எம். ஏ. இளஞ்செல்வன்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
எம்.ஏ. இளஞ்செல்வன் மலேசியாவில் 70களில் புதுக்கவிதை இயக்கத்தை முன்னெடுத்தவர். இவரது இயற்பெயர் மா. இராமு. இவர் புதுக்கவிதை மட்டுமல்லாது சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு, இளமை
எம். ஏ. இளஞ்செல்வன் 11.2.1948இல் கெடா மாநிலத்தில் பீடோங் எனும் பகுதியில் பிறந்தார். சுங்கைப் பட்டாணியில் உள்ள சென்ட் திரேஸா ஆங்கிலப்பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றவர், தமிழை சுயமாகப் பழகிக்கொண்டார். இடைநிலைப்பள்ளியில் கல்வியை முடித்து ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இணைந்து தமிழாசிரியர் ஆனார். பின்னர் தலைமை ஆசிரியராக இறுதி வரை தன் பணியைத் தொடர்ந்தார்.
குடும்பம்
இவரது மனைவி சுந்தரம்பாள் அவர்களும் ஓர் எழுத்தாளர் ஆவார். இவர்களுக்கு இரண்டு ஆண் இரண்டு பெண் என நான்கு குழந்தைகள்.
பங்களிப்பு
இலக்கியம்
1970களின் மத்தியில் 'இந்தியம் மூவி நியூஸ்' சஞ்சிகையில் மரபுக் கவிதைகள் எழுதத் தொடங்கினார் எம்.ஏ. இளஞ்செல்வன். பின்னர் புதுக்கவிதைகளில் ஆர்வம் காட்டினார். மலேசியாவில் முதல் புதுக்கவிதை நூலான 'நெருப்புப் பூக்கள்' தொகுப்பை 1979-இல் வெளியிட்டார். 'நவீன இலக்கியச் சிந்தனை' எனும் அமைப்பை சீ. முத்துசாமி, நீலவண்ணன் ஆகியோருடன் இணைந்து உருவாக்கி மலேசியாவில் முதல் புதுக்கவிதை கருத்தரங்கை 1979-இல் நடத்தினார். அந்தக் கருத்தரங்கில் இருபத்து இரண்டு கவிஞர்களின் புதுக்கவிதைகளை நூலாகத் தொகுத்து 'புள்ளிகளைப் புறக்கணிக்கும் புதுக்கோலங்கள்' எனும் தலைப்பில் 'நவீன இலக்கியச் சிந்தனை' மூலம் வெளியிட்டார். பின்னர் 1989இல் தேசிய அளவிலான மற்றுமொரு புதுக்கவிதை கருத்தரங்கை நடத்தினார்.
மலேசியாவில் புதுக்கவிதை வளரத் தொடங்கிய அந்தக் காலத்தில் மரபுக் கவிஞர்களிடமிருந்து வந்த விமர்சனங்களுக்குக் கடுமையான எதிர்வினையாற்றியதன் வழி அன்றைய இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் இளஞ்செல்வன். அவ்வகையில் இளைஞர்கள் தொடர்ந்து புதுக்கவிதையில் ஆர்வம் காட்ட ஒரு கவர்ச்சியான முன்னோடியாக இருந்தார். ‘இந்தியன் மூவி நியூஸ் எனும் சினிமா இதழில் வெளிவந்த எம்.ஏ. இளஞ்செல்வனின் படைப்புகளுடன் பிரசுரமாகும் அவரது படங்கள் நட்சத்திர முகத்துக்கு ஈடானது’ என அவருக்கு அடுத்தத் தலைமுறை எழுத்தாளர் கோ. புண்ணியவானின் பதிவு கவனிக்கத்தக்கது.
புதுக்கவிதை மட்டுமல்லாமல் சிறுகதை, நாவல் போன்ற துறைகளிலும் அவரது பங்களிப்பு இருந்தது. தெருப்புழுதி (1977), முச்சந்தி மலர்கள் (1978), என இரு சிறுகதை தொகுப்புகளையும், பசித்திருக்கும் இளங்கொசுக்கள் (1978), மோகங்கள் (1980), ஆகிய குறுநாவல்களையும் அவர் எழுபதாம் எண்பதாம் ஆண்டுகளில் வெளியிட்டுள்ளார். 1999இல் தனது அனைத்து சிறுகதைகளையும் தொகுத்து ஒரு நூலாகவும் (எம்.ஏ. இளஞ்செல்வன் சிறுகதைகள்) வானம் காணாத விமானங்கள், மோகங்கள், பசித்திருக்கும் இளங்கொசுக்கள், கனகாம்பரமும் கிளிஞ்சல் மலர்களும் ஆகிய நான்கு குறுநாவல்களைத் தொகுத்து மற்றுமொரு நூலாகவும் (வானம் காணாத விமானங்கள்) வெளியீடு செய்தார்.
'கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம்' எனும் அமைப்பை 1969இல் தன் சக எழுத்தாளர்களின் உதவியுடன் உருவாக்கி இலக்கியப் பட்டறைகள், இலக்கியச் சந்திப்புகளைத் தொடர்ச்சியாக நிகழ்த்தினார் இளஞ்செல்வன். தமிழக எழுத்தாளர்களான சாவி, இந்திரா பார்த்தசாரதி, சிவசங்கரி, ஜெயகாந்தன், மு. மேத்தா, வாசந்தி, எஸ். பொன்னுதுரை (இலங்கை), அறிவுமதி, சிற்பி, தமிழன்பன் என பலரையும் கெடா மாநில எழுத்தாளர்களுக்கு நிகழ்ச்சிகளின் வழி அறிமுகம் செய்து வைத்து உரையாடல்களை உருவாக்கினார். இளம் எழுத்தாளர்கள் உருவாகவும் துணையிருந்தார்.
படைப்புகள்
சிறுகதைகள்
- தெருப் புழுதி (1977)
- முச்சந்தி மலர்கள் (1978)
- இளஞ்செல்வன் சிறுகதைகள் (1999)
நாவல்
- பசித்திருக்கும் இளங்கொசுக்கள் (1978)
- மோகங்கள் (1980)
- வானம் காணாத விமானங்கள் (1999)
புதுக்கவிதை
- நெருப்புப் பூக்கள் (1979)
- புள்ளிகளைப் புறக்கணிக்கும் புதுக் கோலங்கள் (தொகுப்பாசிரியர்) 1979
- இமைக்காத சூரியன்கள் (தொகுப்பாசிரியர்) 1985
இலக்கிய முக்கியத்துவம்
எம்.ஏ. இளஞ்செல்வன், ஜெயகாந்தனை முன்னுதாரணமாகக் கொண்டவர். ஜெயகாந்தனின் ஆளுமையை முழுமையாக அறிய முடியாத காரணத்தால் பாலியல் மீறல்களை எழுதுவதை நவீன எழுத்தென நம்பினார். எனவே அவர் தன் நாவல்களின் வழி வாசகர்களுக்குப் பண்பாட்டு அதிர்ச்சியை வழங்கியதைத் தவிர வாழ்வின் தனித்த உண்மைகளைச் சென்று அடையும் சாத்தியங்களை உருவாக்க முடியவில்லை. இவரது புதுக்கவிதைகளும் வானம்பாடி ரக அரங்க கவிதைகளாகவே எழுதப்பட்டுள்ளன. எம்.ஏ. இளஞ்செல்வனின் சாதனைகள் சிறுகதையில்தான் நிகழ்ந்துள்ளன. 'பாக்கி', 'தெருப்புழுதி' போன்ற சிறுகதைகள் மலேசிய இலக்கியத்தில் குறிப்பிடத் தக்கவை. மலேசியாவில் புதுக்கவிதையை ஓர் இயக்கமாக முன்னெடுத்த ஆளுமை.
மறைவு
28.8.2000 இல் எம். ஏ. இளஞ்செல்வன் மரணமடைந்தார்.
உசாத்துணை
- மனசே மனசே - சுந்தரம்பாள் இளஞ்செல்வன்