under review

இரா. திருமுருகனார்

From Tamil Wiki
Revision as of 15:35, 29 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved categories to bottom of article)
இரா திருமுருகனார்
இலக்கணச்சுடர்-இரா.திருமுருகன்-
இரா.திருமுருகன்

இரா.திருமுருகனார் (16 மார்ச் 1929-3 ஜூன் 2009 ) தமிழ் இலக்கண அறிஞர். இசையறிஞர். கல்வியாளர். புதுச்சேரி அரசின் ஆட்சித்தமிழ் அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார். ஏராளமான தமிழ் கல்விநூல்களை எழுதினார். சிந்துப் பாடல்களுக்கு இலக்கணம் வகுத்தார்.

பிறப்பு, கல்வி

இரா.திருமுருகனார் புதுச்சேரியில் உள்ள கூனிச்சம்பட்டு என்னும் ஊரில் இரா.திருமுருகனார் இராசு -அரங்கநாயகி இணையருக்கு 16 மார்ச் 1929 ல் பிறந்தார். இயற்பெயர் சுப்ரமணியன். இவர் தந்தை இராசு தச்சுத்தொழில் செய்துவந்தார். கூனிச்சம்பட்டு ஊரிலேயே மூன்றாம் வகுப்பு வரை பயின்றர். அதன்பின் புதுச்சேரியில் இன்றைய வ.உ.சி.அரசுப்பள்ளியில் சேர்ந்தார். புதுச்சேரி கலவைக் கல்லூரியில் சேர்ந்து தமிழ் பிரவே பயின்றார். தமிழ் பிரவே படிக்கும்போது இலக்கணச்செம்மல் என அழைக்கப்பட்ட குமாரசாமிச் செட்டியார் இவருக்கு ஆசிரியராக அமைந்தார்.

1947 ஆம் ஆண்டு நடந்த தமிழ் பிரவே இறுதியாண்டு தேர்வில் வென்ற ஒரே மாணவர் திருமுருகனார். 1951 ஆம் ஆண்டில் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் நடத்திய தேர்வில் மாநிலத்திலேயே இரண்டாமிடம் பெற்றார். புதுச்சேரி அல்லையன்ஸ் பிரான்ஸே அமைப்பின் பிரெஞ்சு மாலைநேர வகுப்பில் சேர்ந்து பிரெஞ்சு மொழியில் பட்டயத் தகுதி பெற்றார். கல்கத்தா பிரெஞ்சு நிறுவனத்தின் இயக்குநர் ழான் ரசீன் என்பவரிடம் திருமுருகன் பிரெஞ்சு கற்க அவர் திருமுருகனிடம் தமிழ் கற்றார்.

சென்னை பல்கலை கழகத்தில் அஞ்சல் வழி தமிழிலக்கியம் பயின்று முதுகலைப்பட்டம் பெற்றார். இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்வியியலில் எம்.எட். பட்டத்தை 1979 ல் பெற்றார். 1983 ஆம் ஆண்டு புதுச்சேரி திராவிட மொழிகளின் பள்ளியில் மொழியியல் சான்றிதழ் பெற்றார். சிந்துப்பாடல்களில் யாப்பிலக்கணம் என்னும் பொருளில் சென்னை கல்கலைகழகத்தில் ஆய்வுசெய்து 1990ல் முனைவர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

1948ல் , பிரவே முடித்ததுமே, புதுச்சேரி அரசில் தொடக்கப்பள்ளி தமிழாசிரியராகப் பணியேற்றார் . தமிழில் புலவர் பட்டம் பெற்றபின் உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியராகக் காரைக்காலில் பணிபுரிந்தார். தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆணையத்தின் பாடப்பொருள் வல்லுநராக பணியாற்றினார். புதுவை திட்டப்பள்ளிகளுக்கு தமிழ்ப்பாடநூல் வல்லுநராகவும் தென்மண்டல பண்பாட்டுமைய ஆட்சிக்குழு உறுப்பினராகவும் மறைந்துவரும் கலைகளின் பாதுகாப்புத்திட்டத்தின் தொடர்பாளராகவும் பணியாற்றினார். 1989 வரை பணியாற்றிய திருமுருகனார் பதவி ஓய்வுக்கு முன்பு துணைமுதல்வராக பணியாற்றி வந்தார்.

1953ல் யமுனாவை மணம் செய்துகொண்டிருந்தார். அறவாழி என ஒரே மகன்.

அரசியல்

இரா.திருமுருகன் திராவிடர் கழகத்தின் பகுத்தறிவுக்கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். தமிழியக்க அரசியலிலும் ஆர்வமுடையவர்.

இசை

திருமுருகனார் திருக்கண்ணபுரம் சீனிவாசபிள்ளையிடம் புல்லாங்குழல் கற்று 1956ல் தமிழ்நாட்டு அரசு நடத்திய குழலிசை தேர்வில் மேநிலைப் பட்டம் பெற்றார்.

ஓவியம்

காரைக்காலில் பணியாற்றும்போது ஓவியர் மணியம் அவர்களிடமிருந்து ஓவியக்கலை பயின்றார்

மருத்துவம்

திருமுருகன் ஹோமியோபதி மருத்துவம் கற்று பட்டம் பெற்றார். இலவசமாக மருத்துவம் செய்துவந்தார்.

அமைப்புப் பணிகள்

  • தமிழ்வளர்ச்சிச் சிறகம். 1991ல் தமிழ் வளர்ச்சிச் சிறகம் ஒன்றை புதுச்சேரி அரசு உருவாக்கியது (Language Developement Cell) அதில் சிறப்புத் தனி அலுவலராக திருமுருகனார் பணியாற்றினார். ஆட்சிமொழியை தமிழாக்குவதற்காக இந்த அமைப்பு பங்காற்றியது. திருமுருகனுடன் சு.வேல்முருகன், க.தமிழ்மல்லன், அரிமாப்பாமகன் ஆகியோரும் பணியாற்றினர்
  • நூல்களை மக்களிடையே கொண்டு செல்ல பாவலர் பண்ணை என்னும் அமைப்பை உருவாக்கி நடத்தினார்.
  • புதுவைத் தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளையை நடத்தினார்
  • முனைவர் இரா. திருமுருகன் அறக்கட்டளையை உருவாக்கி நடத்தினார்

இதழியல்

முனைவர் இரா. திருமுருகன் 'தெளிதமிழ்' மாத இதழை நடத்தினார்

இலக்கியப்பணிகள்

1950ல் சுதேசமித்திரன் இதழில் திருமுருகனின் வண்டிச்சக்கரம் என்னும் கவிதை வெளிவந்தது. குயில், சுதந்திரம், ஸ்ரீசுப்ரமணிய பாரதி கவிதாமண்டலம் ஆகிய இதழ்களில் எழுதினார். பல்வேறு அரங்குகளில் கவிதை வாசித்துள்ளார் திருமுருகன் எழுதிய முதல் நூல் 1957 ல் வெளிவந்த நூறு சொல்வதெழுதுதல்கள் புதுச்சேரி அரசின் தமிழ் பிரவே தேர்வுக்கான பாடநூல். தொடர்ந்து ஏராளமான தமிழ்ப்பயிற்சி கையேடுகளை எழுதியிருக்கிறார்

பொறுப்புகள்

  • தமிழிலக்கணக் குழு தலைவர் (தமிழகர அரசு)
  • என்னை பல்கலைக் கழக் இசைத்துறை பாடத்திட்ட உறுப்பினர்
  • புதுச்சேர் அரசின் ஆட்சிமொழிச்சட்ட நடைமுறை ஆய்வுக்குழு உறுப்பினர்
  • ஆட்சிமொழி செவ்வியல் மொழி செயலாக்கக் குழு உறுப்பினர்

விருதுகள்

  • 1979 புதுவை சுப்ரதீபக் கவிராயர் மன்றம் இலக்கணச்சுடர் பட்டம்
  • 1981 உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் இயலிசைச் செம்மல் விருது
  • 1985 புதுச்சேரி கலையிலக்கியப் பெருமன்றம் தமிழ்க்காவலர் விருது
  • 1987 இந்திய அரசின் நல்லாசிரியர் விருது
  • 2008 புதுவை இலக்கியப்பொழில் இலக்கிய மன்றம் தீந்தமிழ் காவலர் பட்டம்
  • 2001 கலைமாமணி விருது

போராட்டம்

1997 ஆம் ஆண்டு ஆணைப்படி புதுவை அரசு அதிகாரிகள் தமிழில் கையெழுத்திடவேண்டும் எனினும் அந்த ஆணை நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றம்சாட்டி திருமுருகன், ம.இலெ. தங்கப்பா இருவரும் தங்கள் கலைமாமணி விருதை திரும்ப அளித்தனர்.

மறைவு

3 ஜூன் 2009 ல் மறைந்தார்.

நினைவுகூரல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள்

  • முத்தமிழ்ச்சுடர் முனைவர் இரா திருமுருகன் - புலவர் பூங்கொடி பராங்குசம் 2012
  • இசைத்தமிழறிஞர் இரா திருமுருகனாரின் தமிழ் இயக்கம் கோவை ஞானி 2009
  • இரா திருமுருகனார் நினைவேந்தல் வெண்பா மாலை 2009
  • இரா திருமுருகனார் பாராட்டுவிழா மலர் 2008
  • இலக்கணச் சுடர் இரா திருமுருகனார் புதுவை யுகபாரதி சாகித்ய அக்காதமி வெளியீடு

இலக்கிய இடம்

ஆட்சித்தமிழுக்காகவும் நவீனத்தமிழ்க் கல்விக்காகவும் பங்களிப்பாற்றியவர். நவீனத் தமிழிலக்கணம் உருவாக பணியாற்றியவர். பாடநூல்கள், சிந்துப்பாடல்களுக்கான இலக்கணம் ஆகியவற்றுக்காக நினைவுகூரப்படுகிறார்

நூல்கள்

  • நூறு சொல்வதெழுதுதல்கள் 1957
  • இனிக்கும் இலக்கணம் 1981
  • தமிழ்ப்பாடநூல் (1982, 1984, 1985, 1986, 1987)
  • ஆசிரியர் கையேடு (1982, 1984, 1985, 1986, 1987)
  • கம்பன் பாடிய வண்ணங்கள் 1987
  • தமிழ் 1 தமிழக அரசு பாடநூல் 1988
  • ஆசிரியர் கையேடு தமிழ்நாடு அரசு 1988
  • இலக்கண எண்ணங்கள் 1990
  • பாவேந்தர் வழியா பாரதி வழியா 1990
  • என் தமிழ் இயக்கம் -1, 1990
  • ஓட்டை புல்லாங்குழல் 1990
  • கம்பனுக்குப் பாட்டோலை 1990
  • பாவேந்தரின் இசைத்தமிழ் 1990
  • பன்னீர் மழை 1991
  • சிந்து இலக்கியம் 1991
  • புகார் முத்தம் 1991
  • என் தமிழ் இயக்கம்- 2,1992
  • தாய்க்கொலை 1992
  • சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம் 1993
  • என் தமிழ் இயக்கம் -3 1994
  • சிந்து பாவியல் 1994
  • கற்பு வழிபாடு 1994
  • புதுச்சேரி பாண்டிச்சேரியுடன் போராடுகிறது 1994
  • மொழிப்பார்வைகள் 1995
  • என் தமிழ் இயக்கம் 4, 1996
  • இசுலாம் வளர்த்த இசைத்தமிழ் 1996
  • பாவலர் பண்ணை 1997
  • என் தமிழ் இயக்கம் 5 , 1998
  • ஏழிசை எண்ணங்கள் 1998
  • மொழிப்புலங்கள் 1999
  • இன்றைய தமிழர்கள் மொழிப்பற்று உள்ளவர்களா 1999
  • வள்ளுவர் பெரிதும் வற்புறுத்துவது அருளையா பொருளையா? 1999
  • சிலப்பதிகாரம் தமிழன் படைத்த கலைக்கருவூலம் 2000
  • இனிய தமிழை பிழையின்றி எழுத எளிய வழிகள் 2001
  • கழிசடைகள் 2002
  • பாவாணர் கண்ட இன்றைய தமிழின் இலக்கணங்கள் 2003
  • என் தமிழ் இயக்கம் 6 ,2004
  • என் தமிழ் இயக்கம் 7 2006
  • குழந்தைகளுக்கான கொஞ்சுதமிழ் பெயர்கள் 2008
பதிப்பு
  • சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து

உசாத்துணை


[[]]




✅Finalised Page