under review

கரிச்சான் குஞ்சு

From Tamil Wiki
Revision as of 09:02, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)

To read the article in English: Karichan Kunju. ‎

கரிச்சான்குஞ்சு
Karichan kunju.jpg
கரிச்சான்குஞ்சு

கரிச்சான் குஞ்சு (ஜூலை 10, 1919 - ஜனவரி 17, 1992) தமிழ் எழுத்தாளர். இந்தியத் தத்துவங்களில் பயிற்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர். இவர் எழுதிய 'பசித்தமானுடம்' என்ற நாவல் தமிழின் முதல் பிறழ்வெழுத்து என சொல்லப்படுகிறது. புகழ் பெற்ற மார்க்சிய தத்துவ ஆசிரியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

பிறப்பு, கல்வி

கரிச்சான் குஞ்சு என்று அறியப்பட்ட ஆர்.நாராயணசாமி ஜூலை 10, 1919-ல் தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டம் சேதனீபுரத்தில் ராமாமிருத சாஸ்திரி, ஈஸ்வரி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை இளமையிலேயே மறைந்துவிட்டதால் ஈஸ்வரியம்மாள் கும்பகோணத்தில் ஒரு சத்திரத்தில் சமையல் வேலை செய்தார். கரிச்சான்குஞ்சுவும் அங்கே எடுபிடி வேலை செய்தார். அவருடைய தாய்மாமன் அவரை எட்டு வயதில் அழைத்துச்சென்று பெங்களூரில் ஓர் இலவச வேதபாடசாலையில் சேர்ந்தார். அங்கே சமஸ்கிருதமும், வேதமும் பயின்றார். பதினைந்து வயதில் மதுரைக்கு வந்து வெவ்வேறு கோயில்களில் பணியாற்றியபடி தேவஸ்தான பாடசாலையில் தமிழும் வடமொழியும் கற்றார். தமிழிலும், சமஸ்கிருதத்திலும் வித்வான் பட்டம் பெற்றார். பின்னர் ராமேஸ்வரத்தில் தேவஸ்தான பாடசாலையில் பயின்றார். 22 வயது வரை மாணவராகவே வாழ்ந்தார்.

தனி வாழ்க்கை

கரிச்சான்குஞ்சு சென்னையில் இராமகிருஷ்ணா பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். அதன்பின் கும்பகோணம் நேட்டிவ் உயர்நிலைப் பள்ளி, விஷ்ணுபுரம் உயர்நிலைப் பள்ளி மன்னார்குடி தேசிய உயர்நிலைப் பள்ளியில் என்று ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டார். ஆனால் முறையான பட்டம் பெறாதவர் என்பதனால் பெரும்பாலும் மிகக்குறைவான தொகுப்பூதியத்தில்தான் பணியாற்றினார்.

கரிச்சான் குஞ்சு, சாரதா அம்மாளை மணந்து கொண்டார். இவர்களுக்கு லக்ஷ்மி பேபி, பிரபா, விஜயா, சாந்தா என நான்கு பெண் குழந்தைகள். இளமையில் வறுமை, பால்யகால உறவுகளின் அனுசரணையற்ற தன்மை, அனாதை போலப் பாட சாலைகளில் கழிந்த பால்யம், அவர் படித்த வேதாந்தத் தத்துவங்கள், எல்லாமுமாகச் சேர்ந்து லௌகீக வாழ்விலும் அவரை ஒட்ட விடாமலேயேதான் வைத்திருந்தன. ஆனால் தன் பெண் குழந்தைகளை படிக்க வைப்பதில் மிக உறுதியாக இருந்தார் என்று ரவி சுப்ரமணியம் குறிப்பிடுகிறார்.

இலக்கிய பங்களிப்பு

கும்பகோணத்தில் ஆசிரியராகப் பணியாற்றும்போது எழுத்தாளர்கள் கு.ப. ராஜகோபாலன் , தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராம் ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டவர். இளவயதிலேயே தன் தந்தையை இழந்துவிட்ட இவர், தன்னுடைய ஆதர்சமான கு.ப.ராஜகோபாலனை தன் தந்தையாகவும் கருதியவர். விடியற்காலையில் குரல்கொடுக்கும் முதல் பறவையான கரிச்சான் என்னும் புனைபெயரில் கு.ப.ராஜகோபாலன் கட்டுரைகள் எழுதி வந்தார். அப்புனைப்பெயரை ஒட்டி தனக்கு 'கரிச்சான் குஞ்சு' என்ற பெயர் சூட்டிக்கொண்டு எழுத ஆரம்பித்தார். இவரின் நாடகங்கள் தொகுக்கப்பட்டு "கழுகு" என்ற பெயரில் வெளிவந்தது. காலமோகினி, கலைமகள், அஜந்தா என பல இதழ்களில் எழுதினார். எம்.வி. வெங்கட்ராம் நடத்திய "தேனீ" இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இவரின் 'சுகவாசிகள்’ எனும் குறுநாவல் 'மனிதர்கள்’ என்ற பெயரில் தொலைக்காட்சித்தொடராக வந்தது.

காதம்பரி சிறுகதை (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)
சிறுகதைகள்

1940ல் ஏகாந்தி என்ற புனைபெயரில் இவரது முதல் சிறுகதையான 'மலர்ச்சி' கலைமகள் இதழில் வெளிவந்தது. திருலோக சீதாராம் திருச்சியிலிருந்து நடத்திவந்த சிவாஜி எனும் இதழில் தொடர்ந்து கதைகளை எழுதினார். ஏறத்தாழ இருநூறு கதைகளை எழுதியிருக்கிறார். அவர் வாழ்நாளில் பெரும்பாலானவை தொகுக்கப்படவில்லை.

நாவல்கள்

நவீன தமிழ் இலக்கியத்தில் ஓரினப் புணர்ச்சியைக் கையாண்ட முதல் நாவல் இவருடைய ’பசித்த மானுடம்’ எனலாம். தமிழ் இலக்கியத்தின் பிறழ்வெழுத்து வகை நாவல்களில் இதுவும் ஒன்றென கருதப்படுகிறது."அறிவார்த்தம் மறுத்த அகங்காரம் மிகுந்த நாஸ்திகத்தையும் போலியான உள்ளீடற்ற ஆஸ்திகத்தையும் கடந்த ஒரு தத்துவார்த்த நிலை நாவலின் அடிநாதமாக இந்நாவலில் படர்ந்திருக்கிறது" என்கிறார் விமர்சகர் வெங்கட் சாமினாதன்.

மொழிபெயர்ப்புகள்

சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலத்திலிருந்து பல நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். காஷ்மீரத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆனந்தவர்த்தனரின் த்வன்ய லோகவைத் 'தொனி விளக்கு' என்ற பெயரில் அவர் மொழிபெயர்த்த புத்தகமும் தமிழுக்கான பிற மொழி வரவுகளில் முக்கியமானது. மார்க்சிய தத்துவங்களின் மேல் இவருக்கு இருந்த ஆர்வம், மார்க்சிய மேதையான தேவிபிரசாத் சட்டோபாத்யா அவர்களின் "What is living and what is dead in Indian Philosophy" என்ற நூலை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்க வைத்தது. சரத்சந்திரரின் நூலை "பெண்ணின் பெருமை" என்று மொழிபெயர்த்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுரைகள்

வேதாந்த நோக்கில் அவர் பாரதியின் ஆத்ம பக்குவத்தைப் பற்றி எழுதிய 'பாரதி தேடியதும் கண்டதும்' நூலும் கு.ப.ரா. பற்றி விரிவாக அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பும் அவரது தமிழ் இலக்கியப் பங்களிப்பில் பிரதானமானவை.

மறைவு

கரிச்சான்குஞ்சு தன் 73வது வயதில் ஜனவரி 17, 1992-ல் காலமானார்.

வாழ்க்கை வரலாறுகள்

கரிச்சான்குஞ்சு வாழ்க்கை வரலாறு - சேஷாத்ரி (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை)

இலக்கிய இடம்

இலக்கியம் இருவகைகளில் மனிதனின் சாராம்சமென்ன என்று ஆராய்கிறது. ஒன்று, நிகர்நிலையில் இயல்பான தளத்தில். இன்னொன்று, மீறலில் அல்லது உச்சநிலையில். இயல்பான நிலையில் மனிதனின் பெறுமதியை ஆராய்வதே யதார்த்தவாதத்தின் வழிமுறை. உச்சங்களில் வைத்து ஆராய்வது இரண்டு அழகியல்களின் வழிமுறை. கற்பனாவாதம் [ரொமாண்டிசிஸம்] மனிதப்பெறுமதியை ஓர் உச்சத்துக்கு கொண்டுசெல்கிறது.அதன் நேர் மறு எல்லைக்கு கொண்டுசென்று பிறழ்வெழுத்து மனிதப்பெறுமதியை ஆராய்கிறது.கரிச்சான் குஞ்சுவின் பசித்தமானுடம் ஓரளவிற்கு இரண்டாம் வகையை சார்ந்தது. இவ்வகை எழுத்து பிறழ்வெழுத்து (Transgressive Fiction) என்று இலக்கிய விமரிசனத்தில் கூறப்படுகிறது. தமிழின் பிறழ்வெழுத்தின் முன்னோடியாக கரிச்சான் குஞ்சு கருதப்படுகிறார்.

நூல்கள்

சிறுகதைத் தொகுதிகள்
  • எளிய வாழ்க்கை முதலிய கதைகள்- காதல் கல்பம் (1955)
  • வம்சரத்தினம் (1964)
  • குபேர தரிசனம் (1964)
  • தெய்வீகம் (1964)
  • அம்மா இட்ட கட்டளை (1975)
  • அன்றிரவே (1983)
  • கரிச்சான்குஞ்சு கதைகள் (1985)
  • தெளிவு (1989)
  • எது நிற்கும் (2016)
  • கரிச்சான்குஞ்சு கதைகள் - முழுத் - தொகுப்பு (2021)
நாவல்
  • பசித்த மானுடம்

குறுநாவல்

  • சுகவாசிகள் (1990)
நாடகங்கள்
  • கழுகு (1989)
  • காலத்தின் குரல்
மொழிபெயர்ப்புகள்
  • இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும் - தேவி ப்ரசாத் சட்டோபாத்யாயா (What is living and what is dead in Indian philosophy)
  • தொனி விளக்கு
  • பெண்ணின் பெருமை - சரத்சந்திரர்
  • சங்கரர் - டி.எம்.பி.மகாதேவன்
  • சூரியகாந்திப் பூவின் கனவு - ஸையத் அப்துல் மாலிக்
கட்டுரை நூல்கள்
  • பாரதியார் தேடியதும் கண்டதும் (1982)
  • கு.ப.ரா - வானதி பதிப்பகம் (1990)

உசாத்துணை


✅Finalised Page