கமல்ஹாசன்
கமல்ஹாசன் (7 நவம்பர் 1954 ) தமிழ் திரைப்பட நடிகர், திரைக்கதையாசிரியர், தமிழில் திரைக்கதை என்னும் தனித்த இலக்கியவடிவத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். கவிதைகள் எழுதியிருக்கிறார்.
பிறப்பு, கல்வி
கமல்ஹாசன் 7 நவம்பர் 1954ல் ராமநாதபுரம் பரமக்குடியில் வழக்கறிஞர் தொழில்செய்தவரும், காங்கிரஸ் அரசியல்செயல்பாட்டாளருமான டி.ஸ்ரீனிவாச ஐயங்காருக்கும் ராஜலட்சுமிக்கும் பிறந்தார். கமல்ஹாசனுக்கு முதலில் பார்த்தசாரதி என்று பெயரிடப்பட்டது, பின்னர் அது கமல்ஹாசன் என்று மாற்றப்பட்டது. கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன் வழக்கறிஞரும், தேசியவிருது பெற்ற நடிகரும் ஆவார். இன்னொரு அண்ணன் சந்திரஹாசன் வழக்கறிஞர், அவரும் சில படங்களில் நடித்திருக்கிறார். கமல்ஹாசனின் சகோதரி நளினி ஒரு பரதநாட்டியக் கலைஞராக இருந்தார்.
பரமக்குடியில் தொடக்கக் கல்வி பயின்ற கமல்ஹாசன் பின்னர் அவருடைய குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்தபோது சென்னை முத்தையா செட்டியார் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் ஹிந்து மேல் நிலைப்பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். தன் சகோதரர்களைப் போலன்றி இளமையிலேயே பள்ளிக்கல்வியை விட்டுவிட்டு திரைத்துறையில் தீவிரமாக ஈடுபட்டார்.
தனிவாழ்க்கை
கமல்ஹாசன் 1978ல் தன் 24 ஆவது வயதில் நடனக்கலைஞரான வாணி கணபதியை மணந்தார். வாணி கணபதியை மணமுறிவு செய்தபின் 1988 ல் நடிகை சரிகாவுடன் வாழ்ந்தார். அவர்களுக்கு அக்ஷரா, சுருதி என இரு மகள்கள். சரிகா பின்னர் விவாகரத்து பெற்றுக்கொண்டார்.
நாடக வாழ்க்கை
ஔவை டி.கே.ஷண்முகம் நடத்திய டி.கே.எஸ் நாடக சபாவில் இளம்நடிகராகப் பங்குபெற்றார். நாடக உருவாக்கத்தின் எல்லா தளங்களிலும் ஈடுபட்டார்
திரைப்பட வாழ்க்கை
கமல்ஹாசன் 1960ல் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா என்னும் திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகமாகி அப்படத்துக்காக தேசியவிருது பெற்றார். 1962ல் வெளிவந்த கண்ணும் கரளும் கமல்ஹாசனின் முதல் மலையாளப் படம்.
நடனக்கலைஞர், பாடகர், நடிகர் என்னும் நிலைகளில் கமல்ஹாசன் அறுபத்திரண்டு ஆண்டுகளாக திரைத்துறையில் ஈடுபட்டு வருகிறார். திரைப்பட நடிப்புக்காக மூன்றுமுறை தேசியவிருது பெற்றார். 1990ல் பத்மஸ்ரீ விருதும் 2014ல் பத்மபூஷன் விருதும் பெற்றார்.
அரசியல்
கமல்ஹாசன் தொடக்கம் முதலே தன் அரசியல் நிலைபாடுகளை முன்வைத்து வந்தார். காந்தியிடமும் ஈ.வெ.ராமசாமிப் பெரியாரிடமும் இணையான ஈடுபாடு கொண்டவர். தேசியப்பார்வை, இயற்கையுடன் ஒட்டிய வளர்ச்சி, அதிகாரப்பரவலாக்கம், ஜனநாயகவழியிலான மக்களியக்கம் ஆகியவற்றில் காந்தியையும் சமூகநீதி, பகுத்தறிவு, மதநீக்கம் செய்யப்பட்ட அரசியல் ஆகியவற்றில் ஈ.வெ.ராமசாமிப் பெரியாரையும் தன் முன்னோடிகள் என்று குறிப்பிடுகிறார். 21 பெப்ருவரி 2018 ல் மக்கள் நீதி மையம் என்னும் அரசியல் கட்சியை தொடங்கினார்.
திரைக்கதைகள்
தமிழிலக்கியத்தில் கமல்ஹாசனின் இடம் அவருடைய திரைக்கதைகளால் உருவாவது.