப எடுத்துச் செல்வர். அரவாணிகள் அல்லாத ஆண்கள் அனைவரும் கையில் வளையல் அணிந்து பூசாரி கையால் தாலி கட்டிக் கொள்வர். பெண்கள் இச்சடங்கில் பங்கு கொள்வதில்லை.

அரவாணிகள் தாலி கட்டிக் கொள்ளுதல்

இவ்விழாவிற்கு இந்தியா முழுவதுமிருந்து அரவாணிகள் வந்து பங்கு கொள்வர். அரவாணிகள் அவர்களின் திருமண நாளாக இவ்விழாவை கருதுவர். பெண் அலங்காரம் செய்துக் கொண்டு தங்களை கிருஷ்ணனின் அம்சமாக பாவித்து ஐயரின் கையால் கோவிலில் தாலி கட்டிக் கொள்வர். கூத்தாண்டவரை கணவனாக எண்ணித் தாலி கட்டிக் கொண்டதால் அன்றிரவு பிற ஆடவர்களுடன் சாந்திமுகூர்த்தம் நிகழும். இதனை சடங்காக செய்கின்றனர்.

கூத்தாண்டவர் திருவிழா10.jpg
மணமக்கள் வீதி உலா

மணமக்களுக்கு திருமணமானதும் காத்தவராயன் கோவிலில் பூஜை நிகழும். பின் ஊர் கூடி வீதிஉலா செல்வர். அப்போது ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் பூஜைகள் நிகழும். இறுதியாக மணமக்கள் அம்மன் கோவிலை அடைவர். மறுநாள் காலை கூத்தாண்டவரின் தலை மட்டும் வைத்து பூஜை நிகழ்ந்த பின் ஆடு பலி கொடுக்கப்படும்.

கூத்தாண்டவர் தேர்

மரத்தேரில் கூத்தாண்டவர் உரு பொருத்தப்படும். கூத்தாண்டவரின் இடக்கையில் அவர் உருவிலும் பெரிதான வில் வைக்கப்படும். நீண்ட கழியில் மஞ்சள் துணியைக் கட்டி வில் போன்று அமைப்பர். வலக்கையில் நீண்ட கூர் கத்தி ஏந்தியிருப்பார். தலை, கைவிரல்கள், கால்விரல்கள் மட்டுமிருக்க மற்ற உடல் பகுதிகளை வைக்கோல்பிரி கொண்டு அமைப்பர். உடல் பகுதியை வெள்ளையாடை கொண்டு மூடியிருப்பர். இரண்டு பாதத்தின் அருகிலும் வெண்சாமரப் பெண்கள் இடம்பெற்றிருப்பர். மரத்தேரினை ஊர் மக்கள் இழுத்துச் செல்வர். அரவாணிகள் கும்மியடித்துப் பாடுவர். சுடுகாடு நோக்கி கூத்தாண்டவர் தேர் செல்லும்.

ஒப்பாரி பாடுதல்

தாலி கட்டிய மறுநாள் கூத்தாண்டவர் இறப்பு சடங்கு நிகழ்வதால் அரவாணிகள் அனைவரும் மாரில் அடித்து அழுகின்றனர். ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கூட்டமாக அமர்ந்து ஒப்பாரி பாடுவர். அரவாணிகள் அல்லாதோர் அழுவதில்லை. மாலை முழுவதும் கும்மியடித்துப் பாடுவர். மலர் காணிக்கை, வேட்டி போர்த்துதல், ஆட்டுக்கிடா, சேவல் விடுதல், தாலிகட்டி அறுத்தல், கற்பூரம் செலுத்துதல் ஆகியன கூத்தாண்டவர் கோவிலில் சார்த்தப்படும்.

(நன்றி: ஜி தமிழ்)
அரவான் உடல் தீயிடல்

கோழி, ஆடு பலியிட்ட ரத்தத்தில் பூசாரி சோறு கலந்து நான்கு திசைகளிலும் வீசுவார். இதனைக் ‘காளிச் சோறு’ என்பர். பின் அரவான் உடல் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும். அரவான் தலை நீக்கப்பட்டதற்கு சான்றாக பெரிய மஞ்சள் துணியால் தலையை மூடி நீக்கி விடுவர். கை, கால் அலங்காரப் பொருட்கள் அனைத்தும் கலைக்கப்படும். பின் வைக்கோல்பிரியால் ஆன உடலைக் கலைத்துப் போட்டுத் தீயிட்டுக் கொளுத்துகின்றனர். கொளுத்திய சாம்பலை அனைவரும் நெற்றியில் பூசிக் கொள்வர். உடல் எரிந்த பின் தலையை ஆற்றில் குளிப்பாட்டி மீண்டும் கோவிலுக்குள் எடுத்துச் சென்று மல்லாத்திக் கிடத்துவர். கிருஷ்ணன் சிலையை மீண்டும் கோவிலுள் வைப்பர்.

தாலியறுப்பு

அரவான் களப்பலியானதால் அரவாணிகள் அனைவரும் தாலியறுத்து அழுது புலம்புவர். தங்கள் நெற்றிப் பொட்டைக் கலைத்துக் கொள்வர். சூடிய பூவை பிய்த்தெறிகின்றனர். கண்ணாடி வளையல்களை உடைத்தும், கழற்றியும் எறிவர். தாலியை கழற்றி கூத்தாண்டவர் ஊர்வலம் வந்த மரத்தில் கட்டுவர். பின் வண்ண ஆடைகளை நீக்கி வெள்ளாடையை உடுத்திக் கொள்வர். ஆண்களும் தங்கள் கழுத்திலுள்ள தாலி, பூவை நீக்குவர். அன்றிரவோடு திருவிழா நிறைவுபெறும். மறுநாள் காலை பெரிய வாழையிலையில் இறைச்சி, கருவாடு சமைத்துச் சோற்றுடன் கலந்து படைக்கப்படுவதைப் ‘படுகளம் இளப்பல்’ என்றழைப்பர். இது பதினாறாம் நாள் கருமாதிச் சடங்கை ஒத்தது. கூத்தாண்டவர் ஆன்மா சாந்தி பெற்றபின் அரவானின் தலை பழைய இடத்தில் வைக்கப்படும்.

கூத்தாண்டவர் விழா நிகழும் ஊர்கள்

(நன்றி: தினமலர்)

பாண்டிசேரியில் உள்ள பிள்ளையார்குப்பம், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூவாகம், கிளியனூர், வடஆர்க்காடு மாவட்டத்திலுள்ள மோத்தூர், தேவனாம்பட்டினம், கடலூரில் உள்ள மஞ்சக்குப்பம் போன்ற இடங்களில் கூத்தாண்டவர் திருவிழா நடைபெறுகிறது. இது ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று நிகழும்.

வடதமிழகத்தில் நிகழ வரலாற்றுக் காரணங்கள்

”வடதமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னர்கள் சாதவாகனர்களின் வழி வந்தவர்கள் (பொ.யு. 2-ஆம் நூற்றாண்டு). பரத்துவாஜ கோத்திரப் பிரிவில் வந்த ஆயர்குடியினரான இவர்களின் அரசன் காடவர்கோன் மகளை மணந்தான். காஞ்சியை தலைநகராக்கினான். இவர்கள் மகாபாரதக் கதைகளோடு தங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொண்டனர். எனவே அரவான் வழிபாடும், மகாபாரதத் தெருக்கூத்தும், திரௌபதி வழிபாடும் இங்கே வழக்கில் உள்ளது. மேலும் வெள்ளை நாகர் மரபின் வழி வந்த பலராமன் வழிபாடும், நாக வழிபாடும் தொண்டை மண்டலத்தில் பரவலாக வழக்கில் உள்ளது. நாககன்னியான பீலிவளையின் கதையை மணிமேகலையும் கூறுகிறது” என இப்பகுதியில் கள ஆய்வு செய்த ஆய்வாளர் கரசூர் பத்மபாரதி குறிப்பிடுகிறார்.

கோமுட்டிச் செட்டியார்

”தமிழகத்தில் கண்ணகி கதையைப் போல் தக்காண பீடபூமியான ராயல சீமாவில் வரலாறு தொடங்கும் காலத்திலிருந்தே ரேணுகாதேவி, அருந்ததி வழிபாடு இருந்து வருகிறது. கங்கையம்மன் தக்காண ஆயர்களின் குலத் தெய்வம். அருந்ததி மாதிக இளவரசன் ஒருவனின் காதல் மனைவியாகிக் கொல்லப்பட்டவள். இரணிய கசிபுவும் ரேணுகாவும் மாதிக குல முன்னோர்கள் எனத் தொல்கதைகள் குறிப்பிடுகின்றன. ரேணுகாவும், காத்தவாயனும் மாதிகர்களாலும் அவர்களுக்கு பின்வந்தவர்களாலும் வழிபடப்பட்டனர். வைதிகரான ஜமதக்னி முனிவரின் சத்திரிய மனைவி ரேணுகா ஹேகய இளவரசன் கார்த்தவீர்யனுடன் காதல் கொண்டாள். ஜமதக்னியின் ஆணைப்படி மகன் பரசுராமன் தனது சிற்றன்னை ரேணுகாவைக் கொல்கிறான். ரேணுகாவே எல்லம்மன் என்ற பெயரிலும் வழிபடப்படுகிறாள். ராயலசீமாவிலிருந்து இடம் பெயர்ந்த வைசிய கோமாட்டிகள் தங்கள் வழிபாட்டுக் கூறுகளுடன் இணைத்தனர்” என ஆய்வாளர் கரசூர் பத்மபாரதி குறிப்பிடுகிறார்.

உசாத்துணை

  • திருநங்கையர் - சமூக வரைவியல், கரசூர் பத்மபாரதி, தமிழினி, 2013.

வெளி இணைப்புகள்

நன்றி: கரசூர் பத்மபாரதி


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

Template:SPC