கலாப்ரியா

From Tamil Wiki
கலாப்ரியா

கலாப்ரியா (ஜுலை 30, 1950). இயற்பெயர் டி.கே சோமசுந்தரம். எழுபதுகளி்ல் எழுத துவங்கிய நவீன தமிழ் கவிஞர். நேரடியாகச் சித்திரங்களை அடுக்கியபடியே போகும் பாணியை கொண்டது இவருடைய கவிதைகள். கவிதை, கட்டுரை, தன்வரலாறு, சிறுகதை, நாவல் என நாற்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

பிறப்பு, கல்வி

தி.சு. சோமசுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட கலாப்ரியா 30-7-1950 அன்று திருநெல்வேலி சுடலைமாடன் தெருவில் (கடையநல்லூரில்*) பிறந்தார். தந்தை கந்தசாமி. தாய் சன்முகவடிவு.பள்ளி படிப்பை திருநெல்வேலி ஷாஃப்டர் உயர்நிலைப்பள்ளியில் முடித்தார். இளங்கலை கணிதவியலை நெல்லை ம. தி. தா இந்துக் கல்லூரியிலும், முதுகலை கணிதவியலை நெல்லை யோவான் கல்லூரியிலும் படித்து முடித்தார்.

தனிவாழ்க்கை

2009 தில் இந்தியன் ஓவர் சீஸ் வங்கி பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவர் தற்பொழுது தென்காசி அருகே உள்ள இடக்கால் என்ற கிராமத்தில் தன் குடும்பத்துடன் வசிக்கிறார். மனைவி சரஸ்வதி, இவர் பள்ளியில் கணித ஆசிரியையாகவும், தலைமை ஆசிரியையாவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இலக்கிய வாழ்க்கை

கலாப்ரியாவின் குடும்ப சூழலும், பள்ளிப்பருவத்தில் ஒரே தெருவில் வசித்த வண்ணதாசன் உடனான நட்பும் எழுதுவதற்கான ஆர்வம் உருவாக்கியது. சி.என். அண்ணாதுரையின் மறைவை ஒட்டி இவர் எழுதிய இரங்கற்பா இவருடைய முதல் கவிதையாக கருதப்படுகிறது. ’கசடதபற’ இதழில் ‘என்னுடைய மேட்டுநிலம்’ என்னும் கவிதை பிரசுரமாகியது. இது கலாப்ரியாவின் பிரசுரமான முதல் கவிதை. 'கும்பம்' என்ற புனைபெயரில் முதலில் எழுதிய கலாப்ரியா, வண்ணநிலவனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த கையெழுத்து பத்திரிக்கையான பெருநை-யில் "கலாப்ரியா" என்ற பெயரில் எழுததுவங்கினார். கசடதபற(1968), வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் அவருடைய ஆரம்பக்கால கவிதைகள் வெளிவந்தன. நவீன கவிஞராக தன் ஆரம்பகாலங்களில் பாதித்த கவிஞர்கள் என வைத்தீஸ்வரன், ஞானக்கூத்தன் இருவரையும் குறிப்பிடுகிறார்.

1998, 2000, 2001 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை குற்றாலத்தில் "பதிவுகள்" என்ற கவிதை பட்டறையை ஒருங்கிணைத்தார். மூன்று நாட்கள் நடக்கும் இந்த நிகழ்வில் தமிழ், மலையாள, கன்னட கவிஞர்கள் பங்குபெற்று உரையாடல்களும் விவாதங்களும் நிகழ்ந்தன. இந்த சந்திப்பின் வழியாக கவிதைகளில் நிகழ்ந்த பாதிப்பு 'குற்றாலம் எஃபெக்ட்' என்று இலக்கிய சூழலில் குறிப்பிடப்படுகிறது. இந்த சந்திப்பின் தாக்கம் பல எழுத்தாளர்களால் குறிப்பிடப்படுள்ளது.

இலக்கிய இடம்

"நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் நாகரீகத்தை முன்னிட்டு நாம் வெளிக்காட்டாது ஒளித்துக்கொள்ள விரும்புகிற இச்சை உணர்வுகளை, அவை வெறும் உடல் சார்ந்த காமம் மாத்திரமல்ல குற்றம், மரணம், பசி, அழுக்கு, அசிங்கம் என நாம் நேர்கொண்டும் பாராமல் ஒதுக்கி வைக்கும் நிழலான விஷயங்கள் எல்லாவற்றையும் பட்டவர்த்தனமாக எழுதுவது என்பது கலாப்ரியாவிடம் இயல்பான ஒன்றாக இருக்கிறது. சமச்சீரான ஒரு முகம் அப்போதைக்கு நம் கண்ணைக் கவர்வதாக இருந்தாலும் எப்போதைக்குமாக நம் நினைவில் பதிவது அரிது. மாறாக ஒரு முகத்தில் இருக்கும் வடு, மச்சம் அல்லது மரு நம் நினைவில் அம் முகத்தை மறக்கவியலாத ஒன்றாக அழுத்தமாகப் பதியச் செய்துவிடுகிறது. தமிழ்க்கவிதையில் காட்சிகளைச் சித்திரமாகத் தீட்டிக் காட்டும் திறன் மிகுந்த கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து கலாப்ரியா வேறுபடும் புள்ளி ஒன்றுண்டு. அது அவருடைய காட்சிப்படிமங்களில் வெளிப்படும் ஒருவித கோணல், ஒரு விலகல் அல்லது ஒருவகையிலான வக்கரிப்பு. அவ்வம்சம் அவருடைய காட்சிகளை வெறும் சித்தரிப்பு என்பதிலிருந்து நகர்த்தி அவற்றை வசீகரமான நாடகீய தருணங்களாக மாற்றுவதோடு அல்லாமல் நம்மையும் பார்வையாளன் என்பதிலிருந்து விடுவித்துப் பங்கேற்பாளனாகப் பலசமயங்களில் உள்ளிழுத்துக் கொண்டுவிடுகிறது." என்று எழுத்தாளர் கா. மோகணரங்கன் 'புனல் பொய்யாப் பொருநை' என்ற கலாப்ரியா கவிதைகள் குறித்த கட்டுரையில் குறிப்பிடுகிறார். [1]

"நவீனக் கவிதையில் காட்சிச்சித்தரிப்பு என்பது இரண்டு வகையிலேயே பயின்றுவருகிறது. ஒன்று, படிமங்கள். காட்சிகளின் கூரிய சித்தரிப்பு ஒரு குறிப்பிட்ட வகையில் அவற்றைப் பார்க்கும்படி நம்மை பணிக்கிறது, நாம் அவற்றை அர்த்தங்களாக விரித்தெடுக்கும் வாய்ப்பை பெறுகிறோம். நம்முள் அவை குறியீடுகளாக வளர்கின்றன. உணர்வுகளாகின்றன. முழுவாழ்க்கைக்கும் பிரதிநிதிகளாக நிலைகொள்கின்றன. அவற்றைப் படிமம் என்கிறோம். இன்னொன்று நுண்சித்தரிப்பு. அது அலைகடலில் ஒரு மிடறுபோல. வாழ்வின் ஒரு தருணம். ஒரு கதைத்துளி. இவ்விரண்டும் அல்லாத காட்சிகள் என தமிழில் கலாப்ரியாவின் கவிதைகளிலேயே காணக்கிடைக்கிறது. அவருடைய தனி இயல்பு, தமிழ்க்கவிதைக்கு அவருடைய கொடை அது. அவருடைய தொடக்ககாலக் கவிதைகள் முதலே இந்த இயல்பு தொடர்ச்சியாக இருந்துவருகிறது. சொல்லப்போனால் ஒரு காட்சியை ஏதேனும் வகையில் அவர் படிமமாக ஆக்கும்போதுதான் அவை கீழிறங்கி எளிய அர்த்தம் கொள்கின்றன.இச்சித்திரங்களைப் பற்றி சுஜாதாவும் முன்பு சொல்லியிருக்கிறார். இவை அளிக்கும் அகத்தூண்டல் [Evocation] மட்டுமே இவற்றை கவிதைகளாக்குகின்றன. மேலதிகமான அர்த்தமோ வாழ்க்கைக்குறிப்போ இவற்றுக்குத் தேவையில்லை என. எதையும் கரந்து வைத்துக்கொள்ளாத காட்சிகள். குழந்தைகள் அல்லது மலர்கள் போல. அவ்வண்ணம் அவை இருப்பதனாலேயே கவிதையாக ஆகின்றவை. அவற்றிலுள்ள வேடிக்கைபார்க்கும் குழந்தை நம்மை வந்தடைந்தால், ஒருகணம் புன்னகைத்துவிட்டால். நாம் கவிதையை வாசித்துவிட்டோம்." என்று எழுத்தாளர் ஜெயமோகன் 'வெறுமே மலர்பவை' என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.[2]

விருதுகள்

  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • கவிஞர் சிற்பி இலக்கியவிருது
  • ஜஸ்டிஸ் வி. ஆர். கிருஷ்ணய்யர் விருது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், நெல்லை
  • 2010, சிறந்த கட்டுரைத் தொகுப்பு - நினைவின் தாழ்வாரங்கள் - விகடன் விருது, மற்றும் சுஜாதா விருது
  • 2012, கண்ணதாசன் இலக்கிய விருது - கோவை
  • 2012, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
  • கவிஞர் தேவமகள் இலக்கிய விருது
  • கவிதைக்கணம் வாழ்நாள் சாதனையாளர் விருது
  • 2017, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் கலைஞர் மு.கருணாநி பொற்கிழி விருது.
  • 2017, திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியின் “அறிஞர் போற்றுதும்” விருது
  • 2017, மனோன்மணியம் சுந்தரனார் விருது
  • 2018, கோவை விஜயா பதிப்பக வாசகர் வட்டதின் “ஜெயகாந்தன் விருது”
  • 2019, அமெரிக்கவாழ் தமிழர்களின் "விளக்கு" அமைப்பின் "புதுமைப்பித்தன் நினைவு விருது".

படைப்புகள்

கவிதை தொகுப்பு
  1. வெள்ளம், 1973
  2. தீர்த்த யாத்திரை, 1974
  3. மற்றாங்கே, 1979
  4. எட்டயபுரம், 1983
  5. சுயம்வரம், 1985
  6. உலகெல்லாம் சூரியன், 1993
  7. அனிச்சம், 2000
  8. வனம் புகுதல், 2003
  9. எல்லாம் கலந்த காற்று, 2007
  10. நான் நீ மீன், 2011
  11. உளமுற்ற தீ, 2013
  12. தண்ணீர்ச் சிறகுகள், 2014
  13. சொந்த ஊர் மழை, 2015- நற்றினை பதிப்பகம்
  14. தூண்டில்மிதவையின் குற்ற உணர்ச்சி, 2016- டிஸ்கவரி புக் பேலஸ்
  15. பனிக்கால ஊஞ்சல், 2016- உயிர்மை பதிப்பகம்
  16. பேனாவுக்குள் அலையாடும் கடல், 2017- டிஸ்கவரி புக் பேலஸ்
  17. சொல் உளி, 2018 - சந்தியா பதிப்பகம்
  18. மௌனத்தின் வயது, 2019 - சந்தியா பதிப்பகம்
  19. சங்க காலத்து வெயில், 2021 - சந்தியா பதிப்பகம்
  1. கலாப்ரியா கவிதைகள், (தொகை நூல்), 1994-காவ்யா
  2. கலாப்ரியா கவிதைகள், (தொகை நூல்), 2000-தமிழினி
  3. கலாப்ரியா கவிதைகள், (தொகை நூல்), 2010-சந்தியா
  4. கலாப்ரியா கவிதைகள் (இரண்டாம் தொகுதி), 2020
கட்டுரை தொகுப்பு
  1. சுவரொட்டி, (தமிழ் திரைப்படக் கட்டுரைகள்), 2013.
  2. மறைந்து திரியும் நீரோடை (இலக்கியக் கட்டுரைகள்), 2014
  3. மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள் (இலக்கியக் கட்டுரைகள்), 2015- சந்தியா பதிப்பகம்
  4. என் உள்ளம் அழகான வெள்ளித்திரை (தமிழ் திரைப்படக் கட்டுரைகள்), 2015- சந்தியா பதிப்பகம்
  5. சில செய்திகள் சில படிமங்கள் (இலக்கியக் கட்டுரைகள் ), 2016- சந்தியா பதிப்பகம்
  6. அபெனும் தனி ஊசல் (இலக்கியக் கட்டுரைகள் ), 2018
  7. பாடலென்றும் புதியது (திரைப்படக் கட்டுரைகள்), 2018- சந்தியா பதிப்பகம்
  8. கல்லில் வடித்த சொல் போலே (கட்டுரைகள், நேர்காணல்கள்), 2021- சந்தியா பதிப்பகம்
தன்வரலாற்று நூல்கள்
  1. நினைவின் தாழ்வாரங்கள், 2009
  2. ஓடும் நதி, 2010
  3. உருள் பெருந்தேர், 2011
  4. காற்றின் பாடல், 2013
  5. போகின்ற பாதையெல்லாம், 2016- அந்திமழை பதிப்பகம்
சிறுகதை தொகுப்பு
  1. வானில் விழுந்த கோடுகள், 2018- சந்தியா பதிப்பகம்
நாவல்
  1. வேணல், 2017- சந்தியா பதிப்பகம்
  2. பெயரிடப்படாத படம், 2019- சந்தியா பதிப்பகம்
  3. பேரருவி, 2020- சந்தியா பதிப்பகம்
  4. மாக்காளை, 2021- சந்தியா பதிப்பகம்

உசாத்துணை

  • 25 ஆவது தடம் இதழ் - விகடன்

இனைப்புகள்

குறிப்புகள்