under review

ஐ. இளவழகு

From Tamil Wiki
ஐ. இளவழகு

ஐ. இளவழகு ( 20 நவம்பர் 1941) மலேசியவின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர். இவரது 'இலட்சியப் பயணம்' நாவல் எஸ்.பி.எம் எனும் மலேசிய இடைநிலைப்பள்ளிகளுக்கான தமிழ் இலக்கியப் பாடத்திட்டத்தில் இலக்கியப் பாடமாக்கப்பட்ட முதல் மலேசியத் தமிழ் நாவலாகும்.

பிறப்பு, கல்வி

ஐ. இளவழகுவின் இயற்பெயர் ஆறுமுகம். இவர்  நவம்பர் 20, 1941ல் பேராக் மாநிலத்தில் உள்ள பாரிட் எனும் சிற்றூரில் பிறந்தார். இவரது அப்பாவின் பெயர் ஐயாசாமி. அம்மாவின் பெயர் சாலம்பாள். உடன் பிறந்தவர்கள் ஐவர். இவரது அண்ணன் கவிஞர்  ஐ.உலகநாதன். தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கி, ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து மூன்றாம் படிவம் வரை கற்றார்.

குடும்பம், தொழில்

ஐ. இளவழகுவின் திருமணம் சீர்திருத்த முறையில் ஆகஸ்டு 3, 1970ல் நடந்தது. இவர் துணைவியார் பெயர் ஜெயா. இத்தம்பதிகளுக்கு ஐந்து பிள்ளைகள். இவர் வணிகத்தைத் தொழிலாகக் கொண்டவர்.

இலக்கியப் படைப்புகள்

ஐ. இளவழகு

ஐ. இளவழகுவின் முதல் சிறுகதை ‘மாமன் மகள்’  ஐ.உலகநாதன் நடத்தி வந்த  'மாதவி' எனும் இதழில் 1959ல் பிரசுரமாகியது. இப்படைப்பு கொடுத்த ஊக்கத்தால் 'தமிழ் முரசு' இணைப்பக்கமாக வெளியிட்ட மாணவர் மணிமன்ற மலரில் தொடர்ந்து எழுதி வந்தார். இவரது இலக்கிய ஆர்வத்தைக் கண்டுகொண்ட சிங்கப்பூர் தமிழ் முரசு பத்திரிகை  நிர்வாகத்தினர்  இவரை மலேசிய பேராளராக நியமித்தனர். தொடர்ந்து 'தமிழ் நேசன்' பத்திரிகையில்  ‘மனிதனின் கதை’ என்ற தத்துவக் கட்டுரைத் தொடரை எழுதினார்.  இக்கட்டுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டு புதுடில்லி  பல்கலைக்கழகத்தின்  தமிழ்ப்பிரிவில் துணைப்பாட நுல்லாகப் பயன்படுத்தப்பட்டது. 1971ம் ஆண்டு நா. பார்த்தசாரதி ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தீபம்’ இதழில் இவருடைய ‘சுமை’ என்ற சிறுகதை பிரசுரமானது.

இவர் எழுதிய 'இலட்சியப் பயணம்' என்ற நாவல் மலேசியாவில் அதிக கவனம் பெற்றது. 1983ஆம் ஆண்டு நூலாக உருப்பெற்ற இந்நாவல் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பிரச்சார ஏடான சங்கமணியில் தொடராக வெளியானது. பின்னர் அந்நாவல் 2012  தொடங்கி 2015 வரை தொடர்ந்து மூன்றாண்டுகள் எஸ்.பி.எம் எனும் மலேசிய இடைநிலைப்பள்ளிகளுக்கான தமிழ் இலக்கியப் பாடத்திட்டத்தில்  இலக்கியப் பாட நூலாக ஆக்கப்பட்டது.

பொது வாழ்க்கை

ஐ. இளவழகு, 1988 முதல் 1990 வரை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்  தலைவர் பொறுப்பை ஏற்றார்.  34 பேர் கொண்ட குழுவுடன் தமிழ் நாட்டுக்கு இலக்கியப் பயணத்தை மேற்கொண்டார். மேலும் இவர் மாத இதழான ‘அகரம்’ இலக்கிய இதழை பல ஆண்டுகள் நடத்தி வந்தார்.

பரிசு, விருது

  • ஈப்போவில் நடைபெற்ற மரபுக்கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்றதால் 'பாவலர் பொன்புனை விருது' கிடைத்தது. - 1967

இலக்கிய இடம்

ஐ. இளவழகுவின் முதன்மையான பங்களிப்பு 'இலட்சியப் பயணம்' எனும் நாவல். மலேசியத் தமிழர்களின் வாழ்வியலை நுட்பமாகப் பதிவு செய்ய முயன்ற முன்னோடி முயற்சியாக இந்நாவல் கருதப்படுகிறது.

நூல்கள்

நாவல்
  • இலட்சியப் பயணம்
சிறுகதை
  • மண்ணுக்குச் சொந்தம் - 1990
  • மீட்சி - 2000
கட்டுரை
  • மனிதனின் கதை - 1974
கவிதை
  • வேலவன் வெண்பா நூறு - 1983
  • அமுதும் தேனும் - 1996

உசாத்துணை


✅Finalised Page