உழுந்தினைம் புலவர்

From Tamil Wiki
Revision as of 17:25, 7 December 2022 by Siva Angammal (talk | contribs)

உழுந்தினைம் புலவர், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க  இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

உழுந்தினைம் புலவர் என்ற பெயரை உழுந்தின் ஐம்புலவர் என்று பிரித்துக் காணும்போது இப்பெயரின் விளக்கம் புலப்படுகிறது.  அரைத்து வைத்தால் மிகுதியாகப் பொங்கும் பயிர் உழுந்தைப்போல் தானே உள்ளுணர்வு பொங்கிப் புலவரானவர் இவர் என்று கருதலாம்.

இலக்கிய வாழ்க்கை

உழுந்தினைம் புலவர், இயற்றிய  ஒரு பாடல் சங்க  இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 333- வது பாடலாக இடம் பெற்றுள்ளது. தினைப் புனத்தை அழிக்கவரும் வலிமை மிக்க யானையை விரட்ட வில் அம்புடன் ஆடவர் இருப்பார்கள் என்பதையும் எளிய கிளிகளை ஓட்ட மென்மகளிர் தழையுடன் இருப்பார்கள் என்பதையும் இப்பாடல் நயம்பட உரைக்கிறது.

பாடலால் அறியவரும் செய்திகள்

குறுந்தொகை 333
  • குறிஞ்சித் திணை
  • அறத்தோடு நிற்பல் எனக் தலைவிக்குத் தோழி உரைத்தது.
  • கானவன் வில்லும் அம்பும் கொண்டு தன் விளைந்த புனத்தைக் காவல் புரிந்தான். அதனால் யானை புனத்திற்கு செல்லாமல் மலையை நாடியது. புனத்தில் காவல் புரிந்த மகளிர் ஓட்டிய கிளி அந்த யானைமேல் அமர்ந்துகொண்டு வந்தது.
  • குன்ற நாடன் பணி செய்த களைப்பு தீர நம் மறை ஒழுக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டால் என்ன?

பாடல் நடை

குறுந்தொகை 333

குறும்படைப் பகழிக் கொடுவிற் கானவன்

புனமுண்டு கடிந்த பைங்கண் யானை

நறுந்தழை மகளிர் ஓப்புங் கிள்ளையொடு

குறும்பொறைக் கணவுங் குன்ற நாடன்

பணிக்குறை வருத்தம் வீடத்

துணியின் எவனோ தோழிநம் மறையே.

உசாத்துணை

சங்கத் தமிழ் புலவர் வரிசை, அதியன் விண்ணத்தனார் முதலிய புலவர்கள் , புலவர் கா. கோவிந்தன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

குறுந்தொகை 333  ,  தமிழ்த் துளி இணையதளம்

குறுந்தொகை 333  , தமிழ் சுரங்கம் இணையதளம்