being created

ஆ. மாதவன்

From Tamil Wiki


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

இந்தப்பக்கதை Shana உருவாக்கிக்கொண்டுள்ளார்

ஆ. மாதவன்

ஆ. மாதவன் (பெப்ரவரி 7, 1934 – ஜனவரி 5, 2021) கேரளா திருவனந்தபுரத்தில் பிறந்து வாழ்ந்த தமிழ் எழுத்தாளர்.   தமிழ் நவீன இலக்கியத்தில் யதார்த்தவாத எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர். சிறுகதை, நாவல், கட்டுரை என்று பல இலக்கியத்தளங்களில் இயங்கியவர். தான் வாழ்ந்த கடைத்தெருவின் அன்றாட நிகழ்வுகளை தன்னுடைய படைப்புகளில் கொண்டுவந்தமையால் கடைத்தெருவின் கதைசொல்லி என்று வாசகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டவர்.

பிறப்பு, கல்வி

ஆ. மாதவனின்  தந்தையின் பெயர் ஆவுடைநாயகம்.தந்தையின் ஊர் தென்காசி  மாவட்டம், செங்கோட்டை. தாயார் செல்லம்மாள் அவருடைய ஊர் நாகர்கோயில். இந்த இரு ஊர்களும் ஒன்றிணைந்த திருவிதாங்கூரில் இருந்த காலத்திலேயே அவர்கள் திருவனந்தபுரத்துக்கு குடியேறி விட்டனர். அவரது தந்தை திருவனந்தபுரம் சாலை அங்காடியில் சிறுவணிகராக இருந்தார்.

இவர் பெப்ரவரி ஏழு ஆம் திகதி 1934 ல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். பள்ளிக் கல்வியோடு படிப்பை நிறுத்திக் கொண்ட இவர், முழு நேர தொழிலாக வியாபாரத்தை செய்யத் தொடங்கினார். தன்னுடைய 75ஆவது வயது வரை திருவனந்தபுரம் சாலைக் கம்போளத்தில் செல்வி ஸ்டோர்ஸ் என்னும் பாத்திரக் கடையை நடத்தி வந்தார்.

தனிவாழ்க்கை

ஆ. மாதவனின் மனைவி பெயர் சாந்தா. இவர்களுக்கு 1966ல் மணமானது. கலைச்செல்வி, மலர்ச்செல்வி என்ற இரு மகள்கள் .கோவிந்தராஜன் என்ற மகன் . 2002ல் மனைவியும் 2004ல் மகனும் மறைந்துவிட்டனர் . மாதவன் மகளுடன் வசித்து வந்தார்.

இலக்கியபங்களிப்பு

பள்ளிக் கல்வி வரை மலையாளத்தில் கற்றவர், தன்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தினால் தமிழைக் கற்றுக் கொண்டார். அதற்கு இவருக்கு அன்று வெளிவந்த திராவிட இயக்கம் சார்ந்த சஞ்சிகைகள், நாளிதழ்கள் உதவி செய்தன. அதனால் அவருடைய ஆரம்ப கால படைப்புகள் பெரும்பாலும் அந்த சஞ்சிகைகளில் வெளிவந்தன. அவரது முதல் கதை 1955இல் 'சிறுகதை' இதழில் வெளியாகியது.

1974 இல் அவருடைய முதல் சிறுகதைத் தொகுதியான ‘மோக பல்லவி’ வெளியாகியது. அதனைத் தொடர்ந்து அவரது முதல் நாவலான ‘புனலும் மணலும்’ அதே ஆண்டு வெளியாகியது.  கரமனையாற்றில் மணல் அள்ளும் ஒரு குடும்பத்தின் கதை அது. புனலும் மணலும் நாவலை 1974-இல் முதலில் வெளியிட்டது லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நடத்திய வாசகர் வட்டம்.

இவற்றைத்தவிர,  'கடைத்தெருக்கதைகள்', 'காமினிமூலம்', 'மாதவன் கதைகள்', 'ஆனைச்சந்தம்', 'அரேபியக்குதிரை' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்திருக்கின்றன. அவருடைய ‘நாயனம்’, ‘பூனை’, ‘பதினாலுமுறி’, ‘புறா முட்டை’, ‘தண்ணீர்’, ‘அன்னக்கிளி’ஆகிய சிறுகதைகள் குறிப்பிடத்தக்கவை.

‘கிருஷ்ணப்பருந்து', 'தூவானம்' ஆகிய நாவல்களையும் எழுதி இருக்கிறார். இவற்றுள் கிருஷ்ணப்பருந்து  நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஆ. மாதவன் மொழிபெயர்ப்பாளராகவும் கூட தமிழுக்கு முக்கிய பங்காற்றி இருக்கின்றார். . 1974இல் அவர் காரூர் நீலகண்டபிள்ளை எழுதிய சம்மானம் எனும் குறுநாவலை தமிழாக்கம் செய்தார். 2002இல் சாகித்ய அக்காதமி வெளியீடாக மலையாள எழுத்தாளர் பி கெ பாலகிருஷ்ணனின் இனி ஞான் உறங்ஙட்டே என்ற நாவலை இனி நான் உறங்கட்டும் என்ற பேரில் மொழியாக்கம் செய்தார். மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் ‘யட்சி’ என்ற நாவலையும் தமிழுக்கு கொண்டு வந்திருக்கின்றார்.

தமிழக அரசின் இயல் துறைக்கான 2007ஆம் ஆண்டு கலைமாமணி விருது ஆ.மாதவனுக்கு வழங்கப்பட்டது. ‘இலக்கிய சுவடுகள்’ என்ற திறனாய்வு கட்டுரை நூலுக்காக 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதினையும், 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் விஷ்ணுபுரம் இலக்கிய விருதையும் பெற்றவர்.

இலக்கிய வாழ்க்கை

ஆரம்ப காலத்தில் தமிழை கற்றுக்கொள்ள உதவி செய்த திராவிட இயக்கம் சார்ந்த இதழ்களிலேயே அவருடைய படைப்புகள் வெளிவந்தன. அதனால் அவருடைய ஆரம்பகால படைப்புகளில் அந்த இயக்கம் சார்ந்த தாக்கங்கள் இருந்தபோதும் பின்நாட்களில் அரசியல் சார்பற்றவராகவே இருந்தார்.

தன்னுடைய ஆயுளின் பெரும்பகுதியை தான் கழித்த சாலைக்கம்போள த்தின் அன்றாட நிகழ்வுகளை தன்னுடைய படைப்புகளில் கொண்டு வந்த எழுத்தாளர் ஆ. மாதவன். ஒரு குறிப்பிட்ட கடைத்தொகுதியை சுற்றி மட்டுமே பெருமளவு கதைகளை எழுதியதால் அவர் கடைத் தெருவின் கதைசொல்லி என்றும் அழைக்கப்படுகின்றார்.

அந்த வகையில் எளிய அடித்தட்டு  வாழ்க்கையை தன்னுடைய படைப்புகளில் யதார்த்தமான முறையில் கொண்டு வந்த படைப்புகளின் முன்னோடியாக அவர் திகழ்கிறார். தமிழும் மலையாளமும் கலந்த அந்த வட்டார வழக்குக்கு ஒரு செழுமையையும் ஒரு மதிப்புக்குரிய இடத்தையும் இலக்கிய உலகில் அளித்தவராக அவர் கருதப்படுகிறார்.

எழுத்தாளராக மட்டும் இல்லாமல் ஆயுள் முழுவதும் ஒரு தேர்ந்த இலக்கிய வாசகராகவும் விளங்கினார். சமகால இலக்கியங்கள் மீது தொடர்ந்து ஆர்வம்  காட்டி வந்தார்.

விருதுகள், நூல்கள்

  • கடைத்தெருவின் கலைஞன் [ஜெயமோகன்]
  • தமிழக அரசின் இயல் துறைக்கான கலைமாமணி விருது (2007)
  • விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு வழங்கும் விஷ்ணுபுரம் விருது (2010)
  • கேந்திர சாகித்ய அக்காதமி விருது (2016)

படைப்புகள்

சிறுகதைத் தொகுப்பு

  • மோகபல்லவி 1974
  • கடைத்தெருக்கதைகள் 1974
  • காமினிமூலம் 1975
  • மாதவன் கதைகள் 1984
  • ஆனைச்சந்தம் 1990
  • அரேபியக்குதிரை 1995
  • ஆ.மாதவன் கதைகள், முழுத்தொகுப்பு 2002, தமிழினி பதிப்பகம்

புதினங்கள்

  • புனலும் மணலும் (1974)
  • கிருஷ்ணப்பருந்து (1982)
  • தூவானம் (1990)

கட்டுரைத்தொகுப்பு

  • இலக்கியச்சுவடுகள் 2013 (2016ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது)

மொழியாக்கம்

  • யட்சி [மூலம் மலையாற்றூர் ராமகிருஷ்ணன், யக்‌ஷி]
  • இனி நான் உறங்கட்டும் [மூலம் இனி ஞான் உறங்ஙட்டே, பி.கெ.பாலகிருஷ்ணன்]

மறைவு

ஆ மாதவன் ஜனவரி 5, 2021 அன்று தன்னுடைய 86 ஆவது வயதில் திருவனந்தபுரத்தில் காலமானார்.

உசாத்துணை

"ஆ.மாதவன்... மலையாள மொழியின் செழுமையைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர்!" - நாஞ்சில் நாடன் | Nanjil Nadan shares writer A. Madhavan memories (vikatan.com)

கடைத்தெருக் கதைகளைச் சொன்ன ஆ.மாதவன்! - கதை சொல்லிகளின் கதை | Life history of Tamil writer A.Madhavan (vikatan.com)

ஆ.மாதவன்: எளியவர்களின் கதைக்காரர்! | a madhavan - hindutamil.in

வாழ்நிலம்: ஆ. மாதவன் - கம்போளத்தின் கதைஞர் (vaalnilam.blogspot.com)

ஆ. மாதவன் - தமிழ் விக்கிப்பீடியா (wikipedia.org)

Aa. Madhavan – சிலிகான் ஷெல்ஃப் (wordpress.com)

மாதவம் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

மாதவம் 2 | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

செங்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட சாகித்ய அகாதெமி எழுத்தாளர் ஆ.மாதவன் மறைவு! - Dhinasari Tamil