ஐ.உலகநாதன்
ஐ.உலகநாதன் (பிறப்பு 12.9.1936 - மறைவு 6.07.2020) சிங்கப்பூர், மலேசியாவின் மூத்த கவிஞர்களில் ஒருவர். நவீன சிங்கப்பூரின் தொடக்ககாலத்தில் மரபுக்கவிதையை வளர்க்கவும், கவிஞர்களை உருவாக்கவும் இவரது மாதவி இலக்கிய இதழும், இவரது இலக்கியக்குழுவும் முக்கியப் பங்காங்கியுள்ளது.
பிறப்பு, கல்வி
மலேசியாவின் ஈப்போவில் (பேராக் மாவட்டத்தில் பாரிட் நகரில்) 12.09.1936இல் பிறந்தவர். தந்தையார் அய்யாசாமி. தாயார் சாலம்மாள்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள லிங்கி தோட்டத் தமிழ்ப் பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை கல்வி கற்றார்.
தனிவாழ்க்கை, தொழில்
மனைவி நீலாவதி. நந்தகுமார், விஜயகுமார், செல்வகுமார் ஆகிய மகன்களும் உள்ளனர். இவரது அண்ணன் பிரபல கவிஞர் ஐ. இளவழகுகு.
சிங்கப்பூரில் தமிழ் மலரில் துணையாசிரியர் உட்பட பல பணிகள் மேற்கொண்டார்.
1966-இல் தமிழகத்தில் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் குடியேறினாா். அதன் பிறகு பெங்களூருக்குக் குடியேறினாா். 1966-ஆம் ஆண்டு ‘சந்தனக்கிண்ணம்’ என்ற தனது முதல் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டாா். அந்நூலுக்கு முதல்வா் அண்ணா துரை அணிந்துரை வழங்கியுள்ளாா்.
1968இல் பெங்களூரில் பெங்களூருவில் குடியேறினார்.
இலக்கிய வாழ்க்கை
இவர் 1950இல் எழுத்துலகில் நுழைந்தார். கட்டுரை எழுதுவதில் தொடங்கிய இவரது எழுத்துப்பணி பிறகு கவிதைத் துறையில் இவரை கால் கொள்ள வைத்தது. தமது 19 ஆவது வயதில் தமிழ் முரசு மாணவர் மணி மன்றத்தில் எழுதத் தொடங்கிய இவர் இன்றைய முன்னணிக் கவிஞர்கள் பலரை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி வளர்த்தவர். ஐ. உலகநாதனிடம் யாப்பிலக்கணம் கற்ற பல மாணவர்கள் பின்னாளில் சிறந்த கவிஞர்களாகப் பரிணமித்தனர்.
தமிழ் மலர் இதழில் பணியாற்றிக்கொண்டு தமிழ்க் கவிதைகள் வளர்த்தார்.
1961ஆம் ஆண்டில் “மாதவி இலக்கிய மன்றத்தை” நண்பர்களுடன் இணைந்து நிறுவி அதன் தலைவராகவும் செயல்பட்டார். “மாதவி” என்ற பெயரில் இதழ் ஒன்றையும் நடத்தி சிங்கை, மலேசியக் கவிதை உலகில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சினார்.
“திருப்பம்” என்ற பெயரில் இதழ் ஒன்றை ஐந்து ஆண்டுகள் நடத்தியிருக்கிறார்.
பேச்சுத் துறையில் மிகுந்த ஈடுபாடு உடையவர். மலேசியாவில் குறிப்பிடத் தகுந்த மேடைப் பேச்சாளராக விளங்கினார்.
மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள், சிறுகாப்பியங்கள், 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 50க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 500க்கும் மேற்பட்ட கவிதைகள் என பன்முகத் திறன் கொண்டவர் திரு உலகநாதன். பல நூல்களை எழுதியிருப்பதோடு, திருக்குறள் காமத்துப் பாலுக்கு வெண்பா வடிவில் விளக்கம் எழுதியுள்ளார்.
உலகு, விந்தியன் போன்ற புனைபெயர்களிலும் இவர் எழுதியுள்ளார். கவிவாணர்
இவரது முதல் நூலான “சந்தனக் கிண்ணம்” 1966-இல் வெளியீடு கண்டது. மலேசியத் தமிழ்க் கவிதைகளின் சிறப்புகளுக்காக தமிழ் நாட்டில் மதிப்பு ஏற்பட இந்நூல் காரணமாக அமைந்தது.
பொது வாழ்க்கை
சிங்கை அலெக்சாண்ட்ரா வட்டார பகுத்தறிவு நூலகம் இவரின் பாசறையாக இயங்கி வந்தது. ஒவ்வொரு வாரமும் அங்கு சொற்பயிற்சி நடைபெறும். அதில் பல பேச்சாளர்கள் உருவானார்கள்.
தமிழர் இயக்கங்கள் பலவற்றில் உறுப்பினராகவும் பொறுப்பாளராகவும் தமிழ்ப் பணியாற்றியவர்.
பெங்களூரில் குடியேறிய பின்னர் அங்கு, உலகத்தமிழ் கழகம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், திருக்குறள் மன்றம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டார். 1990இல் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டு மலரில் இவரது ‘குமுறல்' கவிதை இடம் பெற்றது. ஏரிக்கரை கவியரங்கம், பாவாணர் பாட்டரங்கம், பூங்கா கவியரங்கம் ஆகியவற்றில் ஆர்வமுடன் பங்கேற்று 50-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் கவிதை பாடியுள்ளார். முதுமைக் காலத்திலும் ஏராளமான புதிய கவிஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார்.
ஐ. உலகநாதன் 6/07/2020இல் கர்நாடக மாநிலம் பெங்களூரு லட்சுமி நாராயணபுரத்தில் 83வது வயதில் காலமானார்.
அமைப்புகளில் வகித்த பொறுப்புகள்:
மாதவி இலக்கிய மன்றம்- நிறுவனர், தலைவர்
பகுத்தறிவு நூலகம்- நிறுவனர், தலைவர்
பரிசுகள்/ விருதுகள்
1989 சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தமிழவேள் விருது
1970 மலேசியக் கவிவாணர் பட்டம்
1985 தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது
பாவரசு பட்டம்
சிறப்பு அடை
கவிவாணர், பாவரசு
இலக்கிய இடம்
1966-ல் வெளியான இவரது ‘சந்தன கிண்ணம்' நூலை தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா, தம்பிக்கு வரைந்த மடலில் பாராட்டியுள்ளார். ‘மலேசியக் கவிவாணர்’ என்றே இறுதிவரை நினைவு கூறப்பட்டார்.
இவரது படைப்புகள் பெங்களூரு மற்றும் மலேசிய பல்கலைக்கழகங்களில் இளங்கலை தமிழ் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
நூல்கள்
கவிதை
சந்தனக் கிண்ணம்-1966
முத்துக் கோவை- 1975
தமயந்தி- 1981(நாடகப் பாவியம்)
திருப்புமுனைகள்- 1982
மகரயாழ்- 1982
கண்ணம்மா: கதைப்பாடல்- 1982
புரட்சித் தலைவர் புகழ் அந்தாதி- 1985
கேட்டால் கேளுங்கள்- 1996
பாவாணர் புகழ்ச்சிந்து- 1997
செந்தமிழ்க் கவசம்
சிங்கப்பூர் சிறப்பதிகாரம்- 2011
கண்ணம்மா: கதைப்பாடல்- 1982
உடைந்த வீணை- 1996
சிவகாவியம்- 2007
கட்டுரை
ஐ. உலகநாதன் கட்டுரைத் தொகுப்பு
நான் நூறு (சுய வரலாறு)
ஒரு பாலைவன ஒட்டகத்தின் சோலைவனப் பயணம் – 1989 ( பயண நூல்)
உசாத் துணை
http://tikpanbaham.blogspot.com/2016/12/blog-post_41.html?m=1
https://selliyal.com/archives/214298
https://www.hindutamil.in/news/india/563163-i-ulaganathan-passes-away.html
http://spmilakiam.blogspot.com/2011/05/blog-post_18.html?m=1
சிங்கப்பூர், மலேசியா, இந்தியா புகழ் ‘கவிவாணர்’ ஐ. உலகநாதன் காலமானார்
சிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் ஐ.உலகநாதன்
https://singaporetamilwriters.com/ASTW/200%20Writers/S22%20Kavivanar%20Ulaganathan.docx
https://youtu.be/f0SIXfp-498