under review

குருதிச்சாரல் (வெண்முரசு நாவலின் பகுதி - 16)

From Tamil Wiki
Revision as of 14:50, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed non-breaking space character)
குருதிச்சாரல் ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 16)

குருதிச்சாரல்[1] ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 16) போரினைத் தடுப்பதற்காகப் பாண்டவர்கள் சார்பில் கிருஷ்ணன் (இளைய யாதவர்) துரியோதனனிடம் தூது சென்றதைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. பாண்டவர்களின் பக்கம் நின்று கௌரவர்களிடம் பேசுவதற்கு யாரும் இல்லாத நிலையில், பாண்டவர்கள் இளைய யாதவரையே விரும்பித் தேர்கின்றனர். இளைய யாதவர் பாண்டவர்களின் சார்பாகக் கௌரவர்களிடம் மும்முறை தூது செல்கிறார். இந்தத் தூதுப் பயணத்தகவல்கள் அனைத்தும் பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகியோரின் மனைவியர்கள் வழியாகவே சொல்லப்படுகின்றன.

பதிப்பு

இணையப் பதிப்பு

'வெண்முரசு’ நாவலின் 16 ம் பகுதியான 'குருதிச்சாரல்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் டிசம்பர் 2017 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு மார்ச் 2018-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

கிழக்கு பதிப்பகம் குருதிச்சாரலை அச்சுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்

'வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

இந்தக் குருதிச்சாரலில் இரண்டு முதன்மையான கூறுகள் உள்ளன. ஒன்று –- அரசக் குருதியுறவுகள் சிதறுதல். இரண்டாவது -– அரண்மனை அகத்தளங்களில் வாழும் அரசகுடிப் பெண்களின் எழுச்சி.

குருவம்சத்தின் குருதி சிதறுகிறது. அதிலும் திருதராஷ்டிரரின் குருதிவழியினர் அவரை விலக்குகின்றனர். கௌரவர்கள் பாண்டவர்களை விலக்குகின்றனர். பாண்டவர்களின் பிறப்பும் அது சார்ந்து குந்தியின் கற்பும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.

திருதராஷ்டிரர் இசையைக் கேட்பதிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, நாற்கரம் ஆடக் கற்றுக்கொள்ளுதலும் தனக்குத் தானே ஆடி மகிழ்தலும் ஒரு குறியீடாகவே படுகிறது. அவர் இசைகேட்ட காலங்களில் அவர் உள்ளத்தளவில் முழுமையாகவே அஸ்தினபுரியைவிட்டு விலகியே இருந்தார். அவர் நாற்கரம் ஆடத் தொடங்கியதும் அவரின் உள்ளம் முழுமையாகவே அஸ்தினபுரிக்குள் புகுந்துகொண்டது. அதன் பின்விளைவாகவே அவர் சஞ்சயனை மறைமுகமாகப் பாண்டவர்களிடம் தூது அனுப்புகிறார். அது 'மன்றாட்டு’ என்ற போர்வையில் விடுக்கப்பட்ட ஆணைதான். அந்த ஆணையின் முதன்மைநோக்கம் தன் குருதிவழியினரைக் காப்பதே. அதன் துணைமை நோக்கம் அஸ்தினபுரியின் ஆட்சிக்குட்பட்ட பெருநிலத்தை எவ்வகையிலும் பங்கிடுவதைத் தடுத்தலே. கௌரவரோ, பாண்டவரோ இருதரப்பில் யார் அழிந்தாலும் அழிவது 'குருவம்சத்தின் குருதியினரே!’ என்பதால்தான் திருதராஷ்டிரர் இந்த மன்றாட்டினைத் தம் மைந்தரிடம் முன்வைக்கிறார். இளைய யாதவரின் முதற்தூதால் திருதராஷ்டிரரின் அந்த மறைமுகத் தூது வெட்டவெளிச்சமாகிறது.

துரியோதனன், 'பெருநிலத்தைத் தானே முழுதாள வேண்டும்’ என்ற மண்ணாசையால், தன் நோக்கத்திற்குத் தடையாக இருக்கும் தன் தந்தையின் குருதியுறவைத் தன்னிலிருந்து முற்றாக விலக்கவும் கலிதேவனுக்குத் தன்னை முழுதளிக்கவும் முன்வருகிறான்.

திருதராஷ்டிரர் தனக்கும் தன் மகனுக்குமான குருதியுறவைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்காகவே துரியோதனன் செய்த, செய்கிற, செய்யவுள்ள அனைத்துக் கீழ்மைகளுக்கும் அனுமதியளிக்கிறார். பாண்டவர்களைக் கொன்றொழிக்கவும் நாட்டைத் துரியோதனனே முழுதாளவும் உளம்விரும்பி ஆணையிடுகிறார்.

ஆனாலும், துரியோதனன், 'திருதராஷ்டிரர் தனக்குத் தந்தை அல்லர்’ என்ற நிலைப்பாட்டினை எடுத்து, தன்னைக் கலிதேவனுக்கு முழுதளித்தவுடனேயே திருதராஷ்ரர் வேறு வழியின்றி, தன் தம்பி பாண்டுவின் குருதிவழியினரைக் காப்பதற்காக, சஞ்சயன் வழியாக மறைமுகமாகப் பாண்டவருக்கு அளித்திருந்த ஆணையைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறார். திருதராஷ்டிரர் தன்னுடைய இறுதிக்காலத்தில் ஏதாவது ஒரு வகையில் தன்னுடைய ஏதாவது ஒரு குருதிவழியினரைப் பேணிக்கொள்ளவே விரும்புகிறார். அவரின் முதன்மை நோக்கம் கௌரவர்களைக் காப்பது. துணைமை நோக்கம் பாண்டவர்களைக் காப்பது.

இதுநாள்வரை அரண்மனை அகத்தளங்களில் ஒருவகையில் அடிமைகளாகவே இருந்துவந்த அரசகுடிப் பெண்கள், தங்களின் மைந்தர்களின் உயிரைக் காப்பதற்காகப் போரைத் தவிர்க்கவேண்டி பலவகையில் அரசுசூழ்கின்றனர். விழாக்களிலும் முக்கிய நிகழ்வுகளிலும் மட்டுமே அரசவையில் அமர்ந்தவர்கள், தம் கருத்தாக எதையுமே இதுவரை பேசாதவர்கள் போரை முன்னிட்டுத் தம் கருத்துகளை முன்வைக்கத் துணிகின்றனர்.

தம் மைந்தருக்கு நிலங்களைப் பெற்றுத்தரும் போராட்டத்தையும் அவர்கள் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் இதில் பேருருக் கொள்பவர்களாகத் தேவிகை, அசலை, துச்சளை, தாரை, பலந்தரை, விருஷாலி, சுப்ரியை, பிந்துமதி, கரேணுமதி ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்கள் பேரன்னையராக உருவெடுக்க விரும்புகின்றனர். அதனை முன்னிட்டே தம் கணவன்மார்களைப் புறக்கணிக்கவும் தன் மைந்தர்களுக்கு உயிர்ப்பாதுகாப்பு அளிக்கவும் அவர்கள் பின்னாளில் ஆள்வதற்குரிய நிலத்தை உறுதிசெய்யவும் துடிக்கின்றனர்.

இரண்டாம்முறை தூதாக இளைய யாதவர் ஷத்ரிய அவைக்குச் செல்லும்போது, துரியோதனனால் பாண்டவர்களின் பிறப்பும் அது சார்ந்து குந்தியின் கற்பும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்குமான இந்த மண்பங்கீட்டுச் சிக்கலில் இளைய யாதவர் தாமே விரும்பித் தலைகொடுக்கிறார். இதன் வழியாக அவர் தான் இந்த உலகில் வேதமுடிபு மெய்மைக் கொள்கையை நிலைநாட்ட விரும்புகிறார். இளைய யாதவர் பாண்டவர் சார்பாக மேற்கொள்ளும் மூன்றாவது தூதின் போது, 'வேள்வியில் வேள்விக்காவலராகத் துரியோதனன் அமரும்போது, அவருக்குத் வேள்வித்துணைவராகக் கர்ணனை அமர்த்த வேண்டும்’ என்று சூழ்ச்சி செய்கிறார். வேள்வியிலிருந்து கர்ணன் வெளியேற்றப்படுகிறார். அவரின் இடத்தில் கௌரவர்களின் மைத்துனர் ஜயத்ரதன் அமர்த்தப்படுகிறார்.

இளைய யாதவர் தான் பாண்டவர்களின் சார்பாக மேற்கொண்ட மூன்று தூதுகளிலும் தோற்கிறார். ஆனால், இந்த மூன்று தூதுகளின் வழியாகப் பாண்டவர்கள் எந்தநிலையிலும் போரை விரும்பவில்லை என்பதும் மண்மீதான கௌரவர்களின் பேராசையும் உலகறியச் செய்யப்படுகின்றன. கௌரவர்களின் படைத்தலைமையிலிருந்து கர்ணனை முற்றொதுக்கவும் முடிகிறது. ஆனால், இளைய யாதவரால் தன்னுடைய வேதமுடிபுக்கொள்கையை நிலைநாட்ட இயலவில்லை. ஆனால், அதனை அவர் நிகழவுள்ள குருஷேத்திரப் போரின் வழியாக நிலைநாட்டிவிட இயலும்.

திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகத் தம் கணவன்மார்களைப் புறக்கணித்த பெண்களையும் நிகழவுள்ள பெரும்போரைத் தவிர்ப்பதற்காகத் தனிப்பட்ட முறையில் தூதினை மேற்கொள்ளும் பெண்களையும் போரில் தன் மைந்தரின் குருதிசிந்தப்படலாகாது என்றும் போருக்குப் பின்னர் தன் மைந்தர் ஆள நிலம் தேவை என்பதற்காகவும் பல வகையில் போராடும் பெண்களையும் குருதிச்சாரலில் காணமுடிகிறது.

கதை மாந்தர்

இளைய யாதவர், திருதராஷ்டிரர், துரியோதனன் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் கர்ணன், கணிகர், திரௌபதி, ஜயத்ரதன், சஞ்சயன், தேவிகை, அசலை, துச்சளை, தாரை, பலந்தரை, விருஷாலி, சுப்ரியை, பிந்துமதி, கரேணுமதி ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page