under review

ஈ.வெ. ராமசாமி

From Tamil Wiki
ஈ.வெ. ராமசாமி
ஈ.வெ. ராமசாமி

ஈ.வெ. ராமசாமி (ஈரோடு வெங்கடப்பா ராமசாமி) (ஈ.வெ.ரா) (பெரியார்) (செப்டம்பர் 17, 1879 – டிசம்பர் 24, 1973) சமூக, அரசியல் சிந்தனையாளர், அரசியல்வாதி, இதழியலாளர், கட்டுரையாளர், பேச்சாளர். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். திராவிட அரசியலை முன்னெடுத்தவர்களில் ஒருவர். சாதி ஒழிப்பு, பெண்விடுதலை, சமூக சீர்திருத்தம் ஆகியவற்றுக்காகப் போராடினார். சுயமரியாதை, பகுத்தறிவு போன்ற சிந்தனைகளை இயக்கமாக முன்னெடுத்தார். நேரடி தேர்தல் அரசியலில் ஈடுபடாமல் திராவிடர் கழகத்தின் தலைவராக இறுதிவரை செயல்பட்டார்.

பிறப்பு, கல்வி

ஈ.வெ. ராமசாமியின் இயற்பெயர் ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். ஈ.வெ. ராமசாமி செப்டம்பர் 17, 1879-ல் ஈரோடு மாவட்டத்தில் வெங்கட்ட நாயக்கர், சின்னதாயம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் கிருஷ்ணசாமி, கண்ணம்மா, பொன்னுதாயி. ஐந்தாம் வகுப்பு வரை கல்வி கற்றார். பன்னிரெண்டு வயது முதல் வணிகத்தில் ஈடுபட்டார்.

ஈ.வெ. ராமசாமி, மணியம்மை

தனிவாழ்க்கை

ஈ.வெ. ராமசாமி 1898-ல் நாகம்மையை மணந்துகொண்டார். திருமணமான இரண்டு ஆண்டுகளில் பிறந்த ஒரு பெண்குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்தது. ஈ.வெ. ராமசாமியுடன் நாகம்மையும் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். 1933-ல் நாகம்மை காலமானார். ஜூலை 9, 1948-ல் ஈ.வெ. ராமசாமி மணியம்மையை மணந்தார்.

ஆன்மிகம்

ஈ.வெ. ராமசாமி 1902-ம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமய, சாதியினருடனும் சேர்ந்து விருந்துண்டார். அவரது தந்தை இதற்கு எதிராக இருந்தார். இதனால் ஈ.வெ. ராமசாமி வீட்டைத் துறந்து காசிக்குச் சென்றார். காசியில் ஏற்பட்ட சில அனுபவங்களால் இறைஇன்மைக் (இறைமறுப்பு) கொள்கைக்கு மாறினார். அதன்பின் தன் வாழ்நாள் முழுவதும் நாத்திகராக இருந்தார்.

இதழியல்

ஈ.வெ. ராமசாமி தன்னுடைய அரசியல், சமூக நிலைப்பாடுகள் சார்ந்த கொள்கைகளைப் பரப்புவதற்காக பல்வேறு இதழ்கள், நாளிதழ்களைத் தொடங்கினார். ஜனவரியில் வெளிவந்த குடியரசு இதழில் அறிஞர்கள் பலரும் முன்மொழிந்த தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தினார். பின்னர் இது ‘பகுத்தறிவு’ (நாள், வார, மாத ஏடுகள்), ‘புரட்சி’, ‘குடிஅரசு’, ‘விடுதலை’ ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப் பட்டு வந்தபோதிலும், அண்ணாவின் ‘திராவிட நாடு’மற்றும் திமுகவினர் நடத்திவந்த பல ஏடுகள் ஆகியவற்றில் பழைய எழுத்துமுறையே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஈ.வெ.ரா -வின் நூற்றாண்டு விழாவினையொட்டி விடுக்கப்பட்ட அரசாங்க ஆணை அவரின் எழுத்துச் சீர்திருத்தத்தை அதிகாரபூர்வமாக்கியது.

  • 1925 - தன் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள் பற்றி எழுத 'குடியரசு' நாளிதழைத் தொடங்கினார்.
  • நவம்பர் 1928 - ரிவோல்ட் (Revolt) (ஆங்கில வார இதழ்) - முதல் இதழை கோவை இரத்தினசபாபதியார் தலைமையில் பட்டிவீரன்பட்டி ஊ.பு.அ. சௌந்திரபாண்டியன் வெளியிட்டார். இதழுக்கு ஈ.வெ.இராவும் எசு. இராமநாதனும் ஆசிரியராக இருந்தனர். நாகம்மையார் வெளியீட்டாளராக இருந்தார்.
  • 'புரட்சி'(வார இதழ்- நவம்பர் 1933-ஜூன் 1934 ) என்ற பெயரில் பத்திரிக்கை தொடங்கினார்.
  • ஏப்ரல் 1934 - மே 1934 - ப) என்ற பெயரில் பத்திரிக்கை தொடங்கினார்.
  • ஏப்ரல் 1934 - மே 1934 - பகுத்தறிவு (நாளிதழ்)
  • ஆகஸ்ட் 1934 - ஜனவரி 1935 - பகுத்தறிவு (வார இதழ்) - இருபது இதழ்கள் வெளிவந்தது.
  • மே 1935 - ஜனவரி 1939 - பகுத்தறிவு (மாத இதழ்)
  • ஜூன் 1, 1935-ல் வாரம் இருமுறை ஏடாக காலணா விலையில் 'விடுதலை' வெளிவந்தது. ஜூன் 1, 1937 முதல் நாளேடாக அரையணா விலையில் ஈ.வெ.ரா பொறுப்பில் ஈரோட்டில் இருந்தும் வெளிவந்தது. 1939-ல் அண்ணாத்துரை விடுதலை இதழின் ஆசிரியர் ஆனார்.
  • ஈ.வெ.ரா -வின் 'இந்தியன் பேட்ரியாட்' என்ற ஆங்கில இதழையும் 'தேச பக்தன்' என்ற தமிழ் இதழையும் சில காலம் சென்னை மாகாண சங்கம் வெளியிட்டது.
  • 'உண்மை' மாத இதழை சிலகாலம் ஈ.வெ.ரா நடத்தினார்.
  • செப்டம்பர் 1, 1971 - 'The Modern Rationalist' என்ற ஆங்கில மாத இதழைத் தொடங்கினார்

அரசியல் வாழ்க்கை

காங்கிரஸ் கட்சி

ஈ.வெ. ராமசாமி 1919-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காந்தியத்தில் ஈடுபாடு கொண்டார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களை நடத்தினார். 1921-ல் கள்ளுக்கடைகளை மூட வலியிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர் தன்னுடைய தோட்டத்திலிருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட தென்னைமரங்களை வெட்டினார். இப்போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைதண்டனை பெற்றார். 1921-1922-ல் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மதுகுடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியலில் ஈடுபாட்டார். 1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். இது இனவேற்றுமையை பிரதிபலிப்பதாக அமைவதால் அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் ஏற்க மறுத்தனர். 1924-ல் டி.கே. மாதவன் முதலியோர் ஆரம்பித்த வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கலந்து கொண்டார். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மனைவி நாகம்மையும் இப்போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிரமணரல்லாதவர் நலனை முன்னிட்டு 1925-ல் காங்கிரஸை விட்டு விலகினார்.

சென்னை மாகாண சங்கம்

சென்னை மாகாணத்தில் பிராமணரல்லாத சாதியினரின் ஆதரவைப் பெற நீதிக்கட்சியுடன் போட்டியிட செப்டம்பர் 20, 1917-ல் காங்கிரசின் ஒரு பிரிவாக 'சென்னை மாகாண சங்கம்' (Madras Presidency Association) தோற்றுவிக்கப்பட்டது. ஈ.வெ. ராமசாமி, கல்யாணசுந்தரம் முதலியார், பெ. வரதராஜுலு நாயுடு, குத்தி கேசவபிள்ளை ஆகியோர் இச்சங்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்தனர். கேசவபிள்ளை இதன் தலைவராக இருந்தார். ஈ.வெ. ராமசாமி இதன் துணைத் தலைவர்களுள் ஒருவர். அதன் கோரிக்கைகளை காங்கிரசின் பிராமண தலைவர்கள் ஏற்க மறுத்ததால் கேசவபிள்ளை, ஈ.வெ.ரா இருவரும் நீதிக்கட்சியில் இணைந்தனர்.

சுயமரியாதை இயக்கம்

ஈ.வெ. ராமசாமி 1925-ல் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். மூடப்பழக்க வழக்கங்களை சமுகத்தில் மக்களிடம் இருந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்பட்டது. தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைபிடிக்கும் பார்ப்பனியம், பெண்களை தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து இக்காலகட்டங்களில் பேசினார். கைம்பெண் மறுமணம், கலப்பு திருமணம் போன்றவற்றை இவ்வியக்கம் ஆதரித்தது. தேவதாசி முறை, குழந்தைத் திருமணத்திற்கு எதிராக இருந்தது. அரசு நிர்வாகப் பணி மற்றும் கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்க இவ்வியக்கம் அரசை வலியுறுத்தியது. ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களிலும் மாநாடுகளும், கூட்டங்களும் நடத்தப்பட்டன. 1929 முதல் 1932 வரை மலேசியா, ரஷ்யா, ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், சிங்கப்பூர், இலங்கை போன்ற பல வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்போது இக்கொள்கைகள் பற்றிய உரைகள் நிகழ்த்தினார்.

நீதிக்கட்சி

ஈ.வெ. ராமசாமி 1938-ல் நீதிக்கட்சியில் இணைந்தார். 1938-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. நீதிக்கட்சியின் சார்பாக சர். ஏ.டி. பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஈ.வெ.ரா-வுடன் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 1939-ல் இந்தி எதிப்பில் நடராசன் - தாலமுத்து கொல்லப்பட்டனர். 1939-ல் விடுதலை செய்யப்பட்டு வெளிவந்த ஈ.வெ.ரா நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். 1940-ல் திராவிட நாடு பிரிவினை மாநாடு நடந்தது.

ஈ.வெ. ராமசாமி, அண்ணாத்துரை
திராவிடர் கழகம்

ஈ.வெ. ராமசாமி 1944-ல் நீதிக்கட்சியை ‘திராவிடர் கழகம்’ என பெயர் மாற்றினார். தீண்டாமை ஒழிப்பு, சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, இறைமறுப்பு, பெண் உரிமை, பெண்கல்வி போன்றவை இதன் கொள்கையாக இருந்தன. ‘கருப்பு சதுரத்தின் நடுவே சிவப்பு வட்டம்’ என்பது திராவிட கழகத்தின் கொடியாக இருந்தது. ஈ.வெ. ராமசாமி திராவிட கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற விரும்பவில்லை. ‘திராவிடநாடு’ அல்லது ‘தனி தமிழ்நாடு’ என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதனால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அண்ணாத்துரை 1949-ல் 'திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். 1956-ல் ராமர் உருவப்படம் எரிப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டார். 1957 தேர்தலில் காங்கிரஸுக்கு தன் ஆதரவைத் தெரிவித்தார். ஈ.வெ. ராமசாமி இறக்கும்வரை திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்தார். நேரடி அரசியலில் ஈடுபடவில்லை. 1962 முதல் வட இந்திய சுற்றுப்பயணம் செய்து சாதிய ஒழிப்பு குறித்த பிரச்சாரங்கள் செய்தார்.

எழுத்து

ஈ.வெ. ராமசாமி தான் ஆசிரியராக இருந்து நிர்வகித்த இதழ்கள் வழியாகத் தன் அரசியல், சமூகம் சார்ந்த சிந்தனைகளை கட்டுரைகளாக எழுதினார். அவை பின்னர் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்துள்ளன. 'திராவிடர் விடுதலைக்கழகம்' என்ற வலைதளம் ஈ.வெ.ரா -வின் புத்தகங்களைத் தொகுத்து முழுமையான பட்டியலை வெளியிட்டுள்ளது.

காலக்கோடு

  • 1879: செப்டம்பர் 17 ஈரோட்டில் பிறந்தார்
  • 1898: நாகம்மையை மணந்தார்
  • 1904: காசி பயணம் (நாத்திகராக ஆனதற்கான பயணம்)
  • 1919: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
  • 1922: மெட்ராஸ் ப்ரிசிடென்ஸி காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்
  • 1925: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்
  • 1924: வைக்கம் போராட்டத்தில் பங்கேற்றார்
  • 1925: சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது
  • 1929: ஐரோப்பா, ரஷ்யா, மற்றும் மலேஷியா போன்ற சர்வதேச நாடுகளுக்கு பயணம்
  • 1929: தன்னுடைய பேருக்கு பின்னால் இருந்த ‘நாயக்கர்’ என்ற பட்டத்தைத் துறந்தார்
  • 1933: நாகம்மை மரணம்
  • 1938: தமிழர்கள் வாழும் நாடு தமிழர்கே முழக்கம்
  • 1939: நீதி கட்சி தலைவரானார்
  • 1944: நீதி கட்சியின் பெயர் ‘திராவிட கழகம்’ என மாற்றப்பட்டது
  • 1948: ஜூலை 9-ல் மணியம்மையை மறுமணம் செய்தார்
  • 1949: திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்
  • 1973: டிசம்பர் 24-ல் காலமானார்

விருது

ஈ.வெ. ராமசாமியின் சமுதாயப் பங்களிப்பைப் பாராட்டி ஜூன் 27, 1970-ல் யுனெஸ்கோ மன்றம் என்ற அமைப்பு "புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்கிரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மூடப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" என்ற பாராட்டுச் சான்றிதழ் வழங்கியது.

நினைவு

  • தமிழக அரசு ஈ.வெ. ராமசாமியின் பிறந்தநாளான செப்டம்பட் 17-ஐ சமூக நீதி நாளாகஅறிவித்தது.
  • தமிழ்நாடு அரசு ஈ.வெ.ராமசாமி வாழ்ந்த ஈரோடு இல்லத்தை "பெரியார் - அண்ணா நினைவு இல்லம்" ஆக்கியுள்ளது. இங்கு ஈ.வெ.ராமசாமியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
  • தந்தை பெரியார் நினைவகம் - வேப்பேரி

விவாதம்

ஈ.வெ. ராமசாமி சிலப்பதிகாரத்தை "பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் நூல்" என்றும், "விபசாரத்தில் ஆரம்பித்து பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில், மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிசம்" என்றும் விமர்சித்தார். பழந்தமிழ் இலக்கியங்கள் சார்ந்து எதிர்மறையான மதிப்பீடுகளைக் கொண்டிருந்தார்.

மறைவு

ஈ.வெ. ராமசாமி டிசம்பர் 24, 1973-ல் காலமானார்.

திரைப்படம்

ஈ.வெ.ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை 2007-ல் ஞான ராஜசேகரன் 'பெரியார்' என்ற திரைப்படமாக இயக்கினார்.

நூல்கள்

எழுதிய நூல்கள்
  • பெண் ஏன் அடிமையானாள்? (எதிர் வெளியீடு)
  • பெரியார் இன்றும் என்றும் (பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்) (விடியல் பதிப்பகம்)
  • குறளும் வாழ்வும் (வ.உ.சி நூலகம்)
  • வால்மீகி இராமாயண சம்பாஷணை
  • அழியட்டும் ஆண்மை
  • அழிவு வேலைக்காரன்
  • ஆத்மா, மோட்சம் – நரகம்
  • இந்துமதப் பண்டிகைகள்
  • இயற்கையும், மாறுதலும்
  • இராமாயண பாத்திரங்கள்
  • இனிவரும் உலகம்
  • உயர் எண்ணங்கள்
  • கடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம்
  • கடவுளர் கதைகள்
  • கடவுளும் கடவுள் தன்மையும்
  • கிராம வாழ்க்கைப் புரட்டு
  • சிந்தனையும் பகுத்தறிவும்
  • சுதந்திர தமிழ்நாடு
  • தமிழ்நாட்டு எல்லைப்போராட்டம்: பெரியாரும் ம.பொ.சி.யும்
  • தமிழர்கள் இந்துக்களா?
  • திராவிட விவசாய – தொழிலாளர் கழக அமைப்பு நோக்கங்கள்
  • திராவிடர் – ஆரியர் உண்மை
  • திராவிடர் திருமணம்
  • தேவதாசி ஒழிப்புச் சட்டம்
  • பறையன் பட்டம் போகாமல் சூத்திரன் பட்டம் போகாது
  • பிள்ளையாரை உடைப்போம்!
  • புத்தர் விழா
  • புரட்டு இமாலயப் புரட்டு
  • புராணங்களை எரிக்க வேண்டும்
  • பெண் விடுதலை சட்டங்களும் பார்ப்பனர்களும்
  • பொதுத் தொண்டு
  • மனிதனும் மதமும்
  • மனு சாஸ்திர எரிப்பு ஏன் – துண்டறிக்கை
  • மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் ஏன்?
  • மனுநீதி: ஜாதிக்கொரு நீதி
  • ரஷ்யாவின் வெற்றி
  • ஜனநாயகத்தின் முட்டாள்தனம்
கட்டுரைகள்
இவரைப் பற்றிய நூல்கள்
  • பெரியார் களஞ்சியம் - குடியரசு - (இரு தொகுதிகள்) (கி. வீரமணி)
  • பெரியார் சுயமரியாதை சமதர்மம் - எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா (வாழ்க்கை வரலாறு)
  • பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் – வே ஆனைமுத்து
  • தந்தை பெரியார் எழுத்தும் பேச்சும் – குடிஅரசு நூல் தொகுப்பு
மொழிபெயர்க்கப்பட்டவை
  • Dear Youths
  • Golden Sayings of Periyar
  • Hindu Festivals
  • Manu – A Code of Injustice to Non-Brahmins
  • Periyar E V Ramasamy – A Biographical Sketch
  • Periyar on Family Planning
  • Philosophy
  • Quintessence of Hindu Philosophy
  • Reform of Education
  • Rural Development – Village Reform
  • Russia Visit 1932
  • Self-Respect Marriages
  • The Ramayana – A True Reading
  • The World to come
  • Untouchability – History of Vaikom Agitation
  • Why Brahmins Hate Reservation?
  • Why Communal G.O.?

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page