under review

ஆல்பர்ட் பௌர்ன்

From Tamil Wiki
Revision as of 21:33, 25 June 2022 by Meenambigai (talk | contribs) (spell check done)
ஆல்பர்ட் பௌர்ன்
ஆல்பர்ட் பௌர்ன்

சர் ஆல்பர்ட் பௌர்ன் (ஆல்ஃப்ரட் போர்ன்) (Alfred Gibbs Bourne) (ஆகஸ்ட் 8, 1859 - 14 ஜூலை ,1940) பிரிட்டிஷ் இந்தியக் கல்வியாளர். தாவரவியல் அறிஞர். சென்னை அருங்காட்சியகத்தை அமைத்தவர்களில் ஒருவர். இந்திய இயற்கையியலின் முன்னோடிகளில் ஒருவர்

பிறப்பு, கல்வி

ஆல்பர்ட் பௌர்ன் பிரிட்டிஷ் அயலகப் பள்ளி நிறுவனத்தின் (British Foreign School Society ) செயலாளராக இருந்த ரெவெ.ஆல்பர்ட் பௌர்ன் ( Rev. Alfred Bourne) னின் மகன். ஆகஸ்ட் 8, 1859-ல் பிரிட்டனில் லோஸ்டோப்ட் (Lowestoft) என்னும் ஊரில் பிறந்தார்.

ஆல்பர்ட் பௌர்ன் இல்லத்தில் தந்தையிடமே ஆரம்பக் கல்வி கற்றார். அதன்பின் பல்கலைக்கழகப் பள்ளியில் சேர்ந்தார். அவருடைய பள்ளித்தோழர் சிட்னி ஹிக்ஸன் (Sydney J. Hickson) புகழ்பெற்ற இயற்கையியலாளரான ரே லங்காஸ்டர் ( Ray Lankester) ஆற்றிய சொற்பொழிவுகளால் இயற்கையியல் நோக்கி ஈர்ப்படைந்தார். டார்வினின் வேட்டைநாய் என அழைக்கப்பட்ட தாமஸ் ஹக்ஸ்லி ( Thomas Henry Huxley) பௌர்ன் மேல் அழுத்தமான செல்வாக்கைச் செலுத்திய ஆசிரியர்.

1876-ல் பல்கலைக் கல்லூரியில் சேர்ந்து பயின்று பின்னர் ராயல் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் (Royal School of Mines) கல்விநிலையத்தில் நிலவியல் பயின்றார்.

தனிவாழ்க்கை

ஆல்பர்ட் பௌர்ன் எமிலி டிரீ கிளேஷேர் (Emily Tree Glaisher) ஐ 1888-ல் மணந்துகொண்டார். அவர்களுக்கு ரே என்னும் மகனும் லோரா என்னும் மகளும் பிறந்தனர். தன் ஆசிரியரான ரே லங்காஸ்டரின் நினைவாக ஆல்பர்ட் பௌர்ன் மகனுக்கு ரே என பெயரிட்டார். ரே இந்திய வனத்துறையில் பயிற்சி எடுத்து பின்னாளில் ஆக்ஸ்போர்ட் பல்கலைப் பேராசிரியராக ஆனார். லோரா இந்திய வனத்துறை அதிகாரியான ஸ்டீபன் காக்ஸ் ( Stephen Cox) ஐ மணந்தார்.

1895 சென்னை மாநிலக்கல்லூரி. அமர்ந்திருப்பவர்களில் வலது ஓரம் பௌர்ன்

ஆய்வுகள்

ஆல்பர்ட் பௌர்ன் புகழ்பெற்ற டார்வினிய இயற்கையியலாளரான ஆண்டன் டோர்ன் (Anton Dohrn ) உடன் நெருக்கமான நட்புடன் இருந்தார். அவரைச் சந்திக்க நேப்பிள்ஸுக்கு அவ்வப்போது சென்று வந்தார். உயிரியல் மற்றும் தாவரவியலில் ஆழ்ந்த ஈடுபாடு அவருக்கு இருந்தது.

1880-ல் பௌர்ன் அட்டைகள் (Hirudomedicinalis) பற்றிய ஆய்வை ரே லங்காஸ்டருடன் இணைந்து வெளியிட்டார். லாடவடிவ நண்டு (Horseshoe crab. Limulus) பற்றியும் கொஞ்சு (Chambered nautilus -Nautilus) வகைகளைப் பற்றியும் ஆய்வுகள் செய்தார். நீர்வாழ் உயிர்கள் பற்றி அவருடைய ஆய்வுகள் அமைந்திருந்தன.

பௌர்ன் தான் பணியாற்றிய கல்லூரி வளாகத்திலேயே ஒரு குளத்தை அமைத்து அதில் நீர்வாழ் உயிரினங்கள் பற்றி ஆய்வுசெய்தார். பின்னர் சென்னையின் வெவ்வேறு குளங்களை ஆய்வுக்குப் பயன்படுத்திக் கொண்டார். நீர்வாழ் உயிர்களுக்கும் நீரின் ஆக்ஸிஜன் அளவுக்குமான உறவு பற்றிய அட்டவணையைத் தயாரித்தார். தாவரவியல் ஆய்வாளரான பிலிப் ஃபைசன் கொடைக்கானலில் மாதிரிகள் சேமிக்கவும் வரையவும் பௌர்னும் அவர் மனைவியும் உதவினர்.

பணிகள்

ஆல்பர்ட் பௌர்ன் 1886-ல் சென்னைக்கு வந்து சென்னை மாநிலக்கல்லூரி (Presidency College)யில் உயிரியல் பேராசிரியராகப் பணியேற்றார். 1898 வரை அப்பதவியில் இருந்தார். சென்னை மாநிலக்கல்லூரியில் இயற்கையியல் என்னும் பாடம் மட்டுமே இருந்தது. 1886-ல் ஆல்பர்ட் பௌர்ன் அங்கே தாவரவியல் மற்றும் உயிரியல் துறைகளைத் தொடங்கினார். சென்னை அரசு அருங்காட்சியகத்தின் நிர்வாகியாகவும் பதிவாளராகவும் கூடுதல் பொறுப்பையும் வகித்தார். 1903-ல் ஆல்பர்ட் பௌர்ன் பொதுக்கல்வித்துறை இயக்குநர் (Director of Public Instruction) ஆக நியமிக்கப்பட்டார். சென்னை மாகாணத்தின் கல்வித்திட்டம் மற்றும் பயிற்றுமுறையில் முக்கியமான மாறுதல்களைக் கொண்டுவந்தார். பின்னர் நெடுங்காலம் புழக்கத்தில் இருந்த எஸ்.எஸ்.எல்.சி (Secondary School Leaving Certificate) முறையைக் கொண்டுவந்தவர் ஆல்பர்ட் பௌர்ன்தான்.

1915-ல் ஓய்வுபெற்றபின் பௌர்ன் இந்திய அறிவியல்கழகத்தின் (Indian Institute of Science) இயக்குநர் பொறுப்பை ஏற்று 1921 வரை அப்பதவியை வகித்தார். சென்னை மாகாண அரசின் அதிகாரபூர்வ தாவரவியலாளராக நியமிக்கப்பட்ட பௌர்ன் மெட்ராஸ் தாவரவியல் ஆய்வுக் கழகம் (Botanical Survey of Madras ) என்னும் அமைப்பை உருவாக்க முயன்றார், அது நடைபெறவில்லை. அதன்பொருட்டு ஆல்பர்ட்டும் அவர் மனைவி எமிலியும் சேகரித்த மாதிரிகள் 1915-ல் தாவரவியலாளரான ஜேம்ஸ் சைக்ஸ் கேம்பிள் (James Sykes Gamble) சென்னை மாகாண தாவரங்கள் (Flora of the Presidency of Madras) என்னும் நான்கு பகுதி கொண்ட பெருநூலை வெளியிடுவதற்கு உதவியாக அமைந்தன

ஓய்வுக்குப்பின் பௌர்ன் டார்ட்மௌத் நகரில் வசித்தார். 1922-ல் அந்நகரின் மேயராகவும் 1933-ல் அந்நகரின் கௌரவ நீதிபதியாகவும் பணியாற்றினார். பௌர்னுக்கு தந்தம், மரம் ஆகியவற்றில் செதுக்குவேலை செய்வதிலும் கடிகாரப் பணிகளிலும் ஈடுபாடு இருந்தது.

விருதுகள்

ஆல்பர்ட் பௌர்ன் ராயல் சொசைட்டியின் (Royal Society) உறுப்பினராக 1895-ல் தேர்வு செய்யப்பட்டார். பிரிட்டிஷ் பேரரசின் நைட் பட்டம் 1913-ல் அவருக்கு அளிக்கப்பட்டது ( Knight Commander of the Order of the Indian Empire )

மறைவு

ஆல்பர்ட் பௌர்ன் ஜூலை 4, 1940 அன்று இங்கிலாந்தில் டார்மௌத் (Dartmouth, Devon) என்னும் ஊரில் மறைந்தார்.

உசாத்துணை


✅Finalised Page